ஜான் கால்ஸ்வொர்த்தி
மாலை ஆறு மணியிருக்கும். அந்த அறையில் சுமாரான இருட்டு. 'பச்சை ஷேட்' போட்ட மேஜையின் மீதிருந்த ஒற்றை விளக்கு, தரையில் விரித்த துருக்கிக் கம்பளத்திலும், மேஜையின் மீது சிதறிக் கிடந்த, வாசிப்பதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீதும், நல்ல வேலைப்பாடு அமைந்த கீழைப் பிரதேச முக்காலியின் மீதும் தனது வெளிச்சத்தைச் சிதறியது. நல்ல கொடுமையான மாரிக்காலம். ஜன்னல்கள் எல்லாம் நன்றாக அடைக்கப்பட்டு, திரையால் மூடப்பட்டிருந்தன. முகடும் மரத்தினாலானது. சுவரில் வரிசை வரிசையாகத் தோல் அட்டை போட்ட புத்தகங்கள். குளிர் காய்வதற்காக மூட்டப்பட்ட தீயும் வெளிச்சமும் அந்த விறைத்துப்போகும் 'குளிர் பாலைவனத்துப் பிரதேசத்து' ரம்மியமான பொழில் என்று கூறவேண்டும். கோர்ட்டின் வேலைக் களைப்புத் தீருமட்டிலும் அதிக ஓய்வு எடுத்துக் கொள்ளுவதில் கீத் டரான்டிற்கு மிகுந்த பிரியம். காலில் துருக்கிப் பாதரட்சையணிந்து, அந்த இருட்டுடன் கூடும் அக்கினி ஒளியில் அவன் உட்கார்ந்திருந்தான். நல்ல ஓவியக்காரன், அவனது முகத்தின் அமைப்பைக் கண்டால், சித்திரக் கோலைக் கீழே வைக்கமாட்டான் என்பது திண்ணம். செதுக்கி வைத்தது போன்ற, ஆனால் சிறிது வெளிறிய முகம், கருத்த புருவம்; கண்கள் சாம்பல் வர்ணமோ அல்லது சிறிது சிவப்புக் கலந்ததோ என்று கூறும்படியானவை. நாள் பூராவும் வக்கீல்கள் அணிய வேண்டிய பொய்ச் சிகையை அணிந்தும் வழுக்கை விழவில் லை. அந்த அறையில் இருக்கும்பொழுது வேலைக் கவலைகளைப் பற்றி நினைப்பதே கிடையாது. அவன் வக்கீல்; வாழ்க்கையில் மனித நுட்பத்தினால் ஆகும் பின்னல்களை அறிவுக் கத்தியால் பிரித்து, வேண்டாதவற்றை விலக்குவதே அவன் வேலை; சோர்வை அளிக்கக் கூடிய வேலைதான். ஆனால், அந்த அறையில் அவன் தனது மூளையை அலட்டிக் கொள்வதில் லை. ஆமாம்! அன்று நடந்த கேஸில் தன் கட்சிக்காரன் பொய் சொன்னான் என்று அவனுக்குப் பட்டது. அதனால் கேஸை வாதாட மறுத்துவிடலாம் என்று கூட முடிவிற்கு வந்துவிட்டான். முதலிலிருந்தே அந்தப் பலவீனமான பேர்வழியின் அரைகுறைப் பதில்கள் அவனுக்குப் பிடிக்கவில் லை. ஆழமான மனவுறுதியிலிருந்து எழாத ஒப்புப் பேச்சும், பலவீனத்தினால் பிறக்கும் அனுதாபமும் நிறைந்த இக்காலத்தில், இந்த மாதிரி ஆசாமிகளுக்குக் குறைவில் லை. உதவாக்கரைகள்! பிரயோஜனமற்ற பிரகிருதிகள்! வாசிப்பதற்கு மூன்று புத்தகங்கள் எடுத்திருந்தான். வால்டேர்: அந்தப் பிரெஞ்சு எழுத்தாளனின் தர்க்கத்தைப் பிளந்து எறியும் குத்தல் நடையில் அவனுக்கு ஒரு மோகம், இரண்டாவது, பர்ட்டன் எழுதிய யாத்திரைகள், மூன்றாவது, ஸ்டீவென்ஸன் எழுதிய புது அராபிய இரவுகள். அன்று இரவில் மனத்தை உற்சாகப்படுத்தக் கூடிய புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். கோர்ட்டிலே