shabd-logo

25. முரட்டுப் பிள்ளை

23 December 2023

2 பார்த்தது 2

இளங்குமரன் சிந்தித்தான். நீலநாக மறவரின் அந்த வேண்டுகோளுக்குத்தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்கு ஒப்புக்கொள்ளச் செய்த நீலநாக மறவரின் திறமையை வியந்தான் அவன். அவருடைய பேருருவம் நினைவுக்கு வந்தபோதே அவனுக்குப் பணிவும் அடக்கமும் உண்டாயிற்று.

‘இதனால் சிறிது காலத்துக்கு நீ இந்தப் படைக்கலச் சாலைக்குள்ளேயே எனது கண்காணிப்பில் இருக்க வேண்டும். தனியாக நகருக்குள் எங்கும் போக வேண்டாம் என்று இவர் கட்டளையிடுவது போல் வேண்டிக் கொண்டபோது தன்னால் அதை மறுத்துச் சொல்ல முடியாமற்போன காரணம் என்ன என்பது நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்பே அவனுக்குப் புரிந்தது.

‘தூய்மையான மனமும் தோற்றமும் உடைய சில பெரியவர்கள் நமக்கு முன்னால் உட்கார்ந்து பேசுகிறபோது நம்முடைய மனம் அகங்காரவெம்மை அழியப் பெற்று மழை பெய்த நிலம் போலக் குளிர்ந்து குழைந்து விடுகிறது. அப்போது நம்முடைய மனத்தில் பயங்களும், குழப்பங்களும், வாழ்க்கை ஆற்றாமைகளும் இருந்தாலும் கூட அவை நீங்கிவிடுகின்றன. அந்தத் தூய்மைக்கு நமது மனம் தோற்றுப் போகிறது! நீலநாக மறவரை எதிர்த்துப் பேச முடியாமல், தான் அடங்கி நின்றதும் இப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்’ என்று இளங்குமரன் உணர்ந்தான். தனக்கு ஏதோ பயங்கரத் துன்பங்கள் வரப்போவதாக நினைத்துக் கொண்டு மற்றவர்கள் அஞ்சி முன்னேற்பாடாகத் தன்னைப் பாதுகாப்பதை அவன் விரும்பவில்லை. ‘பிறருடைய இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்த்துத் தவித்து அவற்றுக்காகவே ஏங்கிக் கொண்டிருப்பவன் கோழை! பிறர்மேல் அநுதாபமும் இயக்கமும் செலுத்துவதற்குத் துணிந்து நிற்பவன்தான் ஆண்மையுள்ள வீரன்! அநுதாபத்தையும் இரக்கத்தையும் தன்னிடமிருந்து பிறருக்கு வழங்குவதுதான் வீரம். அவற்றை தான் பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வது வீரமன்று’ என்பதுபோல் ஒரு முரட்டுப் பிடிவாதம் சிறுவயதில் இருந்தே இளங்குமரனுக்குப் பொருந்தியிருந்தது.

அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அவன் வாய் திறந்து கேட்காமலிருக்கும்போதே அவனது மனத்தில் இருந்த சில கேள்விகளைத் தாமாகவே புரிந்து கொண்டு கூறுகிறவர் போல் குறிப்பாகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தார் நீலநாக மறவர். அவற்றையெல்லாம் இப்போது இரண்டாம் முறையாக நினைவின் விளிம்புக்குக் கொண்டு வந்து எண்ணிப் பார்த்தான் இளங்குமரன். அவ்வாறு எண்ணிப் பார்த்தபோது அவர் சொல்லியிருந்த ஒவ்வொரு கருத்தும் விடையறியாக் கேள்விகளாகத் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த ஒவ்வொரு வினாவுக்கும் விடைபோல் அமைவதும் அவனுக்கு விளங்கிற்று.

“தம்பீ! மனத்தை வீணாகக் குழப்பிக் கொள்ளாதே. மனமும் நினைவுகளும் வளர்ந்து வளம் கொள்ளுகிற வயதில் கவலைகள் புகுந்து அழிக்கவிடக் கூடாது. கவலைகளுக்கு அழிந்து போய்விடாமல் கவலைகளை அழித்து விட வேண்டிய வயது இது! கடலும், மலையும், வானமும், சூரியனும், சந்திரனும், தங்களுக்குத் தாயும் தந்தையும் யாரென்றும் தேடித் துயர் கொள்வதில்லை. பூமிக்குத் தாய் வானம்; வானத்துக்குத் தாய் பூமி, பிரகிருதியே ஒரு தாய்தான் தம்பீ! ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கைகளாகவும், சூரிய சந்திரர்களைக் கண்களாகவும், மலைகளை மார்பாகவும், தரையைத் திருவடிகளாகவும் கொண்ட விசுவரூபமே தாயின் வடிவம்தான். அதையே நீயும் தாயாக நினைத்து வணங்கி விடு” என்று அவர் சொல்லியதற்குப் பொருள் ‘தாயை நினைத்து வீணாகக் கலங்காதே’ என்று தனக்கு அறிவுறுத்துவதுதான் என்பதை அவன் தெளிந்தான்.

