நாட்களும் ஓடின. காட்டு ஜீவராசிகள் ஓடியாடித் திரியும் பள்ளத்தாக்குகளை அடைந்தான். மான் கூட்டம் ஒன்று. இருபது இருக்கும். துப்பாக்கி லெக்குக்கு ரொம்பவும் அருகில் துள்ளி ஓடின. அவற்றை விரட்டிக் கொண்டே ஓடினால், சோர்ந்து விழுந்து விடுவது நிச்சயம் என்று நினைத்தான். ஒரு கருநரி, வாயில் காட்டுப் பட்சியொன் றைக் கவ்விக்கொண்டு அவனருகே ஓடிவந்தது. அவன் இரைந்து கூச்சலிட்டான். சத்தம் பயங்கரமாக இருந்தது. நரி பதறிப்போய் ஓட்டமெடுத்தது. பட்சியைப் போடவில் லை. பிற்பகலில், சுக்காம்பாறைத் தண்ணீர் பிரவாகமாக ஓடும் சிற்றோடையைத் தொடர்ந்து சென்றான். அது கோரைப் புல் ஊடே ஓடியது. கோரையைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டு பிடுங்கினான். கோரைத் தண்டினடியில் வெங்காயம் மாதிரி குருத்து இருந்தது. அது மெதுவாக இருந்தது. நெர நெரவென்று அவற்றை மென்று தின்றான். உணவு கிடைத்துவிட்டது போலிருந்தது. ஆனால் நார்மென்று விழுங்க முடியாமல் திப்பி திப்பியாக இருந்தது. தண்ணீரும் நாரும் கலந்த ஒரு தாவரச் சேர்க்கை, பசியாற்ற லாயக்கற்றது. மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, ஆடுமாடு மாதிரி கோரைக் கிழங்குகளைப் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தான். உடம்பில் ரொம்பவும் அசதி தட்டியது. அடிக்கடி படுத்துத் தூங்க வேண்டும்போலிருந்தது. ஆனால் கால் ஓயாமல் நடந்து சென்றான். பசி அவனை ஊந்தித் தள்ளிச் சென்றது. தண்ணீர் குட்டைகளில் தவளைகள் இருக்குமா எனவும், மண்ணுக்குள் நிலப்புழுவாவது இருக்குமா எனவும், இவ்வளவு வடக்கில் தவளையோ நிலப்புழுவோ இருக்காது என்பதை அறிந்தவன் தான், இருந்தாலும் நோண்டிப் பார்த்தான். குளம் குட்டைகளில் எல்லாம் குனிந்து குனிந்து பார்த்துக்கொண்டே சென்றான். பொழுது மயங்கும் சமயத்தில் ஒரு நீர்த் தேக்கத்தில் சின்ன மீன் இருப்பது அவன் கண்ணுக்குத் தெரிந்தது. தோள்வரை கையைத் தண்ணீரில் இட்டு பிடிக்க முயன்றான். அது அகப்படவில் லை. இரண்டு கைகளையும் போட்டுப் பிடிக்கப் பார்த்தான். அதிலும் தப்பிவிட்டது. சகதியைக் குழப்பி விட்டான். அவசரத்தில் உள்ளே விழுந்துவிட்டான். இடுப்புவரை நனைந்தது. தண்ணீர் கலங்கிவிட மீன் தெரியவில் லை. வண்டல் மறுபடியும் படிந்து ஜலம் தெளியும்வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. ஜலம் தெளிந்ததும் மறுபடியும் முயன்றான். மறுபடியும் குட்டை கலங்கியது. நேரத்தை மேலும் வீணாக்கிக் கொண்டிருக்க அவனுக்கு அவகாசம் இல் லை. தகரப் போணியை வைத்து குட்டையை இரைக்க ஆரம்பித்தான். முதலில் அவசரப்பட்டு தண்ணீரைக் கண்டபடி வீச, மறுபடியும் அது