shabd-logo

இவள்தான் விசாகை!

28 December 2023

4 பார்த்தது 4

திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வணங்கி வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக்கொண்டு முரட்டுப் பிள்ளையாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்த தன் பழைய நாட்களைச் சற்றே நினைவு கூர்ந்தது. அந்தப் பழைய நாட்களின் நிகழ்ச்சியில் ஒன்றைத் தனியே பிரித்து இப்போதுதான் சுவடியைத் தாங்கிச் சுமந்து நிற்கும் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான் அவன். 


அந்த நாளில் காவிரிப் பூம்பட்டினத்தின் அம்பலங்களிலும் பொது மன்றங்களிலும், இளைஞர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சை செய்வதற்காகத் தூக்கிப் பார்க்கும் ‘இளவட்டக்கல்’ என்னும் கனமான உருண்டைக் கற்கள் இருந்தன. இவற்றைத் தூக்க முடிகிறதா? இல்லையா என்பதைப் பொறுத்து இளைஞர்களின் தோள் வலிமையைக் கணக்கிட முடிந்தது. 


பூம்புகாரின் புறநகரமாகிய மருவூர்ப் பாக்கத்தின் தெரு முனைகளிலும் நாளங்காடிச் சதுக்கத்திலும், மறக்குடி மக்கள் மிகுந்த புற வீதிகளிலும் இத்தகைய இளவட்டக் கற்கள் கிடக்கும். இவற்றைச் சுற்றி எப்போதும் இளைஞர்களின் கூட்டத்தைக் காணலாம். பொன் திணித்தாற் போன்ற அழகிய தோள்கள் புடைக்க, நெற்றியில் குறுவியர் முத்தரும்பக் கல் தூக்கும் காளையர்களின் எழிலைக் காண்பதற்காக அந்தந்த வீதிகளின் மேன்மாடங்களில் அங்கங்கே தாமரை பூத்துத் தயங்கினாற்போல் பெண்களின் மலர்ந்த முகங்கள் தோன்றும். தன் விடலைப் பருவத்தில் நகரத்திலுள்ளவற்றிலேயே மிகவும் பெரியவை என்று கருதப்பட்ட இளவட்டக் கற்களையெல்லாம் அலட்சியமாகத் தூக்கி அருகிலிருந்தவர் முகங்களில் வியப்பை மலரச் செய்திருக்கிறான் இளங்குமரன். தீரர்களின் செயல்களைக் கண்டு வியப்படைகிற பருவத்து இளைஞர்களிடையே அவன் வியப்புகளைச் செய்து காட்டும் தீரனாக இருந்த காலம் அது!
’வலிமை வாய்ந்த இந்தக் கைகளில் இப்போது இந்தச் சுவடி ஏன் அதிகமாகக் கனப்பதுபோல் ஒரு பாரத்தை உணர்த்துகிறது? மெல்லிய இந்தச் சுவிடியைத் தாங்கிச் சுமக்கும்போது என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? திடீரென்று நான் இளைத்துப் போய்விட்டேனா? என்னிடமிருந்த இந்த ஒரே ஒருநாள் போதுக்குள் ஏதோ ஒரு வலிமை குறைந்திருக்கிறதே! அது எங்கே குறைந்தது? யார் முன்னிலையில் குறைந்தது? விதையிடுவதற்கு உழுது வைத்த நிலம்போல் என் மனம் எதை எதிர்பார்த்து இப்படி இறுக்கம் நெகிழ்ந்து குழைந்து போயிருக்கிறது? என்ற நினைவுகளுடன் கையில் சுவடியேந்தியபடி தயங்கி நின்றான் இளங்குமரன். சற்றே நிதானமாக எண்ணிப் பார்த்தபோது தானும் தன் உணர்வுகளும் இளைத்த இடம் அவனுக்கு மீண்டும் நினைவு வந்தது.
“மறுபடியும் எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உய்ர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர்! மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே!” என்று உலக அறவியின் வாயிலில் அந்தப் பெளத்த சமயத் துறவி சிரித்துக் கொண்டே கூறினாரே, அவர் அப்படிக் கூறியதைக் கேட்டு, தான் தலைகுனிந்து நின்ற அந்தக் கணமே தன் வலிமையும் தானும் இளைத்துப்போய் விட்டதுபோன்று ஒரு பிரமையை இளங்குமரன் உணர்ந்திருந்தான். அவனுடைய தயக்கத்தை அடிகள் கவனித்தார்.
“எதை நினைத்துத் தயங்குகிறாய், இளங்குமரா? உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? இந்தச் சுவடி அவ்வளவு பெரிய சுமையல்லவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் நாங்கூர் அடிகள். 