“நீ செய்வதற்கு இருக்கும் செயலைக் காட்டிலும் உன்னுடைய நோக்கம் பெரிதாக இருக்க வேண்டும். அதைத்தான் இலட்சியம் என்கிறோம். நினைப்பதையெல்லாம் பெரிதாக நினைப்பதற்குப் பழகிக்கொள். நினைவின் எல்லை விரிவாக இருக்கட்டும்” என்று இப்படி பல அறிவுரைகள் கூறிய பின்னே அந்த வேண்டுகோளையும் கூறியிருந்தார் நீலநாக மறவர். நினைக்கும் போதெல்லாம் புதிதாகவும் நினைப்புக்கேற்ற விதமாகவும் மணக்கும் மனோரஞ்சிதப் பூவைப்போல் அவருடைய அறிவுரையின் குறிப்பாகப் பலவற்றை அவன் புரிந்து கொண்டான். எண்ணிப் பார்த்தால், திட்டமிட்டுத் தேவையறிந்து வேண்டிய அறிவுரையை வேண்டிய அளவு வேண்டிய காலத்தில் அவர் தனக்குத் தந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. மறுபடியும் அவருடைய முன்னேற்பாட்டை வியந்தான் அவன்.

கதக்கண்ணன் முதலிய நண்பர்களோடு அன்று மாலையில் ஆலமுற்றத்துச் சிவன் கோவிலுக்குப் போனான் இளங்குமரன். வானத்தை மறைத்து வீழ்துகளைக் காலூன்றிப் பசுமைப் பந்தல் வேய்ந்தது போல் பெரிய ஆலமரமும் அதனருகே கோவிலும் மாலை நேரத்தில் மிக அழகாயிருந்தன. மணற்பரப்பைக் கடந்து கடல் என்னும் நீலமேனி நீர்ச்செல்வி நித்திய யௌவனத்தோடு அலைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். மேலைத்திசை வானத்தில் குங்கும வெள்ளம் பாய்ந்திருந்தது. இளங்குமரனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தார்கள். ஆலமுற்றுத்துக் கோவில் படைக்கலச் சாலையைச் சேர்ந்த பகுதியாய் அதற்கு மிகவும் அருகில் இருந்ததால்தான் நண்பர்களின் துணையோடு இளங்குமரனைப் போகவிட்டிருந்தார் நீலநாக மறவர். கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு கடற்கரை மணற் பரப்பில் நண்பர்களுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இளங்குமரன் மீண்டும் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது அங்கே அவனை எதிர் பார்த்து ஓவியன் மணிமார்பன் வந்து காத்துக் கொண்டிருந்தான். தான் அப்போது நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் வந்து தங்கியிருப்பதை அந்த ஓவியன் எப்படித் தெரிந்து கொண்டான் என்பது இளங்குமரனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

“நீ மறுபடியும் என்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்தால் இன்னும் யாராவது என்னுடைய ஓவியத்தை வரைந்து கொண்டு வரச்சொல்லி உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார்களோ என்று சந்தேகமாயிருக்கிறது, அப்பனே! என்ன காரியமாக இப்போது என்னிடம் வந்தாய்?” என்று இளங்குமரன் அவனை விசாரித்தான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! ஐயா! ஒருமுறை உங்கள் ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு நான் படுகிறபாடு போதும். ஏழேழு பிறவிக்கு இப்படி அனுபவங்கள் இனிமேல் எனக்கு. ஏற்படவே வேண்டாம்.”

விளையாட்டாகப் பேசுவதுபோல் சிரித்துப் பேசத் தொடங்கியிருந்த இளங்குமரன், ஓவியன் கூறிய மறுமொழியில் வேதனையும், துயரமும் இருந்ததைக் கேட்டுத் திகைத்தான். ஓவியன் அச்சம் கொள்ளும் படியான நிகழ்ச்சிகள் எவையேனும் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஓவியனைக் கேட்டான்:

“பதற்றப்படாமல் நிதானமாகச் சொல், மணி மார்பா! என்னுடைய ஓவியத்தை வரைந்து கொடுத்ததனால் இப்படி என்னிடமே வந்து அலுத்துக் கொள்கிறாற்போல் உனக்கு என்ன துன்பங்கள் நேர்ந்துவிட்டன?”

