ஐவான் டர்ஜனீப் – ருஷியா
அந்தக் காலத்தில் நான் என் தாயாருடன் ஒரு சிறு துறைமுகப் பட்டினத்தில் வசித்து வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் பதினேழு வயது நிரம்பிற்று. தாயாருக்கு முப்பத்தைந்து வயது. சின்ன வயதிலேயே அவளுக்குக் கலியாணமாகியிருந்தது. எனது தகப்பனார் இறந்தது எனக்கு நன்றாக ஞாபகத்திலிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஏழு வயதிருக்கும். என் தாயார் நல்ல அழகிதான்; ஆனால், முகத்தில் எப்பொழுதும் சோகக்களை தட்டியிருக்கும். அவளைச் சிறு வயதிலேயே எல்லாரும் ரொம்ப அழகி என்று சொல்லிக் கொள்வார்களாம். ஆனால் அவளது கண்களில் மிதக்கும் சோக விலாசத்தைப் போல் நான் வேறு எங்குமே கண்டதில் லை. எனக்கு அவள் மீது அத்யந்தப் பற்றுதல்... அவளும் என் னைப் பிரியமாக நடத்தினாள்... ஆனால் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இல் லை. ஏதோ அந்தரங்கமான பெருவியாதி போன்ற துயரம் அவளைத் தின்று கொண்டிருந்தது. அது எனது தந்தையின் மரணத்தால் மட்டிலும் ஏற்பட்டது என்று கூறிவிடமுடியாது. என் தந்தையின் நினைவும் அவள் மனத்தில் வெகு ஆழமாகப் பதிந்திருந்தது. அது மட்டிலும் இல் லை, அதைவிட வேறு ஏதோ ஒன்று அவளை வாட்டிக் கொண்டிருந்தது என்று எனக்குப் பட்டது. என் தாய் என் மீது பாசமாக இருந்தாள் என்று கூறினேன். ஆனால், சில சமயம் என் னை வெறுத்தாற்போல் நடந்துகொண்டாள். என் னை ஒரு சுமையாகப் பாவித்து உதறித் தள்ளினாள். சில சமயங்களில் அவளாலேயே தடுக்க முடியாத வெறுப்பு அவளைக் கவ்வியது. பிறகு அதற்காக மிகவும் வருந்துவாள். கண்ணீருடன் என் னைக் கட்டித் தழுவிப் பொறுமுவாள். இதற்கெல்லாம் அவளது உடைந்து போன தேக ஸ்திதியும், எனது நடத்தைகளுமே காரணம் என்று எண்ணினேன். ஆனால், அவளுடைய வெறுப்புக்கள், நான் மோசமாக - போக்கிரித்தனமாக - நடந்துகொண்ட சமயத்தில் எழவில் லை. எனது தாய் எப்பொழுதும் துஷ்டிக்கு அறிகுறியாகிய கறுப்பு உடையே அணிந்து வந்தாள். நாங்கள் தாராளமாகச் செலவு செய்து சௌகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் ஒருவருடனும் பழகாது தனியாகவே வசித்து வந்தோம்.
2
எனது தாயின் நினைவுகள், கவலைகள் - எல்லாம் எனது வளர்ப்பில் கவிந்தன. அவள் எனக்காகவே வாழ்ந்தாள் என்று சொல்லிவிடலாம். அப்படியிருந்தது அவள் பராமரிப்பு. இம்மாதிரியாகப் பெற்றோரின் கவலையெல்லாம் கவிழ்வது குழந்தைகளுக்கு நல்லதன்று; கெடுதலை விளைவிப்பதும் சகஜம். ஒற்றைக்கொரு பிள்ளை என்றால், கண்டபடி வளரும். தங்களைப் போல் பிள்ளைகளும் இருக்க வேண்டுமே என்று பெற்றோர்கள் நினைப்பதில் லை. ஆனால் நான் சீர்கெட்டுப் போகவில் லை. எனக்குப் பிடிவாதமும் கிடையாது. ஆனால் எனது நரம்புகள் மிகவும் தளர்ச்சியடைந்துவிட்டன. அதிலும் நான் மிகவும் பலவீனப்பட்ட பிள்ளை. என்னைப் பார்த்தால் என் தாயைப் பார்க்க வேண்டாம். அவ்வளவு முக ஜாடை ஒத்திருக்கும். என் வயதிற்கேற்ற சிநேகிதர்கள் கிடையாது. யாருடனும் பேசுவதற்குச் சங்கோஜம். என் தாயாருடன் கூட அதிகமாகப் பேசமாட்டேன். எனக்குப் புஸ்தகம் என்றால் பெரிய பைத்தியம். வெறுங்கனவு கண்டுகொண்டு, தனியாகத் திரிவதில் எனக்கு இச்சை. என்ன கனவுகள் என்று சொல்லுவது கஷ்டம். ஏதோ ஒரு கனவு. கதவு பாதி திறந்திருக்கிறது. அதற்குப் பின்புறம் ஏதோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆசை சொக்கும்படி அதன் முன்பு நான் நின்று காத்துக்கொண்டே இருப்பேன். வாசற்படியைத் தாண்டுவதில் லை. அதற்கப்பால் என்ன இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே, ஆசை உந்தித்தள்ள வாசற்படியில் நின்றுகொண்டே சில சமயம் அப்படியே தூங்கிப் போவதும் உண்டு. கவிதையுள்ளம் படைத்திருந்தால் பாட்டெழுதத் தொடங்கியிருப்பேன்; மதப்பற்று இருந்தால் சன்னியாசம் பெற்றிருப்பேன்; இரண்டும் என்னிடம் கிடையாததினால் கனவு கண்டுகொண்டே காத்திருந்தேன்.