ஏராளமான கூட்டம். வரும்பொழுது, வழியிலே ஈரம் சுவறிய காற்று. அன்று அவனுக்கு வீடு வெறிச்சென்று இருப்பதாகப் பட்டது. விளக்கைச் சிறிது இறக்கிவிட்டு, குளிர் காய்வதற்காக நெருப்பின் பக்கம் திரும்பினான். அன்று டெலாஸன் வீட்டு விருந்திற்குப் போகுமுன் சிறிது கண்ணயர்ந்தால் என்ன! அப்பொழுது பள்ளிக்கூட விடுமுறையாக இருந்தது. தனது மகள் மெய்ஸி, வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதா என்று நினைத்தான். கீத் டரான்டின் மனைவி இறந்து வெகுகாலமாகி விட்டது; வீட்டில் பெண் பழக்கத்தை இழந்து நெடுநாளாகி விட்டது; ஆனால் அன்று இரவு துருதுருவென்று வரும் தன் மகள் இல்லாதது ஏதோ ஒரு மாதிரியாக இருந்தது. சிலருக்குப் பெண்ணின் தோழமை எவ்வளவு அவசியமாக இருக்கிறது! ஆமாம். தம்பி லாரன்ஸ் - எல்லாவற்றையும் பெண்களால் தொலைத்தான்! மனவுறுதிகூடப் போய்விட்டது. வம்சத்தில் இருந்துவரும் ஸ்காட்லாந்து இரத்தம் இவனைப் பாதுகாத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்; ஆனால், ஸ்காட்லாந்துக்காரன் தறிகெட்டு ஆட ஆரம்பித்தால் அவனை யார் தடுக்க முடியும்? ஒரே தாயின் குழந்தைகள்தான். தங்கள் இருவருக்குள்ளும் அவ்வளவு வித்தியாசம்! தனது வெற்றிக்கெல்லாம் தாயின் வம்சம்தான் காரணம் என்ற கீத் டரான்ட் நினைத்தான். உடனே அவனது மனம் சட்ட விபரத்தில், அவனது மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒன்றின் மீது சென்றது. தனக்குத் தவறு ஏற்படுவதே இல் லை என்ற அகங்காரம் உடையவன் கீத் டரான்ட். ஆனால் அன்று, தான் கொடுத்த ஆலோசனை சரியானதுதான் என்று அவன் மனம் திருப்தியடையவில் லை. ஒரு முடிவான அபிப்பிராயத்திற்கு வரச் சக்தியில்லாதவன், அல்லது சந்தேகமிருந்தாலும் அபிப்பிராயத்தைத் தைரியமாகக் கொடுக்க சக்தியற்றவன் வக்கீல் தொழிலில் பிரபலமடைய முடியாது. ஏன், வேறு எந்த வேலையிலுமே ஈடுபடமுடியாது. அனுபவம் முதிர முதிர அவனுக்கு எதைப்பற்றியும் ஒரு திடமான அபிப்ராயம் அல்லது திடசித்தத்தில் ஏற்படும் செய்கை இருக்க வேண்டும் என்பது உறுதியாயிற்று. ஒரு வார்த்தை, அதன் பின் ஒரு அடி! இல் லை இல் லை! முதலில் ஒரு போடு. பின்னரே வார்த்தைகள். இதுதான் வெற்றியை அளிக்கும். சந்தேகம், தயங்குதல், உணர்ச்சி! ஒளியற்ற - இவை புதிய நாகரிகத்தின் பேர்போன வழி! சீச்சீ! கீத் டரான்டின் அழகிய முகத்தில் ஒரு கோரமான ராக்ஷஸப் புன்சிரிப்பு உதயமாயிற்று. அல்லது விளக்கின் மங்கிய வெளிச்சம்தான் இந்தக் கோர நடனங்களை முகத்தின்மீது ஆடுகிறதா? அதுவும் மெதுவாக மறைந்து முகத்தில் சோர்வு தேங்கியது. அவன் கண் அயர்ந்தான். வெளிச்சத்திற்கப்புறம் ஏதோ ஒன்று இருப்பது போன்ற உணர்ச்சி அவனைத் திடுக்கிட்டு விழிக்க வைத்தது. "யாரது" என்று