குட்டைக்குள்ளாகவே வந்து விழுந்தது. பின்பு சற்று ஜாக்கிரதையோடு வேலை செய்தான். நெஞ்சு திக்குத்திக்கென்று அடித்துக் கொண்டது. கைகள் நடுங்கின. அரைமணி சாவகாசத்தில் குட்டை வரண்டுவிட்டது. சொட்டுத் தண்ணீர்கூடக் கிடையாது. மீனும் இல் லை. பாறைகளுக்கு இடுக்கில் பெரிய நீர்த் தேக்கத்துடன் சேரும் ஒரு சிறு இடுக்கு இருந்தது. அந்தக் குட்டையை இரவு பகல் ஓயாமல் இறைத்தாலும் வடியாது. இடுக்கு இருப்பது முன்னமே தெரிந்திருந்தால் கல் லை வைத்து முதலில் அதை அடைத்திருப்பான். மீன் அவனுடையதாகி இருக்கும். இப்படி நினைத்து நொடிந்துபோய் சகதியில் உட்கார்ந்து விட்டான். முதலில் மனசுக்குள் அழுதான். பிறகு வாய்விட்டு ஓங்கி மனவலி பொறுக்க மாட்டாமல், நாலா திசையிலும் தன் னை விலங்கிடும் அத்துவானத்தை நோக்கி அழுதான். நெடுநேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான். நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தான். முந்திய இராத்திரி போல பாறையில் வென்னீரைப் பருகி உடலில் வெக்கை உண்டு பண்ணிக்கொண்டு பாறை மீது போர்வையை மூடிப் படுத்தான். படுக்குமுன் கடைசியாக, கெடிகாரத்துக்குச் சாவி கொடுத்துவிட்டு, நெருப்புக்குச்சி நனையாமல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான். கம்பளிப் போர்வை ஈரம் பட்டு நசுநசுவென்றிருந்தது. கணுக்காலில் வலி தெறித்தது. நாடி அடிப்பதுபோல அடித்தது. பசி ஒன் றைத்தான் அவன் அறிந்தான். தூக்கத்திலே கலங்கிய நினைப்பிலே கண்ட சொப்பனத்தில் எல்லாம் சாப்பாடும் விருந்துமே தென்பட்டன. விரைத்துப் போய் விழித்துக்கொண்டான். உடம்பெல்லாம் நொந்தது. மண்ணும் விண்ணும் சாம்பல் பூத்து இன்னும் இருண்டு கிடந்தது. வாள்போல் வாடைக்காற்று வெட்டியது. உறைபனிப்பஞ்சு மலையுச்சியில் வெள் ளைவிட ஆரம்பித்துவிட்டது. சுற்றிலும் காற்று கனத்தது. வெண் மையாயிற்று. அவனைச் சூழ மஞ்சு மூடியது. சிரமப்பட்டு நெருப்பேற்றி வென்னீர் காயவைத்தான். மழையும் பனிப் பஞ்சுமாகப் பெய்ய ஆரம்பித்தது. உறைபனிச் சிதர்கள் அகலமாக நொது நொதுவென்றிருந்தன. முதலில் அவை தரையில் பட்டதும் உருகியோடின. ஆனால் மேலும் மேலும் விழுந்து தரையை நனைத்து நெருப்பை அணைத்து பாசி விறகையும் ஈரமாக்கியது. மூட்டையைக் கட்டிக்கொண்டு முன்னேறு என உத்தரவு கொடுப்பதுபோலிருந்தது பருவம். எங்கு போவது. குத்துச் செடி முளைத்த பிரதேசமோ, முன்னே சென்ற சகாவோ, டியூஸ் நதி அருகே கவிழ்த்துப் போட்ட படகுக் குடிசையோ ஒன்றும் அவன் மனசில் ஊன்றி நிலைக்கவில் லை. 