8
என் தாய் எனக்குக் கூறிய கதை எனதுள்ளத்தை எப்படிச் சிதறடித்தது! முதல் வார்த்தையிலிருந்தே அறிந்து கொண்டேன். அவள் வாயிலிருந்து தவறுதலாக நழுவிய வார்த்தை எனது உத்தேசத்தைத் திடப்படுத்தியது. எனது கனவில் நான் கண்டவர்தான் எனது உண் மையான தந்தை. அவர் அவள் நினைத்திருந்தது போல், கொல்லப்படவில் லை. அவளைப் பார்க்க வந்து பயப்படுத்திவிட்டார். என்மேல் அவளுக்கிருந்த வெறுப்பு, அவளது துயரம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க எனது மூளை சுழன்றது. இப்படிக் கொதித்துச் சுழன்ற எனது மூளையில் ஒரு எண்ணம் மட்டிலும் தரையிட்டது போல் பதிந்தது. அந்த எனது தந்தையை நான் திரும்பவும் சந்திக்க வேண்டும். ஏன்? எதற்காக? அது மட்டும் புரியவில் லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணந்தான் எனக்குப் பெரிய பைத்தியமாயிற்று.
9
முதன் முதலாக நான் அவரைச் சந்தித்த காப்பிக் கடைக்குச் சென்றேன். அங்கு ஒருவருக்காவது அவரைப் பற்றித் தெரியவில்லை. கடைக்காரன் நீகிரோவனை ஞாபகத்தில் வைத்திருந்தான். ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள், எங்கு தாமதிக்கிறார்கள் - ஒன்றும் அவனுக்குத் தெரியாது. இந்த நிலையில் ஒவ்வொரு ஹோட்டலாகத் தேடியும் பலன் இல் லை. திரும்பியபொழுது என் தாய் படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள்; ஆனால் என்னுடன் பேசப் பிரியப்படவில் லை. இப்படியிருக்கையில் வெளியில் பயங்கரமான புயல் ஒன்று எழுந்தது. கதவுகளும் ஜன்னல்களும் காற்றுத் தேவனின் கோபத்தில் தறிகெட்டு அடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு பெரிய பிரம்மராக்ஷஸு, தெரு வழியாக ஓலமிட்டுக்கொண்டு, வீடுகளைத் தவிடு பொடியாக்கிச் செல்லுவதுபோல் இருந்தது அப்பெரும் புயல். இரவு முழுவதிலும் எனக்குத் தூக்கமில் லை. உஷைத்தேவி திசைச் சாளரத்தில் எட்டிப் பார்க்கும் காலை நேரம். சற்றுக் கண்ணயர்ந்த பொழுது யாரோ என் னை அதிகாரத் தொனியுடன் கூப்பிடுவது போல் கேட்டது. என்ன ஆச்சரியம்! நான் அக்குரலைக் கேட்டவுடன் பயப்படவில் லை. மிகுந்த சந்தோஷத்துடன் ஆடைகளை எடுத்தணிந்துகொண்டு எனது எண்ணம் நிறைவேறும் என்ற உற்சாகத்துடன், வெளியேறினான்.
