தாமஸ் வுல்ப் – அமெரிக்கா
ஈவிரக்கமற்றுக் கொதிக்கும் அந்த வருஷம் ஆகஸ்டில் யுத்தம் நின்றது. யுத்த தேவதையின் பவனியின்போது நான்கு கணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஒன்று லாங்லிவியல்; விமான மைதானத்தில் உள்ள குத்தகைக் கம்பெனியின் ஷெட்டுகளிலிருந்து ஒரு நீக்ரோஜாதியான் சர்வ ஜாக்கிரதையாக அடிமேல் அடியாகப் பின்புறம் கால் எட்டி வைத்துப் பின்வாங்குகிறான். பீதியும் வெறுப்பும் அவன் முகத்தில் பயங்கரமாகப் பல்லிளிக்கின்றன. வாட்ட சாட்டமான உடல் ஆகிருதி; மனிதக் குரங்கு மாதிரி தாவவோ ஓடவோ லாவகம் படைத்த கட்டமைதி, கரத்தையும் கருப்புப் பாதங்களையும் - அவற்றை முஷ்டி என்று சொல்லுவது பொருத்தமல்ல, அகன்றபடி விரித்து ஆகஸ்ட் மாதச் சூரியன் கன்னக் கனிந்த கருப்பில் பளபளக்க சர்வ ஜாக்கிரதையாக பின்வாங்குகிறான். காய்ந்து கருங்கட்டையாகப் புல்லற்று மலடடித்துப் போன களிமண் கட்டாந்தரை மீது கால் ஊன்றிப் பின்வாங்குகிறான். வெள் விழிகள் ஆழங்காண முடியாத, மூங்கையான வெறுப்பும் பீதியும் கொப்பளிக்கிறது. அவனை விரட்டிக் கொண்டு தென்னாட்டு வெள் ளையன், காங்கித் தலைவனோ ஓவர்ஸீயரோ - கொழுப்பேறிய சதைப்பற்று மிகுந்த கைகளில் தடியேந்தி, சளக்கு பளக்கென்று அவனைத் தொடர்கிறான். அவனுடைய அடித் தொண் டை கொலையையும் ரத்த வெறியையும் குமுறிக் கனைக்கிறது. 'கருப்புக் கூத்தியா மவனே; ஒன் கொடலைக் கொதறிப்புடறேன் பாரு. நாசமாப்போன மூளையைச் சிதற அடிக்கிறேன் பாரு!' தடி நீக்ரோவின் மண் டையில் பொட்டு பொட்டு என்று விழுந்து மைதானம் முழுவதிலும் கேட்டது. கட்டை உயிரடிக்கும் எலும்பில் அடித்துக் கொண்டிருந்தது. இந்தத் தொந்தி பெருத்த வெள் ளையனுக்குப் பின்புறம் உலகத்தின் தலையாட்டிப் பிராணியான ஆபீஸ் குமாஸ்தா, ஷர்ட் போட்டு நடமாடும் எலிமாதிரி தொடர்ந்து கொண்டிருந்தது. ஆபத்து என்றால் எலி மாதிரி பொடுக்கென்று ஒளிந்து கொள்ளும் திறமையும், ஆபத்து அகன்றது என்றால் அசகாய சூரத்தனத்தோடு கொல்ல வரும் தன் மையும் படைத்த ஜந்து இது. இது எலிப் பல் லை இளித்துக் கொண்டு, தன் னைப் பாதுகாப்பவன் நிழலில் தொடர்ந்து வந்தது. பயத்தில் தலையாட்டும் அடிமை. கொலையின் குனிந்து கொடுக்கும் மெய்க்காவல், இரக்கமோ தயவோ இல்லாமல் அடியோடு கொல்ல வேண்டும் என்ற கோழையின் ஆசையோடு கூடி எலிப் பல் லைக் காட்டிக் கொண்டு வந்தது. ஈவிரக்கமற்ற சூரியன் கைப்பட்டனிலும், கஞ்சியேறி