“அறிவின் உலகமாகிய இந்தச் சுவடிகளையெல்லாம் பார்க்கும்போது இவற்றின் அருகே நான் மிகவும் இளைத்துப்போய்த் தளர்ந்து விட்டாற்போல் எனக்குத் தோன்றுகிறது ஐயா!”
“உடம்பிற்கு அப்பாற்பட்டதாய், உடம்பைக் காட்டிலும் வலியதாய் உள்ள உணர்வுகளுக்கு அருகில் நிற்கிற போது உடம்பு சிறியதாய்த் தோன்றுவது இயல்பு தான். அப்படிப்பட்ட சமயங்களில் மனத்தைப் பெரிதாக்கி மலரச் செய்து கொண்டு பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும். கல்விக்குக் கரை இல்லை. கற்பவருக்கு நாளும் இல்லை. இருக்கிற நாட்களிலும் அவலக் கவலைகளுக்கும் நோய் நொடிகளுக்கும் கழிகிற நாட்கள் பல. சுருள் சுருளாகப் பிடரியில் படரும் கரியமுடியும், பட்டுக்கரையிட்ட ஆடைகளும், பொன்னுருக்கினாற் போன்ற மேனி நிறமும் உடம்புக்குத்தான் அழகு தரமுடியும். மனத்துக்கு அழகும், வலிமையும் தருவது கல்விதான். அதை இன்று தான் நீ அடையத் தொடங்குகிறாய். தளர்ச்சியையும் சோர்வையும் விலக்கிவிட்டு மலர்ந்த மனத்தோடு என் முன்பாக இப்படி உட்கார்ந்து கொள்.” 


கைகளில் சுவடியை விரித்து வைத்துக் கொண்டு அடிகளுக்கு முன்னால் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தான் இளங்குமரன். கிரந்தசாலையைச் சுற்றியிருந்த பூம்பொழிலில் மலர்ந்திருந்த பூக்களின் மணமும், தூபப் புகையின் வாசனையும் காலைப் போதின் துய்மையும், கற்பதற்காக நெகிழ்ந்திருந்த மனமும், எதிரே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்த ஆசிரியரின் தோற்றமும் இளங்குமரனுக்குப் புனிதமான எண்ணங்கள் பிறக்கும் சூழ்நிலையைத் தந்தன. 


தமக்கே உரிய கோமளமான குரலில் பாடத்தைத் தொடங்கினார் அடிகள்:—
ஒவ்வொரு மொழிக்கும் ஆதி வடிவம் ஒலி வடிவம் தான். கண்ணுக்குப் புலனாகாத பரம்பொருளைக் காட்டுவதற்காகக் கண்ணுக்குப் புலனாகிற தெய்வ விக்கிரகங்களைப் படைத்துக் கொண்டு வழிபடுவதுபோல் தோற்றம் இல்லாத ஒலிக்குத் தோற்றமளிக்க ஏற்பட்ட வரி வடிவங்களே எழுத்துக்கள். ஓசை வேறு; ஒலி வேறு. பண்படாமலும் வரையறை பெறாமலும் வழங்குவனவெல்லாம் ஓசை. பண்பட்டும் வரையறை பெற்றும் வழங்குவன எல்லாம் ஒலி. ஒலியிலிருந்து எழுத்துக்கள் பிறந்தன. எழுத்துக்களிலிருந்து மொழிக்கு உருவம் பிறந்தது. 

எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தன. சொற்கள் பொருள்களை அடைந்தன. பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரே பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்திற் பதங்கள் விளைந்தன. ஒற்றைத் தனி மலர்போல் ஒரெழுத்தில் விளைந்த சொற்களும் தொடுத்த மலர்கள்போல் பல எழுத்துக்களிணைந்து விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது. சொல் செவிக்குப் புலனாகும்போது ஒலி வடிவில் இலங்குகிறது. கண்ணுக்குப் புலனாகும்போது எழுத்து வடிவில் இலங்குகிறது. பூ என்ற தோற்றமும், மணம் என்ற உணர்வும், தனித்தனி நிலைகளாயினும் இரண்டும் ஒன்றிலிருந்து எழுகிற உணர்வுகள் அல்லவா? அதுபோல் சொல்லும் பொருளும், வேறு வேறு உணர்வுகளாயினும் மலர் மணம் போல் சொற் பொருளுணர்ச்சி ஓரிடத்திலிருந்து எழுவதே…”
“சொற்பொருளுணர்ச்சி என்பது என்ன ஐயா?” என்று இளங்குமரன் ஆர்வத்தோடு அவரிடம் குறுக்கிட்டுக் கேட்டான். 


“இன்ன சொல்லால் இன்ன பொருள்தான் உணரப்படும் எனப் பழகிய வழக்குக்குச் சொற்பொருளுணர்வு என்று பெயர். பாம்பு என்ற சொல்லைக் கூறினால் உடனே பாம்பு என்னும் பொருளும், பாம்பு என்ற பொருளைப் பார்த்தால் உடனே பாம்பு என்ற சொல்லும் இடையீடு இன்றி ஒருங்கே நினைவு வருகிறதல்லவா? உலகத்து மொழிகளில் எல்லாம் உணர்த்தப்படும் பொருள்களிடையே வேறுபாடு உண்டு. இனிமை என்கிற உணர்வு புல்லாங்குழல், யாழ் முதலிய எல்லா இசை வகைக்கும் பொதுவாவது போல் பொருளுணர்த்துதல் என்பது எல்லா மொழிச்சொற்களுக்கும் பொதுவான குறிக்கோள். ஒன்றாகிய பரம்பொருளை ஒவ்வொரு சமயமும் வேறு மார்க்கங்களில் வந்து முடிவு காண முயல்வதுபோல் ஒரே பொருளை வேறு வேறு சொற்களால் உணர்த்துவது மொழிகளின் மதம். மொழியுணர்வை ஒட்டிச் சமயவுணர்வும் இறையுணர்வும் இணைந்து வளர்வது நமது தமிழ் நாட்டில் வழக்கமாயிருக்கிறது இளங்குமரா?”
“ஐயா! தமிழ் என்ற சொல்லால் நம்முடைய மொழியையும், நாட்டையும் இணைத்துப் பேசி வருகிறோம். இந்தச் சொல்லுக்கு என்ன பொருள்.”
“ஆகா! நீ இப்படியல்லவோ தொடர்ந்து தூண்டிக் கேட்க வேண்டும்! நீ கேட்கக் கேட்க எனக்கு உற்சாகம் வளருகிறது அப்பனே! தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்று பொருள். இந்தத் தெய்வத் திருமொழியின் ஒலி செவிக்கு இனியது. எழுத்து கண்ணுக்கினியது; சொற்கள் வழங்குவதற்கு இனியன. பன்னூறு ஆண்டுகளாகப் பண்பட்டு வளர்ந்த மொழியைப் பேசும் பாக்கியம் செய்தவர்களாயிருக்கிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தலைமுறைகள் செய்த தவத்தால் வளர்ந்து வளர்ந்து சொற்களெல்லாம் மந்திரமாய் ஆற்றல் பெற்ற மொழி இது” என்று பெருமிதத்தோடு பதில் கூறினார் அடிகள். 


