தயங்கித் தயங்கி மறியும் உடலொட்டிய இந்த வேட்கை, தங்கள் ஜோலியைச் செய்து இவர்கள் நடாத்தும் வாழ்வினிடையிலும் வெளிக்கு அகோரக் கேலிக் கூத்தாகத் தோன்றினாலும், மேஜைக்கு மேஜை போஷகர் தேடி நடக்கும்போது சர்வ ஜாக்கிரதையோடு எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது. இப்படியாக, இவர்களிடம் வைது முரட்டுத்தனமாகப் பேசுகிறவனிடத்தில் அதுதான் இங்கே சாதாரண வழக்கம். அதே ரீதியில் அவனுக்குப் பதில் சொல்லுவார்கள். ஆனால் அதற்கு மாறாக அமைதியாகப் பேச்சுக் கொடுத்தால், சற்றுப் பரிவோடு 'பார்வை விட்டால்' அவர்கள் தங்கள் கமறல் குரலை அடக்கி, மூச்சாக வெளிவரும் குசுகுசுப்புப் பேச்சோடு, அவனை இடித்துக் கொண்டு பயங்கரமான பரிதாபகரமான குழைவு காட்டி, வர்ணமேற்றிய மூஞ்சிகளை அவனருகில் கொண்டு வந்து, கவர்ச்சிப் பாவனையைக் காட்டி நடப்பார்கள். இது மாதிரி: 'ஹெலோ, பெரிய தம்பி, ஏண்டா தனியா குந்திக்கிணு நிக்றே, சும்மானாச்சு உக்காந்து மடியிரே.' 'பேச்சுத் தொணைக்கி ஆளு வாணாம், உம்.' வர்ணமேற்றிய உதட்டிடை பல்லிளித்துக் காட்டி அவன் மீது ஒண்டிச் சாய்ந்து கொண்டு 'வெள்ளாட வாரியா கண்ணுக்குட்டி, வாடா எந்தொற மவனே வாயேன்'... போஷகன் கை பிடித்திழுத்து, 'பொளுது களியுதே தெரியாது' என அழைப்பார்கள். இந்த மாதிரி ஒரு கூத்தில் சிக்கிய ஒரு பையன் மேஜையை விட்டு எழுந்து, ஒருத்தியுடன், புகைமண்டும் அறையைவிட்டு ஒரு பக்கத்தில் செல்லும் ஒடுங்கிய பாதைக்கப்புறமிருந்த கதவைத் திறந்துகொண்டு பின்புறமிருந்த விபசார விடுதியின் - தனிக் கொட்டடிகளுக்குப் போனான். இங்கே, காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எதிரிலிருந்த தனி அறைகளில் ஆட்களிருப்பது சப்தம் கேட்டது. இந்த இடவசதி நோக்கி ஜோடி ஜோடியாக ஆடம்பர வெறி 'சக்தி - சிவங்கள்' காத்து நின்றன. இந்த ஜோடி உள்ளே நுழைந்ததும் அங்கு நின்ற ஒருத்தியைப் பார்த்து, 'ஹல்லோமே, கிரேஸைப் பார்த்தியா?' என்றாள். வாயிலிருந்து புகைப் படலத்தை வெளிவிட்டுக் கொண்டு 'ஏழாம் நம்பரிலே பாரு. ஒரு வேளை அங்கே இருப்பா' என்றாள். இப்படித் தனக்குத் தெரிந்த தகவலை 'மெட்டாக' வெளிவிட்டுவிட்டு தன் பக்கத்திலே நிற்கும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த முரட்டு மாலுமியைப் பார்த்து, 'ஏண்டா பையா காத்துக் காத்து கால்கடுத்துப் போச்சா?' என்று கேலி செய்தாள். 