சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் ஆகிய சகலத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுவதில் எத்தனை உண்மையிருக்கிறதென்பதை, சுற்றிலும் தன்னை எரித்துக்கொண்டிருந்த மணற்பரப்பை நோக்கிய மார்வார் ராஜபுத்திரனான ராவ்ஜோடா சந்தேகமறப் புரிந்துகொண்டான். எங்கும் வெள்ளை வெளேரென்று தெரிந்த அந்தப் பாலைவனத்துக்கு தனது கிரணங்களால் அதிகப்படியான தீட்சண்யத்தையும் பளபளப்பையும் பிற்பகல் கதிரவன் அளித்து அழகு செய்தாலும், அந்த அழகே தன்னைக் கொன்றுவிட முடியும் என்ற முடிவுக்கும் வந்த அந்த வாலிபன், “அழகினால் ஆபத்தே தவிர சுகம் ஏதுமில்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, கொல்லும் வெயிலிலும் தன்னைச் சுமந்துகொண்டிருந்த புரவியின் முதுகில் ஒருமுறை தனது கையால் தட்டிக் கொடுத்ததன்றி, அதன் முதுகிலிருந்து கீழே இறங்கவும் செய்தான். அப்பொழுது அவன் கிட்டத்தட்ட அந்தப் பாலைவனத்தைத் துண்டு செய்து ஓடிக்கொண்டிருந்த லூனி என்ற உப்பனாற்றங்கரைக்கு வந்துவிட்டதால் தன்னை இரண்டு நாட்களாகத் துரத்தி வந்த ஆபத்து விலகிவிட்டதென்ற நினைப்பில் ஆற்றங்கரையை நடந்தே அணுகிய மார்வார் ராஜபுத்திரன் ஆற்றில் இறங்கி அதன் நீரை வாரித் தன் முகத்தில் அடித்துக்கொண்டான். பின்னால் தொடர்ந்து தன்னுடன் ஆற்றில் இறங்கிய புரவியின் முகத்திலும் நீரை அள்ளித் தெளித்தான். அந்த சைத்தியோபசாரத்தால் புரவி உடல் சிலிர்த்து, முகத்தை அந்த வாலிபன் தோளிலும் வைத்துப் புரட்டியது. அதன் முகத்தைத் தனது வலது கையால் தட்டிக் கொடுத்த ராவ்ஜோடா, மீண்டும் லூனி நதிக்குப் பின்னாலிருந்த பாலைவனத்தை உற்றுநோக்கினான். பழையபடி ஆரம்பத்தில் மனத்தில் உதயமான தத்துவத்தை எண்ணிப் பார்த்து அது முற்றிலும் சரி என்று மனத்துக்குள் சொல்லியும் கொண்டான்.
“காமத்வஜமென்றும் கனோஜ் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்ட கன்னோசியிலிருந்து, கங்கைக்கரையில் அமைந்திருந்த விஸ்தாரமான வளப்பமான நாட்டிலிருந்து, ஏன் இந்த மாரூஸ்தலி என்றும் மாரூஸ்தானமென்றும் அழைக்கப்பட்ட மரண பூமிக்கு சரித்திரம் எங்களைத் தள்ளிவிட்டது?” என்று வினாவைத் தொடுத்த அந்த ராஜபுத்திரன் “எங்கள் மூதாதையரான ஜெயசந்திரன் தனது மகளைத் தூக்கிச் சென்று கடிமணம் புரிந்த பிருதிவிராஜனை நசுக்கும் எண்ணத்துடன் கோரி நவாபான ஷாபுடீனை வரவழைத்தான். ஷாபுடீன் பிருதிவிராஜனையும் அழித்தான்; ஜெயசந்திரனையும் அழித்தான். ஆகவே, ஜெயசந்திரன் சந்ததிகளில் ஒருவரான சேவாஜி இந்த மாரூஸ்தலி என்ற மரண பூமியில் அரசை நிறுவினார். ஜெயசந்திரன் செய்த பாவம், அவர் சந்ததியை கங்கையின் உயிரூட்டும் வளமிக்க பூமியிலிருந்து விரட்டியது மட்டுமல்ல, மார்வார், மாரோவார், மாரூஸ்தலி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த வரண்ட பாலைவனத்து, மரணபூமிக்கு அனுப்பிவிட்டது. இப்பொழுது மீண்டும் என் தந்தை அதே சிதோதயர்களுக்கு துரோகம் செய்தார். இதோ நான் மரண பூமிக்கு மீண்டும் வந்துவிட்டேன். ஜெயசந்திரன் பாவத்திலிருந்து சிறிது மீட்சி, சிறிது புண்யம், சேவாஜியின் முயற்சியால், இப்பொழுது எனது தந்தையின் துரோகத்தால் மீண்டும் அதே பழைய பாலைவனம் ஒரு சுழற்சி, பாவ புண்யங்களின் ஒரு சுற்று முடிந்துவிட்டது. சரித்திரம்கூட ஒரு சுற்று சுற்றிவிட்டது. உயர்ந்த சாம்ராஜ்யம் சிதைந்து இருநூறு வீரர்களுடன் இந்தப் பாலைவனத்தை அடைந்த சேவாஜி இங்கு அரசை நிறுவினார். அந்த அரசு இப்பொழுது ஆட்டங்கண்டிருக்கிறது. நான் மீண்டும் அவரைப்போல் நிர்க்கதியாக இங்கு வந்திருக்கிறேன். சரித்திரமும் சுழன்றுவிட்டது ஒரு முறை. இத்தனைக்கும் காரணம் பூமி சக்கரமாயிருப்பதாலா? அது சுழல்வதால் வாழ்க்கையும் சுழலுகிறதா? சக்கரத்தில் வைக்கப்படும் ஒரு பொட்டுப்போல வாழ்க்கையும் உருண்டு, ஒருசமயம் மேலும் இன்னொரு சமயம் கீழுமாகச் சுழல்கிறதா? அப்படித்தானிருக்க வேண்டும்” என்று தனது கேள்விக்குப் பதிலும் சொல்லிக்கொண்டான் ராவ்ஜோடா.
