ஹான்ஸ் பலாடா – ஜெர்மனி
முதலிலேயே தெரிவித்து விடுகிறேன். அப்புறம் குறை சொல்லாதீர்கள். என் மனைவி பெயர் இட்ஸன் பிளாஸ். உச்சரிப்பதற்குக் கொஞ்சம் சிரமந்தான்; ஆனால் அவள் மீது இருந்த ஆசையில், அதன் சிரமம் எனக்குத் தெரியவில் லை. ஒருநாள் பார்க்கில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது, அவள் சொன்னதுதான் எனக்கு மறக்க முடியவில் லை. "ஒவ்வொரு செப்புக் காசையும் கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு கணக்குப் பார்க்கும்படியான இந்தக் கஷ்டமில்லாதிருந்தால்..." என்றாள். "இருந்தால் என்ன?" என்று அவளிடம் வியாக்யானம் செய்யும்படி கேட்டேன். "இன்னும் கொஞ்சம் சாமான் வாங்கலாம்" என்றாள் இட்ஸன் பிளாஸ், எதையோ எண்ணிக்கொண்டு. எங்களுக்கு அப்பொழுதுதான் கலியாணமாயிற்று. மொத்தமாகப் பார்க்கப்போனால் கையில் தம்பிடி கிடையாது என்று சொல்லிவிடலாம். இளவயதிலே புதுக் கலியாணமாகி, (அதிலும் ஒருவர் மேலொருவர் கண்மூடித்தனமான ஆசை வைத்திருந்தால்) இந்த வறுமை எல்லாம் பிரமாதமில் லை. ஆமாம்! எங்களுக்குச் சில சமயங்களில் மனச் சோர்வு ஏற்படும். "எல்லா அதிர்ஷ்டமும் உடனே திரண்டு வந்துவிட வேண்டுமென்று கணக்கா? எப்பொழுதும் இப்படியே இருந்துவிடவா போகிறோம்?" என்று சொல்லிக் கொள்வோம்; எங்கள் சோர்வெல்லாம் பறந்துவிடும். "என்ன வாங்குவாய்?" என்றேன். இட்ஸன் பிளாஸ் யோசித்தாள். "நம்புகிறதென்றால், நம்புங்கள். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம். நல்ல ஒரு ஜதை 'ஸ்லிப்பர்கள்' குளிருக்கு ஏற்றாற்போல் வாங்குவேன்" என்றாள். "அடேயப்பா!" என்றேன். அப்பொழுது நல்ல வெயில் காலம். எங்கேயாவது குளிர்ந்த ஜலமும், ஒரு சிகரெட்டும் கிடைத்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்; அவளுக்கு அப்பொழுது குளிருக்கேற்ற ஒரு ஜதை 'ஸ்லிப்பர்கள்' வேண்டும்! அவளது தர்க்கம் எனக்குப் புரியவில் லை. ஆனால் இதிலிருந்துதான் வருகிற கிரிஸ்மஸுக்கு என்ன வாங்குவது என்பதைப் பற்றி அப்பொழுதே 'பிளான்' போட ஆரம்பித்து விட்டோம். அவள் சொன்னாள்: "டாமி! கிரிஸ்மஸ் அவசரத்தில் கண்டபடி வேண்டாத சாமான்களை வாங்கி ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளாமல் இருக்க, அதற்கு இப்பொழுதே லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்" என்றாள். அதிலிருந்து எங்களுக்குப் பிரியமானதையெல்லாம் லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தோம். நான் எனது கணக்குப் புஸ்தகத்திலிருந்து ஒரு கடுதாசியைக் கிழித்து, "இட்ஸன் பிளாஸுக்கு ஒரு ஜதை கம்பிளி ஸ்லிப்பர்" என்று எழுதினேன். பிறகு, பட்சபாதம் காண்பிக்கக் கூடாதல்லவா? அதற்காக அதன் கீழ் "டாமிக்கு ஒரு நல்ல புஸ்தகம்" என்று எழுதினேன். "அப்படித்தான்!" என்றாள் இட்ஸன் பிளாஸ், உற்சாகத்துடன். போகிற வழியில் ஸ்லிப்பரும், புஸ்தகங்களும் மரத்தில் காய்த்துத் தொங்குகின்றன, பறிக்கவேண்டியதுதான் பாக்கி