'இன்னம் நேரமாவது, அடுத்த நிமிஷம் நாம் போவோம்' என்றாள். இந்த ரீதியிலே பேச்சுப் பாவனையும், காமம் மண்டும் கேலியும், சிரிப்பும் அந்த வரிசையில் ஓயாது எழுந்தது. வேறு சிலர், உள்ளிருப்பவர்களைக் கதவைத் தட்டி முடுக்கிக் கொண்டிருந்தார்கள். அது வெந்து வழியும் ஆகஸ்ட் இரவு... என்பதில் துளிக்கூட ஐயமில் லை. ஹால் வெந்து ஒழுகியது. கும்மிப் போன முடை நாற்றம் எண் ணைக் கசடு பிசுபிசுத்துக் குமட்டலெடுக்க வைத்தது. அறை முழுவதும் நாற்றம் பிடித்த சிகரெட் புகை வெளிச் செல்லாது மண்டிச் சுருண்டு, மனிதர்களுடைய உடலின் கற்றாழை நாற்றம், 'பெண்டுகள் போட்டிருந்த மூக்கை அறுக்கும் வாசனை', கடைசியாக நிர்வாணமாக மிலேச்சத்தனமாக மனிதனுடைய காம கரும்பு மறக்க முடியாத நாற்றமாக உருவெடுத்து, தைத்துக் கோத்த பைன் பலகைச் சாவடியில் மரக்கந்தத்துடன் கலந்து மனத்தில் அதே அகோர ரூபத்தில் ஒட்டிக்கொண்டது. கடைசியாக, இந்த மூச்சு திக்குமுக்காடும் ஹாலில் நெடுநேரம் காத்திருந்து அதனிடை எத்தனை ஜோடியோ வெளியே வந்தது. எத்தனை ஜோடியோ உள்ளே சென்றது. பையனும் பெண்ணும் வரிசையின் முதல் ஸ்தானத்தைப் பெற்றார்கள். பின்னால் ஓயாது அலம்பிக் கொண்டிருக்கும் ஜோடி வகைகள், முன்னால் குருட்டுக் காமக்குமுறல். கடைசியாக அவர்கள் காத்து நின்ற கதவு திறந்தது. ஒருவன் வெளியேறிப் பின்னால் கதவையடைத்துக் கொண்டு சென்றான். பிறகு ஒரு கணம் நிசப்தம். மறுபடியும் வாயசப்பல். 'இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள்' என்ற ஜோடியின் முணமுணப்பு. கடைசியாக அந்தப்பெண் 'ஏண்டி. உள்ளே யாரு. வாயேண்டி வெளியே. வளியை மறுச்சுக்கிட்டு கிடக்காதே' என்று உறுமினாள். உள்ளிருந்து ஒரு ஸ்திரீயின் சோர்வுக்குரல் கேட்டது. 'சரிதாண்டி, ஒரு நிமிஷத்திலே வாரேன். சித்த பொறுத்துக்கோ' என்றது. 'ஓ' என்றாள் அந்தப் பையனுடன் நின்ற பெண். 'அவள் மார்கரெட்டு, பாவம் சோந்து களைச்சுப் பூட்டிருக்கும்' என்று இளகிய குரலுடன் சொன்னாள். 'குட்டியம்மா. என்னம்மா இருக்கு? ஒத்தாசைக்கு வரட்டுமா' என்று பரிவுடன் குரல் கொடுத்தாள். 'அதெல்லாம் வேண்டாம்' என்று சர்வ சோர்வுடன் தள்ளாடியது உள்ளிருந்த பெண் குரல். 'ஒரு நிமிசத்திலே வந்துடுறேன், ஏன் நீயுந்தான் வாயேன்' என்று குரல் கொடுத்தது. அந்தப் பெண் மெதுவாக ஓசைப்படாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். கொதிப்பேறிப் பச்சைக்கழைபோல் சீர்குலைந்து பயங்கரமாகக் கிடக்கும் அந்த அறையின் சீர்வரிசைகளைச் சொல்லி முடியாது. ஒரு நாற்காலி. அதற்குப் பக்கத்திலே குலைந்து கிடக்கும் படுக்கை, பக்கத்திலே ஒரு குட்டி மேஜை. மேஜையின் பேரில் ஒரு பொம்மை. இடுப்பில் ஒரு ரிப்பன் கட்டியிருந்தது. பக்கத்தில் அதனுடன் சேர்த்துக் கட்டின ஒரு மாலுமித் தடியன் போட்டோ . 