3
விபரமற்ற எண்ணங்கள், சிந்தனைகளுடன், சில சமயங்களில் தூங்கிவிடுவேன். முக்கால்வாசி எனது வாழ்க்கையே தூக்கந்தான். ஒவ்வொரு நாளும் கனவுகள் கண்டேன். இவற்றை நான் மறப்பதில் லை. அவற்றிற்குக் காரணம் கற்பித்து, எந்த இரகசியத்தை அறிவிக்கத் தோன்றியிருக்கின்றன எனக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். சில கனவுகள் ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப வந்தன. அவை இப்படி வருவது ஆச்சரியமாக, விபரீதமாக, எனக்குத் தென்பட்டது. முக்கியமாக ஒரு கனவு என் னை அலட்டியது. ஒரு கரடுமுரடான குண்டும் குழியும் நிறைந்த சிறிய தெரு; பட்டணமும் பழைய காலத்து மோஸ்தர். ஊசிக் கூரையுள்ள பல மச்சுக்களடங்கிய கட்டிடங்கள்; வழிநெடுக நான் அந்தத் தெரு வழியாக என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு போகிறேன். எந்தக் காரணத்தாலோ அவர் எங்களை விட்டு ஒளிந்து கொண்டிருக்கிறார். அந்தத் தெருவிலேதான் ஏதோ ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு சிறு வாசல் வழியாக நுழைந்து, கட்டையும் பலகையும் நிறைந்து கிடக்கும் முற்றத்தையும் கடந்து, இரண்டு வட்டமான ஜன்னல்கள் உள்ள சிறு அறைக்குள் செல்லுகிறேன். அந்த அறையின் மத்தியில் ஒரு நீண்ட அங்கியைப் போட்டுக்கொண்டு என் தகப்பனார் நிற்கிறார். அவர் வாயில் ஒரு சுங்கான் இருக்கிறது. ஆனால், அவரைப் பார்த்தால் என்னுடைய நிஜத் தகப்பனார் மாதிரியே இல்லை. நெட்டையாக, ஒல்லியாக, வளைந்த கிளி மூக்கும், கறுத்து இருண்ட கண்களும் உள்ளவர். அவரை நான் கண்டுபிடித்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில் லை. எனக்கும் அப்படித்தான். தயங்கித் தயங்கி நிற்கிறேன். அவர் வேறு பக்கம் திரும்பி, என்னவோ முனகிக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக நடக்கிறார். முனகிக்கொண்டே, என் னைப் பார்த்தவண்ணமாகத் தூரச் செல்லுகிறார். அறையும் வளர்ந்துகொண்டே அவர் நடப்பதற்கு இடம் கொடுக்கிறது. பிறகு மூடுபனியில் மறைந்துவிடுகிறார். நான் தகப்பனாரை இழந்துவிட்டேன் என்று பயந்து, அவரைப் பின்பற்றி வேகமாக ஓடுகிறேன். அவரைக் காணவில் லை. அவருடைய கோபமான உறுமல்தான் கேட்கிறது. நான் திடீரென்று விழித்துக் கொள்ளுகிறேன். பிறகு, தூக்கம் வரவில்லை. மறுநாள் முழுவதும் இது என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். பயனில்லை.