இதைக் கேட்ட அந்த விநாடியில் தான் ஒரு தமிழ்மகன் என்பதனால் இளங்குமரனுக்கு மனத்தில் ஏற்பட்ட பெருமை ஒப்பற்றதாயிருந்தது.
எழுத்திலக்கணத்தைப் பற்றிய சிறந்த கருத்துக்கள் பலவற்றை நுணுக்கமாக இளங்குமரனுக்குக் கூறி விளக்கினார் அடிகள். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்கப் புதிய உலகம் ஒன்றைத் திறந்து காண்பித்தாற் போலிருந்தது இளங்குமரனுக்கு.
பாடம் முடிந்ததும் அடிகள் வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே இளங்குமரனிடம் இப்படிக் கூறினார்.
“கடவுள் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயித்து அவர்களை உலகத்துக்கு அனுப்பினார்! அவர்கள் உலகத்தில் எத்தனையோ எழுத்துக்களையும் மொழிகளையும் நிர்ணயித்துக் கொண்டு வாழப் பழகிவிட்டார்கள். உலகத்தின் தலையெழுத்தைக் கணக்கிடுகிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். தங்கள் தலையெழுத்தை மாற்றிக்கொள்ள வழி தெரியாவிட்டாலும் காலத்தின் தலையெழுத்தைப் புறங்காணும் காவியங்களையும், இலக்கிய இலக்கணங்களையும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எவ்வளவு விந்தையான உலகம் இது? தெய்வம் விதியை வகுத்து எழுதிப் படைத்தது. மனிதர்கள் எழுதிப் படைத்த விதி வகுத்திருக்கிறார்கள். சொல்லையும் பொருளையும் போல் சக்தியும் சிவமுமாய் இணைந்திருக்கும் சொற் பொருட் காரணனான பெருமானைச் சொல்லும் பொருளுமாக இணைத்துப் பாவித்துச் சொற் பொருளால் வணங்குகிறேன்” என்று பரம்பொருளை வணங்குகிற அளவுக்குப் பெருமை படைத்திருக்கிறார்கள். 

மண்ணுலகத்துக்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள், தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் என்ற பெயரும் சூட்டியிருக்கிறார்கள். விதியின் எழுத்துக்கு வடிவம் தெரியவில்லை, பொருளும் தெரியவில்லை. மனிதர்கள் படைத்த எழுத்துக்கு வடிவும் பொருளும் வகையும் எல்லாம் இருக்கிறது அல்லவா?”
இளங்குமரன் ஆவல் மீதுாரக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கிரந்தசாலையின் வாயிற் பக்கமிருந்து “தாத்தா! நான் உள்ளே வரலாமா?” என்று பெண் குரல் ஒன்று வினாவியது. 


“யார்? விசாகையா? வா, அம்மா! இரண்டு மூன்று நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காணவில்லையே; எங்கே போயிருந்தாய்?” என்று அடிகள் அந்தக் குரலுக்குரியவளை வரவேற்றுக் கூறிக்கொண்டே வாயிற்பக்கம் திரும்பினார்.
தலையில் நிறுத்திய சங்குபோல் எடுத்துக் கட்டிய சடைமுடியும், எளிய தோற்றமும் அட்சய பாத்திரம் ஏந்திய கைகளுமாக மேக மண்டலத்திலிருந்து தூய்மையே வடிவாய் இறங்கிவரும் மின்னல் போல் உள்ளே நுழைந்தாள் துறவுக்கோலம் பூண்ட புத்த சமயப் பெண் ஒருத்தி, அழல்கொண்டு செய்தாற் போன்ற நிறமும், துறவுக் கோலத்துக்குரிய சீவர ஆடையும், நடந்து வருகிறபோதே தன்னைச் சுற்றிலும் தூய்மை சூழச் செய்கிற தனித் தன்மையுமாக அந்தப் பெண்ணைக் கண்டதுமே இளங்குமரனின் மனம் வணங்கியது. பேதமை மாறாத இளம் வயது. நிலவைக் கறை துடைத்தாற் போன்ற தூய முகம். அதில் உணர்ச்சியலைகள் படியாது அமைதி திகழும் கண்கள். சிவந்த இதழ்களில் நிறைந்த சாந்தம். சாந்தத்திலிருந்து தனியே பிரிக்க முடியாததொரு புன்னகை. தோற்றம் நிறையப் பாதாதிகேச பரியந்தம். வார்த்தைகளாற் சொல்ல முடியாததொரு பேரமைதியோடு அந்தத் துறவி நின்றாள். அவளுடைய வெண்கமலப் பூங்கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய கோலமும் நின்ற நிலையும் மின்னலிற் செய்து நிறுத்திய சிற்பமோ எனக் காண்பார் கண்களைத் தயங்கச் செய்தன. பெரிதாய், அழகாய், அளவாய்த் தொடுத்துத் தொங்க விட்டிருந்த முல்லை மாலை சரிந்து நழுவுவதுபோல் தரையில் மெல்ல அமர்ந்தாள் விசாகை. 