'எனக்கு நிசமாகக் கிடைத்த ஒரு சினேகிதி மார்கரெட்டு' - எட்டி நின்ற ஷரத்துக்கள் நின்றன. பக்கத்திலே ஒரு சிகரெட் பெட்டி. மேலே ஒரு மின்சார விசிறி ஆடியது. புழுங்கி வழியும் காற்றைச் சுருட்டிச் சுருட்டியடித்தது. அடிக்கடி அந்த விசிறிகள் சுழற்சியில் ஒரு கோணத்தில் வரும்போது, கட்டிலிலே களைப்பே உருவாய் அல்லித்தண்டு போலக் கிடந்த பெண்ணின் முகத்திலே வீசியது. அப்போது பட்டுப்போல் மென் மையான கபோல ரோம ராசி ஒன் றைத் தலை சுற்றி ஆடவைத்தது. அந்தப் பெண் சற்று நெட்டையாக, ஒல்லியாகக் கட்டிலிலே நீட்டிப் படுத்துக் கிடந்தாள். ஒரு புறம் மறிந்து கிடந்த கையில் சோர்வு கொழுந்தோடியது. மற்றொரு கையை மடக்கித் தலைக்கடியில் வைத்துப் படுத்திருந்தாள். முகம், அழகு குடிகொண்டிருந்த இடத்தைச் சோர்வும் பட்டினியும் வதங்க வைத்துவிட்டது. அவள் ஒரு புறமாகக் கண்களை மூடிக் கைகளை முட்டுக் கொடுத்துக் கிடந்தாள். கண் இமைகள் ரத்த ரேகையைக் காட்டின. சோர்வால் நொந்து கிடந்தன. வந்தவள் மெதுவாகச் சென்று கட்டிலில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து பரிவோடு பேச ஆரம்பித்தாள். படுத்துக் கிடந்தவள் கண் ணைத் திறந்தாள். சிரித்தாள். போதையில் தூரத்தில் அலைந்த புத்தி தயங்கித் தயங்கி குடிபுகுவது போல் இருந்தது அந்தச் சிரிப்பு. 'என்னம்மா, என்ன கண்ணே சொன்னே. எனக்கு ஒன்றுமில்லே' என மெதுவாகச் சொன்னாள். உட்கார்ந்திருந்தவள் ஒத்தாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். நாற்காலியில் கிடந்த உடையை இழுத்துப் போட்டுக் கொண்டாள். பிறகு புன்சிரிப்போடு எழுந்து நின்றாள். மேஜையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டாள். வெளி வாசலண் டை காத்து நின்ற பையனைப் பார்த்துக் கிண்டலாக 'இப்ப உள்ளே வரலாண்டா ஜார்ஜியா' என்றாள். அவள் குரலில் கமறல் லேசாகத் தொனித்தது. இருந்தாலும் மகிழ்ச்சியோடு பேச்சு வெளிவந்தது என்பதை தொனிப்புக் காட்டியது. போஷகர்களை 'ஜார்ஜியா' என்று குத்து மதிப்பாக ஒரு பேர்வைத்துக் கூப்பிடுவது வழக்கம். அவன் தயங்கி உள்ளே வந்தான். பார்வையில் திக்பிரமை வெறித்துக் கொண்டு தெறித்தது. அவனைப் பார்த்த நிமிஷத்திலேயே அவனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள். அந்தப் பையன் படித்த சர்வகலாசாலை இருந்த ஊரிலே ஏழைகளானாலும் நாணயமாக ஜீவித்த குடும்பத்தில் பிறந்தவள் தான் அவள். நகரத்தில் எல்லோருக்கும் தெரிந்த குடும்பம் அது. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் அவள் திடீரென்று எங்கோ மறைந்து போனாள். அங்கே படித்த மாணவனோடு 'தப்புத் தண்டாவில் சிக்கிக் கொண்டவள்' என்ற வதந்தி சற்று அடிபட்டது. அதற்கப்புறம் அவளைக் கண்டதோ கேட்டதோ கிடையாது. 