மொடமொடக்கும் ஷர்ட் அணிந்த கையிலும், அது ஏந்திய மங்கிய நீலக் கைத்துப்பாக்கி மீதும் பிரகாசித்தது. துப்பாக்கியை ஏந்திய அவன் கை நடுங்கியது. ரத்த வெறிகொண்ட எஜமானுக்குத் துப்பாக்கியை நீட்டி 'இந்தாருங்க... இந்தாருங்க மிஸ்டர் பார்லட், பய எதுத்தா தாட்சண்யமில்லாமல் சுட்டுத் தள்ளுங்க' என்று காதில் ஓதியது. இந்த நிலையில் நீக்ரோ ஜாதியான் க்ஷணங்கூட நிற்காமல் பின்வாங்கி நடந்து கொண்டே இருக்கிறான். பயங்கரமான அவனுடைய வெள் ளை விழிப் பார்வை, பீதியும் வெறுப்பும் குடிகொண்ட பார்வை, எதிரியைப் பார்க்கவில் லை. அவனுக்கும் பின்னால் பளபளத்த மங்கிய நீல உருக்குக் குழலை இடைவிடாமல் பார்த்தது. அவனுடைய கரங்கள் குருட்டுத்தனமாக, பயனற்ற ரீதியில் முன்னுக்கு நீண்டு மறித்தன. வெறும் காற்றைத்தான் மறித்தன. அவன் வெறுப்பைக் கொட்டிக் கொண்ட எதிரி, மேலுக்கு மேல் அடித்துக் கொண்டே வந்தான். அவனுடைய கருப்பு முகத்தில் வாய்க்கால் வாய்க்காலாகச் சிவப்பு ரத்தம் பிரவாகமெடுத்தது. மண் டையில் பொட்டுப் பொட்டென்று குறுந்தடி விழுந்து கொண்டிருந்தது. 'ஒங்க... நாசமாப்போன கருப்புக்களுக்கு... நாப்பயமவனே.' கொலை நிறைத்துக் குமுறியது அந்தக் குரல். 'எப்பிடி இருக்கணும்னு சொல்லிக் குடுக்கேன் பாரடா.' படார். தடி மூக்கந் தண்டில் விழ சில் எழும்பு சரசரவென்று நொறுங்கியது. 'நாசமாப் போன கருங்களுதே வெள் ளைக்காரனை எதுத்துப் பேசரதா?' - படார். பக்க வாட்டாகச் சரிந்து வாக்கற்று விழுந்த அடி வாயை ஒரே ரத்தக் குமையலாக்கி விடுகிறது. உருக்குக் குழலின் நீலப் பளபளப்பில் வைத்த கண் மாறாமல், அந்த நீக்ரோ ஜாதியான் நொறுங்கித் தூளாகிவிட்ட பற்களைத் துப்புகிறான். 'அந்த நாசமாப்போன பய மண் டையை உடைத்துத் தருகிறேன் பாரு. கழுசடைக் கருப்புக் கூத்தியா மவனெ - என்னமாச் சொல்லிக் கொடுக்கிறேன் பாரு.' படார் - சுருண்டு வளர்ந்த மயிர் நிறைந்த மண் டையோட்டின் மத்தியில் இப்பொழுது அடி விழுந்து குறுகிய நெற்றிக்குமேல் மாங்காய் மாதிரி பிளந்து விட்டது. சக்தி துளும்பும் கரும் புருவம் கிறங்கித் தள்ளாடி முழங்கால் வளைய, தலை குனிய கரங்கள் இன்னும் முன்போல் பரவலாக விரிந்தபடி, முதலில் ஒரு முழங்காலை வளைத்து, ஒரே ரத்தமயமான தலையை நெஞ்சில் மடியத் தொங்கவிட்டபடி கால் பூட்டுகள் குருட்டுத்தனமாகத் தள்ளாட, அடியற்றது போல் மண்ணில் குப்புறச் சரிந்து விழுந்தான். அடிக்குடலோடு