அனதோல் பிரான்ஸ் – பிரான்ஸ்
"கிழக்கே அரசர்களுக்கு மந்திர சக்தியுண்டு என்று நினைத்தார்கள்" -தெர்த்தூலியன் அக்காலத்திலே எதியோபியாவை பால்தஸார் ஆண்டு வந்தான். கிரேக்கர் அவனை ஸாரஸின் என்று அழைத்தனர். அவன் கறுப்பாக இருந்தாலும் அழகன்; களங்கமற்றவன்; தாராளமான உள்ளமுடையவன். அவன் சிம்மாசனமேறிய மூன்றாவது வருஷத்தில், அதாவது அவனது இருபத்திரண்டாவது வயதில், தன் நாட்டைவிட்டு ஷெபா தேசத்து அரசியான பால்கிஸ் அரசியைக் காணச் சென்றான். அவன் தன்னுடன் செம்போடிஸ் என்ற மதகுருவையும், மென்கரா என்ற பணியாளனையும் துணையாகக் கொண்டு சென்றான். அவன் பரிவாரங்கள் எழுபத்தைந்து ஒட்டகச் சுமை வாசனைத் திரவியங்களும், யானைத் தந்தங்களும், தங்கமும் சுமந்து சென்றன. இவ்வாறு அவர்கள் பிரயாணம் செய்யும்பொழுது, செம்போடிஸ், அரசனுக்கு வான சாஸ்திரத்தையும், நவரத்தினங்களைப் பற்றிய இரகசியத்தையும் கற்பித்தான். மென்கரா என்ற அடிமை, பக்திப் பாடல்களைப் பாடி அரசனை மகிழ்விக்க முயன்றான். ஆனால், பால்தஸார், இவர்களுடைய முயற்சியைச் சட்டை செய்யாது, பாலைவனத்தின் ஓரத்தில் காதுகளை நெரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஓநாய்களைப் பார்த்து பொழுது போக்கிக்கொண்டு சென்றான். பனிரண்டு நாள் பிரயாணத்தின் பிறகு, பால்தஸார் ரோஜா புஷ்பங்களின் வாசனை, காற்றுடன் கலந்து வருவதை உணர்ந்தான். சிறிது நேரத்தில் அவர்கள் ஷெபா நகரத்தின் சுற்றுப்புறத்திலுள்ள நந்தவனங்களை அணுகினார்கள். போகும் வழியெல்லாம் நன்றாக மலர்ந்த மாதுளை மரத்தடியில் கூத்திட்டு விளையாடும் யுவதிகளைப் பார்த்துக்கொண்டே சென்றனர். "தெய்வத்தை நோக்கிச் செய்யும் பிரார்த்தனைதான் நடனம்" என்றான் செம்போடிஸ். "இந்த யுவதிகளை விற்றால் நல்ல பணம் வரும்" என்றான் அடிமை மென்கரா. இவர்கள் நகரத்தினுள் சென்றதும், அங்குள்ள பெரிய பெரிய வியாபார ஸ்தலங்களையும், குவிக்கப்பட்டிருக்கும் பொருள்களையும் கண்டு ஆச்சரியப்பட்டனர். ரதங்களும், கூலிகளும், பொதி கழுதைகளும் நிறைந்த வீதிகளின் வழியாக நெடுந்தூரம் சென்று, பளிங்குச் சுவர்களும், தங்கக் கலசங்கள் ஏற்றிய சிவந்த கோபுர வாயிலும் உடைய பால்கிஸ் அரசியின் அரண்மனை முன்பு வந்தனர். ஷெபா அரசி, வாசனை பரிமளித்து, முத்துப்போல் உதிரும் செயற்கையூற்றுக்கள் நிறைந்த நிலா முற்றத்தில் நின்று, அவர்களை வரவேற்றாள். அரசி, புன்சிரிப்புடன், சர்வாபரண பூஷிதையாய், அவர்கள் முன்பு வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் பால்தஸாரின் மனம் கலங்கியது. கனவுக்கும் ஆசைக்கும் மீறிய அழகுடன், தேஜஸுடன், அவள் அவன் முன் தோன்றினாள். "அரசே! நல்ல வியாபார ஒப்பந்தம் ஒன்று அரசியிடம் செய்துகொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்று செம்போடிஸ் இரகசியமாகக் கூறினான். "ஆண்மகனின் காதலைப் பெறுவதற்கு மந்திர சக்தியை உபயோக்கிறாள் என்று கூறுகிறார்கள், அரசே! ஜாக்கிரதையாக இருங்கள்" என்றான் அடிமை மென்கரா. பிறகு அரசியைச் சாஷ்டாங்கமாக வணங்கிவிட்டு, குருவும் அடிமையும் அவ்விடத்தை விட்டு அகன்றார்கள். பால்கிஸுடன் தனியாக விடப்பட்ட பால்தஸார் பேச வாயெடுத்தான். வார்த்தை