4
ஜூன் மாதம் வந்தது. நாங்கள் வசித்த பட்டினத்தில் அந்தக் காலந்தான் இறக்குமதிக் காலம்; கப்பல்கள் ஏராளமாகத் துறைமுகத்தில் வந்து சரக்குகளை இறக்கும். தெருவிலே புதுப்புது ஆட்களின் நடமாட்டமும் அப்பொழுதுதான் அதிகம். அந்தச் சமயத்தில் துறைமுகப் பக்கத்தில் சுற்றுவதற்கு எனக்கு மிகவும் பிரியம். ஒருநாள் காப்பிக்கடைப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அங்கு ஒரு மனிதன் தென்பட்டான். மேலே நீளமான கறுப்புச் சட்டை; தலையிலே வைக்கோல் தொப்பி; கைகளை இறுக மார்பில் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். நீண்ட கறுத்த முடி நெற்றியிலிருந்து மூக்கு வரை தொங்கிக் கொண்டிருந்தது. வாயில் ஒரு சுங்கான். அந்த மனிதனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. எங்கே? மனத்தில் இவ்வளவு ஆழமாகப் பதிந்த முகம் யாருடையது? என் நினைவு என் னைத் தூக்கிவாரிப் போட்டது. நான் கனவில் தேடிக்கொண்டிருக்கும் எனது கனவுத் தந்தைதான். சந்தேகமில் லை; பட்டப் பகலின் சுயப் பிரக்ஞையுடன் நுழைந்து, ஒரு கிண்ணம் பீரும், ஒரு பத்திரிகையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டுவிட்டு, காலியாகக் கிடந்த மேஜையின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பத்திரிகையினால் நன்றாக முகத்தை மறைத்துக்கொண்டு, அதன் விளிம்புகளின் மேலாக எனது கனவுத் தந்தையின் முகத்தைப் பார்க்கிறேன். அவர் யாருக்காகவோ காத்திருப்பதாக எனக்குப் பட்டது. அவர் தமது குனிந்த தலையை நிமிரவே இல் லை. சில சமயங்களில், 'இந்த முக ஜாடையெல்லாம் நானாகக் கற்பனை செய்து கொண்டது. உண் மையில் நான் இரவில் காண்பவருக்கும் என் முன்பு உட்கார்ந்திருப்பவருக்கும் சம்பந்தமே கிடையாது' என்று பட்டது. அந்தச் சமயத்தில் அவர் என் பக்கமாக முகத்தைச் சிறிது நிமிர்த்தினார். என் வாயிலிருந்து சிறு சப்தம் கூட வெளிப்பட்டது. அவரே தான் என்பதில் சந்தேகமே இல் லை. கொஞ்ச நேரத்தில் அவர் நான் அடிக்கடி அவரைப் பார்ப்பதைக் கண்டு கொண்டார். முதலில் அவர் முகத்தில் கோபம் ஜொலித்தது; எழுந்திருக்க முயன்று மேஜையில் சாத்தியிருந்த பிரம்பைத் தள்ளிவிட்டார். நான் உடனே அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். சிறிது வேண்டா வெறுப்புடன், புன்சிரிப்புத் தவழ, எனக்கு வந்தனமளித்துவிட்டு, எதையோ கண்டவர்போல் புருவத்தை நெரித்து, என் னையே நோக்கினார். "நீ மரியாதையான பையன் போலிருக்கிறது. இந்தக் காலத்தில் அதேது? வீட்டில் உன் னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்?" என்று திடீரென்று என்னிடம் சொன்னார். நான் என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை. அப்படித்தான் பேச்சு வளர்ந்தது. அவரும் நம் தேசத்தினராம்; சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து திரும்பினாராம். அங்குதான் ரொம்ப காலம் தங்கியிருந்தாராம். அவர் யாரென்று கேட்டதற்கு ஏதோ ஒரு பெயரைச் சொன்னார். எனது கனவுத் தந்தை மாதிரி உறுமலுடனேயே அவர் பேச்சை முடித்தார். என் பெயரைக் கேட்டதும், அவர் முகத்தில் ஆச்சரியக் குறி தோன்றியது. அந்த ஊரில்தான் நான் ரொம்பக் காலம் இருந்தேனோ என்றும், யாருடன் வசிக்கிறேன் என்றும் கேட்டார். நான் "தாயுடன் வசிக்கிறேன்" என்றேன். "அப்படியானால் உன் தகப்பனார்?" "அவர் இறந்து ரொம்பக் காலமாகிறது." என் தாயார் பெயரைக் கேட்டார். நான் சொன்னதும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு, தாம் ஒரு விபரீதப் பிராணி என்று சொல்லிக் கொண்டார். நாங்கள் எங்கே வசிப்பது என்று கேட்டார். எங்கள் இடத்தைச் சொன்னேன்.