குமட்டலெடுக்கும் இந்தக் கோரத்தனத்தின் சிகரமாக, பிரக்ஞை இழந்து ரத்தச் சக்தியாக நைந்த முகத்தில், பூட்ஸ் காலின் கொலைகார உதை விழுந்தது. அப்புறம் யாவும் ஒடுங்கிய நிசப்தம். பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில் லை. வெள் ளைத் தொந்தியில் முட்டி முட்டித் திக்குமுக்காடி எழும் சுவாசமும், எலிப்பல் லைக் காட்டிய வெள் ளை எலி மூஞ்சியின் பீதி முடிந்த மூச்சும், மங்கி நீலம் இமைக்கும் விஷமுண்ட உருக்குந்தான் மிச்சம். அப்புறம். பீதியும் வெறுப்பும் குடிகொண்ட கோழையின் நெஞ்சு, தனக்கு ஆபத்து வராமல் கொல்ல விரும்பும் ஏக வழியில் செல்லும் கோழையின் கொலைக்காமம், சுயமதிப்புக் கப்பல் உடைந்ததும் எலி சாயுஜ்யத்தைப் பெற, துப்பாக்கி ஏந்தி காக்கியணிந்து, அதிகாரக் குதிரையில் ஆரோகணித்து இங்கு இப்போது கொலைத் தொழில் நடத்துகிறது. மூன்று பையன்கள்; எல்லோருக்கும் அந்தக் குத்தகைக் கம்பெனியில் தான் வேலை. இராத்திரிச் சாப்பாடு முடிந்தபின், கருக்கிருட்டில், இருளின் வருகையில் விமான மைதானத்தின் ஓரத்தின் பக்கமாக நடந்து செல்கிறார்கள். தண்ணீர்க் கரையோரமாக சமதளமான சதுப்பு மண் வழியாக, வீட்டைப் பற்றியும் ஊரைப் பற்றியும் படித்த படிப்பைப் பற்றியும் வாரக் கடைசியில் சம்பளம் வாங்கியதும் கடற்கரைக்கு உல்லாசப் பயணம் போவது பற்றியும் பேசிக்கொண்டு போகிறார்கள்; சர்க்கார் வெள்ளோட்டம் பார்த்து பரீட்சை செய்து கொண்டிருக்கும் போர் விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் கொட்டடியண் டையில் வந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட இரகசிய இடம் என்பது அவர்களுக்குத் தெரியாது. திடீரென்று அந்த இடத்தைக் காவல் காத்து நிற்கும் சோல்ஜர் இடுப்புப் பெல்டில் தொங்கும் ரிவால்வரில் கை வைத்தபடி அவர்களை நெருங்குகிறான். திருட்டு விழிகள் இமைகளை 'இடுக்கிக்' கொண்டு பார்க்கின்றன. நகர எலிகள் மூஞ்சி, சாம்பல் பூத்து வரண்டு, திருட்டுப் பார்வை, போட்டு உதப்பும் உதடு சலசலத்தது. மலடு தட்டி, ஜீவனற்ற சரசல் பேச்சை உதிர்க்கிறது. 'என்ன செய்யறீங்க - தேவடியா மகனுகளா. இங்கே யாரு வரச் சொன்னா? - கொட்டடியைச் சுத்தி ஏன் வட்டம் போடுறே?' தெற்குக் கீழ் பிராந்தியங்களிலிருந்த சிறுவன் ஒருவன். செக்கச் சிவந்து அழகு குடிகொண்ட முகம். நேசமும் பரிவும் பேச்சில் குழைய, தயங்கித் தயங்கிப் பதில் சொல்ல முயன்றான். 