'உண்ணு' என்ற வினைச்சொல் அவனை ஆட்டி வைத்தது. உறைபனி வழியாகக் காட்டுக் காய்களையும் கோரைக் கிழங்குகளையும் நாடி பசி வெறி பிடித்து அலைந்தான். அது சப்பென்றிருந்தது; பசியை ஆற்றவில் லை. புளித்துக் கிடந்த காட்டுத் தழையைத் தின்றான். அதுவும் நிறைய வளரவில் லை. தரையோடு தரையாகப் படர்ந்து கிடந்தது. உறைபனி விழுந்து அதை மூடி மறைத்தது. அன்று அவன் நெருப்பு மூட்டவில் லை; வென்னீர் போட்டுப் பருகவில் லை. போர்வையை இழுத்து மூடிக்கொண்டு பசி கொல்ல தூக்கத்தில் விழுந்தான். பனி மாறி மழை பெய்ய ஆரம்பித்தது. பல தடவை, இடையிடையே, பிரக்ஞை வர மலர்ந்து கிடந்த முகம் நனைவதை உணர்ந்தான். பகல் வந்தது. பழைய மேகம் மொய்த்த பகல்தான். சூரியனில் லை. மழையும் ஓய்ந்தது. பசியின் வேகம் மடிந்துவிட்டது. உணவின் மீதிருந்த பற்றுதலும் மாறியது. வயிற்றிலே கனத்துக்கிடந்த வேதனை மட்டுமே இருந்தது. ஆனால் அறிவு மழுங்கவில் லை. மறுபடியும் குத்துச்செடி முளைத்துக்கிடக்கும் நிலமும் டியூஸ் நதிப் படகுக் குடிசையும் நினைவுக்கு வந்தது. மிஞ்சிக் கிடந்த மற்றொரு போர்வைத் துண் டை நீளமாகக் கிழித்து ரத்தம் கசியும் கால்களைக் கட்டினான். மறுபடியும் மொழி பெயர்ந்த கணுக்காலை இழுத்துக் கட்டி நடப்பதற்கு ஆயத்தம் செய்தான். மறுபடியும் மூட்டை கட்ட முனையும்பொழுது தோல் பொதியை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். கடைசியாக மூடைக்குள் வைத்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டான். உறை பனி, மழையின் வேகத்தால் உருகிவிட்டது. மலையுச்சி மட்டுமே வெள் ளை பூத்திருந்தது. சூரியன் வெளியில் வந்தது. அதை வைத்து லெக்கு நிர்ணயம் செய்துகொண்டான். இப்பொழுது அவனிருக்குமிடத்திலிருந்து தடம் பிடித்துப் போவது கஷ்டம் என்பதை உணர்ந்தான். முந்திய தினங்களில் இடது பக்கமாக வெகு தொலைவில் வந்து விட்டான் போலும். சரியான தடத்துக்கு வருவதற்காக வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தான். பசி தன் னைப் பிடுங்கித் தின்னவில் லை என்றாலும் தனக்குத் தெம்பு போய்விடாது என்பதை உணர்ந்தான். அடிக்கடி நின்று நின்று போகவேண்டியிருந்தது. காட்டுக் காய்களையும் கோரைக் கிழங்குகளையும் பிடுங்கித் தின்றதால் நாக்கு வரண்டு பெருத்து சிலிர்த்துக் கொண்டு வலித்தது. நாக்கில் மயிர் முளைத்த மாதிரி ஒரு பாவனை. அது கசந்தது. நெஞ்சு ரொம்பவும் தொந்திரவு கொடுத்தது. சில நிமிஷங்கள் நடந்தால் நெஞ்சுக்குள் ஏதோ குதிபோட்டது. மூச்சுத் திணறியது. தலை கிறங்கியது. அன்று மத்தியானம் ஒரு பெரிய குளத்தில் இரண்டு சின்ன மீன்களைக் கண்டான். குளத்தை இறைக்க முடியாது. பதறாமல் அவற்றைத் தகரப் போணியில் பிடித்தான். அவை இரண்டும் சிறு விரல் பருமன் கூட இல் லை. மேலும் அவனுக்கு