எழுந்தான். விளக்குத் திரியைப் பிரகாசமடையும்படி உயர்த்திவிட்டு, "யார் அங்கே?" என்றான் மறுபடியும். "நான் தான் - லாரி" என்றது ஒரு குரல் கதவுப்புறத்தில். தூக்கத்திலிருந்து திடீரென்று விழுத்ததினாலோ அல்லது குரலின் தொனியினாலோ கீத் டரான்டிற்கு நடுக்கமெடுத்தது. "சிறிது கண்ணயர்ந்து விட்டேன்! வா! உள்ளே வா!" கீத் டரான்ட் எழுந்திருக்கக் கூட இல் லை. தலையைக் கூடத் திருப்பவில் லை. அரைக் கண் போட்டபடி சகோதரனை எதிர்பார்த்தான். லாரன்ஸ் இவனைக் காண வருவது எப்பொழுதும் நல்ல காலத்திற்கல்ல. அவன் 'மூசு மூசென்று' சுவாசிப்பதையும், பக்கத்தில் சாராய நாற்றம் பரவுவதையும் கீத் டரான்ட் உணர்ந்தான். இங்கு வரும்போதாவது குடிக்காமல் வரக்கூடாதா! கொஞ்சமும் மரியாதையற்ற சிறுபிள் ளைத் தனமாக இருக்கிறது. உடனே சடக்கென்று: - "உம்! லாரி! என்ன நடந்தது?" என்று கேட்டான். அவன் வரும்பொழுதெல்லாம் ஏதாவது 'நடவாமல்' இருக்காது. எவ்வளவு தூரம் இவனது அசட்டுத்தனங்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு போகிறோம் என்று கீத் டரான்டிற்கு ஆச்சரியம் ஏற்படுவதுண்டு. எல்லாம் இரத்தப் பிணிப்புத்தான். அவனது புத்தி, இந்த அனுதாபம் எல்லாம் பலவீனத்தின் அறிகுறி என்று எத்தனை தடவையோ இடித்துக் கூறியிருக்கிறது. இப்பொழுதும் குடித்துவிட்டா வந்திருக்கிறான்? ஏன் வெளியில் நின்று தயங்குகிறான்? "உள்ளே வந்து உட்காரேன்" என்றான் கீத் டரான்ட். அவன் உள்ளே வருகிறான்; ஆனால் வெளிச்சத்திற்கு ஒதுங்கி சுவரோரமாக வருகிறான். இடைக்குக் கீழ் விளக்கின் ஒளிபட்டது. ஆனால் முகமெல்லாம் இருட்டில்தான். "உடம்பிற்கு என்னடா?" தலையசைப்பைத் தவிர வேறு பதில் இல் லை. வெளிச்சத்திலிருந்த கை இருளில் மறைந்து இருட்டில் பேய் போன்ற தலையைத் தடவியது. விஸ்கி நாற்றம் அதிகமாயிற்று. "அவன் குடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறான். புதிதாக வந்த பட்லர் இவனைப் பார்த்தால்? இவனுக்கு நடந்து கொள்ளக்கூட..." என்று நினைத்தான். ஆமாம்! அந்த உருவம் ஏதோ ஒரு பெருந் துயரத்தில் இருப்பது போல் பெருமூச்செறிந்தது. கீத் டரான்டிற்கு இவன் மௌனமாக நிற்பதின் காரணத்தைக் கூடக் கேட்கவில் லையே என்று தைத்தது. சடக்கென்று எழுந்து நின்றான். என்ன கேட்கிறோம் என்பதைக்கூட யோசிக்காமல், "என்னடா கொலை செய்தவன் மாதிரி நிற்கிறாயே? வாயடைத்து விட்டதா?" என்றான். சில நிமிஷம் பதில் இல் லை. சுவாசமும் தாறுமாறாகக் கேட்டது. பின் மெதுவாக, "ஆமாம்" என்ற பதில் வந்தது. விபரீதமான சம்பவத்தின் இயற்கைக்குப் போதுமான நிலைமை. அது உண் மை என்ற மனப்பான் மையை உள்ளம் ஏற்காது. அதனால்தான் கீத் டரான்டும் நம்பாது, "ஆமாம், நீ குடித்துவிட்டுத்தான் வந்திருக்கிறாய்" என்றான். உடனே