10
புயல் நின்றுவிட்டது. ஆனால் காற்றின் வேகம் கொஞ்சம் அசாதாரணமாகவே இருந்தது. வழியெல்லாம் இரவில் அடித்த புயலால் இடிந்து விழுந்த வீடுகளின் பாகங்கள். "நேற்று இரவில் கடலில் என்ன நடந்திருக்கும்?" என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. தூரத்தில் காணும் துறைமுகத்தின் பக்கம் திரும்பினேன். கால்கள் என் னையறியாமலே அத்திசையில் நடந்தன. அட, என்ன! இருபது அடி தூரத்தில் நான் முன்பு கண்ட நீகிரோவன் என் முன்னால் நடந்து கொண்டிருந்தான்! அவனை வேகமாகப் பின் தொடர்ந்து ஓடினேன். அவன் திடீரென்று திரும்பி, தெருப் பக்கம் முன்னால் நீண்டிருந்த ஒரு வீட்டின் மூலையைக் கடந்து திரும்பினான். நான் ஓடிச் சென்றேன். அந்தச் சந்து வெறிச்சென்று கிடந்தது. தெருவில் ஒரு மனிதன் எப்படித் திடீரென்று மறைந்து விட முடியும்! இப்படி ஆச்சரியத்தால் நான் திக்பிரமையடைந்து நிற்கையில் வேறு ஒரு அதிசயமான விஷயத்தை உணர்ந்தேன். அந்தச் சந்துதான் நான் கனவில் கண்டது. நான் முன் நடந்தேன். பழைய கனவில் தோன்றிய வீடு! கதவைத் தட்டினேன். வெகு நேரம் கழித்து ஒரு ஸ்திரீ வந்து கதவைத் திறந்தாள். நான் என் தந்தையைப் பற்றி விசாரித்தேன். அவர் அமெரிக்காவிற்குச் சென்று விட்டாராம். பிறகு அந்த நீகிரோவனைப்பற்றி விசாரித்தேன். அதற்குள், "எஜமான் வந்ததும் பேசிக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள் அங்கிருந்தவர்கள். இனி என்ன செய்வது?
11
சோர்ந்து கடற்கரைப் பக்கமாகச் சென்றேன். கடலில் அமைதியில் லை. நுரைக்கும் அலைகள் மணலில் மோதிக் கொந்தளித்து மடிந்து வெறும் உப்புத் தண்ணீராகிக் கொண்டிருந்தன. மேலே கடற்பறவைகள் ஓலமிட்டுப் பறந்தன. சற்றுத் தூரத்தில் ஏதோ ஒன்று கிடந்தது. நெருங்கிப் பார்த்தேன். ஒரு பிரேதம்! பாறையின் பக்கத்தில் பாசியும் செத்தையும் மூடிக் கிடந்தது. விதி இழுப்பது போல் கால்கள் என் னை இழுத்துச் சென்றன. அவர்தான்! என் தந்தை! புயற்காற்று தன் வேலையைச் செய்து விட்டது. அவர் அமெரிக்காவைப் பார்க்கவில் லை. என் தாயின் வாழ்வைக் குலைத்த என் தந்தை! வஞ்சம் தீர்ந்ததாக என் மனத்தில் ஒரு திருப்தி ஏற்பட்டது. ஆனால் அதே சமயத்தில் உள்ளத்தில் அர்த்தமாகாத ஒரு சுமை ஏறியது. "இதுதான் இரத்த சம்பந்தமோ!" என்று எனக்குப் பட்டது. இன்னும் நெருங்கிப் பார்த்தேன். அவர் கையில் ஏதோ இறுகப் பற்றப்பட்டிருந்தது. அதுதான்! எனது தாயின் கலியாண மோதிரம். எனது பலம் கொண்ட மட்டிலும் முயற்சித்து அதை எடுத்துக் கொண்டு, திரும்ப ஓடிவந்து விட்டேன். என் தாயிடம் கிரமமாகச் சொல்ல வேண்டுமென்ற நினைப்பு. ஆனால் சொல்ல முடியவில் லை. மோதிரத்தை மட்டிலும் அவளிடம் கொடுத்தேன். அவள் பதறினாள். பிரக்ஞையிழப்பாள் போலிருந்தது. பிறகு நான் சொல்லியதைக் கேட்டாள். அவள் உடல் பலமுறை நடுங்கியது. "நான் பார்க்க வேண்டும்; அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்" என்றாள். என்ன