'ஏனையா, இப்படிப் போகலாம்...' மின்வெட்டுப்போல, அந்த எலி, பையனை வாயில் அறைந்தது. பையனுடைய செக்கச் சிவந்த கன்னத்தில் அழுக்குக் கறைபிடித்த விரல் நுனிகள் முத்திரையிட்டன. அவன் ஜீவனுடைய முக மண்டலத்தில் அழித்துத் துடைக்க முடியாத அசிங்க முத்திரையை வைத்தன. 'பதில் பேசாதேடா. நீ என்ன நெனைச்சா எனக்கென்னடா. மறு வார்த்தை பேசினா சுட்டுக் கொதிக்க வச்சுப்புடுவேன். ஹும், யாருக்கிட்டே...' அவன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவித் தயாராகக் கையில் எடுத்துக் கொண்டான். மந்தித்த பீதி, மந்திரம் போல் கட்டுண்ட நம்பிக்கையின் மை கவிந்து ஒரே சொருகாக நீலக் குழலின் மங்கிய பளபளப்பின் மீது மூன்று சிறுவர்களின் பார்வையும் தைத்தது. 'சரிதாண்டா போங்கடா' என்று பையனை அறைந்த வீரன் கழுத்தில் கைவைத்து அவர்களை நெட்டித் தள்ளுகிறான். 'எல்லோரும் ஓடிப் போங்க, இல்லாட்டாக்கா - ' அந்த மகாப் பெரியவர் உறுமுகிறார். கண்கள் பாம்பு மாதிரி பளபளக்கின்றன. முகம் பயமுறுத்தி அவர்களை நெருங்குகிறது. 'இன்னும் பேசினா சுட்டுத் தள்ளுவேன். ஓடுங்கடா. சுட்டுத்தள்றத்துக்கு முன்னாலே ஓடிப் போங்க.' மூன்று சிறுவர்களும் திக்பிரமையடித்து, மனங்குழம்பி வெட்கத்தால் குன்றிப்போய், ஒரு கணத்திற்கு முன் நெஞ்சில் சுனையூறிய சந்தோஷம், நம்பிக்கைகளும் அஸ்தமித்துவிட, திரும்பி, மௌனமாக மரத்துப்போய் வெட்கச் சுமையால் முதுகு குனிய, யுத்தம் சாகுபடி செய்த மிருகத்தனமான, உள்ளத்தைக் கரும்பும் குரோதம் உள்ளத்தைச் செல்லரித்துத் துளைக்க நடந்தார்கள். இனியும்... மனிதனுடைய ஆசை நிர்வாணமாக, மிருகத்தனமாக, அதிகாரத்துடன் பற்றியிழுத்து, கண்ட கண்ட உணவை எல்லாம், பசியின் அகோரத்தால் கிழித்துக் குதறி எதையும் சட்டை செய்யாது தன் வசமாக்கும் அடிமாண்டு போன நிலையில் இங்கு போல அங்கும் நிலவுகிறது. பாலத்துக்கு அப்பால், ரயில் பாதையைத் தாண்டி நியூபோர்ட் நியூஸ் நீக்ரோச் சேரியில் முடை நாற்றமெடுத்து வரண்டு புகையடித்துத் துரு ஏறிய குடியிருப்புகளிலும் குப்பங் குடிசைகளிலும் இது சஞ்சரிக்கிறது. வர்ணம் பூசாத மொட்டை மொழுக்கென்ற பைன் மரப் பலகைகளை இணைத்துத் தைத்து யுத்தத்தின் அதிரடி வேகத்தில் எழுப்பப்பட்ட குரடில்; பசியைப் போல் தெவிட்டுதல் காணாது வாழ்வைப் போல் வயசுற்ற மிருகத்தனமான குருட்டாசையைத் திருப்திபடுத்த அதே அகோர ரூபத்தில் அமைந்து நிற்கிறது. உலக மாத்யந்தமும் உலாவித்திரியும் தேசமற்றோர், வீடற்றோர் தேவையே