'ஊரிலே எல்லாரும் எப்படி? சௌக்கியந்தானே?' என்று கேட்டாள் அவள். சாம்பல் வர்ணத்தில் பளபளத்த அவன் கண்கள் கடினம் காட்டியது. மெலிந்து வாடிய சின்ன முகத்துச் சின்ன வாய் கத்திபோல் கடினம் காட்டியது. குரல் கடினங் காட்டி ஈட்டிபோல் கிண்டி, கிண்டல் செய்தது. ஆனால் எதிர்த்து அடிக்கும் பாவனையிலும் ஒரு அபூர்வமான பரிவு காட்டி இயங்கியது. அவனுடைய தோளில் மெலிந்த கைகளைப் போட்டாள். அன்னியமாக உலகத்திலே எதிர்பாராதபடி தெரிந்த முக தரிசனம் கிட்டியதால் ஏற்படும், ஞாபகத்துடன் இயங்காத, திடீர் பரிவு அச்செயல். 'அவர்கள் சௌகரியமாகத்தான் இருக்கிறார்கள்' என்று குமுறினான் அவன். தட்டுக்கெட்டு நிற்பதால் முகம் சிவக்க ஆரம்பித்தது. 'எனக்குத் தெரிஞ்சவர்களைப் பார்க்க நேர்ந்தால், எனக்காக அவர்களிடம் குரல் கொடுத்து நானும் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்று சொல்லு. 'என் அன் பைச் சொல்லி அனுப்பி வைத்ததாகச் சொல்லு' என்றாள். 'சரி அப்படியே ஆகட்டும். நிச்சயமாகச் செய்கிறேன்' என்றான் அவன். 'ஜார்ஜியா ஒம் மேலே கன கோவம் எனக்கு. வந்தவன் எனக்குச் சொல்லி அனுப்ப வாண்டாம்? அடுத்த தரம் வந்தா என் னைக் கூப்பிட்டுவிடு. இல்லாட்டா எனக்குப் பெரிய கோவம் வரும். ஒரு ஊருக்காரர் ஒண்ணா ஒட்டி வாழாமே முடியுமா? மார்கரெட்னு கேளு. எங்கேயிருந்தாலும் ஓடியாந்துடறேன் - தெரிஞ்சுச்சா?' என்று மறுபடியும் உத்தியோக - கொச்சையில் இறங்கினாள். 'சரி ஆகட்டும். ஒன் னையே கூப்பிட்டு விடுகிறேன்' என்று குமுறினான் அவன். அவள் அவனை ஒரு கணம் கடின பார்வையுடன் நோக்கினாள். கசந்த, அபூர்வங்கலந்த சிரிப்புக் குலையவில் லை. விரல்களை அவன் சிகைகளில் விட்டுக் கோதிக் கொடுத்தாள். மற்றவளைப் பார்த்து 'அவனைப் பரிவாப் பார்த்துக்கொள். எங்கூர்க்காரன். போய்ட்டு வாரேன் ஜார்ஜியா. அடுத்த தடவை வந்தா எம்பேரைச் சொல்லிக் கேக்கணும். போய்ட்டு வாரேன்' என்றுவிட்டு வெளியேறி, மூச்சுத் திணறி முடைநாற்றம் வீசி, குருட்டாசைக் கைகாட்டி அழைத்துத் திரியும் குறுகிய உலகுக்குள் நைந்த மெல்லிய உடம்பை ஆயிரத்தோராந்தடவை விற்பனை செய்ய அங்காடிக் கடைக்குள் மறைந்து விட்டாள். கூப்பிடவும் கைப்பற்றவும், வந்தவரை அங்கீகரிக்கவும் அந்த இருட்டென்ற நாழி குலுக்கிப் போடும் ஆயிரமாயிரம் பெயரற்ற பிராணிகளில் ஒன் றைப் பொறுக்கி எடுக்க மறைந்துவிட்டாள். அதன் பிறகு அவன் அவளைப் பார்க்கவே இல் லை. யுத்தம் என்ற சுழிப்பு அவனைத் தன்னுள் இழுத்துச் சொருகி