5
சம்பாஷணை ஆரம்பித்த பொழுது இருந்த பயம் பின்னர் தெளிந்தது. ஆனால் அவர் சிரிப்பும் கேள்விகளும் எனக்குப் பிடிக்கவில் லை. அவருடைய கண்களில் தோன்றிய குறிகளும், அவை என் னைக் குத்துவன போலிருந்தன. அவற்றில் ஒரு பேய் - ஆசை, ஒரு பெருமிதம், எனக்குப் பயத்தை அளித்தது. எனது கனவில் இந்தக் கண்கள் இல்லை. அவர் முகத்தில் காணப்பட்ட வெட்டுக்காயம் இல்லை. முகம் களைத்திருந்தாலும், அந்தக் கனவில் வாலிபக்களை யிருந்தது. எனது கனவுத் தந்தைக்கு இவர் முகத்தில் இருக்கும் வெட்டுக்காய வடு கிடையாது. நான் எனது விபரத்தைச் சொல்லும்போது, ஒரு நீக்ரோவன் உள்ளே வந்து அவரை அழைத்தான். "அப்பா எவ்வளவு நேரம்?" என்று சொல்லிக்கொண்டே, உள்ளே அவனுடன் எழுந்து சென்றுவிட்டார். வெகு நேரம் கழித்து உள்ளெல்லாம் சென்று தேடினேன். அவர்கள் பின்புறமாகச் சென்று விட்டார்கள் போலிருக்கிறது. என் தலை வலிக்க ஆரம்பித்தது. கடற்கரையில் சிறிது சுற்றிவிட்டு வீடு திரும்பினேன்.
6
வெளி வாசலில் எங்கள் வேலைக்காரி என் னை எதிர் நோக்கி ஓடி வந்தாள். என்னமோ விபரீதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று விரைந்து சென்றேன். வேலைக்காரி, அரைமணி நேரத்திற்கு முன்பு எனது தாயாரின் படுக்கையறையிலிருந்து ஒரு பயத்தினால் வீறிட்டெழும் கூக்குரலைக் கேட்டு, அங்கு ஓடிப் பார்க்க, எனது தாயார் மயங்கிக் கிடந்தாளாம். சிறிது நேரத்தில் பிரக்ஞையைப் பெற்றாலும், படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாயிற்று. என்ன கேட்டாலும் ஒன்றும் பதில் சொல்லாது பயந்து நடுங்கிக்கொண்டு மிரள மிரள விழித்தாளாம். வேலைக்காரி வைத்தியருக்கு ஆள் அனுப்ப, அவர் மருந்து கொடுத்த பிறகும், காரணம் கூற மறுத்து விட்டாளாம். தோட்டக்காரன், சப்தம் கேட்ட சமயத்தில் பூந்தொட்டிகளைத் தள்ளிக்கொண்டு யாரோ காம்பௌண்டு கேட்டிற்கு ஓடியதைக் கண்டதாகச் சொன்னான். அவன் சொன்ன அடையாளம் நான் சிறிது முன்பு சந்தித்த ஆசாமியினுடையது போல இருந்தது. நான் என் தாயாரிடம் சென்று, "இங்கு யாராவது வந்தார்களா?" என்று கேட்டேன். "யாரும் வரவில் லை" என்று படபடவென்று சொல்லிவிட்டு, "ஏதோ ஒரு சொப்பனம் கண்ட மாதிரித் தோன்றியது," என்று முகத்தை மூடிக்கொண்டாள். "பகலிலா?" என்றேன். "இப்பொழுது என் னைத் தொந்தரவு செய்யாதே. ஒரு காலத்தில் உனக்குச் சொல்லுகிறேன்" என்று என் னை அனுப்பிவிட்டாள். அன்றிரவு வரை எழுந்திருக்கவேயில் லை. எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை.