என்பதுபோல் இருந்தது. வெயில் காலமும் சென்று கிரிஸ்மஸ் பண்டிகை வரும் பனிக்காலமும் ஆரம்பித்து விட்டது. எங்கள் லிஸ்ட்டும் ஏராளமாக வளர்ந்து வருகிறது. "ரொம்ப ஜாஸ்தியிருந்தால் என்ன? எவ்வளவுக்கு ஜாஸ்தியிருக்கிறதோ அவ்வளவுக்குப் பொறுக்க முடியும். அதில் வாங்க முடியாத பொருள்களை அடித்து விடுகிறது. ஆசைப்படுவதற்குக் கூலி உண்டா? என் இஷ்டம்போல் நான் பிரியப்படலாமல்லவா?" "உம்!" என்று சிறிது துணிகரமாகவே தலையை ஆட்டினேன். "அப்படித்தான்! எனக்கு ஒரு பட்டு கவுன் (நல்ல ரகம்)" என்று சிரித்துக் கொண்டு நின்றாள். "அதெல்லாம் சரிதான்... உனக்குத்தான்..." என்று வழவழாவென்று ஆரம்பித்தேன். "நீங்கள்தான் இஷ்டம்போல் பிரியப்படலாம் என்றீர்களே!" என்றாள். "அதெல்லாம் கிடக்கட்டும். எனக்கு ஒரு ரேடியோ ஸெட் வேண்டும்" என்று நான் எழுதிவிட்டு, அவள் முகத்தைப் பார்த்தேன். பிறகு எங்கள் இருவருக்குள்ளும், இரண்டிலும் எது மிகவும் அவசியமானது என்பது பற்றி சாஹஸத்துடன் தர்க்கம் நடந்தது. ஆனால், இன்னும் ஐந்து வருஷம் வரையாவது இதெல்லாம் நடக்காத பேச்சு என்று எனக்குத் தெரியும். ஆனால் மேற்சொன்ன பனிக்காலச் சம்பவம் ரொம்பப் பின்னால் நடந்தது. நாங்கள் பார்க்கை விட்டு வரும்பொழுது வேனிற்காலம். எங்கள் இரண்டு ஆசைகளையும் ஒரு துண்டுக் கடுதாசியில் எழுதியாகிவிட்டது. இட்ஸன் பிளாஸுக்கு மூக்கு கொஞ்சம் பெரிது. சந்தோஷமோ, கோபமோ ஏற்பட்டுவிட்டால் மூக்கு சிவந்து விடும். அதனால் தான் அடிக்கடி மூக்கைச் சொறிவாள். அவள் மூக்கைப் போல கண்களும் மிகக் கூர்மையானவை. எப்பொழுது பார்த்தாலும் துருதுருவென்று இருக்கும். "இதோ பாருங்கள், ஒரு கிரிஸ்மஸ் குரோஷன்" என்று கால் நுனியால் சுட்டிக் காட்டினாள். (குரோஷன் ஒரு ஜெர்மன் நாணயம்.) "கிரிஸ்மஸ் குரோஷன்?" என்று குனிந்து எடுத்துவிட்டு, "இதோ போய் சிகரெட் வாங்கி வருகிறேன்!" என்றேன். "என்னிடம் கொடுங்கள். இது கிரிஸ்மஸ் குரோஷன்! கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டிக்கு!" என்றாள். "ஸ்ரீமதியவர்களே, தங்களிடம் கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டி எங்கு இருக்கிறது?" என்றேன். "பெட்டிக்கென்ன? ஒன்று கிடைக்காமலா போகிறது?" என்று வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்களிலிருந்து உண்டியல் பெட்டி விழாது என்பது நிச்சயம். "இப்படிச் செய்வோம். கிரிஸ்மஸ் பிரஸென்டிற்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்று கணக்குப் போடுவோம். 