“இளங்குமரா! இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உன்னைப் போலவே என்னிடம் கற்றவள். இவள் இந்தக் கோலம் பூண நேர்ந்தது ஒரு விந்தையான வரலாறு. தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது. மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான் என்று சிறிது நேரத்துக்கு முன் உன்னிடம் கூறியது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? விதி வகுத்த வாழ்வை மீறித் தான் வகுத்த வாழ்வுக்கு விதி அமைத்துக் கொண்ட பெண் இவள். இத்தனை இளம் வயதில் இவள் மனத்துக்குக் கிடைத்திருக்கிற வைராக்கிய முதிர்ச்சி அற்புதமானது. பிறர் வியக்கத்தக்கது” என்று நாங்கூர் அடிகள் இளங்குமரனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றிக் கூற ஆரம்பித்தார். 


“விந்தை! விந்தை! என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்கிற அளவுக்கு என் வாழ்வில் அப்படி என்ன இருக்கிறது, தாத்தா? துர்பாக்கியங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த பழங்கதையை மறுபடியும் நினைவூட்டுவதில் உங்களுக்கு என்னதான் இன்பமோ?” என்று சொல்லிச் சிரித்தாள் விசாகை. அந்தச் சிரிப்பில் பாவ நினைவுகளை அழிக்கும் தெய்வீகத் தூய்மை தெரிந்தது. துன்பம், பயம், சோர்வு, சிறுமை எல்லாமே அந்தச் சிரிப்பில் எரிந்து பொசுங்கின. 


“ஓகோ! நீ விரும்பவில்லையானால் உன்னைப் பற்றி சொல்வதை நிறுத்திக் கொள்கிறேன் விசாகை! உன்னுடைய கதை இந்தப் பிள்ளைக்கு அவசியம் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் சொல்ல நினைத்தேன்.” என்று தயங்கினாற்போலக் கூறி நிறுத்தினார் அடிகள்.
“நன்றாகச் சொல்லுங்கள், தாத்தா! எனக்கு மறுப்பே இல்லை. ஆனால் கதைக்கு உரியவளாய்க் கதைக்கு ஆளாகிக் கதையாகிவிட்ட எனக்கு என்னவோ அதில் அப்படிப் பெருமைப்பட ஒன்றுமில்லை என்பது போல் தோன்றுகிறது.” 


“கதாபாத்திரங்களே தங்கள் கதையை நினைத்துப் பெருமைப்பட்டால் கதை சொல்கிறவன் கதி என்ன ஆவது? நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு, விசாகை! இந்தப் பிள்ளை உன் கதையைக் கேட்டதும் எவ்வளவு பெருமைப்படுகிறான் என்பதைப் பார்க்கலாமே?” எனச் சிரித்துக் கொண்டே கூறியபடி இளங்குமரன் முகத்தைப் பார்த்தார் அடிகள். அந்த முகத்தில் நிறையத் தெரிந்து கொள்ளும் ஆவல் நிறைந்திருந்தது.

22
கட்டுரைகள்
மணிப்பல்லவம் 2
0.0
"ஆழ்ந்த புவியியல் வரலாறு! எகிப்து நாட்டு அடியாட்கள் காவிரிக் கரையில்! சீன தேச கப்பல் தலைவன் பூம்புகாரிலே! கேரள துறைமுக பண்டகசாலை உறவுகள். ''மணிபல்லவ தீவு எனும் அன்றைய இலங்கையில் தமிழ்(தமிழர்)ஆளுமை. காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ''கச்சத் தீவில்''கரை ஒதுங்கும் கன்னியும் காளையும்! திருமண ''சுயம்வரத்தில் புத்தர்சிலைக்கு மாலை அணிவிக்கும் பேரழகி இளவரசி விசாகை'' ''இலங்கை புத்தமத வீச்சு ஆரம்பகட்ட'' வரலாறு!''
1