விட்டது. விஸ்தாரமான, குரூரமான மந்திரோச்சாடனம் போன்ற மகா அமெரிக்கா என்ற ஆழங்காண முடியாத பாதாளம். குருட்டாட்டமாடும் குழப்பத்தினுள் அவனை இழுத்துக்கொண்டுவிட்டது. அங்கேதான் நாமும் ஜீவிக்கிறோம். அன்னியராக நடமாடுகிறோம். அங்கேதான் நாமும் குள்ள மனிசர்களாக, தனிமைப்பட்டு, கைவிடப்பட்டு, கடைசியாக ஒரே கவனமாக உள்ளிழுக்கப்பட்டு, பெயரற்ற அனந்தகோடிகளின் சமாதியான இருளுக்குள் மறக்கப்பட்டு மறைகிறோம். இதுதான் யுத்த தேவதையின் பேரழிவு இன்ற மூன்றாவது முக மண்டலம். ஆசையின் உருவச்சிலை. யுத்தத்தின் முகம். அப்புறம்... யுத்தத்தின் திடீர் தீர்மானத்தின் வேகம். அவசரம், கொடுமை, மிருகத்தனமான ஹாஸ்யம்... வேர்த்து வடியும் மத்யானம்... நியூபோர்ட் நியூஸ் வெடிமருந்து ஏற்றுமதி செய்யும் துறைமுகம். அங்கே ஒரு பையன் தணிக்கைக் கணக்கனாக வேலை செய்கிறான். துறைமுகத்துக்குள் இருக்கும் பெரிய ஷெட்டில் உள்ள 110 டிகிரியில் மூச்சைத் திக்குமுக்காட வைக்கும் வெக்கை. மௌனமாடும் புழுக்கம் அழுக்கேறி காற்றில் தூசித்தூள் மிதக்கிறது. உயரமாக நிற்கும் சூட் யந்திரத்திலிருந்து தான்ய வகை ஓயாத பிரவாகமாகக் கிழே விழ விழ சாக்குச் சாக்காகக் கட்டப்பட்டு அம்பாரம் அம்பாரமாக அடுக்கப் படுகிறது. இந்தத் தான்யத் தூசிதான் தகதகவென்ற தங்கத்தூள் மாதிரிக் காற்றைக் கொழுக்க வைக்கிறது. துறையில் மற்றொரு பக்கத்தில் யுத்தத்தின் கருவிகள் கோபுரமெடுக்கிறது. பெரிய பெரிய கிரேட்டுகள் (மரப் பெட்டிகள்) நிறைய சகலவிதமான உணவு வகைகளும் கறி, பழம், பயறு, வெடி மருந்து - வாழ்வையும் மரணத்தையும் போஷிக்கும் சகலவிதமான உணவு வகைகளும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தொலைவிலே தீராப் பசியோடு வாங்கி வாங்கி உண்ணுகிறது அரசு செலுத்தும் யுத்த தேவதை. கொதித்துக் குமையும் வெப்பக் காற்றில் சகலவிதமான மணங்கள் கமழ்கின்றன. தான்யக் கமறல், நைந்த சாக்கு நெடி, புதிதாக அறுத்துத் தைத்த கிரேட்டுப் பலகை வாசனை, போழைபோல் கதம்பக் கமறலாக பல்லாயிரங் கோடி அடைபடா அசுத்தங்கள், நாற்றங்கள் இறங்கு துறையில் முட்டித் ததும்பி முளைத்தெழும் சோதியாய் சர்வ பரிபூரணமாய் நினைவில் குடியேறித் தனியரசு செலுத்துகிறது. அதிலே தண்ணீரில் கிடந்து கிடந்து ஈரங் கசிய நாறும் மர உத்தர வீச்சும் வேறு. இப்பொழுது வேலை எல்லாம் ஓய்ந்துவிட்டது. அதனுடன் அந்தத் துறைமுகத்தின் சந்தடியும் ஓய்ந்து விட்டது. டிரக்கு வண்டிகளின் கடமுடா, கப்பல் மேல் தட்டில் தரையிட்டு நிற்கும் சாமான் தூக்கும் யந்திரச் சங்கிலியின் சணசணப்பு, சாமான் ஏற்றுமதியில் காணப்படும் சகல