இது. கரடுமுரடான, புதுத்தன் மை மங்காத, அழுக்கு மண்டும் இந்த இடத்தின் முன் பகுதி சாப்பிடும் அறை, பானம் அருந்தும் முன் கூடம் என்று இரண்டாகப் பலகை அடைத்துப் பிரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நாலைந்து மேஜைகள். சாப்பாட்டு லிஸ்ட் காட்டி, ஈ மொய்த்திருக்கும் கார்ட்கள் அதன்மேல் குத்தி நிறுத்தப்பட்டிருக்கின்றன. வந்தாதரிப்போர் அதை ஏறெடுத்துப் பார்ப்பதில் லை. மரப் பலகை கணக்கு மேஜை என்று ஒரு புறம் அத்துவான வனாந்தரமாக, அதன் ஜோடனைகளுடன் - வெதுப்பு இறங்கும் சோடா ஸிரின்ஜ், நாலைந்து சிகரெட் பெட்டி, ஒரு சுருட்டுப் பெட்டி முதலிய வகையறாக்களைத் தன்னுள் அடக்கும் ஒரு கண்ணாடிகேஸ், நாற்றமெடுத்த பாலேடும் பன்றிக் கறியும் கொண்ட கண்ணாடிப் பெட்டி - முதலிய ஜோடனைகளுடன் அங்கே நிற்கிறது. பாலேடும் பன்றிக் கறியும் கடை வைத்த நாள் முதல் குடிபுகுந்து வாழுகின்றன. யுத்தம் முடியுமட்டும் அப்படியே அங்கேயே குடிவாழும். அறை முழுவதிலும் வேசிகள், மெல்லிய நீண்ட அங்கி போட்ட வேசிகள், பரிமாறுவோராக கூட்டத்திடை இடைவிடாது சஞ்சரித்துத் தம் தொழிலை நடத்துகின்றனர். அங்கு உட்கார்ந்திருந்த மனிதர்கள் யாவரும் வகுப்பு வளமுறைக்குள் அடங்காத வர்க்கம். திசையற்று ஜீவ நதியிலே மிதந்து செல்லுகிறவர்கள். இன்று உழைப்பு நாள், ஓய்ச்சல், மறுபடியும் திசையற்ற மிதப்பு, பட்டினி, சற்று சிறைவாசம், சற்று வெளிவாசம், அழுக்கும் அடிமாண்ட வரட்சியும் பட்டினியும் பிய்த்துத் தின்ன அதிர்ஷ்டமிழந்து, ரயில் வண்டிகளில் அடிக் கம்பிகளைத் தொத்திக்கொண்டோ , அல்லது மிருக ராசிகளுக்கான கூட்ஸ் பெட்டிகளிலோ சவாரி செய்து, ஊர்ப் பயணம் செய்து கொந்தளித்து வெந்து காயும் நாடோ டிக் கானகத்தில் உணவு பறித்து உயிரைப்பற்றி உலாவித் திரியும் உடலங்கள். திடீரென்று பணமும், அற்ப சுபிட்சமும் அவர்களைத் தலைதெறிக்க வைத்துவிடும். அர்த்த ராத்திரியில் குடைபிடித்து விடுவார்கள். ஜீவ நதியிலே மிதந்து செல்லும், பெயரற்ற வீடு வாசலற்ற, வேரூன்றா வர்ஜா வர்ஜமற்ற வகுப்பு இந்த மனிதப் பிராணிகள். இவை தேசத்தை மொய்த்துச் சுற்றுபவை. இவர்கள் இந்தப் பூவுலகத்திலே மனிதக் கரிப்பிண்டங்கள். எரிந்து கருகிப்போன கரிக்கட்டைகள். கருப்போல் வரண்டு, அழுக்கேறி, வருஷம் வரையும் கோடுகள் சுமந்த முகம் பெற்று, வேற்றுமை காட்டாது வறுமையின் ஏகஜாடை பெற்று, அலைபவர்கள் இவர்கள். அன்று