அவ்வளவாகப் பசியும் இல் லை. வயிற்றிலிருந்த வேதனைகூட படிப்படியாக மடிந்து வந்தது. அவற்றைப் பச்சையாகத் தின்றான். மெதுவாக, ஜாக்கிரதையாக மென்று தின்றான். பசி வேட்கையில் பிறந்த செயல் அல்ல அது. அறிவு தூண்ட அவன் தின்றான். தின்னும் ஆசை கிடையாது. பிழைத்துக் கிடக்க தின்பது அவசியம் என்று தின்றான். மாலையில் மூன்று மீன் குஞ்சுகளைப் பிடித்தான். இரண் டைத் தின்றுவிட்டு ஒன் றை மறுநாள் காலைக்கு என்று சேமித்து வைத்தான். சூரியன் மீண்டும் பாசியை உலர்த்தி விட நெருப்பு மூட்டி வென்னீர் பருகி உடம்பைச் சூடாக்கிக் கொள்ள முடிந்தது. அன்று பத்து மைலுக்கு மேல் அவனால் நடக்க முடியவில் லை. இதன் பிறகு மறுநாள் நெஞ்சில் வலி இல்லாதபோதெல்லாம் தினத்துக்கு ஐந்து மைல் நடந்தான். வயிற்றில் அவனுக்கு வேதனையே கிடையாது. அது துயில்கொள்ள ஆரம்பித்துவிட்டது. புதியதொரு பிரதேசத்தில் அவன் நடந்து கொண்டிருக்கிறான். காட்டு மான் கூட்டமும் ஓநாய் ஊளையும் ஜாஸ்தி. மூன்று ஓநாய்கள் அவன் கண்ணெதிரில் பதுங்கிச் சென்றன. மீண்டும் ஓரிரவு. மறுநாள் காலையில் சற்று புத்தித் தெளிவு இருந்தது. தோல் பொதியைத் தூக்கி அவிழ்த்தான். தரையில் கொட்டினான். தங்கப் பொடியும் கட்டிகளும் வந்து விழுந்தன. அதை இரண்டு கூறாகப் பிரித்து, ஒன் றைக் கம்பளித்துண்டில் கட்டி பாறையிடுக்கில் வைத்தான். மற்றதைப் பையில் போட்டுக் கட்டிக் கொண்டான். மிஞ்சியிருந்த மற்றொரு கம்பளிப் போர்வையையும் காலைக் கட்டுவதற்கு உபயோகப்படுத்த ஆரம்பித்தான். ஆனால் துப்பாக்கியை விட்டெறிந்து விடவில் லை. டியூஸ் நதிப் படகுக் குடிசையில் தோட்டாக்கள் உண்டு. இன்று மஞ்சு மூடி இருந்தது. பசியும் அவனைத் தட்டியெழுப்பியது ரொம்பவும் வலுவிழந்து விட்டான். அடிக்கடி தலை கிறக்கம் வந்தது. கண்ணும் பஞ்சடைந்தது. தடுமாறித் தடுமாறி விழுவது இயல்பாகி விட்டது. ஒரு தடவை காட்டுப்பட்சியின் கூட்டிலேயே விழுந்தான். முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகள் நான்கு, பிறந்து ஒரு நாள் கூடக் கழியவில் லை ஜீவத்துடிப்போடிருந்தன. நாலும் சேர்ந்தாலும் ஒரு வாய்க்குத்தான் வரும். அவற்றை ஒவ்வொன்றாக உயிருடன் தன் வாய்க்குள் திணித்து முட்டையின் ஓட்டை நொறுக்குவது போல் நெறநெறவென்று மென்று தின்றான். தாய்க்குருவி அவனைச் சூழவந்து கூக்குரலிட்டு வட்டமிட்டது. அதையும் அடிக்க துப்பாக்கி மட்டையை ஓங்கினான். அடிபடாமல் தப்பியது. கல் லை வாரி வீசினான். அதன் சிறகு ஒடிந்தது. ஆனால் ஒடிபட்ட சிறகைப் பாட்டில் போட்டுத் தத்தித் தத்திப் பறந்தது. அவனும் அதைத் தொடர்ந்தான். குருவிக் குஞ்சுகள் பசியை எழுப்பின. நொண்டி நொண்டிப் பின் தொடர்ந்தான். கல் லை