இதற்கு மணிமார்பன் மறுமொழி கூறவில்லை. இளங்குமரனைச் சூழ்ந்து நிற்கும் நண்பர்களைப் பார்த்துத் தயங்கினான். அந்தக் குறிப்பு இளங்குமரனுக்குப் புரிந்தது. ஓவியன் தன்னிடம் தனியாகப் பேசுவதற்கு விரும்புகிறான் என்று உணர்ந்தவனாக அவனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு படைக்கலச் சாலையின் வேறு பகுதிக்குச் சென்றான் இளங்குமரன்.

“பிறருக்காக நான் துன்பப்படும்படி நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்வேன் மணிமார்பா! ஆனால் என்னால் பிறர் துன்பப்பட நேருவதை நான் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. விவரமாக நடந்ததைச் சொல். நான் வெளியேறி வந்தபின் பட்டினப்பாக்கத்தில் அந்த மாளிகையில் என்ன நடந்தது? உனக்கு அந்தப் பெண் தருவதாக ஒப்புக் கொண்டிருந்த நூறு பொற் கழஞ்சுகளைத் தந்தாளா இல்லையா!”

“அதையெல்லாம் அப்புறம் சொல்கிறேன். முதலில் இந்த மடலை வாங்கிக் கொள்ளுங்கள். இதைப் படித்துவிட்டுப் பின்பு பேசலாம்” என்று சுரமஞ்சரியின் மடலை எடுத்து நீட்டினான் மணிமார்பன். அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பகுதியெல்லாம் தன் மணத்தைப் பரப்பியது அந்த நறுமண மடல்.

“ஆயிரங்காலம் பழகி அன்பு கொண்டவளைப் போல் எனக்கு மடல் எழுத இவள் எப்படி உரிமை பெற்றாள்?” என்று அருகிலிருந்த தீபத்தில் மடலைப் படித்துவிட்டுக் கோபத்தோடு கேட்டான் இளங்குமரன், அதைக் கேட்டு மணிமார்பன் மெல்லச் சிரித்தான்.

“எதற்காகச் சிரிக்கிறாய்? சிரிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது?”

“ஒன்றுமில்லை! அனால் சற்றுமுன் நீங்கள் கூறியதை மறுபடியும் நினைத்துப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. உலகத்திலேயே கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான்; அதற்குக்கூட உரிமை தர மறுக்கிறீர்களே நீங்கள்?”


“மறுக்கவில்லை மணிமார்பா! இரண்டு நாள் சந்தித்துப் பேசிவிட்டோம் என்ற செருக்கில், ‘நெஞ்சுளம் கொண்ட அன்பருக்கு. அநேக வணக்கங்களுடன் அடியாள் சுரமஞ்சரி எழுதும் மடல். நான் உங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகிறேன். கூடுமானால் உடனே சந்திக்க விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் என் நலனை விட உங்கள் நலன்தான் அதிகம். உங்களிடம் சில செய்திகளை மனம்விட்டுப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். எங்கே எப்போது நாம் சந்திக்கலாமென்று இந்த மடல் கொண்டு வரும் ஓவியரிடம் அருள் கூர்ந்து சொல்லி அனுப்புங்கள்’ என்று எழுதியிருக்கிறாளே அப்பனே; இவள் கூப்பிட்ட நேரத்துக்குக் கூப்பிட இடத்திலெல்லாம் வந்து சந்திக்க இளங்குமரன் இவளுடைய ஏவலாள் இல்லையே!” என்று சொல்லிக் கொண்டே மணம் நிறைந்த அந்த வெண்தாழை மடலைக் கசக்கி எறியப் போனான் இளங்குமரன். அப்போது அவன் அப்படிச் செய்து விடாமல் ஓவியன் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு விட்டான்.

“பூக்களைக் கசக்கி எறிவது மங்கலமான செயல் அல்ல, ஐயா! மென்மையான மனம்படைத்தவர்கள் அதை விரும்பமாட்டார்கள்.”

