ஆம். அமெரிக்காவில் ஓர் பெருத்த வெற்றி. நியூயார்க்கில் இரண்டு ஆட்டம்; பிறகு அமெரிக்கா முழுவதிலும் ஓர் நீண்ட வெற்றி யாத்திரை; முடிவில் ஹாலிவுட்டில் ஒரு பிலிம்; சமாதானம் ஏற்பட்ட இரண்டொரு மாதங்களுக்கப்புறம் லண்டன்; அங்கு வந்தவுடன் புகழ் இன்னும் பன்மடங்கு பெருகி ஓர் உறுதியான அஸ்திவாரத்தில் அமைந்தது. ஏனென்றால் அவனுடைய ஹாஸ்ய ஐரிஷ் வெய்ட்டர் (வேலைக்காரன்) நடிப்பை லண்டன் ஒரு வருஷம் முழுவதும் ஒரு நாள் விடாது சளைக்காமல் பார்த்தது. பிறகு நெடுநாள் நடைபெற்ற நீண்ட சம்பாஷணைகளுக்கப்புறம் டப்ளினில் நடிக்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறான். தற்போதிருக்கும் இலகுவான வாழ்க்கை நிலையை இயற்கையாகப் பரீலியின் மனது நினைத்து அப்படியே சுழல ஆரம்பித்து விட்டது. அவன் சுதேசத்திற்குத் திரும்பும்பொழுது, ஏதோ நன் மை இயற்றியதால் அடையும் தற்பெருமையுடன் கலந்த மகிழ்ச்சியைப் பெற்றிருந்தான். பாவனையொன்றுமில் லை. தானும் அயர்லாந்திற்காக ஏதோ நல்ல சேவை செய்திருப்பதாக நினைத்தான். பல வருஷங்களாகத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நாஸூக் தெரியாத ஒரு கட்சி அவளுக்கு (அயர்லாந்துக்கு) எப்பொழுதும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், பரீலி, தனது சொந்த விஷயங்கள் பலவற்றைத் தியாகம் செய்து, பொதுமக்களுக்கு மனக் கசப்பு ஏற்படா வண்ணம், அவர்கள் மனத்தில் அயர்லாந்தைப் பற்றி இனிமையான எண்ணம் நிரந்தரமாக இருந்து வரும்படியாகச் சலியாது உழைத்து வந்திருக்கின்றான். ஈஸ்டர் புரட்சி, பதுங்கித் தாக்கல்... இப்பொழுது! இங்கு வந்த பிறகும் அந்தச் சிறுபான் மைக் கட்சியின் இடைவிடாத தொந்தரவுகளினால் தியேட்டருக்கு எவ்வளவு நஷ்டம்! பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே வீட்டுக்குப் போக வேண்டும் என்ற கட்டுப்பாடு. தெருக்களில் இங்கிலீஷ் சோல்ஜர்கள் நிறைந்த லாரிகளின் ஆதிக்கம். அந்த சோல்ஜர்களில் ஒருவன் நேற்று முந்திய நாள் இரவு, மரியாதையாக, ஆனால் உறுதியாக, அவனை வீடுவரையிலும் கொண்டு விட்டுச் சென்றான். அப்புறம், இப்பொழுது! அவமதிப்பின் சிகரமாக இருக்கிறதே! தன் னை நடிக்கும்படி பிரத்யேகமாக வரவழைத்துவிட்டு, அதற்காகத் தான் அமைதியாகப் போகும் அந்தத் தெருவிலா வெடி குண் டை எறிவது! நிலைக்கண்ணாடியின் முன்பு சாய்ந்து, கண் ஓரத்தில் வயோதிகத் தன் மையைக் காட்டும் காலத்தின் கீறல்களை வர்ண மையினால் தீட்டிக் கொண்டே, "அடுத்த முறை இவர்கள் என் னை அழைத்தால், ஏமாந்து போகவேண்டாம் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டான். எத்தனை பிரபலஸ்தர்கள், தாய்நாட்டின் அசட்டுத் தனங்களைச் சகியாது, அயர்லாந்தை