இவன் நானாகும் அத்தியாயம்
'நான் இல்லாமல் போகிறேன் ஆனால் வசந்த காலம் என்னுடைய நினைவுகளுடன் இருந்து கொண்டேதானிருக்கும்!'
-இறக்கப்போகிற கடைசி நிமிடத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ
அன்புள்ள பாலுமகேந்திரா சாருக்கு...
தூரத்தில் இருந்து நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை நாட்களாக நான் ஓடிக்கொண்டிருந்தேன். சட்டென்று நேற்று திரும்பிப் பார்க்கையில் காலம் அகாலமாகி நிற்கிறது. மரணம், ஒரு மோசமான சதுரங்கம். எத்தனை பேர் சுற்றி நின்று பாதுகாத்தபோதிலும், அது எங்கள் பிரியத்துக்குரிய அரசனை அழைத்துச் சென்றுவிட்டது. இப்போதுகூட நீங்கள் வானத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொடரில் காலவரிசைப்படி ஐந்தாறு வாரங்கள் கழித்து உங்களுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவங்களை எழுதலாம் என இருந்தேன். இப்படி காலத்தை முன்னோக்கி இழுத்து, காணாமல்போனது நியாயமா? இனி ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று தொலைபேசியில் என்னை அழைத்து, 'விகடன் படிச்சிட்டேன்' என்று வேடிக்கை பார்ப்பவனை விமர்சிக்கும், கம்பீரமான குரலை எந்தக் காற்றின் அலைவரிசை என்னிடம் கொண்டு வரும்?
காலம், உங்களை ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துவிட்டதாகக் கர்வப்பட்டாலும், காலத்தை வென்று நிற்கப்போகும் உங்கள் படைப்புகளை அதனால் என்ன செய்துவிட முடியும்? மரணத்தின் எந்தச் சுவடுகளும் தெரியாமல் உங்கள் இறுதி உறக்கம் கம்பீரமாக இருந்தது. 'வாடா முத்துக்குமார். பாண்டிபஜார் வரைக்கும் போயிட்டு வருவோம்' என்று எந்தக் கணத்திலும் நீங்கள் கூப்பிடலாம் என்ற நம்பிக்கையில் உங்கள் தலைமாட்டிலேயே நின்றுகொண்டிருந்தேன்.
பாண்டிபஜாரின் மரங்கள் அடர்ந்த சாலையும், நடைபாதைக் கடைகளும் உங்களுக்கு அப்படிப்
பிடிக்கும். காரிலும், எந்தத் தயாரிப்பாளரும் கிடைக்காமல் நான்கு மாதங்கள் எங்களுக்குத்
தரவேண்டிய சம்பளப் பாக்கிக்காக அந்தக் காரை விற்றுவிட்டு பின்பு ஆட்டோவிலுமாக பனகல்
பார்க்கின் முனையில் இறங்கி, பாண்டிபஜாரின் வீதியில், என் கை பிடித்து நடந்தபடி எத்தனை
கடைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறீர்கள்? திரும்பி வருகையில் வடக்கு உஸ்மான் ரோட்டில்
உள்ள நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கும் அழைத்துச் சென்று, அன்று புதிதாக வந்த அத்தனை
கவிதைத் தொகுப்புகளையும் வாங்கி, 'அன்புடன்' என்று கையெழுத்திட்டு எனக்குக்
கொடுப்பீர்கள்.
என் ஞானத் தகப்பனே! நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே, என் தகப்பன் ஏழு
வருடங்களுக்கு முன்பு என்னை விட்டுவிட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே
விட்டுவிட்டுப்போனால், இனி நான் எங்கு செல்வது? ஒரு கூட்டுப்புழுவாக உங்கள்
அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம்பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள்.
பாலுமகேந்திரா என்கிற மகா கலைஞன் என் மனதில் விதையாக விழுந்து, மாமாக எழுந்தது எப்போது?
'அழியாத கோலங்கள்' சிறுவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோதா? 'மூன்றாம் பிறை' பார்த்துவிட்டு, பால்ய காலத்தில் நான் வளர்த்த 'டைகர்' எனும் நாய்க்குட்டிக்கு 'சுப்பிரமணி' என்று நாமகரணம் சூட்டியபோதா? 'நீங்கள் கேட்டவை'யின் 'பிள்ளை நிலா' என் வானத்தில் உதித்தபோதா? குடிசை வீட்டில் இருந்தபடியே, ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் 'வீடு' படத்தை ரசித்தபோதா? நான் பிறக்கும் முன்பே இறந்துவிட்ட பாட்டனோடு 'சந்தியாராக'த்தில் கைகோத்து நடந்தபோதா? 'வண்ணவண்ண பூக்க'ளில் வண்டாக நுழைந்தபோதா? 'மறுபடியும்' ரேவதியின் கண்ணீரில் நனைந்தபோதா? 'சதில்ல கமலுடன் இரிக்கப்பட்ட திரிந்த போதா? 'ராமன் அப்துல்லா' வில் நெகிழ்ந்தபோதா? 'அது ஒரு கனாக்காலத்தில் அலைந்தபோதா? 'தலைமுறைகளில்
தொலைந்தபோதா?