வரவில் லை; "எனது மௌனத்தினால் அரசிக்கு கோபம் வந்துவிடும்" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். ஆனால், அரசி கோபப்படாது, புன்சிரிப்புடனேயே இருந்தாள். அவளே முதலில் பேசினாள். அவள் குரல் கானத்தினும் இனிமையாக இருந்தது. "வாருங்கள்! என் பக்கத்தில் வந்து உட்காருங்கள்!" என்று வெண் மையான, மெல்லிய ஒளிரேகை போன்ற சிறு விரல்களால், தன் பக்கத்தில் தரையிலிருந்த சிவந்த மெத்தையைச் சுட்டிக் காட்டினாள். பால்தஸார் பெருமூச்சுடன், அதில் அமர்ந்து, மெத்தையை இரு கையாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "இவ்விரண்டு மெத்தைகளும் ராக்ஷஸ பலமுள்ள உனது எதிரிகளாக இருந்திருந்தால், அவர்கள் கழுத்தைத் திருகிவிடுவேன்" என்றான். அவன் இப்படிக் கூறும்பொழுது மெத்தைகளைப் பிடித்த பிடிப்பினால், அவை கிழிந்து உள்ளிருந்த பஞ்சிறகுகள் வெண்பனி மேகம்போல் சிதறி எழுந்தன. அவற்றில் ஒன்று அந்தரத்தில் சற்று மிதந்து மெதுவாக அரசியின் மார்பில் வந்து தங்கியது. "அரசே! உங்களுக்கு ராக்ஷஸர் மீது அவ்வளவு கோபம் என்ன?" என்றாள் பால்கிஸ் அரசி. "நான் உன் னைக் காதலிக்கிறேன்" என்றான் பால்தஸார். "உங்கள் தலைநகரிலுள்ள கிணற்று ஜலம் நன்றாயிருக்குமா?" என்றாள் அரசி. "ஆமாம்" என்றான் பால்தஸார், சிறிது ஆச்சரியப்பட்டு. "எதியோபியாவில் பழ வற்றல்களைச் சேமித்துவைக்க என்ன செய்கிறார்கள் என்று அறிய எனக்கு ஆசையாக இருக்கிறது" என்றாள் அரசி மீண்டும். அரசனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில் லை. "சொல்லுங்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று கெஞ்சினாள் அரசி. அரசன், வெகு கஷ்டப்பட்டு ஆலோசனை செய்து, எப்படி எதியோபியப் பரிசாரகர்கள் தேனில் பழ வற்றல்களைப் பதனம் செய்கிறார்கள் என்பதை விஸ்தரிக்க முயன்றான். அரசி அதைக் கவனிக்கவில் லை. திடீரென்று இடைமறித்து, "அரசே! தாங்கள் கான்டஸ் அரசியைக் காதலிப்பதாகக் கூறுகிறார்களே! அவள் என் னைவிட மிகுந்த அழகா? ஏமாற்றாதீர்கள்!" என்றாள். "உன் னைவிட மிகுந்த அழகா!" என்று சொல்லிக் கொண்டே, அவள் காலடியில் விழுந்து, "அது எப்படி இருக்க முடியும்?" என்றான் பால்தஸார். "பிறகு அவள் கண்கள், அவள் கரங்கள், அவள் நிறம், அவள் கழுத்து?" என்றாள் மீண்டும். பால்தஸார் அவளை நோக்கிக் கையை விரித்துக் கொண்டு, "உனது மார்பில் தங்கி நிற்கும் பஞ்சு இறகை எனக்கு அளித்தால், எனது ராஜ்யத்தில் பாதியையும், செம்போடிஸையும் மென்கராவையும் உனக்கு அளித்து விடுவேன்" என்று ஆவேசத்துடன் கூறினான். ஆனால், அவள் எழுந்து கலகலத்த சிரிப்புடன் ஓடிச் சென்று விட்டாள். குருவும் அடிமையும் திரும்பி வந்த பொழுது, தங்கள் எஜமானன் தனது குணத்திற்கு மாறாக ஆழ்ந்த யோசனையிலிருப்பதைக் கண்டனர். "அரசே! வியாபார ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டீர்களா?" என்றார் குரு. அன்று பால்தஸார் ஷெபா அரசியுடன் விருந்துண்டு, அந்த நாட்டின் பேரீச்ச மதுவை யருந்தினான். "பிறகு, கான்டஸ் அரசி என் னைப் போல் அழகியல்ல என்பது உண் மைதானா?" என்று அரசி, இருவரும் புசித்துக் கொண்டிருக்கும்பொழுது, கேட்டாள். "கான்டஸ் அரசி கறுப்பி" என்று