முதல் நாள் பாடம்

28 December 2023
1
0
0

நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப்போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள்

2

சுரமஞ்சரியின் அச்சம்

28 December 2023
1
0
0

சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும்’ என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்ச

3

வீதியில் நிகழ்ந்த விரோதம்

28 December 2023
1
0
0

தன்னைக் காப்பாற்றியது இளங்குமரனே என்பது தந்தையாருக்கும், நகைவேழம்பருக்கும் தெரிய நேர்ந்து அதன் காரணமாக இளங்குமரனுக்குத் துன்பம் வரக் கூடாதே என்பதுதான் சுரமஞ்சரியின் பயமாக இருந்தது. அந்தப் பயத்துடனேயே

4

கவலை சூழ்ந்தது!

28 December 2023
1
0
0

துறைமுகத்தில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து கொண்டிருந்த நகைவேழம்பருக்கு இறுதியில் வெற்றியே கிடைத்தது. சீனத்துக் கப்பல் தலைவனை அவர் சந்தித்து விட்டார். எடுத்துக் கொண்ட காரியத்தை முறையாகத் திட்டமிட்டு மு

5

இவள்தான் விசாகை!

28 December 2023
1
0
0

திருநாங்கூர் அடிகளின் பூம்பொழிலில் அவரிடமிருந்து முதற் சுவடியை வணங்கி வாங்கிக் கொண்ட அந்தக் கணத்தில் இளங்குமரன் மனம், நாள் தவறாமல் ஊர்வம்புகளையும் அடிபிடி சண்டைகளையும் ஏற்றுக்கொண்டு முரட்டுப் பிள்ளையா

6

வேழம்பர் விரைந்தார்

29 December 2023
0
0
0

சுரமஞ்சரியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவசரமாக ஓவியன் மணி மார்பனைத் தேடிக் கொண்டு புறப்பட்டாள் தோழி வசந்தமாலை. சில நாட்களாக அவள் அறிந்தமட்டில் ஓவியன் மணிமார்பன் அந்த மாளிகையின் எல்லையில் இருப்பதாகவே தெரி

7

பூதம் புறப்பட்டது

29 December 2023
0
0
0

வானளாவி நின்ற அந்தப் பெரு மாளிகையிலிருந்து வெளியேறிப் பட்டினப்பாக்கத்தின் அகன்ற வீதியில் விரைந்து விரைந்து நடந்தபோது ஓவியன் மணிமார்பனின் உள்ளத்தில் துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவி

8

வல்லவனுக்கும் வல்லவர்

29 December 2023
0
0
0

பெருமாளிகையின் வெளிப்புறம் முதல் தலைவாயில் வரை உடன் வந்து, ஓவியன் மணிமார்பனை வழியனுப்பி விட்டு உள்ளே திரும்பிச் சென்ற வசந்தமாலை, நகைவேழம்பர் ஓவியனைப் பின்தொடரும் செய்தியைச் சுர மஞ்சரியிடம் போய்க் கூறி

9

பெண்ணில் ஒரு பெருமை

29 December 2023
0
0
0

பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை’ என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்று விசாகை என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்த

10

தலைவணங்கிய தன்மானம்

29 December 2023
0
0
0

விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும், அந்தக் கணத்த

11

வழித்துணை வாய்த்தது!

29 December 2023
0
0
0

சினங்கொண்டு பாய்ந்த நகைவேழம்பரை எதிர்த்துத் தடுத்தபோது ‘சிங்க நோக்கு’ என்று இலக்கிய ஆசிரியர்கள் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் நேராய் நிமிர்ந்த கம்பீரப் பார்வையை நீலநாக மறவரிடம் கண்டான் ஓவியன் மணிமார்

12

காவிரியில் கலந்த கண்ணீர்

30 December 2023
0
0
0

மணிமார்பனைச் சாவர்களின் வழித் துணையோடு மதுரைக்கு அனுப்பிவிட்டு நீலநாக மறவர் புறவீதி வழியே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது. பகல் நே

13

வேங்கை சீறியது

30 December 2023
0
0
0

தந்தையார் உடன் அனுப்பியிருந்த ஊழியன் நிழலைப் போல் விடாமல் அருகிலேயே இருந்ததனால் நெய்தலங் கானலின் அழகிய கடற்கரையில் சுரமஞ்சரியும், வசந்தமாலையும் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதற்காகத் தவித்துக் கொண்ட

14

நேருக்கு நேர்

30 December 2023
0
0
0

அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்

15

பேய்ச் சிரிப்பு!