சந்தடிகளும் ஒடுங்கிவிட்டன. அதற்குப் பதிலாக அதிகாலையிலிருந்து, துறைமுகத்துக்குள் காக்கியுடை அணிந்த தளவரிசைகள் சாரை சாரையாகக் கப்பலுக்குள் ஏறி அதன் வயிற்றுள் அஸ்தமனமாகிவிடுகின்றனர். அந்தக் கப்பல் இன்னும் இன்னும் என்று காத்து நிற்கிறது. நீக்ரோ மாட்டுக்காரர்கள் மூட்டைமேல் சரிந்து கண்ணயருகின்றனர். கணக்கர்கள் மூட்டைக் கிடுவலில் குமைந்து ஜன்னி வேகத்தில் சூதுருட்டுகிறார்கள். துருப்புகள் பட்டாளம் பட்டாளமாக வந்து குவிகின்றன. சாரை சாரையாக வரும் வரிசைகள் இடையில் சற்று நிற்கின்றன. முதுகுச் சுமைகளை நகர்த்திவிட்டு வலியை நகர்த்திக்கொள்ளுகின்றன. தொப்பியை அகற்றுகின்றன. நெற்றியில் வடியும் வேர்வையைப் புறங்கையால் துடைக்கின்றன. தனக்குள் வைத்துக் கொள்கின்றன. மறுபடியும் சாரை ஊர்வதற்காகப் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர். கப்பலின் பக்கத்தில் ஏறுபாதை ஓரத்தில் சில ஆபிஸர்கள் மேஜையருகில் உட்கார்ந்து துருப்புகள் கப்பலுக்குள் ஏறும்போது ஒவ்வொருவருடைய தஸ்தாவேஜியையும் பரிசீலனை செய்துகொண்டு கையெழுத்தைக் கிறுக்கி, உடமஸ்தன் ஆசைப்பட்டுத் தவிக்கும் யாத்திரைக்கு, புதிய தேசத்துக்கு, அவன் வேட்கைகொண்ட புகழுக்கு, சண் டையில் கணக்கிட முடியாத அபாயங்களுக்கு, மரணத்திற்கு, வியாதிக்கு, விவரம் தெரியாத பீதிக்கு, குமட்டலுக்கு அவனை ஏற்றிச் செல்லக் காத்திருக்கும் கப்பல் என்ற சாயுஜ்ய பதவி கிட்டும்படி செய்விக்கிறார்கள். இப்போது கருப்பர்கள் பட்டாளம் (நீக்ரோக்கள்) ஒன்று வருகிறது. டெக்யாஸ் நீக்ரோ ரெஜிமெண்டின் ஒரு பகுதி பலாட்டியர்களான மனிதர்கள்; ஆனால் எதைக் கண்டும் ஆச்சரியப்பட்டு நிற்கும் களங்கமற்ற குழந்தைகள்; ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குச் சற்றும் ஒவ்வாதவர்கள். தளத்திலிருந்த ஒவ்வொருவனும் எதையோ மறந்தான், எதையோ இழந்தான் என்ற தொல் லைதான். ஒருவன் தலைக்குல்லாயை இழந்துவிட்டான். இன்னொருவனுக்கு இடுப்பு பெல்ட் போய்விட்டது. மற்றவன் சட்டையில் இரண்டு பொத்தான்கள் காணோம். இன்னொருவன் தன் மூட்டையிலிருந்த சாமான்களில் பெரும்பகுதியைத் தொலைத்துவிட்டான். எப்படிப் போச்சு என்பது அவனுக்குப் புரியவேயில் லை. தன்னிடம் இருந்து ஏதோ ஒன்று தொலைந்தது. ஏதோ தப்பிதம் செய்துவிட்டோ ம் என்பது தவிர வேறு ஒரு பிரக்ஞையும் கிடையாது. துறைமுகத்தில் காத்து நிற்கும்போது ஒவ்வொருவனும் தன்னுடைய கவலையைச் சொல்லி அழுகிறான். வெப்பப் புழுக்கத்தில் கருப்புக்குரல் சளசளப்பு அதிகரிக்கிறது. இவர்களது