விட்டு வெளியேறி வசிக்கின்றனர்! அந்த லிஸ்ட்டில் இன்னும் ஒரு பெயர் அதிகமாகும் என்று நினைத்துக் கொண்டான். அன்று இரவு நாடகம் தடங்கல் ஏதுமில்லாமல் நடைபெற்றது கூட்டம் குறைச்சல்தான்; ஆனால் யாவரும் ரஸிகர்கள். வெளியில், யாரோ வாண வேட்டுக்களை விடுவது போல, இரண்டொரு சமயம் டபார் டபார் என்று சப்தம் கேட்டது. ஆனால் நடிப்பில் மனத்தைச் செலுத்திய பரீலி அவற்றைப் பொருட்படுத்தவில் லை. நாடகம் முடிந்ததும், வந்திருப்போரின் ஆசைகளைத் திருப்திப்படுத்த ஐந்து முறை திரைகளை உயர்த்த வேண்டியிருந்தது - இரண்டு முறை கோஷ்டி முழுமைக்கும்; ஒரு முறை நாடகத்தின் நான்கு பிரதம நடிகர்களுக்கும்; ஒரு முறை முக்கிய ஸ்திரீ நடிகருக்காக; இன்னும் ஒரு முறை பரீலிக்காக; ஐந்து முறையும் கரகோஷம் வானைப் பிளந்தது. வேஷத்தைக் கலைப்பதற்காகப் பக்கத்து அறைக்குச் செல்லும் பொழுது, "அவ்வளவு மோசமில் லை!" என்று நினைத்துக் கொண்டான் பரீலி. "இதென்ன கூட்டம்? அந்தப் பயல்கள் மட்டிலும் வெளியே ஒழுங்காக இருந்தால் எவ்வளவு கூட்டம் வந்திருக்கும்!" முகத்தைக் கழுவிக் கொண்டிருக்கும்பொழுது சகோதரத் தொழிலாளியான பாயினிடம் இவ்விஷயத்தை விளக்கிப் பேச ஆரம்பித்தான். "இந்தப் பசங்களெல்லாத்தையும் ஒன்றுமில்லாமல் சாகடிக்கிறார்கள்! தொழில், வியாபாரம் எல்லாம் நாசமாகிறது. அவன்களாலே கெடுதலைத் தவிர வேறே என்ன செய்ய முடியும்! இதுக்குள்ளே அவன்களுக்குப் புத்தி வந்திருக்கும் என்று நினைக்கிறேன்." பாயின் முனங்கினான். எது எப்படிப் போனால் என்ன என்பது அவன் மனநிலை. வயசும் கொண்ட மட்டும் ஆகிவிட்டது. தொழிலில் அவ்வளவு திறமைசாலியுமில் லை. அவனைப் பொறுத்தவரை மாதாமாதம் கிடைக்கும் சம்பளந்தான் குறி. அதுமட்டிலும் தட்டில்லாமல் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். தலையைச் சீவிக்கொண்டே, வீணாய்ப் போன வியாக்யானத்தை நினைத்துப் பரீலி பெருமூச்சு விட்டுக் கொண்டான். 'பாயின் கலைஞன் இல் லை. நல்லவன். சொன்னதைச் செய்யக் கூடியவன். ஆனால் கலைஞனல்லன்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான். பரீலி, தன் வாழ்வை பாயின் ஜீவியத்துடன் ஒப்பிட ஆரம்பித்தான். நல்ல ஸ்வாரஸ்யமான பகற்கனவு. "வரலியா?" ஓவர் - கோட் அணிந்து கொண்டு பாயின் நடைப்பக்கம் நின்று கொண்டிருந்தான். அவன் கேள்வி பரீலியைச் சொப்பன லோகத்திலிருந்து இழுத்தது. "இல்லெ! கொஞ்சம்." "அப்பொ - நான் வரேன்!" "உம், சரி!" பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக எண்ணிக்கையிட்டுக் கொண்டே, மெதுவாக உடைகளை அணிந்து கொள்ள ஆரம்பித்தான். வெளியே வருவதற்குப் பதினைந்து நிமிஷம் ஆயிற்று. தெருக்களில் ஒரே இருட்டு. ஜனநடமாட்டம் இல் லை. பரீலி ஓவர் - கோட் காலரையும் உயர்த்திப் பொத்தான்களை மாட்டினான். என்ன மோசமான ஊர்! சரியான வெளிச்சங்கூட இல் லை. முனகிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். பக்கத்துத் தெருவில் 'விர்ர்' என்று சப்தம் கேட்டது. துருப்புக்கள் நிறைந்த லாரி செல்லுகிறது என்று அவனுக்குத் தெரியும். 