விட்டெறிந்தான். சமயத்தில் 'ஊங்' 'ஆங்' என்று கூச்சலும் போட்டான். பிறகு ஜாக்கிரதையாக நொண்டினான், தடுமாறி விழுந்தான்; தத்திப்பற்றி எழுந்தான். பஞ்சடைய ஆரம்பித்ததால் உள்ளங்கை கொண்டு கண்களை உறுத்தித் தேய்த்தான். இந்த வேட்டை இவனைப் பள்ளத்தாக்கின் அடிமட்டத்துக்கு இழுத்துச் சென்றது. அங்கு ஊளைச்சேறு. அதில் காலடித் தடம் தெரிந்தது. தன்னுடையதல்ல என்பது நிச்சயம். முதலில் பெடைக் குருவியைப் பிடித்துவிட்டு, பிறகு வந்து முன்னே சென்றவனுடையதா என்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தான். தாய்க் குருவியும் சோர்ந்து விட்டது, தானும் சோர்ந்து விட்டான். அது ஒருச்சாய்த்துக் கிடந்தது. அதற்குப் பன்னிரெண்டடி தூரத்தில் அவன் சோர்ந்து கிடந்தான். அவன் ஊர்ந்தால் அது ஊர்ந்தது. மீண்டும் தொடர்ந்தான். ஆனால் இரவு வழி மறித்தது. அது தப்பியது. சோர்ந்து போய்க் குப்புற விழுந்தான்; விழுந்த வாக்கில் முகத்தில் காயம்பட்டது. முதுகில் அப்படியே மூட்டை இருந்தது. வெகுநேரம் அப்படியே கிடந்தான். பிறகு ஒருக்களித்துச் சாய்ந்து கெடிகாரத்தை எடுத்துச் சாவி கொடுத்தான். விடியுமட்டும் அப்படியே கிடந்தான். மறுநாளும் மஞ்சு மூடிக் கிடந்தது. போர்வையில் பாதியை கால்கட்டுக்காகக் கிழித்துத் தீர்த்தாகி விட்டது. முன்னவன் சென்ற தடம் தெரிந்து கொள்ள முடியவில் லை. முன்னவனும் வழி தவறிவிட்டானோ என்ற சந்தேகம். முதுகில் மூட்டை உறுத்த ஆரம்பித்தது. மறுபடியும் தங்கத்தில் பாதியை தரையில் கொட்டினான். மத்தியானம் மீதியிருந்ததையும் வீசிவிட்டான். கையிலே தகரப் போணியும் பாதிப் போர்வையும் துப்பாக்கியுந்தான் மிச்சம். வீண் பிரமைகள் மனசைக் குமைக்க ஆரம்பித்தன. ஒரு தோட்டா கையில் நிச்சயமாகத் தெரிந்தது. துப்பாக்கியில் சொருகி இருக்கிறது. அது மறந்துபோய் விட்டதாம். உண் மையில் துப்பாக்கியில் தோட்டா இல் லை. உள் மனசுக்கு அது காலி என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இந்த வீண் நினைப்பு விடாப்பிடியாகப் பற்றியது இதைப் போக்கிக் கொள்வதற்காக, துப்பாக்கியைத் திறந்து பார்த்தான். தெரிந்திருந்தும் அது காலியாகக் கிடந்தது அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அரை மணி நேரம் நடந்தான். மறுபடியும் இந்த பிரமை கவ்வியது. அதை எதிர்த்துப் போராடினான். ஆனால் மனசைக் கவ்வியது. அதைக் கொல்லுவதற்கு துப்பாக்கியைத் திறந்து காட்ட வேண்டி இருந்தது. சில சமயம் மனம் இதையும் தாண்டி உலாவியது. அவன் வெறும் யந்திரம் போல் நடந்தான். விபரீத நினைப்புகளும் வக்கரித்த எண்ணங்களும் பிரமைகளும் மூளையைத் தின்னும் புழுக்கள்போல் மொய்த்தன. நிஜத்தைவிட்டு