அங்கலாய்ப்புகளும், தொல் லைகளும் குவிக்கப் படுவதற்காகக் காலடியைக் காட்டி நிற்கும் வெள் ளைக்காரக் கமாண்டர், சீறிச்சீறி விழுகிறான். ஒவ்வொருவனும் தான் சிக்கிக் கொண்டிருக்கும் தப்பி தவலையை வெட்டிவிட வேண்டும் என்று அவனைக் கெஞ்சிக் கூத்தாடிக் குழைகின்றான். கமாண்டரோ வெறித்துக் கொண்ட காளை போலத் துறைமுகத்தில் உலாவுகிறான். அவனுடைய சர்வசக்தியில் பரிபூர்ண நம்பிக்கை கொண்டு பொறுமையுடன் காத்திருக்கிறது இந்த மனித சிசுக்கள். கமாண்டர் கழுத்துப் பட்டியைப் பிய்த்துக்கொள்ளுகிறான். அவர்களுடைய தொல் லைப் பரம்பரை அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து கோபுரமெடுக்க, கோபம் மீறிப் போய்ச் சிரிப்பு சிரிக்கிறான். அப்படியிருந்தும் அவனிடம் நம்பிக்கையிழக்காமல், குழந்தைகளின் நிச்சயத் தன் மையுடன் 'எஜமான் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்' என்று தம் குறைபாட்டைப் பிரலாபிக்கிறார்கள். ஒருவன் காணாமற்போன பெல்ட்டைக் கதைக்கிறான். இன்னொருவனுடைய தகரப்போணி - மற்றவனுடைய காலிப்பை. எல்லாரும் ஆசையோடும் பரிவோடும் 'எசமானே, எசமானே' என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய பேச்சுக்கள் அவனை வசவுக்குள் இறக்கி விடுகிறது. 'அட வாலில்லாக் கொரங்குகளா, கட்டி மூளைக் களி மண்ணே, குருட்டுக் கழுதைக்கு அண்ணன்மார்களா, நாய்க்குப் பொறந்த கொரங்கு மூஞ்சிகளா, குருவிமூளைக் கோட்டான்களா. மூளையிருக்கிற எடத்திலே வெடிமருந்து வச்சா, மூக்கைச் சிந்தினாக்கூட வெடிக்காதே. ஆந்தைக்கி அண்ணாத்தை மகனுகளா. பாருங்க ஒங்களே மொதல் லயன்லே நிறுத்தி அந்த ஜெர்மன் தேவடியா மகன்களை வைத்துச் சுட்டுத் தள்ள வைக்கிறேன்' என்று வைது மொழிகிறான். 'எஜமானே' என்கிறது ஒரு குரல். 'எத்தனை தரண்டா மாரடிக்கிறது. எஜமானே, எஜமானேன்னு சொல்லாதேடா சொல்லாதேடான்னு எத்தனை தரம் சொல்லித் தொலைக்கிறது' என்று கதறுகிறான். 'எனக்குத் தெரியும் எஜமான். ஆனாக்க என் பெல்ட்டு அறுந்து போச்சே. ஒங்ககிட்ட சின்னக் கயிறு இருக்கா' என்று கெஞ்சுகிறது அந்தக்குரல். 'கயிறு இருக்கா' கமாண்டர் தொண் டை கம்முகிறது. 'கயிறு இருக்கா' என்று பினாத்திக்கொண்டே சொல்லி முடியாத கோபத்தால் தன் தொப்பியைக் காலடியில் போட்டு துவைத்து மிதிக்கிறான். இதைவிட இன்னும் பெரிய பேரிழவு ஒன்று அவனுக்காகக் காத்திருக்கிறது. கப்பல் பக்கத்தில் பரிசோதனை நடத்தும் ஆபீசர்கள், வரிசையில் சென்ற ஆறுபேரை வெளியேற்றித் தடுத்து விடுகிறார்கள். அவன் தொப்பியைத் தூக்கிக்கொண்டு 'அட ஆண்டவனே. அங்கேயென்ன தொல் லை' என்று கோஷிக்கிறான். ஆறு பேரும் சோகமே