'அதுவும் நல்லதுதான். அவர்கள் நடமாட்டமிருந்தால் பயமில்லாமல் நிம்மதியாக வீடு போய்ச் சேரலாம் - அதாவது யாரும் தன் மீது வெடிகுண்டு எறியாவிட்டால்' என்ற நினைப்பு. முன்பு வெடிகுண்டு எறியப்பட்ட தெருமுனை வந்தது. அதில் நுழையச் சிறிது தயக்கம். "என்ன அசட்டுத்தனம். மறுபடியும் நடக்காது!" என்ற திடநம்பிக்கை. ஒரேயிடத்தில் இரண்டு தடவை திரும்பத் திரும்ப எப்படி இடி விழும் என்ற தர்க்கத்தை நினைவுக்கு வருவித்துக் கொண்டு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். மறுபடியும் 'விர்ர்' என்ற சப்தம். இந்த முறை சப்தம் வரவர ஓங்கி நெருங்கியது, சிறிது நின்றது, அதிகமாயிற்று, மறுபடியும் நின்றது, மறுபடியும் ஓங்கியது. பக்கவாட்டில் 'கிரீச்' சென்ற பிரேக் சப்தம். மனிதக்குரலும் யந்திர ஓலமும் குழம்பி அவன் மீது முட்டி நின்றன. பேய்க் கனவு கண்டவன் போல் பரீலி பரக்கப் பரக்க விழித்தான். அவனைப் பார்த்துப் பல குரல்கள் ஏகோபித்து அதிகாரத் தொனியில் உறுமின; அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத உத்தரவுகளை விதித்தன. ஏதோ ஒன்று இவனுக்குப் பின்புறச் சுவரில் மோதியது. 'டிரஞ்ச் கோட்' போட்ட உருவங்கள் லாரியிலிருந்து குதித்து இவனை நோக்கி வந்தன. ஒரு ரிவால்வர் இவன் வயிற்றைக் குத்தியது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளுமுன், தலைக்கு மேல் கைகளை உயர்த்திய வண்ணம், பின்புறமாகக் கால் வைத்து கிராதிக் கம்பி வேலிவரை செல்ல வேண்டியதாயிற்று. "அந்தப் பயலிடம் துப்பாக்கியிருக்கிறதா என்று பார்!" எல்லோரும் சேர்ந்து அவனைத் தடவித் தடவி, பைகளைத் தட்டிச் சோதிக்க ஆரம்பித்தனர். அவர்களுடைய குரல்களிலிருந்து, அவர்கள் கைப்பக்கத்திலிருந்து, முகத்தின் பக்கம் அடிக்கும் வாடையிலிருந்து, 'முழுக்குடி' என்ற உண் மை, விளம்பரப் பலகையின் எழுத்துக்கள் போல் பரீலியின் மனத்தில் எழுந்தது. அவர்களுடன் எப்படி நடந்து கொள்ளுவதென்பது, எச்சரிக்கைக் குறிப்புப் போல, வார்த்தை வார்த்தையாக மனக்கண்முன் நின்றது. அவன் மனம் சுறுசுறுப்பாக இருந்தது. அவர்களுடைய மனங்களைவிட அவனுடையது திறமை வாய்ந்தது. வேட்டைப் பழக்கமில்லாத நாய்க்குட்டிகளின் நடுவில் நின்று இரு திசைகளையும் திரும்பிப் பார்க்கும் மான் குட்டி மாதிரி நின்றான். "நீ இங்கே என்ன