காஞ்சிபுரத்தில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எம்.ஜி.வல்லபன் நடத்திய 'ஃபிலிமாலயா' பத்திரிகையில் உங்கள் பேட்டி ஒன்று வந்திருந்தது. அப்போதைய 'சுபமங்களா' பத்திரிகையைப் போல மிக நீண்ட பேட்டி அது. நாளைய சினிமா குறித்து, நீங்கள் அளித்திருந்த பதில் இன்னமும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அந்த வரிகள், 'நாளைய தமிழ் சினிமாவின் முகங்களை மாற்றியமைக்கப்போகிற இளைஞர்கள், தற்சமயம் தனி முகவரி அற்றவர்களாகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவார்கள். இந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலோடும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றோடும்'! அந்த வரிகள் என்னைப் புரட்டிப்போட்டன. எங்கேயோ இருந்த என் துரோணாச்சாரியரின் விரல்களை இந்த ஏகலைவன் இப்படித்தான் பற்றிக்கொண்டான்.
நதி, மேகத்தில் உருவாகி மலையில் அருவியாகி காடுகளில்
வெள்ளமாகி எங்கெங்கோ பயணித்து கடைசியில் கடலை
வந்தடைவது இல்லையா? அப்படித்தான் உங்களிடம் நான் வந்து சேர
எட்டு ஆண்டுகள் பிடித்தன.
சூரியனைத் தள்ளி நின்று காதலிக்கும், சூரிய காந்தியைப் போல, என்
ஆசானே... இந்தக் காலங்களில் எல்லாம் உங்களை நான்
தொடர்ந்துகொண்டே இருந்தேன். 'எண்பதுகளில் கலை இலக்கியம்"
என்று முன்றில் பத்திரிகை நடத்திய விழாவில், கோமல்
சுவாமிநாதனின் சுபமங்களா நடத்திய நாடக விழாவில், ஃபிலிம்
சேம்பரில், ரஷ்ய கலாசார மையத்தில், மேக்ஸ் முல்லர் பவனில்,
அலையன் ஃபிரான்சிஸில்... என எங்கெங்கோ நடந்த உலகப் பட
விழாக்களில் உங்களை நான் தள்ளி நின்றே ரசித்துக்கொண்டிருந்தேன்.
என் கவிதைகளைத் தொகுத்து, 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற
தலைப்பில், அறிவுமதி அண்ணன் அவரது 'சாரல்' பதிப்பகத்தில்
கொண்டுவர நினைத்தபோது, யாரிடம் முன்னுரை வாங்கலாம் என்ற
கேள்வி எழுந்தது. நண்பர்கள் சொன்ன எல்லாப் பெயர்களையும் நிராகரித்து, "எங்க டைரக்டர் பாலுமகேந்திரா சார்தான் இதுக்கு முன்னுரை எழுதணும்" என்று அறிவுமதி அண்ணன் சொன்னபோது, "சார் எழுதிக் குடுப்பாரா?" என்று தயங்கியபடி கேட்டேன். "நான் ஒரு அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுக்கிறேன். நீ நேர்ல போயிப் பாரு" என்றார் அண்ணன்.
இன்னும் நினைவில் உள்ள அந்தக் கடிதம் இப்படித் தொடங்கும்.
'அன்பின் அப்பாவுக்கு.
தங்கள் பிள்ளை மதி எழுதும் கடிதம்.
இவன் என் தம்பி. இவன் கவிதைத் தொகுப்புக்கு முதல் குழந்தையின் பூஞ்சை மேனியில், மருத்துவச்சியின் கைரேகைப் பதிவாக உங்கள் முன்னுரை வேண்டும். உங்கள் உரைநடைக் காதலனாக, இது என் அன்புக் கட்டளை.
இப்படிக்கு தங்கள் அன்புப் பிள்ளை, மதி."
அந்தக் கடிதத்தை, அவர் கைகள் நடுங்க நின்றுகொண்டே எழுதினார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள், ஏழு படங்கள் என உதவி இயக்குநராக உங்களிடம் வேலை செய்த, மூத்தப் பிள்ளையின் முழு பக்தி அது.
அடுத்த நாள் காலை உங்கள் அலுவலகம் வந்தேன். 'கணையாழி விழாவில் உங்களின் 'தூர்' கவிதையை எழுத்தாளர் சுஜாதா படிச்ச அந்த நிகழ்வில், நான் பார்வையாளனாக இருந்தேன். நிச்சயம் முன்னுரை தர்றேன்' என்றீர்கள்.
கையெழுத்துப் பிரதியை உங்களிடம் தந்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். பேஜர், செல்போன் என்று அறிவியல் முன்னேறியிராத காலம் அது. இப்போது யோசிக்கையில் அது மிகவும் நல்ல காலம். அன்று இரவே அறிவுமதி அண்ணன் அலுவலகத்துக்கு நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு, 'நாளை காலை ஏழு மணிக்கு முத்துக்குமாரை என் அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த நாள் மதியம், சாவகாசமாக அண்ணனின் அலுவலகம் சென்றபோது இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். இடைப்பட்ட நேரத்தில். என் வாழ்வின் மஞ்சள் வெளிச்சம் நான் இல்லாமல் என் மேல் விழுந்து இருந்தது.