உருவெடுத்தது போலக் கண்ணீர் மாலை மாலையாக வடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ஆபீசர்களை ஆத்திரத்தோடு கேட்க விஷயம் புலனாகிறது. இந்த ஆறுபேரும் சிற்றின்ப வியாதிக்காக முகாமில் சிகிச்சை பெற்று வந்தார்கள். உடம்பு குணமாகுமுன் எப்படியோ 'டபாய்'த்துக்கொண்டு உடம்பு சரி என்ற அத்தாட்சியில்லாமல் இதுவரை வந்துவிட்டார்கள். இப்போது திருட்டுத்தனம் வெளிப்பட்டது. போகப்படாது என்று தடுக்கப்பட்டு விட்டார்கள். கமாண்டர் சொன்னால் எல்லாம் சரியாகி விடும் என்ற பரிதாபகரமான நம்பிக்கையுடன் குழைகிறார்கள். கூழைக் கும்பிடுபோட்டுக் கெஞ்சிக் கூத்தாடுகிறார்கள். 'எசமானே, எங்களுக்கு ஒண்ணுமே இல்லே, ஒண்ணுமே இல்லே, ஒண்ணுமே இல்லே. இந்த நாசமாப்போன ஊருலே இருக்கவே மாட்டோ ம். ஒங்ககூட பிரான்ஸுக்குப் போகத்தான் ஆசை. ஒங்ககூடக் கூட்டிக்கொண்டு போய்ட்டா என்ன வேணும்னாலும் செய்றோம்' என்று கருத்த பலாட்டியன் அழுதழுது கெஞ்சினான். 'நீங்க எக்கேடும் கெட்டு நாசமாப் போங்கடா. இப்ப வந்து கடசி நிமிஷத்திலே சொல்லித் தொலைச்சா என்னடா பண்றது' என்று கொழிக்கிறான். அவர்களுக்கிடையில் பாய்ந்து வெறி கொண்ட காளை மாதிரி வைது ஒழிக்கிறான்; அவர்கள் கெஞ்சலும் அழுகையும்தான் மிஞ்சி விடுகிறது. காதைப்பொத்திக்கொண்டு 'நாய்ப்பய மகனுவ எல்லாரையும் அவன் கொன்று தொலைக்கணும்' என்று கத்திக்கொண்டு பரிசீலனை ஆபீசர்களிடம் வாதம் செய்து தன் கட்சிக்குத் திருப்புகிறான். பெத்லெத்திலேயே பரிசோதித்துச் சரியாக இருந்தால் அனுமதிப்பது என்று தீர்மானமாகிறது. சிகப்பு மூஞ்சி ஆபீசர் ஒருவன் அவர்களை மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லுகிறான். சுமார் பத்து நிமிஷம் கழிகிறது. நீக்ரோவர்கள் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடிவருகிறார்கள். அவர்களது கருப்பு முகம் பெரும் களிப்புகளைக் கொப்புளிக்கிறது. குழந்தைகள் மாதிரி எஜமானைச் சுற்றி வட்டமிட்டுக் கொம்மாளமடிக்கிறார்கள். நெட்டை நெட்டென்று கறுத்து நின்ற ராணுவ வைத்ய பரிசோதகனும் இருக்கிச் சிரித்துக்கொண்டு நேர் பார்வை போட்டுத் திரும்புகிறான். அந்தச் சின்னக் கமாண்டர் இன்னும் வையத்தான் செய்கிறான். ஆனால் அவன் வசவில் ஒரு பரிவும் பாசமும் கலந்திருக்கிறது. கடைசியாக மனிதச் சாரையும் ஊர்ந்து ஊர்ந்து கப்பலுக்குள் குடிபுகுந்துவிட்டது. துறைமுகத்தில் அது இழந்த சப்தமும் மௌனமுந்தான் குடிகொண்டிருக்கின்றன. மெல்லிய, இதழ் பூத்த மாலை சகலரையும் தழுவித் தன்னுள் மறைக்கும் ஆழ்ந்த நெஞ்சுடைய இருளின் வரவைக் கட்டியங் கூறிக் குளிர்வித்தது.