அவன் மனதில் பயம் தட்டியது. "நீ என்ன சொல்லுகிறாய்? இங்கே வா, உடம்பிற்கு என்ன?" உடனே அவனது சகோதரன் தள்ளாடி வெளிச்சத்தின் முன்பு ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். அவனிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. கீத் இரண்டடி எட்டி வைத்து சகோதரன் முகத்தைக் கவனித்தான். அவன் கூறியது உண் மைதான். அந்தக் கண்களில் தோன்றிய பயக்குறி, ஆச்சரியக் குறி, வெறும் நடிப்பினால் ஏற்படாது. அந்தக் கண்களைப் பார்ப்பதே இதயத்தை நசுக்கிவிடும். உண் மையான சோகமே அந்தப் பார்வையைக் கொண்டுவரும். கீத் இதயத்தில் தோன்றிய இரக்கம் கும்பிய கோபமாக மாறியது. "இதென்னடா? இதென்ன அசட்டுத்தனம்?" ஆனால் குரல் இறங்கியது. கதவினண் டையில் சென்று தாளிட்டிருக்கிறதா என்று கவனித்தான். லாரன்ஸ் நாற்காலியை முன்பக்கம் இழுத்து குளிர்காயப் போட்டிருக்கும் தீயின் முன்பு குனிந்து சரிந்து உட்கார்ந்துவிட்டான். கன்னங்களில் சதையற்று எலும்புகள் தெரிந்தன. கீத் அவனது தோளின் மீது கையை வைத்து, "என்ன லாரி! தைரியமாக இரு! அளக்காதே, நடந்ததைச் சொல்" என்றான். "ஆம்! அது நிஜந்தான்; நான் ஒருவரைக் கொன்று விட்டேன்." "ஏன் இங்கு வந்தாய்? என்னிடம் ஏன் இதைச் சொல்லுகிறாய்?" "பின் யாரிடம் சொல்ல? இனி என்ன செய்வது? நேரே போலீஸாரிடம் என் னை ஒப்பித்துக் கொள்ளட்டுமா? - அல்லது - " இவன் சொல்வதெல்லாம் நிஜந்தானா? இனி என்ன செய்வது என்று கீத் டரான்டிற்கு இதயத்தில் தைத்தது. "சொல்லு! இது எப்படி நடந்தது? - இந்த விஷயந்தான்" என்றான் கீத் அமைதியாக. இக்கேள்வி நடந்த உண் மையைக் கோரமான பேய்க் கனவுடன் இணைத்தது. "எப்பொழுது நடந்தது?" "நேற்று இரவு" லாரி பொய் சொல்லத் தெரியாத குழந்தை என்பதை அவன் முகக்குறி காட்டியது. கோர்ட்டில் குறுக்குக் கேள்விகளை இவனால் எப்படித் தாங்கமுடியும்? "எப்படி? எங்கு? முதலிலிருந்து நடந்ததைச் சொல். முதலில் இந்தக் காப்பியைச் சாப்பிடு. சிறிதாவது குழப்பம் தீரும்" என்றான் கீத் மெதுவாக. "உம்! இதுதான் - சில மாதங்களாக ஒரு பெண் ணை எனக்குத் தெரியும்..." பெண்கள்! கீத் பல் லைக் கடித்துக்கொண்டு, "அப்புறம்?" என்றான். "அவள் தகப்பன் போலிஷ் ஜாதியான். அவளைப் பதினாறு வயதில் விட்டுவிட்டு இறந்துபோனான். வாலன் என்ற அமெரிக்கன், அதிலும் கலப்பு ஜாதி, அந்த வீட்டில்தான் வசித்து வந்தான். அவன் அவளைக் கலியாணம் செய்து கொண்டான், அல்லது செய்து கொண்டதாகப் பாவனை செய்தான். அவள் மிகவும் அழகானவள். அவளுக்குக் கையில் ஆறுமாதக் குழந்தை. வயிற்றில் கர்ப்பம். அந்தச் சமயம் அவளைவிட்டு ஓடிப்போய் விட்டான். பிரசவித்த குழந்தையும் இறந்தது. அந்தச் சமயம் அவளும் செத்துப் பிழைத்தாள். பின்பு வேறு ஒருவன் அவளைக் கைப்பிடிக்கும்வரை