50 மார்க்குகள் ஏறக்குறைய" என்றேன். (ஜெர்மன் பிரதம நாணயம் மார்க்குகள் நமக்கு ரூபாய் போல.) "ஐயோ பாவம்" என்றாள். "கிரிஸ்மஸ் வருமுன் இன்னும் 6 முறை சம்பளம் வாங்கலாம். ஒவ்வொரு தடவையும் எட்டரை மார்க்குகள் மிச்சம் பிடித்தால் போதும். சரி, இப்பொழுது அந்தக் குரோஷனைக் கொடு, போய் சிகரெட் வாங்கி வருகிறேன்" என்று, கிரிஸ்மஸ் உத்தேச விகித பட்ஜட் சமர்பித்துவிட்டு, உபமானியங்கள் கேட்டுக் கொண்டு நின்றேன். "அதெல்லாம் முடியாது, குரோஷன் கிரிஸ்மஸ் நிதியைச் சேர்ந்தது. மேலும் உங்களுக்கு, இவ்வளவு பெரிய உங்களுக்கு, என்ன அசட்டுத்தனமாய்ப் புத்தி போகிறது; அதற்கெல்லாம் வேறு செலவு இருக்கிறது" என்று ஸ்ரீமதி இட்ஸன் பிளாஸ் டிமாண்டு மசோதாவை ஏகமனதாக நிராகரித்து விட்டார். "அப்படியா? அதென்ன?" கேலியாகக் கேட்டேன். அதற்குள் இட்ஸன் பிளாஸுக்கு ஊடல் ஏற்பட்டு விட்டது. ரொம்பக் கோபம் போல் முறுக்காக முன்னால் எட்டி நடந்தாள். நான் பின் தொடர்ந்தேன். கொஞ்ச நேரம் கழிந்ததும் தெருக்களுக்குள் பிரவேசித்தோம். அவள் தெருவின் ஒரு கோடியில் நடந்தாள். கொஞ்ச தூரம் சென்றதும், "ஏ! அம்மாளு!" என்று கூப்பிட்டேன். தெருவில் போகிறவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். தலையைத் திருப்பிக் கொண்டு நடந்தாள். போகும்பொழுதே அவளுக்குப் புது நினைப்பு ஏற்பட்டு விட்டது. வீட்டிலே கிடக்கும் கட்டிப் பால் டின்களை உண்டியலாக உபயோகித்தால்! அதை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில் லை. "ரொம்பக் கெட்டிக்காரத்தனம். டின்னுக்குள் மிஞ்சி நாறும் பால் அழுக்குக்குள் ஆறு மாதம் பணத்தைப் போட்டு வைத்தால் மிகவும் நன்றாகத்தான் மணக்கும்" என்றேன். உடனே அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. 'மறுபடியும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது' என்ற மாதிரி, தெருவின் மற்ற கோடிக்குச் சென்று விட்டாள். என் பங்கிற்கும் ஒரு புது நினைவு வந்தது. ஆபீசில் கிரிஸ்மஸ் போனஸ் கொடுப்பார்களே, அது அத்தனை நேரம் ஞாபகத்துக்கு வராமலே போய்விட்டது. ஐம்பது மார்க் கிரிஸ்மஸ் போனஸ். ஓடியே போய் அவளிடம் சொன்னேன். முதலில் என் தலையைத் தின்று விடுவதுபோலப் பார்த்தாள். என் னைப் போன்ற முட்டாளுக்கு போனஸ் யார் கொடுக்கப் போகிறார்கள் என்று நினைப்பது போல் இருந்தது. இரண்டு பேரும் விஷயத்தைப் புனராலோசனை செய்தோம். கடைசியில் அவள் அபிப்ராயம் இதுதான்; "போனஸ் கிடைக்காதென்றே பாவனை பண்ணுவோம் - ஆனால் போனஸ் இருந்தால்! - " என்றாள். பின்பு சமாதானம் அன்று, சமரஸம். நான் ஏன் சர்க்கார் மாதிரி இப்படிச் சிக்கனக் கத்தியை அடிக்கடி உபயோகிக்க வேண்டியிருக்கிறதென்ற காரணத்தைக் கூறவில் லையே. கிரிஸ்மஸ் செலவு ஒரு புறம் இருக்கட்டும். எங்கள் பொக்கிஷச் செலவாணியில் திடீரென்று பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கும் பாங்க் விடுமுறை அமுலுக்குக் கொண்டு வர வேண்டியிருப்பதற்கும் காரணம், நான் ஒரு பத்திரிகை ஆபீஸில் வேலை பார்த்து வந்ததுதான். எங்கள் பத்திரிகை ரொம்பச் சின்ன விஷயம். நான் அதிலே விடியற்காலம் ஏழு மணிக்கே போய் விட்டால் அதிலிருந்து 'லோக்கல்' செய்திகள் பிரசுரிக்கப்படும் பக்கம் என் பொறுப்பில் விடப்படும். நான் உபபத்திராதிபர், சமயா சமயங்களில் கம்பாசிட்டர் இத்தியாதி உத்தியோகங்களை ஏற்று, எனது