செய்கிறாய்?" "தியேட்டரிலிருந்து வீட்டுக்குப் போகிறேன்." "தியேட்டரிலிருந்து வீட்டுக்கா போறே! நல்லா அளக்கிரியே!" ஒன்றுள் ஒன்று குழம்பி ஒலிக்கும் பல குரல்கள் எழுந்தன. பல ஜோடிக் கண்கள் அவனைக் கூர்ந்து நோக்கின. அவன் மீது துர்நாற்றமடிக்கும் உச்சுவாச நிச்சுவாசம். ரிவால்வரை வயிற்றுக்கு நேராகப் பிடித்திருந்தவன், எல்லாம் ஓய்வதற்காகக் காத்திருந்தான். "எல்லாத் தியேட்டருந்தான் அரைமணி நேரத்துக்கு முந்தியே மூடியிருக்குமே!" "நான் ஒரு நடிகன்; வேஷத்தைக் கலைத்துவிட்டு உடுத்திக் கொண்டு வர நேரமாகும்." "வேஷங் கலைத்து உடுத்த அரைமணி நேரமா?" "சில சமயத்தில் அதற்கு மேலும் பிடிக்கும்." "சரிதாண்டா! இனிமே உனக்கு நேரமாகமே செய்கிறேன்!" என்றான் வேறொருவன். இதைக் கேட்டதும் கொஞ்சம் சிரிப்பு. அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன், விசாரணை நடத்திக் கொண்டிருந்தவன் கையைப் பிடித்து இழுத்து காதில் என்னவோ சொன்னான். இதைக் கண்ட பரீலிக்கு வயிற்றைக் கலக்கியது. கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவன் கையை உதறித் தள்ளினான். மற்றவர்களைவிட அவனுக்குக் கொஞ்சம் புத்தி தெளிந்திருந்தது. பரீலி தன் முழு மனத்தையும் அவன் மீது லயிக்க விட்டான். தான் பிழைத்துக் கொள்வது அவனைப் பொறுத்துத்தான் இருக்கிறது என்று உறுதி கொண்டான். "நீ நடிகன் என்று சொல்லுகிறாயே, உன் பேரென்ன?" "பால் பரீலி." "அப்படிப் பேரே கேட்டது கூட இல் லையே!" என்றான் முன்பு இடைமறித்துப் பேசியவன். மறுபடியும் விசாரணை நடத்துபவன் காதில் குசுகுசுவென்று பேசினான். "அப்படி ஒரு நடிகனும் இங்கே கிடையாது; எனக்கு எல்லோரையும் தெரியும்" என்றான் மீண்டும். "எனக்கு இந்த ஊரில் லை. லண்டனிலிருந்து இப்போதான் இங்கு வந்தேன்" என்றான் பரீலி. முகக் குறி மூலம் ஒவ்வொருவர் மனப்போக்கும் என்னவென்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு முகமாகக் கவனித்தான். தன் புத்தி தெளிவாக இருப்பது எவ்வளவு சௌகரியம் என்பதை உணர்ந்தான். ரிவால்வர் வைத்திருப்பவன் தயங்குகிறான் என்பது தெளிவாயிற்று. அவன் மறுபடியும் பேசும்பொழுது தொனியில் முன்பிருந்த உறுதியில் லை. "இங்கே சுற்றுப் பிரயாணம் செய்கிறாயா? இப்பொழுதுதான் வந்தாயா?" "ஆமாம்! இங்கே வந்து நடிப்பதே இப்பொழுதுதான் முதல் தடவை." "லண்டனில் இருந்தா?" "ஆமாம்." "பிக்காடில்லி எப்படி இருக்கிறது?" அந்த கும்பலிலிருந்த ஒரு குரல் அவனைப் பார்த்துக் கேட்டது. பரீலி அத்திசையில் திரும்பினான்; மீறி எழும் ஆசையைக் காண்பிக்கும் அவசரத்துடன் அல்ல; அந்தக் கூட்டத்துக்குத் தலைவன் என்று இவன் ஊகித்த ஒருவனைக் கோபப்படுத்த அஞ்சினான். அந்தத் தலைவனை