அகன்று அவன் செய்த யாத்திரை கொஞ்ச நேரந்தான். பசியென்ற பாசக்கயிறு அவனை மறுபடியும் இழுத்து வந்தது. மனக் குரளியின் ஓட்ட சாட்டத்தில் திடுதிப்பென்று அதிரடித்து நின்றான். எதிரில் நின்றது, அவனைத் தள்ளாட வைத்தது. அவன் எதிரே ஒரு குதிரை பஞ்சடைந்திருந்தது. அதிலே நட்சத்திரம் தெறித்தது. கண்களை முரட்டுத் தனமாகக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எதிரே நின்றது ஒரு செங்கரடி அவன்மீது பாயும் நோக்கத்துடன் பார்த்து நின்றது. மனிதன் துப்பாக்கியை தோளுக்கு நேராகத் தூக்கினான். பாதியில்தான் தோட்டா இல் லை என்ற நினைப்பு வந்தது. அதைக் கீழே போட்டுவிட்டு, வேட்டைக் கத்தியை உருவினான். எதிரே கறியும் உயிரும் நின்றது. கத்தியின் முனை கூராக இருக்கிறதா என்று கட்டைவிரலால் தடவிப் பார்த்துக் கொண்டான். கூராக இருந்தது. நுனியும் கூராக இருந்தது. கரடியின் பேரில் பாய்ந்து அதைக் கொல்ல வேண்டும். ஆனால் நெஞ்சில் இடது பக்கம் ஏதோ குதிபோட ஆரம்பித்தது. நெற்றியைச் சுற்றி யாரோ இரும்புக் கிடுக்கிபோட்டு அமுக்குவது போல் இருந்தது. மூளையிலே மயக்கம் படர்ந்தது. உள்ளிருந்து பொங்கிய பயமே அவனுக்கு நெஞ்சுத் தெம்பைக் கொடுத்தது. தொய்ந்து கிடக்கும்போது அந்த மிருகம் அவனைத் தாக்கிவிட்டால் என்னவாவது. நெட்ட நிலையாக கைகளை உயரத் தூக்கி கத்தியைக் காட்டியபடி நிமிர்ந்து நின்று கரடியையே பார்த்தான். கரடி இரண்டடி முன்னுக்கு வந்து முன்னங்காலைத் தூக்கி நின்று முக்காரம் போட்டது. மனிதன் ஓடினால் அவனைத் தொடர்வது என்பது அதன் நினைப்பு. அதற்கும் பயத்தின் தைரியம் பிறந்தது. மனிதனும் முக்காரமிட்டுப் பயங்கரமாக, பேய்த்தனமாக, கத்தினான். பயத்தின் பிளிறல் இது. உயிரின் மூலாதார வேர்களிலே பின்னிக் கிடக்கிறது அந்தப் பயம். கரடி ஒரு புறமாக ஒதுங்கி உறுமியது. பயமற்று நிமிர்ந்து நிற்கும் மிருகத்தைக் கண்டு அது பயந்துவிட்டது. மனிதன் அசையவில் லை. அபாயம் அகலும்வரை கற்சிலைபோல் நின்றான். பிறகு உடம்பெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. பாசிபடர்ந்த மண்ணில் விழுந்தான். பிறகு தெளிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். புதிய பயம் ஒன்று பற்றியது. பட்டினியால் வழியில் மடிந்து விடுவோம் என்ற பயம் அல்ல அது. உயிரிச்சை அவனை இழுத்துச் செல்லுமிடத்துக்குச் செல்லுவதற்கு, உடம்பில் உள்ள வலு அவ்வளவும் போகுமுன்பே, பட்டினி அவனை ஹதம் செய்துவிடக் கூடாதே என்பதுதான் அந்தப் பயம். ஓநாய்கள் சஞ்சரித்தன. முன்னும் பின்னும் அவை ஊளையிட்டு, வனாந்தர வெளியிலே தம் குரலில் இழைகளால் ஆபத்தைப் பின்னி வலை வீசின. அந்த