“எனக்கு மென்மையான மனம் இல்லையென்றே வைத்துக்கொள்! அதற்காக நான் வருத்தப்பட மாட்டேன். இந்தா, இதை அவளிடமே திருப்பிக் கொண்டு போய்க் கொடு” என்று தானே கசக்கி எறிவதற்கிருந்த அந்த மடலை மணிமார்பனுடைய கைகளில் திணித்தான் இளங்குமரன். மணிமார்பனின் நிலை தவிப்புக்குரியதாகி விட்டது. என்ன செய்தாலும், எவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்னாலும் இளங்குமரனின் மனத்தை நெகிழச் செய்வதற்கு இயலாதென்று தோன்றியது ஓவியனுக்கு. அதைப் பற்றி மறுபேச்சுப் பேசாமல் அவன் திருப்பிக் கொடுத்த மடலை வாங்கிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினான் மணிமார்பன். இளங்குமரன் பட்டினப்பாக்கத்து மாளிகையிலிருந்து வெளியேறியபின் தனக்கு அங்கு ஏற்பட்ட அச்சமூட்டும் அநுபவங்களை மணிமார்பன் அவனுக்கு விரிவாகச் சொன்னான். தன்னை அந்த மாளிகையிலேயே ஓவியனாக நியமித்திருப்பதையும் சொன்னான். சுரமஞ்சரியின் தந்தையும், நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும் பலவகையிலும் சந்தேகத்துக்கும் பயப்படுவதற்கும் உரியவர்களாயிருந்ததையும், அவர்கள் இருவரும் இளங்குமரன் மேல் என்ன காரணத்துக்காகவோ கவனம் செலுத்திக் கொண்டிருப்பதையும் விவரித்துக் கூறிவிட்டான் மணிமார்பன்.

இவற்றையெல்லாம் கேட்ட பின்னர் இளங்குமரனின் மனத்தில் மேலும் சந்தேகங்கள் உண்டாயின. அந்த மாளிகையிலிருந்து தான் வெளியேறிய போது அதே ஒற்றைக்கண் மனிதர் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததையும் அவன் நினைவு கூர்ந்தான். ஒற்றைக் கண்ணரைப் போலவே சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலையும் தன்னைப் பின்தொடர்ந்து வந்ததனால்தான் நீலநாக மறவரின் படைக்கலச் சாலையில் தான் தங்கியிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதையும் இப்போது இளங்குமரனால் அநுமானம் செய்ய முடிந்தது. பட்டினப்பாக்கத்து எட்டிப்பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வரும், அவரிடம் இருக்கும் ஒற்றைக் கண் மனிதரும் எதற்காகவோ தன்னைப் பிடித்து அழிக்கக் கண்ணி விரிக்கிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ‘ஒரு வேளை அவர்கள் விரிக்கும் அந்த வலையில் தன்னைச் சிக்க வைப்பதற்கு இந்தப் பெண் சுரமஞ்சரியும் உடந்தையாயிருக்கலாமோ?’ என்றும் சந்தேகமுண்டாயிற்று இளங்குமரனுக்கு. சுரமஞ்சரியைப் பற்றிய தன்னுடைய சந்தேகத்தை மணிமார்பனிடம் வெளியிட்டு, ‘அப்படியும் இருக்கலாமோ?’ என்று வினவினான் இளங்குமரன். ஆனால் மணிமார்பன் அதை மிகவும் வன்மையாக மறுத்துச் சொல்லிவிட்டான்.


“ஒருபோதும் அப்படி இருக்காது ஐயா! அந்தப் பெண் உங்கள் மேல் மெய்யாகவே அன்பு செலுத்துகிறாள். தன் தந்தையாரும் நகைவேழம்பரும் உங்களைப் பற்றி அப்படி நடந்து கொள்வது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்தப் பெண் நிச்சயம் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டாள். எப்போதாவது அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து உங்களுக்குப் பேராபத்து வருவதாயிருந்தால் அப்போது உங்களைக் காப்பாற்றுவதற்கு அவள்தான் முன் நிற்பாள். பெண்களின் உள்ளம் அன்பு மயமானது. தங்களால் விரும்பப்படுகிறவர்களுக்கு வஞ்சகமிழைக்க அன்பு இடந்தராது, ஐயா!”

“அப்படி எல்லாப் பெண்களையும் நம்பிவிட முடியாது, அப்பனே! பெண்களின் வஞ்சகத்தால் உலகத்தில் பிறந்த மகாகாவியங்கள் பல.”

“ஆனால் பெண்களின் அன்பினால் பிறந்த மகா காவியங்கள் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் ஐயா!”

“அப்படி மகாகாவியங்களைத் தோற்றுவிக்கிற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்தும் நாம் எதிர் பார்க்க முடியாது, மணிமார்பா!”

“மாளிகை என்ன செய்யும் ஐயா! மனம் கொண்டது தான் மாளிகை. அன்பின் சக்தி அளப்பரியது. அதற்கு முன் சாதாரண உணர்வுகள் தோற்றுவிடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு நீங்கள் தோற்றுப் போனால் கூட நான் ஆச்சரியப்படமாட்டேன்.”

ஓவியன் மேலே பேசுவதற்குள் பளீரென்று அவன் கன்னத்தில் ஒரு பேயரை விழுந்தது.