பதில் சொன்னான் பால்தஸார். "கறுப்பாக இருந்தால் அழகில்லாமலா போய்விடும்?" "பால்கிஸ்!" என்றான் பால்தஸார். அவன் மேற்கொண்டு வேறு ஒன்றும் சொல்லவில் லை; அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்தான்; அவனுடைய முத்தத்தின் வேகத்தில் அவளது தலை அண்ணாந்தது. ஆனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைக் கண்டுவிட்டான். பிறகு மெதுவாக, கொஞ்சுதலாக, குழந்தையைத் தேற்றுவது போல் அவளைத் தேற்றினான். அவளைத் தனது மலர் என்றும், சிறு நட்சத்திரம் என்றும் கொஞ்சினான். "ஏன் அழுகிறாய்? உனது கண்ணீர் அகல நான் என்ன செய்ய வேண்டும்? உனது ஆசையைச் சொல், உடனே நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான் பால்தஸார். அவள் அழுகையை நிறுத்திச் சிறிது யோசனையில் ஆழ்ந்தான். அவளது ஆசையைத் தெரிவிக்கும்படி வெகு நேரம் கெஞ்சினான். கடைசியாக அவள் பதிலளித்தாள். "எனக்குப் பயம் என்பது என்னவென்று தெரிய வேண்டும்!" முதலில் பால்தஸாருக்கு என்னவென்று அர்த்தமாகவில் லை. அவள் பிறகு மெதுவாக, என்னவென்று அறிய முடியாத அபாயத்தைத் தான் அநுபவிக்க ஆசைப்படுவதாகவும், ஆனால் ஷெபாவின் தெய்வங்களும், வீரர்களும் தனக்கு இதை அறிந்து கொள்ள முடியாதபடி தன் னைக் காப்பாற்றி வருவதாகவும் கூறினாள். "ஆனால், இரவில் பயத்தின் குளிர்ந்த சாயை படவேண்டும் என்றும், தலைமயிர், தறிகெட்ட மிரட்சியால், அலங்கோலமாக நிமிர்ந்து குச்சலெடுத்து நிற்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அப்பா! பயத்தை அநுபவிப்பதில் என்ன சுகம் இருக்கிறது!" என்று பெருமூச்செறிந்தாள். சாமள வர்ணனான பால்தஸாரின் கழுத்தில், தன் மெல்லிய கரங்களை வளைத்து, குழந்தைகளின் குதலை மொழியில், "இரவாகி விட்டதே, மாறுவேஷம் போட்டுக் கொண்டு நாம் நகரத்தைச் சுற்றி வருவோமா? நீங்கள் வருகிறீர்களா?" என்றாள். அவன் ஒப்புக் கொண்டான். அவள் ஜன்னலண் டையில் ஓடி வெளியே எட்டிப் பார்த்தாள். "ஒரு பிச்சைக்காரன் அரண்மனைச் சுவரில் சாய்ந்தபடி தூங்கிக் கிடக்கிறான்; அவனிடம் உங்களுடைய உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள், சீக்கிரம், நானும் உடையை மாற்றிக் கொண்டு தயாராகிறேன்" என்றாள். அவள் விருந்து மண்டபத்தை விட்டுக் குழந்தையைப் போல் உற்சாகத்துடன் கைகளைக் கொட்டிக் கொண்டு வெளியே ஓடினாள். பால்தஸார், பிச்சைக்காரனுடன் தன்னுடைய உடையை மாற்றிக்கொண்டு, தயாராகக் காத்திருந்தான். அரசி சாதாரணப் பணிப்பெண்ணின் உடையில் அவனைச் சந்தித்தாள். "வாருங்கள்" என்று அவனைப் பல கதவுகள் வழியாக அரண்மனைப் புறத்திலிருந்த வயலுக்கு அழைத்துச் சென்றாள். *****அன்றிரவு இருள் அதிகமாக இருந்தது. இருட்டில் பால்கிஸ் பார்வைக்கு உயரத்தில் குறுகியவளாகக் காணப்பட்டாள். அவள் அவனை ஊர் காலாடிகளும் வேசைகளும் வந்து சேரும் ஒரு கள்ளுக் கடைக்கு அழைத்துச் சென்றாள். இருவரும் ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்து, அலங்கோலமாகக் கிடக்கும் நாற்றம் பிடித்த மனிதக் கூட்டத்தைப் பார்த்தனர். கடைக்காரன், ஒரு சாக்கின் மீது சாய்ந்து கொண்டு குடிவெறியர்களை ஒற்றைக் கண்ணினால் கவனித்து