வலை அவன் மீது விழுந்து அமுக்குவது போலவே பயந்தான். அடிக்கடி ஓநாய்க் கூட்டம் இரண்டும் மூன்றுமாக அவனுக்குக் குறுக்கே ஓடின. ஆனால் அவனை நெருங்கவில் லை. போதுமான எண்ணிக்கையில் வரவில் லை. மேலும் அவை காட்டுமானை வேட்டையாடி ஓடின. மான்கள் எதிர்த்துப் போர் புரியவில் லை. ஆனால் இந்த அதிசய மிருகமோ நிமிர்ந்து நடந்தது; கடிக்கலாம், பிராண்டி விடவும் கூடும் என பயந்தன. ஓநாய்கள் கிழித்துத் தின்று போட்டுவிட்டுப் போன எலும்புக் குவியல்களைப் பிற்பகலில் அவன் நெருங்கினான். சிதைந்து கிடைக்கும் தோலும் எலும்பும் ஒரு மணி நேரத்துக்கு முன் மான்குட்டியாக இருந்தது. எலும்புகளையே பார்த்துக்கொண்டு நின்றான். துளி தசைகூட இல்லாமல் நக்கி தின்றுபோட்ட எலும்பு. சிகப்பு நிறம் பாரித்த எலும்பின் அணுக்களில் உயிர் மடியவில் லை. இன்று கழியுமுன் இவனும் இப்படி இருக்கக்கூடும். இதுதான் வாழ்வு. வீணான தோற்றத்திலே மறையும் விவகாரம். வாழ்வில்தான் வலியுண்டு. மரணத்தில் வேதனை கிடையாது. சாவது தூங்குவது. அதன் பொருள் அற்றுப் போதல், ஓய்வு என்பதுதான். பின் ஏன் சாவதில் திருப்திப் படக்கூடாது? வெகுநேரம் இவ்வாறு சிந்திக்கவில் லை. பாசியில் உட்கார்ந்து எலும்பைக் கடித்து உறிஞ்சிக் கொண்டிருந்தான். சதைப்பற்று சொப்பனம் போல அவனை வாட்டியது. எலும்பைக் கடிக்க ஆரம்பித்தான். சில சமயம் எலும்பு தெறித்தது. சில சமயம் பல் தெறித்தது. பாறையில் போட்டு கல் லை வைத்து எலும்பை நொறுக்கினான். அவசரத்தில் விரல் நைந்தது. அதிலே வலி அவ்வளவில்லாதது கண்டு ஆச்சரியப்பட்டான். எலும்பை நொறுக்கி விழுங்கினான். அதன் பிறகு எத்தனையோ நாள் பனியும் மழையும் பயங்கரமாக வாட்டியது. எங்கே தங்கினான்; எப்போது எழுந்து நடந்தான் என்ற பேதமே அற்றுவிட்டது. பகலிலும் இரவிலும் நடந்தான். விழுந்தபோதெல்லாம் ஓய்வெடுத்தான். மடிந்து வரும் உயிர் சற்று நிமிர்ந்து எரியும்போது ஊர்ந்தான். பிறகு மறுபடியும் மங்கி எரிய ஆரம்பித்தது. மனிதன் என்ற நிலையில் அவன் முயலவில் லை. சாக மறுத்த உயிர்தான் அவனை உந்தித் தள்ளிச் சென்றது. அவனுக்கு வேதனை மங்கிவிட்டது. நரம்புகள் மழுங்கி மரத்துப் போயின. மனதில் மட்டும் விபரீத சொப்பனங்களும், ருசிக்கும் கனவுகளும் நிறைந்திருந்தன. நொறுக்கி வைத்த மான்குட்டி எலும்பை எப்போதும் சுவைத்துக் கொண்டிருந்தான். அவன் மலையையும் பள்ளத்தையும் கடக்கவில் லை. அகண்டதொரு பள்ளத்தாக்கில் சென்ற சிற்றோடையைத் தொடர்ந்து நடந்தான். கனவுகளைத் தவிர அவன் வேறு எதையும் பார்க்கவில் லை. உயிரும் உடம்பும் பக்கத்தில் பக்கத்தில் ஊர்ந்தோ நடந்தோ சென்றன. அருகருகில்தான் சென்ற. பந்தம் இருந்தது.