காலைதான் வேறு நகரத்து ரயில் ஸ்டேஷனில் கூட்ஸ் வண்டியிலிருந்து ஊர்ந்து வெளியே வந்த ஜந்துக்கள் போலத் தோன்றும். சற்றும் கவலையற்றுப் பார்த்துக் கொண்டு கையில் அட்டைப்பெட்டி ஒன்று சுமந்து (ஒரு ஷர்ட், இரண்டு காலர்; ஒரு கழுத்துப் பட்டி - இவைதான் அதிலுள்ள ஆஸ்தி.) நடமாடுவார்கள் இந்தப் பிராணிகள். எங்கிருந்தோ நெடுந்தூரம் கடந்து வந்தவர்கள் என முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும். அவர்கள் அனாதைப்பட்டது போன்ற ஒரு அவலம் அவர்கள் முகத்தில் தெறிக்கும். துரு ஏறி இயங்கும் ஒரு மனிதப் புள்ளி நிர்வாணமாக, அவனைக் கவித்து மூடும் வறட்சியுள்ள வானத்தின் கீழே அகோரமான மகா கானகம் என்ற பூலோகத்தில் எற்றுண்டு கூட்ஸ் வண்டியடிக் கம்பிகளில் ஒட்டித் தொங்கும் துருவாக இயங்குகிறது. நிர்வாணமாக, பெயரற்று வரவேற்று, ஒரு ஜீவனுடன் பொருந்தியுள்ள தனித் தன் மையும் அந்தரங்கமும் வாய்ந்த விசேஷங்கள் யாவும் உறிஞ்சப்பட்டு, துரு இரும்பு - வியர்த்தம் என்ற வரம்பற்ற சூன்யத்திலே, ஏகாங்கியாக, தொடர்பற்ற தொலைவுகளிலே உந்தப்பட்டு இயங்கும் மனிதக் கரிக்கட்டைகள் இந்த ஜீவராசிகள். கடைசியாக இந்த மனித அணுக்கள் இந்தக் கண்டத்தின் கண்ணற்ற இடத்தில், கொல்லிப் பாவையின் கண்ணெதிரில் உயிரைக் கக்கி வெடித்து மடிகின்றனர். தடத்தில் தெரிந்த ரத்தமும் அலறிச் சுழலும் சக்கரக் குமுறலில் இடுங்கி மடியும் மனிதக் கிரீச்சுக் குரலும் ரயில் வண்டியின் அடித்தண்டுகளில் சுற்றித் தொங்கும் குடலும் ரயில் பாதைக் கட்டையில் என்னவென்று அடையாளம் பிரிக்க முடியாதபடி மூளையும் சதையும் எலும்பும் ரத்தமும் சொட்டுச் சொட்டாகத் தெரியும் தடங்களுமே அதன் சமாதி, அல்லது நகரத்துத் தலை வாசலிலோ பாலத்து அடியிலோ சுருண்டு வடிவம் மாறி அழுக்குக் கந்தை சுற்றிய மனிதன் மூட்டையாக விரைத்துப் போய், ஜீவனற்று, போலீசார் வந்து வண்டியிலேற்றி, அகற்ற, வாழ்விலே பெயரற்று மறக்கப்பட்டு அலைந்ததுபோல் சாவிலேயும் அந்தப்படியே அகற்றப்படும்படி காத்திருக்கும். இப்படிப்பட்டவர்களே இந்த மேஜைகளருகில் சூழவிருந்தனர். இந்த அவசர ஆசைக் கொட்டிலில் அமர்ந்து இருந்தார்கள். திருட்டு விழி போட்டு வலைபோட்டு அரிப்பது போல் கணக்கெடுக்கும் பாவனையில் தயங்கி, கோணல் சிரிப்போடு ஆட்டு விழி விழித்து அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பரிமாறியவர்களோ, வடக்கு, மத்ய கிழக்கு