“நாவை அடக்கிப் பேசு, அப்பனே! இப்படி இன்னொருவர் பேசியிருந்தால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுத்திருப்பேன். போய்விடு.. இனி ஒரு கணமும் இங்கே நிற்காதே” என்று கொதிப்போடு கூக்குரலிட்டுக்கொண்டே அந்தக் கணமே மணிமார்பனைப் பிடரியில் கைவைத்துத் தள்ளி வாயில் வரையில் சென்று துரத்தி விட்டு வந்தான் இளங்குமரன்.

‘பிறரால் எனக்குத் துன்பம் வந்தாலும் பொறுப்பேன், பிறர் என்னால் துன்புற விடமாட்டேன்’ என்று கூறிய அதே மனிதனின் கைகள்தாம் தன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளின என்பதை ஓலியனால் நம்பவே முடியவில்லை. இளங்குமரன் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வான் என்று கனவிலும் மணிமார்பன் எதிர்பார்க்கவில்லை.

கசக்கித் திருப்பியளிக்கப்பட்ட தாழை மடலைப் போலவே அவனும் மன வேதனையுடன் கசங்கிய நினைவுகளோடு அந்த அகால நேரத்திலேயே தனியாகப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பினான்.

தான் சுரமஞ்சரியின் மடலைக் கொடுப்பதற்காக மாளிகையிலிருந்து வெளியேறி மருவூர்ப் பாக்கத்துக்கு இளங்குமரனைக் காணச் சென்று திரும்புவது ஒருவருக்கும் தெரியாமல் இருக்க வேண்டுமென்று நினைத்திருந்தான் ஓவியன். ஆனால் அதுவும் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. நினைத்திருந்ததற்கு நேர்மாறாகவே ஒரு விபரீதம் நடந்தது.
 

39
கட்டுரைகள்
மணிப்பல்லவம் (பகுதி1)
0.0
மணிப்பல்லவம் உலகின் மிகப் பழமையான இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகும். நா. பார்த்தசாரதி இந்த நாவலை எழுதினார். இந்த புத்தகம் அவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணிப்பல்லவம் என்பது சோழர்களின் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சமூக நாவல். சில சூழ்ச்சிகளும் செயல்களும் இருந்தாலும், அவை அனைத்தும் செல்வம், வீரம், அன்பு மற்றும் வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பொருளைக் கையாளும் தத்துவ சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படுகின்றன.
1

1. இந்திர விழா

19 December 2023
0
0
0

பூம்புகார் நகரம் புதுவிழாக்கோலம் பூண்டு எழிலுடன் விளங்கியது. சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழுநிலா விரித்துக்து கொண்டிருந்தது. ‘இந்திர விழாத் தொடங்

2

2. சக்கரவாளக் கோட்டம்

19 December 2023
0
0
0

இராப்போது நடு யாமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. இந்திரவிழாவின் ஆரவாரங்கள் பூம்புகாரின் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இல்லை. புற நகரில் சக்கரவாளக் கோட்டத்தை அடுத்திருந்த சம்பாபதி வனம் இருண்டு கிடந்தது.

3

3. கதக்கண்ணன் வஞ்சினம்

19 December 2023
0
0
0

உயிர்க்குணங்களுள் ஏதேனும் ஒன்று மிகுந்து தோன்றும்போது மற்றவை அடங்கி நின்றுவிடும் என்று முனிவர் தனக்கு அடிக்கடிக் கூறும் தத்துவ வாக்கியத்தை அந்தப் பயங்கரமான சூழ்நிலையில் பகைவர் கரங்களின் கீழே அமுங்கிக்

4

4. முல்லைக்குப் புரியவில்லை !

19 December 2023
0
0
0

சம்பாபதி வனத்திலிருந்து வெளியேறி அப்பாலுள்ள கோட்டங்களையும் தவச் சாலைகளையும் பலபல சமயுத்தார் வழிபாட்டுக்கு மலர் கொய்யும் மலர் வனங்களையும் கடந்து வந்துவிட்டால் புறவீதி நிலாவொளியில் குளித்துக் கொண்டு நீண

5

5. பூதசதுக்கத்திலே ஒரு புதிர்!

19 December 2023
0
0
0

எழிற்பூம்புகார் நகரத்தில் மீண்டும் காலம் அரும்ப விழ்த்துப் பூத்தது ஒரு நாள் மலர் திருவிழாக் கோலங்கொண்ட பேரூர்க்கு செம்பொன் நிறை * சுடர்க்குடம் எடுத்துச் சோதிக்கதிர் விரித்தாற்போல் கிழக்கு வானத்தில்

6

6. வம்பு வந்தது!