வந்தான். பால்கிஸ், கூரையிலிருந்து சரம்போலக் கோத்துத் தொங்கும் உப்பில் ஊறவைத்த மீன்களைப் பார்த்து, "அவற்றை வெங்காயத் துகையலுடன் சாப்பிடவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்று சுட்டிக் காட்டினாள். பால்தஸார் கட்டளையிட்டான். ஆனால் அவள் சாப்பிட்டபிறகுதான் பணம் கொண்டு வரவில் லை என்ற ஞாபகம் அவனுக்கு வந்தது. ஆனால் அவன் கவலை கொள்ளவில் லை. ஒருவருக்கும் தெரியாமல் நழுவி விடலாம் என்று நினைத்தான். ஆனால், கடைக்காரன் வழியை மறித்துக்கொண்டு, அடிமைப் பயல் என்றும், காசுக்குதவாத பெட்டைக் கழுதை என்றும் இருவரையும் வைதான். பால்தஸார் ஒரு குத்துக் குத்தி அவனைக் கீழே வீழ்த்தி விட்டான். உடனே பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர், கையிலிருந்த கத்தியை உருவி அவர்கள் மீது வீசி எறிந்தனர். ஆனால் சாமள வர்ணமுள்ள எகிப்திய அரசன், வெங்காயம் அரைக்கும் கல் லை எடுத்து எதிரிகளின் மீது வீசி, இருவரையும் கீழே வீழ்த்தி, மற்றவர்களைப் புறங்காட்டச் செய்தான். இவ்வளவு சண் டையிலும் பால்கிஸ் அரசியின் தேகத்தின் ஸ்பரிசம் அவனுக்கு ராக்ஷஸ பலத்தையளித்தது. கடைக்காரனது நண்பர்கள் அருகில் வரப் பயப்பட்டு அங்கிருந்தே பாத்திரங்களையும் கைக்ககப்பட்ட ஒவ்வொன் றையும் அவன் மீது எறிந்தனர். அவர்கள் எறிந்த பெரிய பாத்திரம் ஒன்று பால்தஸார் மண் டையில் தாக்கியுடைந்து காயப்படுத்தியது. ஒரு நிமிஷம் சித்தப்பிரமை பிடித்தவன் போல் நின்றான். அவ்வளவுதான்! மறுநிமிஷம் அந்தப் பாத்திரம் இன்னும் பன்மடங்கு வேகத்துடன் எதிரிகளை நோக்கிச் சென்றது. இந்தப் பாத்திரம் விழுந்த களேபரத்தில் பால்கிஸைத் தன் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் ஓடினான். இருண்ட சந்துகளில் ஒருவரும் இல் லை. இரவின் அமைதி பூமியைச் சூழ்ந்தது. துரத்தி வந்தவர்களின் குரல்கள் தூரத்தில் மடிந்தன. சிறிது நேரத்தில் ஒரு சப்தமும் இல் லை. பால்தஸாரின் நெற்றியில் இருந்து வடிந்த ரத்தத்துளி ஒன்று, பால்கிஸின் மார்பில் சொட்டென்று விழுந்தது. "அரசே! உங்களைக் காதலிக்கிறேன்" என்றாள் பால்கிஸ். மேகப் படலத்திலிருந்து விடுபட்ட சந்திரனொளியில், அவளது பாதி மூடிய கண்களின் அமிர்தமயமான பிரதிபலிப்பைக் கண்டான். இருவரும் ஜலம் வற்றிய ஓடையில் இறங்கினர். பால்தஸாரின் கால் தடுக்கியது. இருவரும் இறுகப் பிடித்த வண்ணம் ஓடையில் மெத்தென்றிருந்த பாசிப் படலத்தில் விழுந்தனர். அவர்கள் எல் லையற்ற இன்பத்தில் மிதந்தனர். வாழ்க்கையின் போக்கு நின்றது. இம்மாதிரி நிலையற்ற நிலையில் இருக்கும்பொழுது, மான்கூட்டம் தண்ணீர் குடிக்க வந்து, அவர்களது மௌனத் தழுவலைக் கலைத்தது. அச்சமயம் அவ்வழியாகச் சென்ற கள்ளர் கூட்டமொன்று இருவரையும் பார்த்துவிட்டது. "இருவரும் ஏழைகளானாலும், அழகாக இருக்கிறார்கள், நல்ல விலைக்கு விற்கலாம்" என்று கழுதையின் பின் கட்டியிழுத்துச் சென்றனர். கட்டப்பட்ட கறுப்பு நிறமுள்ள அரசன், திருடர்களைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினான். ஆனால், குளிரில் நடுங்கும் பால்கிஸ், பார்க்க முடியாத ஏதோ ஒன் றைப் பார்த்தவள் போல், புன்சிரிப்புடன் பின் தொடர்ந்தாள்.