தடுத்தும் பயன் இல் லை. இருவரும் சென்றோம். இருவரும் கடற்கரையில் பாறையின் பக்கத்தில் சென்றோம். பழைய பாசி மட்டிலும் இருந்தது. சடலத்தைக் காணவில் லை! நானும் என் தாயும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளுவதற்குக் கூடப் பயம்! எழுந்து சென்று விட்டாரோ? "இறந்து கிடந்ததைப் பார்த்தாயா?" என்று மெதுவாகக் கேட்டாள். நான் தலையை அசைத்தேன். நான் கண்ட மூன்று மணி நேரத்திற்குள் பிரேதத்தை யாரோ அகற்றி விட்டார்கள். அது என்னவாயிற்று என்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், முதலில் என் தாயைக் கவனிக்க வேண்டும். போகும்பொழுதே என் தாயாருக்கு ஜுரம். மனவுறுதிதான் அவளைக் கொண்டு சென்றது. மிகவும் சிரமத்துடனேயே அவளை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டியிருந்தது. அவள் உடல் குணப்பட்டவுடன் நான் 'அவரை'த் தேடவேண்டும் என்று கட்டளையிட்டாள். என்ன செய்தும் பயன்படவில் லை. கடற்கரை, கிராமம் எல்லாம் சுற்றியாகிவிட்டது. ஓரிடத்தில் கடலில் கிடந்த ஒருவரைப் புதைத்தார்களாம். அங்கு சென்று விசாரித்தேன். அவர் அடையாளமாகத் தெரியவில் லை. அவர் சென்ற கப்பலைப் பற்றி விசாரித்தேன். முதலில் கப்பல் புயலில் முழுகிவிட்டது என்று கூறினார்கள். பிறகு நியூயார்க்கில் வந்து சேர்ந்தது என்று கூறினார்கள். என்ன செய்வது என்று தெரியாது. நீகிரோவனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். பரிசுகள் கொடுப்பதாகப் பத்திரிகையில் பிரசுரித்தேன். நான் வீட்டில் இல்லாதபொழுது அவன் வந்து காத்திருந்து சென்றுவிட்டான் என்று வேலைக்காரி கூறினாள். சென்றவன் திரும்பவே இல் லை. என் தந்தையைப் பற்றிய புலனும் ஒன்றும் தெரியாது மறைந்தது. அதைப்பற்றி என் தாயார் பிறகு பேசவே இல் லை. ஒரு தடவைதான் அந்தக் கனவைப் பற்றி, "ஆமாம்! அப்படித்தான் - " என்று ஆரம்பித்தவள் முடிக்கவேயில் லை. நெடுங்காலம் வியாதியுற்றிருந்து குணப்பட்டு, பிறகு அவள் மரணமடைந்தாள். ஆனால், அந்தச் சம்பவத்திற்கப்புறம், பழைய வாஞ்சையுடன் என்னிடம் பழகியதேயில் லை. காலதேவன் பழைய நினைவுகளை - பழைய விஷயங்களை - மாற்றுவதில் நிபுணன். ஆனால் இருவரிடையில் சங்கோஜம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியாது. பிறகு அந்தக் கனவு எனக்கு ஏற்பட்டதே இல் லை. இப்பொழுது எனது தந்தையை நான் தேடுவது கிடையாது. சிற்சில சமயங்களில் சுவருக்கப்புறம் ஓலங்கள் கேட்பது போல் துயரத்தில் பிரலாபங்கள் கேட்கின்றன. மதில் சுவரோ கடக்க முடியாதது. அந்த ஓலங்கள் என் இதயத்தைக் கிழிக்கின்றன. அவை என்னவென்று எனக்குப் புரியவேயில் லை. சில சமயம் மனித ஓலம் மாதிரியும், மறுகணம் சமுத்திர கோஷம் மாதிரியும் கேட்கிறது. இதோ மிருகத்தின் உறுமல் மாதிரி கேட்கிறது. துயரமும் பயமும் என் னைக் கவ்வி எழுப்புகின்றன. விழிக்கிறேன்.