பட்டினி - அவனுடன் இரண்டு வருஷம் வசித்தாள். பின்பு வாலன் திரும்பி வந்து அவளை மறுபடியும் இழுத்துக் கொண்டான். அந்த முரடன் ஒன்றுமில்லாததற்கு எல்லாம் அவளைக் குத்துயிராய்க் குலையுயிராய் அடிப்பான். மறுபடியும் அவளை விட்டு ஓடிப்போய் விட்டான். பின்பு அவளது மூத்த குழந்தையும் இறந்து போயிற்று. நான் அவளைச் சந்திக்கும்பொழுது விபச்சாரத்திலேயே இறங்கிவிட்டாள்..." பேசிக்கொண்டே வந்தவன் திடீரென்று கீத் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். "சத்தியமாகச் சொல்லுகிறேன். அவளைப்போன்ற உண் மையுள்ள, நல்ல குணமுள்ள பெண் ணை நான் பார்த்ததே கிடையாது! அவளுக்கு இருபது வயது கூட நிரம்பவில் லை. நேற்று இரவு அங்கு போனேன். அந்த முரடன் வாலன் அவள் இருக்குமிடத்தைக் கண்டு கொண்டான். அவன் நேற்று வாயில் வந்தபடி ஏசிக்கொண்டு என் னைத் தொலைத்து விட நெருங்கினான். நெற்றியைப்பார் - நான் அவன் கழுத்தைப் பிடித்து நெருக்கினேன் - பிடியை விட்டவுடன் - " "அப்புறம்?" "இறந்துவிட்டான். பின்புதான் அவளும் பின்புறமிருந்து தொங்கிக்கொண்டிருந்தாள் என்று தெரியும்." லாரன்ஸ் மறுபடியும் கையை நெரித்தான். "அப்புறம் என்ன செய்தாய்?" "அதன் பக்கத்தில் நெடுநேரம் உட்கார்ந்திருந்தோம்; அப்புறம் அதை என் முதுகில் சுமந்து தெருவழியாகக் கொண்டு போய் மூலையில் இருக்கும் கமான் வளைவின் கீழ் போட்டுவிட்டேன்." "எவ்வளவு தூரம்?" "சுமார் 50 கெஜம் இருக்கும்" "யாரும் உன் னைப் பார்த்தார்களா?" "இல் லை" "நேரம் என்ன?" "மூன்று." "அப்புறம்?" "அவளிடம் சென்றேன்." "அட கஷ்டமே, ஏன் அங்கு போனாய்?" "தனியாக இருக்க அவள் பயந்தாள்; எனக்கும் அப்படித்தான் இருந்தது." "அவள் வீடு எங்கே?" "சோஹோவில் 42 நெ. பரோ தெரு." "கமான் வளைவு இருக்குமிடம்?" "குளோவ் சந்து மூலை" "அட தெய்வமே! ஏன்! அதைப் பேப்பரில் படித்தேனே?" மேஜையிலிருந்து பத்திரிகையை எடுத்துக் குறிப்பிட்ட பகுதியை வாசித்தான். குளோவ் சந்திலிருக்கும் கமான் வளைவின் கீழ் இன்று காலை ஒரு மனிதனுடைய பிரேதம் காணப்பட்டது. கழுத்திலிருக்கும் அடையாளங்களில் இருந்து விபரீதமான முடிவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பிரேதத்தின் மீது அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய ஒன்றும் காணப்படவில் லை. களவும் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்து வருகிறது. அது உண் மைதான். கொலை! அதுவும் தன் சகோதரனால்! சடக்கென்று அவன் பக்கத்தில் திரும்பி, "பேப்பரில் படித்துவிட்டுக் குடிவெறியில் கனவு கண்டிருக்கிறாய்! ஞாபகமிருக்கட்டும்! வெறுங்கனவு!" "கீத், அது வெறுங் கனவாக இருந்திருக்கலாகாதா? வெறுங்கனவாக இருந்திருக்கலாகாதா?" கீத், தன் கைகளை நெரித்துக் கொண்டான்.