19 December 2023
0
0
0

தன் அருகே வந்து நின்றவனை நன்றாக உற்றுப் பார்த்தான் இளங்குமரன். ஓவியம் எழுதுவதற்குரிய திரைச் சீலை தூரிகைகளும், வண்ணங்களடங்கிய சிறு மரப்பேழையும் அவனிடம் இருந்தன. அவன் இள வயதினன் தான். கலை அறிவுள்ளவர்களி

7

7. வீரசோழிய வளநாடுடையார்

19 December 2023
0
0
0

வாழ்க்கையில் ஒவ்வோருணர்வுக்கும் மறுபுறம் என்பதொன்றுண்டு. சிலருக்குப் பிறர்மேல் ஏற்படுகிற அன்பின் மறுபுறம் வெறுப்பாக இருக்கும். அல்லது வெறுப்பின் மறுபுறத்தைத் திரும்பிப் பார்த்தால் தவிர்க்க முடியாத பேர

8

8. சுரமஞ்சரியின் செருக்கு

19 December 2023
0
0
0

கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து விட்டது. ஓவியன் மணிமார்பன் பயந்துபோய் ஒதுங்கி நின்றான். முல்லை திடுக்கிட்டு அலறினாள். நாலைந்து முரட்டு யவனர்களும் பூதாகாரமான மல்லன் ஒருவனும் இளங்க

9

9. முறுவல் மறைந்த முகம்

20 December 2023
0
0
0

நாளங்காடி பூத சதுக்கத்தில் இளங்குமரனுக்கும் அவனைத் தாக்க வந்தவர்களுக்கும் போர் நடந்தபோது பெருகிவந்த கூட்டத்தினால் நெருக் குண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த முல்லை, கூட்டம் கலைந்ததும் அருகில் வந்து

10

10. பெருமாளிகை நிகழ்ச்சிகள்

21 December 2023
1
0
0

இன்பங்களும், வசதிகளும், கோநகரப் பெருவாழ்வின் சுக்போகங்களும் ஒன்றுகூடி நிறைவு பெற்ற பட்டினப்பாக்கத்து வீதிகளின் வழியே இளங்குமரன் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமந்து சென்றார்கள். தரையகன்ற ஆறு போல் வழியகன்ற

11

11. அருட்செல்வர் எங்கே!

21 December 2023
1
0
0

‘கதக்கண்ணன் என்ற பெயருக்குச் சினம் கொண்டு விரைந்து நோக்கும் ஆண்மையழகு பொருந்திய கண்களையுடையவன்’ என்று பொருள். இந்தப் பொருட் பொருத்தத்தையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் வீரசோழிய வளநாடுடையார் தம் புதல

12

12. ஒற்றைக்கண் மனிதன்

21 December 2023
1
0
0

பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையில், பூம்பொழில் நடுவே அப்படி ஓர் அதிசயத்தைச் சிறிதும் எதிர்பார்த்திராதவனான இளங்குமரன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளையும் எதிர்ப்பக்கத்திலிருந்து வந்து கொண்டிருந்தவ

13

13. இது என்ன அந்தரங்கம்?

21 December 2023
1
0
0

கலியிருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள், மி

14

14. செல்வ முனிவர் தவச்சாலை

21 December 2023
1
0
0

‘அருட்செல்வ முனிவரைக் காணவில்லை’ என்பதால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் வீரசோழிய வளநாடுடையார் மனத்தில் கலக்கத்தை உண்டாக்கியிருந்தன. அந்தக் கலக்கத்தினால்தான் போகும்போது இளங்குமரனைத் துணைக்கு அழைத்துக்

15

15. இளங்குமரன் ஆவேசம்

22 December 2023
1
0
0

பட்டினப்பாக்கத்துப் பெருவீதியின் திருப்பத்தில் இளங்குமரனைக் கண்டதும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் குதிரைகளை நிறுத்திக் கீழே இறங்கிச் சூழ நின்று கொண்டார்கள். எதிர்பாராத நிலையில் அவர்களை அங்கே வியப்பு

16

16. திரைமறைவில் தெரிந்த பாதங்கள்

22 December 2023
1
0
0

சித்திரச்சாலைக்குள் அந்த எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத தனிமை நிலையில் இளங்குமரனுடைய படத்துக்கு முன்னால் தன் தந்தைக்கும் ஓவியனுக்குமிடையே நிகழும் பேச்சு என்னவாயிருக்கும் என்பதை அறிந்து கொண்டு விடுவத

17

17. வேலியில் முளைத்த வேல்கள்

22 December 2023
1
0
0

கையில் வேலையும் மனத்தில் துணிவையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு மெல்லப் பின்புறம் திரும்ப முயன்றார் வீரசோழிய வளநாடுடையார். புறநகரில் காவற்படைத் தலைவராகத் திரிந்த காலத்தில் இதைப் போலவும் இதைக் காட்டிலு

18

18. உலகத்துக்கு ஒரு பொய்!