பக்கத்தை நிரப்பி விடுவேன். இந்த மகத்தான சேவைக்காக எனக்கு அந்தக் காரியாலயத்தில் 80 மார்க்குகள் சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனது ஆசிரியர், மற்ற பக்கங்களை ரேடியோ புரோகிராம், ஆசிரியருக்குக் கடிதம், இத்தியாதி விஷயங்களால், ஒரு நொண்டி டைப்ரைட்டர் யந்திரத்தை வைத்துக் கொண்டு நிரப்பிவிடுவார். நான் என் காலை வேலைகளை நிறைவேற்றியபின், பிழைத்திருந்தால், கமிஷன் ஏற்பாட்டில் விளம்பரமும் வாசகர்களும் சேகரிப்பேன். இதுதான் என் வருமானம். இதற்கும் மேலாக, இந்த ஊர் தேகாரோக்கியச் சங்கத்தின் வியாதி நிதியின் பொக்கிஷதார். அங்கத்தினர் சந்தா, நிதிக்கு அளிக்கப்படும் உதவி மானியம் இவற்றில் 3% எனது சிரமத்திற்குச் சம்பாவனை. எங்களூர் நகர அமைப்பு போர்டு, யாத்திரிகர் போர்டு - இவற்றிற்கு கௌரவ காரியதரிசியும் நான் தான். இதிலே எனக்குச் செலவும் பெருமையும்தான் மிச்சம்; அத்துடன் ஏதாவது 'பெரிதாக' வந்தால், என் னைக் கவனிப்பதாக போர்டின் ஒரு வாக்குத்தத்தமும் வெகு காலமாக இருந்து வருகிறது. ஆகையால், எனக்கு வேலையில்லாக் கஷ்டம் ஒன்றும் இல் லை. இவ்வளவு வேலையாலும், நானும் என் மனைவியும், உயிரை உடலுடன் ஒட்டவைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டோ ம். 'வாங்குவது' என்ற வார்த்தை எங்கள் அகராதியில் கிடையாது. அதனால் பெரும்பாலும் எங்கள் தினசரி வாழ்க்கையில் உடல் களைப்பும் ஏமாற்றமும் மிச்சம். என்னதான் நாங்கள் சிரித்து உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தாலும், எங்கள் கிரிஸ்மஸ் உண்டியல் பெட்டி இன்னும் கற்பனை உலகத்திலிருந்து கீழே இறங்கவில் லை. அன்று ஒருநாள் வீட்டுக்குள் நுழைந்த பொழுது இட்ஸன் பிளாஸ் ஒரு நிலக்கரித் துண்டும் கத்தியுமாக நின்று கொண்டிருந்தாள். "என்ன வேலை நடக்கிறது?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு வினவினேன். "உஸ்! சத்தம் போடாதீர்கள். லோகம் பூராவும் எத்தனை துஷ்டர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாது போல் இருக்கிறது!" என்று கதவைச் சுட்டிக் காண்பித்தாள். நாங்கள் ஒட்டுக் குடித்தனம் தான் இருக்க முடியும்; அப்படித்தான் இருக்கிறோம். அவள் காட்டிய இடம் எங்கள் பக்கத்து ஆசாமி ஜாலி ரோஜர் வசிக்கும் அறை. "என்ன விசேஷம்?" என்றேன் நான் மீண்டும். எனக்கு, சதியாலோசனை பந்தாவில், காதோடு காதாக இரகசியம் அறிவிக்கப்பட்டது. உலகத்திலே திருடர்களும் துஷ்டர்களும் ஜாஸ்தியாம். எங்கள் பொக்கிஷத்தைச் சூறையாடிக்கொண்டு போய்விடுவார்களாம். அதற்காக ஒரு நிலக்கரித் துண் டை இரண்டாக அறுக்கிறது; இரண்டு பாகங்களையும் குடைகிறது. மறுபடியும் செக்டோடைன் வைத்து ஒட்டிவிடுகிறது. உடனே எங்கள் இரகசிய கிரிஸ்மஸ் உண்டியல் செய்தாகிவிட்டதாம். பிறகு அதன்மேல் ஒரு பக்கத்தில் ஒரு துவாரம் போட்டு, அதன் வழியாகப் போட்டுக் கொண்டே வருவது. (என்னத்தைப் போடுவது என்று அவள் சொல்லவில்லை.)