30 December 2023
0
0
0

ஆலமுற்றத்துப் பெருவீரரான நீலநாக மறவரிடம் அவமானமடைந்து வந்திருந்த நகைவேழம்பரை ஆறுதல் அடையச் செய்வதற்குப் பெருநிதிச் செல்வர் அரும்பாடு பட வேண்டியிருந்தது. பல பேர்களை அடிமையாக வைத்துக் கொண்டு ஆள்கிற அளவு

16

தாயின் நினைவு

30 December 2023
0
0
0

தரையில் நீர்த்துளி விழுவதற்கு முன் மண்ணுலகத்து வண்ணமும் சுவையும் கலவாத மேக மண்டலங்களிலேயே அவற்றைப் பருகும் சாதகப் புள்ளைப்போல் விசாகையின் ஞானம் உலகத்து அழுக்கையெல்லாம் காணாத பருவத்தில், முன் பிறவி கண்

17

பயங்கர நண்பர்கள்

30 December 2023
0
0
0

அப்போது அந்த பாதாள அறையில் நிலவிய சூழ்நிலையில் கூண்டுக்குள் இருந்த புலிகளைக் காட்டிலும் கொடுமையான புலியாக மாறிப் பாய்வதற்கு முற்பட்டுக் கொண்டிருந்தவர் நகைவேழம்பர்தாம் என்பதை அங்கே இருந்த எல்லாரும் உணர

18

நாணற் காட்டில் நடந்தது!

1 January 2024
1
0
0

அந்த நாணற் காட்டின் நடுவே பெருநிதிச் செல்வரை அழைத்துக் கொண்டு சென்றார் நகைவேழம்பர். “இங்கே என்ன காரியம்? இவ்வளவு பெரிய காவிரிப் பூம்பட்டினத்தில் நீங்களும் நானும் பேசுவதற்கு இடமில்லயென்றா இங்கே அழைத்

19

பவழச் செஞ்சுடர்மேனி

1 January 2024
1
0
0

’ஒலிகள் ஒலியின்மையிலிருந்து பிறக்கின்றன. ஒலியின்மை, ஒலியுண்மையால் உணரப்படுகிறது” என்று தருக்க நூற்பாடத்தின் போது அடிகள் தனக்குச் சொல்லியிருந்த உண்மையை நினைத்துக் கொண்டு எதிரே பார்த்தான் இளங்குமரன். மு

20

செல்வச் சிறை

1 January 2024
1
0
0

பொழுது புலர்ந்து கொண்டிருந்த அந்த வைகறை நேரத்திலே இருகாமத்திணை ஏரியின் கரையும் காமவேள்; கோயிலும் தனிமையின் அழகில் அற்புதமாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. கிழக்கு வானத்தில் வைகறைப் பெண் செம்மண் கோலம்

21

தெய்வ நாட்கள் சில

1 January 2024
1
0
0

காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து தனக்காகவே திருநாங்கூர் வந்திருந்த முல்லையினிடமும் கதக்கண்ணனிடமும் மனம் நெகிழ்ந்து பழகாமல் அவர்களுடைய அன்பையும் ஆர்வத்தையும் புறக்கணித்துத் திருப்பியனுப்பியதை நினைத்தபோத

22

கடைசி நாளில் கற்றது

1 January 2024
1
0
0

திருநாங்கூர்ப் பூம்பொழிலின் ஒரு மேடையில் அடிகளும் இளங்குமரனும் வீற்றிருந்தனர். சாயங்கால வேளை உலகம் பகல் என்னும் ஒளியின் ஆட்சியை இழந்து போய்விட்டதற்காகச் சோக நாடகம் நடத்துவதுபோல விளங்கும் மேற்கு வானம்.

---

ஒரு புத்தகத்தைப் படியுங்கள்