22 December 2023
1
0
0

ஆத்திரமடைந்து துரத்திக் கொண்டு வந்த கூட்டத்தினரிடமிருந்து வீர சோழிய வளநாடுடையார் தப்பி விட்டார். துரத்தி வந்தவர்கள் சிறிது நேரம் காளிகோவில் சுற்றுப் புறங்களில் தேடிப் பார்த்துவிட்டு, அப்பாலுள்ளவை மயான

19

19. நீலநாக மறவர்

22 December 2023
1
0
0

இளங்குமரனும், நண்பர்களும் மருவூர்ப் பாக்கத்தின் ஒரு புறத்தே அமைந்திருந்த நீலநாக மறவரின் படைக்கலச் சாலைக்குள் நுழைந்தபோது அங்கே ஆரவாரமும் சுறுசுறுப்பும் நிறைந்த சூழ்நிலை நிலவியது. பல இளைஞர்கள் தனிதனி

20

20. விளங்காத வேண்டுகோள்

23 December 2023
1
0
0

“அடடா, நீ எப்பொழுது வந்தாய் தம்பீ! நான் உன்னைக் கவனிக்கவேயில்லையே? காலையிலிருந்து உன்னைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேற்றுப் பின்னிரவில் இந்திர விழாவைக் காண்பதற்காக ஊரெல்லாம் சுற்றிவிட்டு

21

21. மணிமார்பனுக்குப் பதவி

23 December 2023
1
0
0

சுரமஞ்சரியும் வசந்தமாலையும் சில கணங்கள் ஒன்றும் பேசிக்கொள்ளத் தோன்றாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றார்கள். ஊசி கீழே விழுந்தாலும் ஓசை பெரிதாகக் கேட்கும்படியானதொரு நிசப்தம் அப்போது அந்த அலங்கார மண்டப

22

22. நகைவேழம்பர் நடுக்கம்

23 December 2023
1
0
0

மணிமார்பன் என்னும் அந்த ஓவியனைத் திரும்பிப் போக விடாமல் தன் தந்தையார் மாளிகையிலேயே தேக்கி வைத்துக் கொண்டிருப்பதன் மெய்யான நோக்கம் என்னவாக இருக்கும் என்று சுரமஞ்சரி சிந்தித்தாள். தன்னுடைய சித்திரச்சாலை

23

23. நாளைக்குப் போது விடியட்டும்!

23 December 2023
1
0
0

அந்தப் பின்னிரவு நேரத்தில் பூம்புகாரின் துறைமுகம் ஆரவாரமும் ஆள்பழக்கமும் குறைந்து அமைதியாய்க் காட்சியளித்தது. துறைமுகத்தின் அழகுகள் அமைதியில் தோய்ந்து தோன்றும் காரணத்தினால் பகற்போதில் இருந்ததைக் காட்ட

24

24. வானவல்லி சீறினாள்!

23 December 2023
1
0
0

உணவுக் கூடத்திலிருந்து வெளியேறிய நகைவேழம்பர் ஓவியனையும் இழுத்துக் கொண்டு விரைவாக முன்னால் சென்றுவிட முயன்றபோது சுரமஞ்சரி அவரைத் தடுத்து நிறுத்திக் கேட்ட கேள்வி அவருடைய தோற்றத்தில் பெரும் அதிர்ச்சியை உ

25

25. முரட்டுப் பிள்ளை

23 December 2023
1
0
0

இளங்குமரன் சிந்தித்தான். நீலநாக மறவரின் அந்த வேண்டுகோளுக்குத்தான் எப்படி இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. மறுத்துச் சொல்ல முடியாமல் தன்னை அந்த வேண்டுகோளுக்க

26

26. கொலைத் தழும்பேறிய கைகள்

25 December 2023
1
0
0

பயந்துகொண்டே திரும்பி வந்த ஓவியன் பிரதான வாயிலில் துழையும் போது மாளிகை அமைதியாயிருந்தது. சுரமஞ்சரி முன்னேற்பாடாகச் சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ வாயிற் காவலர்கள் எவரும் அவனைத் தடுக்கவில்லை. அவன் திரு

27

27. தேர் திரும்பி வந்தது!