7
இரவில் நான் அவளிடம் சென்றேன். பக்கத்தில் உட்கார வைத்து, "நான் சொல்வதைக் கேள்" என்று ஆரம்பித்தாள். "நீ இன்னும் சிறுவனல்ல. உனக்கும் தெரிய வேண்டியதுதான். எனக்கு அந்தக் காலத்தில் ஒரு சிநேகிதை உண்டு. அவள், தான் காதாலித்த புருஷனைத்தான் மணந்தாள். சிறிது நாள் கழித்து பட்டணத்திற்கு குஷாலாக இருக்கச் சென்றார்கள். நாடகமென்ன, சங்கீதக் கச்சேரியென்ன, கேட்கவேண்டுமா பணம் இருந்தால்? எனது சிநேகிதையும் அடக்கஒடுக்கமானவள் அல்ல, படாடோ பக்காரி. ஆனால் மனசில் கல்மிஷமில்லாதவள். வாலிபர்கள் அவள் மீது கண் வைத்தார்கள். அவர்களிலே முக்கியமான ஒரு ராணுவ அதிகாரி எப்பொழுது பார்த்தாலும் அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். "ஆனால் அவளிடம் சிநேகம் பண்ணிக்கொள்ளவில் லை; பேசியதுகூடக் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் முரட்டுத்தனமாக அவளையே விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவளுக்குப் பட்டணவாசத்தின் சுகம் கூட விஷமாயிற்று. புருஷனை ஊருக்குப் புறப்படும்படி அவசரப்படுத்தினாள். ஒருநாள் அவள் புருஷன் அந்த ராணுவ உத்தியோகஸ்தனுடைய சிநேகிதர்கள் கிளப்பிற்குச் சீட்டு விளையாடச் சென்றான். முதல் முதலாக, அவள் அன்று தான் அங்கு தனியாக இருந்தது. வெகு நேரமாகப் புருஷன் வரவில் லை. அவள் மனத்தில் பயம் தட்டியது. வேலைக்காரியை அனுப்பிவிட்டுப் படுக்கச் சென்றாள். சுவரில் யாரோ தட்டுவது மாதிரிக் கேட்டது. பயம் அவள் உடம்பையெல்லாம் நடுக்கியது. சுவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு பக்கம் திறந்தது. அதிலிருந்து அந்தக் கறுப்புக் கண்களுடைய முரடன் வெளிப்பட்டான். பயம் அவள் வாயை அடைத்தது. அவள் பக்கமாக நெருங்கினான். மிருகம் மாதிரி அவள் தலையில் எதையோ போட்டு மூடினான். "அதற்கப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில் லை! சுத்தமாக ஞாபகமேயில் லை. மரணவேதனையாக, கொலை மாதிரி... மூடுபனி விலகியது. நான்... எனது சிநேகிதைக்குப் புத்தி தெளிந்தது. "பிறகு சத்தமிடப் பலம் வந்தது. "பிறகு அவள் கணவன் வெகு நேரம் கழித்து வந்து அவளைப் பார்த்தான். அவள் முகம் அடையாளம் தெரியாதபடி பயங்கரமாக மாறியது. அவளைப் பல கேள்விகள் கேட்டான். அவள் பதில் சொல்லவில் லை. திரைக்குப் பின் கள்ளக் கதவு இருந்தது. அவளுடைய கையிலிருந்த திருமணக் கணையாழியும் அத்துடன் காணாமற் போய்விட்டது. அது சாதாரணமானதல்ல. அதில் ஏழு தங்க நட்சத்திரங்களும், ஏழு வெள்ளி நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டிருந்தன. அது குடும்பச் சொத்து. அவள் அதைப் போக்கடித்து விட்டாள் என்று பிரமாதமாக நினைத்தான். அவனும் கவலையில் ஆழ்ந்தான். என் சிநேகிதைக்கு உடம்பு குணப்பட்டதும் ஊருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்படும் தினத்தில் குப்பைத் தொட்டியில் ஒருவனுடைய பிரேதம் கிடந்தது. மண் டையில் பலத்த காயம். அந்த முரட்டு அதிகாரிதான் சீட்டாட்டத்தில் கொல்லப்பட்டான். "எனது சிநேகிதையும் ஊருக்குப் போனாள். சிறிது காலத்தில் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அவளுடைய புருஷனுக்கு 'அது' தெரியாது. அவளால் எப்படிச் சொல்ல முடியும்? அவளுக்கே திட்டமாகத் தெரியாது. ஆனால் பழைய சந்தோஷம் மறைந்தது. அதன் பிறகு வந்த மன இருள் அகலவில் லை. அதற்கு முன்னும் பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில் லை... அந்த ஒரு பையன் தான்..." என் தாயாரின் உடல் முழுவதும் நடுங்கியது. அவள் தனது முகத்தை மூடிக்கொண்டாள். "அவள் குற்றமென்று நீ சொல்லுவயா? அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனை அநியாயமானது என்று கடவுள் முன்பு கூறவும் அவளுக்கு உரிமை இல் லையா? இத்தனை காலம் கழித்து மறுபடியும் வந்து துன்பத்தால் செல்லரிக்கப்பட்ட இருதயத்தை ஏன் தாக்கவேண்டும்? கொலைகாரனுக்குப் பேய்க் கனவு தோன்றுவதில் அதிசயமில் லை... ஆனால் எனக்கு..." அவள் பிரக்ஞையிழந்து ஜன்னியில் பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.