'ராமன் அப்துல்லா' படப்பிடிப்பில் பிரச்னையாகி திரையுலகம் துண்டுபட்டு. 'இயக்குநர் இமயம்'
பாரதிராஜா தலைமையில் 'படைப்பாளிகள் இயக்கம்' என்று தனியாகச் சங்கமித்த நாள் அது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள்,
நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்... எனப் பெரும் கலைஞர்கள் சங்கமித்த அந்த விழாவின்
தொடக்க உரையில் என் துரோணாச்சாரியரே... நீங்கள் இந்த ஏகலைவனின் 'தூர்' கவிதையை
'இந்தச் சூழலுக்குப் பொருத்தமாக ஒரு கவிதையுடன் என் உரையைத் தொடங்குகிறேன்' என்று
வாசித்து, 'இது என் உதவி இயக்குநர் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை' என்று அறிவித்ததாகப்
பின்னர் கேள்விப்பட்டேன்.
அன்று மாலை உங்களை அலுவலகத்தில் சந்தித்தபோது, "ஏன் காலையிலேயே வரவில்லை?
உன்னை மேடைக்கு அழைத்து எல்லோருக்கும் அறிமுகப்படுத்தலாம் என்று திட்டம்
இட்டிருந்தேன்" என்று கடிந்துகொண்டீர்கள். இப்படித்தான் இந்த நதி, தான் விரும்பிய கடலை
வந்தடைந்தது.
ஆஹா அந்தக் காலம்... அது ஒரு கனாக் காலம்! உலக சினிமாவின் கதவுகளைத் திறந்து என்
சிறுவிரல்கள் பிடித்து, என்னை நீங்கள் அழைத்துச் சென்ற நாட்கள் அவை. காலை அகிரா குரோசோவா, மதியம் கிஸ்லோவஸ்க்கி, இரவு மக்ஸன் மக்பல்பஃப் எனத் தேடித் தேடி உலக இயக்குநர்களின் படங்களை, எனக்கு நீங்கள் பயிற்றுவித்த பருவம் அது. சினிமா மட்டுமா? கதை நேரம் தொடருக்காக நீங்கள் படித்த கதைகளை நானும், நான் படித்த கதைகளை நீங்களும் விவாதித்த தருணங்கள் என் கண் முன் நிற்கின்றனவே!
நீங்கள் எங்களை உதவி இயக்குநர்களாகப் பார்க்கவில்லை. உங்கள் பிள்ளைகளாகவே நினைத்து வளர்த்தீர்கள். உங்களைப் போலவே உங்கள் மனைவி அகிலா அம்மாவும், துணைவி மௌனிகா வும் எங்களைத் தத்தெடுத்துக்கொண்டார்கள். என் அன்புத் தகப்பனே... பசி நிரம்பிய மதிய வேளைகளில் டைனிங் டேபிளில் அமரவைத்து, உங்கள் கையாலேயே வறுத்துக்கொடுக்கும் மீன்களின் ருசியை இனி யார் எங்களுக்குத் தரப்போகிறார்கள்? ஈழத்தின் அமிர்தகழியில் பிறந்த உங்களை, தங்கள் பிள்ளையாக நினைத்து தமிழகம் உங்கள் இறுதி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்தியதை நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது.
முதல் முறையாக ஓர் இயக்குநருக்காக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது உங்கள் மரணத்துக்காகத்தான். இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி... என அனைத்து சங்கங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போய் வா என் தலைவா... நீ நிரந்தரமானவன். அழிவதில்லை. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை.
இப்படிக்கு...
இந்திய வெயிலின் சுட்டெரிக்கும் அனலையும், தமிழ் யதார்த்தத்தின் புழுதிக்காற்றையும், வெள்ளித்திரையில் விதைக்கும் உங்கள் பிள்ளைகள் ஒளிப்பதிவாளர்கள் ஷங்கி மகேந்திராவுக்காக, ராஜராஜனுக்காக, நித்யாவுக்காக, கவிஞர் அறிவுமதிக்காக, இயக்குநர்கள் பாலாவுக்காக, வெற்றிமாறனுக்காக, சுகாவுக்காக, ராமுக்காக, சீனுராமசாமிக்காக, வக்கீல் சுரேஷ§க்காக, துரை செந்தில்குமாருக்காக, விக்ரம் சுகுமாரனுக்காக, அடுத்தடுத்து இயக்க இருக்கும் ஞானசம்பந்தனுக்காக, ராஜாவுக்காக, கௌரிக்காக மற்றும் இந்திய சினிமாவை மாற்றியமைக்கப்போகும் உங்கள் சினிமாப் பட்டறை மாணவர்களுக்காக, தூரத்தில் இருந்து உங்கள் வித்தையைக் கற்ற ஏகலைவர்களுக்காக...
மற்றும் ஒரு பிள்ளை
நா.முத்துக்குமார்.