மாகாணங்களிலிருந்து திரட்டிக் கொண்டுவரப்பட்ட வேசிகள். மிலேச்சப் பேராசையும், பேய்ப்பசியும், சோர்வுற்ற கண்ணும், வரண்ட முகமும், தம்முடைய ஜீவனோபாயமான தொழிலில் யந்திரம் போல் இயங்கி, இடம் கொடுத்து சொற்ப அவகாசத்திற்குள் கிடைத்ததைச் சுருட்டுவதையே ஏக நம்பிக்கையாகப் பற்றிப் பிடித்து உயிர் வாழும் ஜாதி அது. குரல் கரடுமுரடாகத் துருவேறிக் கிறீச்சிட்டது. வேண்டுமென்றே அசிங்க வார்த்தைப் பிரயாணம் பண்ணித் தன் னை முரடியாய்க் காட்டிக் கொண்டு தன் னைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றது. பெரிய நகரத்துச் சேரிக் குடில்களில் வசிக்கும் ஜீவராசிகளின் குணம் அது. அங்கு தழைக்கும் குழந்தைகளிடமும் அதைக் காணலாம். ஓயாத ஆணை, ஓயாத வசவு, ஓயாத கேலி, நையாண்டி, நாக்கில் நரம்பற்றுப் பேசுவது, ஓயாத பீதி, ஓயாத கொடுமை - இவை யாவும் அவர்களைச் சூழ உலாவித் திரியும் பேய்ப்பசியின் பிடுங்கலின் விளைவாகப் பிறந்தவை. கைத்துப்போன வாழ்வில் கையில் பட்டதை 'கல் நார் உரிச்சு' எப்படியோ காலந்தள்ளும் ரீதியில் நடமாடித் திரிவதால் இவர்கள் தம்மிடம் நல்ல தன் மை இருப்பதாக, இளகிய மனசு குடி கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளப் பயப்படுகின்றனர். இந்தக் குணங்கள் இவர்களை 'இவர்கள் போன்ற சகாக்களான ஆபத்துக்களில் சிக்கவைத்து அவர்களது தாக்குதல், கொடுமை, ஜபர்தஸ்து முதலியவற்றிற்குத் தம்மை ஆட்படுத்தி விடலாகாது' என்பதே இவர்களது ஓயாத கவலை. இந்தப் பெண்டுகளும் அப்படித்தான். புகை மண்டும் அந்த அறையில் அவர்களது கமறல் குரல், கரகரத்துக் கேலி மண்டும் சிரிப்பு; 'அட, சேங், அட கிருஸ்து! எனக்கென்ன ஆத்தரண்டா. வாயேன். இப்போ என்னடா பண்ணப் போறே. எனக்கு வேறே வேலையில் லை. 'வேணும்'னா காசெக்களத்து இல்லாட்டா கம்பியை நீட்டு' என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வெடிபடும் பேச்சு - இவைதான் இவர்கள் சரக்குகள். இப்படியிருந்தும், இந்த நைந்துபோய் மிருகமாகி, பீதி உந்த நடமாடித் திரியும் ஸ்திரீ ஜாதியில், வாழ்விலிருந்து நசிக்கித் தேய்த்துவிட முடியாததொன்று பரிதாபகரமாகக் கனிந்து கொண்டு இருக்கத்தான் செய்கிறது. உள்ளுக்குள்ளே புதைபட்டு சமாதியாகிக் கிடக்கும் பரிவு, பீதியோடு நேசத்தை, உள்ளன் பைத் தேடித் துழாவும் மனசு, மென் மை, ஏன் அன்புகூட, இந்த நாசமாகி அஸ்தமித்துப் போன மனிதக் கரிக்கட்டைகளிடத்தே தேடித் திரிகிறது.