மரியாதையாகப் பார்த்துவிட்டு - அதாவது, அனாவசியமாக இடைக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்பவனைப் போல, மரியாதையாகப் பார்த்துவிட்டு... "சுகமாகத்தான் இருந்து வருகிறது" என்றான். "இப்போ, அங்கேயிருந்தா நல்லது!" என்றது அக்குரல். "என்னுடைய இடம் லெஸ்டர் ஸ்கொயர்டா!" என்றது மற்றொரு குரல். "அடே, உன் துருத்தியெ நீ ஊது, தெரியுமா!" என்றது முதல் குரல். அபிப்பிராய பேதம் ஏகக்குழப்பத்தில் கொண்டு விடும்போல் இருந்தது. அவர்கள் தயங்குகின்றனர்; அவனிருப்பதை மறக்கின்றனர். 'தலைவன்' மறுபடியும் அவன் வயிற்றில் ரிவால்வர் முனையால் இடித்தான். "நடிகனோ, எவனோ - யாராயிருந்தாலும் இந்த நேரத்தில் நீ தெருக்களில் அலைந்து கொண்டிருக்கக் கூடாது. இது இன்னம் உனக்குத் தெரியாதா?" "மன்னிக்க வேண்டும். நான் இப்போதான் வந்தேன் என்று சொல்லுகிறேன். வேஷத்தைக் கலைத்துவிட்டு நேராகத் தியேட்டரில் இருந்து வருகிறேன்!" "அதெல்லாம் உனக்குத்..." "டேய்!" - கும்பலுக்குப் பின்புறமிருந்த ஒரு முரடன் நெட்டித் தள்ளிக்கொண்டு வந்தான். "அவதான் அவ பேரென்ன - கோரா... அவகிட்ட எங்களைக் கூட்டிக்கிட்டுப் போரியா - அவதாண்டா - அவ, இப்படி இப்படி ஆட்றாளே!" என்று இடுப்பை நெளித்துக் காண்பித்தான். எல்லோரும் ஒரே குரலாக இடியிடி என்று சிரித்தனர். "என்னால் முடியாது என்று அஞ்சுகிறேன்" என்றான் பரீலி, ஜாக்கிரதையாக, "நான் அந்தத் தியேட்டரில் நடிக்கவில் லை. நான்..." "அப்படின்னாக்கா ஒன்னாலே தம்பிடிக்கிப் பிரயோஜனமில் லை." தலைவனைத் திரும்பிப் பார்த்து, "அந்தப் பயலெ தீத்துப்புடு; அவனாலே தம்பிடிக்கிப் பிரயோசனமில் லை!" என்றான். தலைவன் தயங்கினான். "எங்கே குடியிருக்கே?" என்றான் பரீலியைப் பார்த்து. "நோலான் தெருவிலே. இந்தச் சந்துக்கு இரண்டாவது சந்திலே." "அப்படியா சரி." ரிவால்வரைப் பைக்குள் வைத்துக்கொண்டு, விலகி நின்றான். "நோலான் தெருவுக்குப் போ! மூன்று நிமிஷம் கொடுக்கிறேன்; அதற்குள்ளே போகாட்டா ஜாக்கிரதை! சரிதாண்டா, போ!" "டேய்! இங்கே வாடா!" அந்த முரடன் பரீலி தோளைப் பிடித்து நெட்டித் தள்ளிக்கொண்டு சென்றான். தன் னை விடுவித்துக் கொள்ளப் பரீலி முயன்றான். "தெரு இந்தப் பக்கமில்லே, அப்படிப் போ..." பின்புறத்தில் படார் என்று ஒரு பூட்ஸ் கால் அடித்துக் குப்புறத் தள்ளியது. நல்ல காலம், சமாளித்துக்கொண்டு விழாமல் ஓடினான். அவர்களது சிரிப்பும், அசங்கிய வார்த்தைகளும், நடமாட்டமற்ற அந்தத் தெருவில் எதிரொலித்தன. அவன், அடுத்து எதிர்ப்பட்ட சந்தில் நுழைந்து திரும்பி, நான் குடியிருந்த வீட்டை நோக்கி ஓடினான். ஓடும்போது மறுபடியும் லாரி புறப்படும் சப்தம் கேட்டது.