25 December 2023
0
0
0

பாதாள அறையில் கூண்டினுள் இருந்த புலிகள் பயங்கரமாக உறுமின. நகை வேழம்பர் வளையத்தில் பாதங்களை நுழைத்துத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தார். ஓவியன் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு சூழ்நிலையும், நேரமு

28

28. வேலும் விழியும்

25 December 2023
1
0
0

ஓவியனின் அந்த வார்த்தைகளை மறுபடி நினைத்தாலும் மனம் கொதித் தது இளங்குமரனுக்கு. ‘எவ்வளவு துணிவு இருந்தால் அவன் என்னிடம் அப்படிக் கூறியிருப்பான்.’ ‘யாரைப் பார்த்து யார் சொல்லுகிற வார்த்தைகள் இவை? மணிமார

29

29. நிழல் மரம் சாய்ந்தது!

25 December 2023
1
0
0

பொழுது விடிந்ததும் நடந்த இந்த நிகழ்ச்சியால் இளங்குமரனின் உள்ளம் சொல்ல முடியாத வேதனையை அடைந்திருந்தது. உடனே பட்டினப்பாக்கத்துக்கு ஓடிச்சென்று சுரமஞ்சரி, அவளுடைய தோழி, மணிமார்பன் மூவரையும் படைக்கலச் சால

30

30. நெஞ்சில் மணக்கும் நினைவுகள்

25 December 2023
1
0
0

தோழி வசந்தமாலை தீபத்தை ஏந்திக் கொண்டு உடன்வர மாடத்துக்குள் நுழைந்த சுரமஞ்சரி அங்கே முன் கூடத்தில் சினத்தோடு வீற்றிருந்த தன் தந்தையாரையும் நகைவேழம்பரையும் கண்டும் காணாதவள் போல் அவர்களைப் புறக்கணிக்கும்

31

31. இருள் மயங்கும் வேளையில்

25 December 2023
1
0
0

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. மாபெரும் காவிரிப்பூம்பட்டின நகரத்தின் தோற்றத்துக்கே புதிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டமான ஆரவாரங்களையும் அளித்துக் கொண்டிருந்த இந்திர விழாவின் நாட்களில் இன்னும் ஒன்றே ஒ

32

32. மாறித் தோன்றிய மங்கை

25 December 2023
1
0
0

ஆத்திரத்தோடு திரும்பிச் சுரமஞ்சரியின் தந்தையை உறுத்துப் பார்த்தான் இளங்குமரன், அவனுடைய கையை அழுத்திப் பற்றியிருந்த அவர்பிடி இன்னும் தளரவில்லை. “கையை விடுங்கள் ஐயா!” என்று அவன் கூறிய சொற்களைக் கேட்டு

33

33. பூமழை பொழிந்தது! பூம்புனல் பரந்தது!

25 December 2023
1
0
0

மறுநாள் பொழுது புலவர்வதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போதே கதக் கண்ணன் படைக்கலச் சாலைக்கு வந்து இளங்குமரனை நீராட்டு விழாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான். இளங்குமரனுக்கும் அன்று தனியாகப் படைக்கலச் ச

34

34. திருநாங்கூர் அடிகள்

25 December 2023
1
0
0

பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும் சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கிலும் பசும் புல்வெளிகளும் வெ

35

35. தெய்வமே துணை!

25 December 2023
1
0
0

நீரில் மூழ்கிவிட்ட அந்தப் பெண் யாராயிருந்தாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் உறுதியான எண்ணத்துடன், இரு கரையும் நிரம்பிடப் பொங்கிப் பெருகி ஓடும் காவிரிப் புனலில் இளங்குமரன் தன்னுடைய நீண்ட கைகளை வீ

36

36. இன்ப விழிகள் இரண்டு

25 December 2023
1
0
0

ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல், மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போ

37

37. கருணை பிறந்தது!

27 December 2023
1
0
0

கப்பல் கரப்புத் தீவு இருளில் மூழ்கி விட்டது. மழையும் காற்றும் முன்பிருந்த கடுமை குறைந்திருந்தன. பகைவர்களைப் போல் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் இருளில் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சுரமஞ்சரியும்

38

38. உள்ளத்தில் ஒரு கேள்வி

27 December 2023
1
0
0

பரிவும், ஏக்கமும், பசியும், குளிருமாகக் கழிந்த அந்த நீண்ட இரவுக்குபின் கப்பல் கரப்புத் தீவில் பொழுது புலர்ந்தபோது மங்கல நீராடி எழுந்த கன்னிகைபோல் தீவு முழுவதும் புத்தழகு பூத்திருந்தது. மழை இரவுக்குப்

39

39. மனம் மலர்கிறது!

27 December 2023
1
0
0

உலக அறிவியில் பௌத்த சமயத் துறவியிடம் தோற்று அங்கே கூடியிருந்தவர்களின் ஏளனத்தையும் இகழ்ச்சியையும் ஏற்க நேர்ந்தபின், நடைப்பிணம் போல் தளர்ந்து படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டிருந்தான் இளங்குமரன். மனமும் ந

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்