இப்படி சிந்தனை வசப்பட்டுக்கொண்டே சித்தூரில் மேவார் வம்சத்தவனும் பரம தியாகியுமான சந்தசிம்ஹனால் கொல்லப்பட்ட தனது தந்தைக்கு லூனியில் இறங்கி மூழ்கி நீராடவும் செய்தான் மார்வார் இளவரசன். பிறகு புரவியின் மீது சொட்டச் சொட்ட இருந்த உடைகளுடனும் தலை மயிருடனும் ஏறி ஆற்றைக் கடந்து திரும்பி அக்கரையில் நீண்ட தூரத்தில் தெரிந்த ஆராவலி மலைத்தொடரை நோக்கி ஒரு முறை பொறாமைப் பெருமூச்சும் விட்டான். “ஆராவலி வலிமை மிக்கவர்களின் இருப்பிடம். என்ன அழகான பெயர்” என்றும் சொல்லிக்கொண்டு மார்வாரின் தென் பகுதியிலிருந்த அந்த மலைத்தொடரை நோக்கி இரண்டாம் முறையும் பெருமூச்சு விட்டான்.
“ஆராவலி! வலிமை மிக்கவர்களின் புகலிடம்! மகாவீரர்களான சித்தூர் ராணாக்களுக்கு, சிதோதய வம்சத்தாருக்கு அதுதானே புகலிடம்? அந்த வம்சத்தை அந்த மலைத்தொடர் எவ்வளவு தூரம் பாதுகாத்திருக்கிறது! சரித்திரமே இதற்குச் சான்று” என்றும் சொல்லிக்கொண்ட மார்வார் இளவரசன் “சித்தூர் ராணாவுக்கு சதி செய்யப் போய்த்தானே இந்த கதி எனக்கு வந்தது?” என்றும் கேட்டுக்கொண்டான் மனத்துள். இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிந்த கதை அப்பொழுதும் அவன் மனக்கண்ணில் எழுந்தது.
வயோதிக வயதிலிருந்த மேவார் மன்னர் லக்க ராணாவுக்கு தமது மகளைக் கொடுத்தார் மார்வார் மகாராஜா ரின்மல். அவளுக்கு மகன் பிறந்தால் அவன்தான் அரசாள வேண்டும் என்ற நிபந்தனையையும் ஏற்படுத்தினார். அதற்கு லக்கராணா சம்மதிக்காவிட்டாலும் அவரது மூத்த மகனும் பட்டத்துக்குரியவனும் மகாவீரனுமான சந்தன் சம்மதித்தான். தான் சிம்மாசனம் ஏறுவதில்லையென்று சபதமும் செய்தான். அப்படியே தந்தை இறந்ததும் தனது இளைய தாயாரின் மகனான மோகுல்ஜியை சிம்மாசனத்தில் ஏற்றி முடிசூட்டி, தான் பக்கபலமாக நின்று அரசாண்டான். மோகுல்ஜியை சந்தன் வெறும் கைப்பொம்மையாக்கிவிட்டான் என்று சிற்றன்னை புகார் செய்தாள். சந்தன் அவள் எண்ணங்களுக்குத் தலைதாழ்த்தி தனது வீரர்களுடன் நாட்டை விட்டு அகன்றான். சிற்றன்னையின் பிறந்தகத்தார், தகப்பன், மாமன்-சகலரும் சித்தூரை வசப்படுத்திக்கொண்டார்கள். இளையராணி தனது மடத்தனத்தை உணர்ந்து சந்தனுக்கு சொல்லியனுப்பினாள். சந்தன் தனது வீரர்களுடன் தசராவின் கடைசி நாளன்று மாறுவேடம் புனைந்து சித்தூருக்குள் நுழைந்துவிட்டான். சிதோதய வீரர்கள் மார்வார் ராஜபுத்திரர்களை வெட்டிச் சாய்த்தார்கள். மார்வார் மகாராஜாவின் முடிவு கேவலமாகவும் கேலிக்கு இடமாகவும் இருந்தது. தனது மகளின் பணிப்பெண்ணுடன் சரசமாட முற்பட்டு, அவள் கொடுத்த மதுபானத்தை அருந்தி மயக்கமாகப் படுத்திருந்த மகாராஜாவை, பணிப்பெண் அவர் தலைப்பாகையைக் கொண்டே அவரைக் கட்டிலில் கட்டினாள். அப்பொழுது நுழைந்த சிதோதய வீரர்கள் மார்வார் அதிபதியை வெட்டிப் போட்டார்கள். இப்படி தன்னுடைய சதிக்கு துர்க்கதியால் பிராயச்சித்தம் செய்தார் மகாராஜா ரின்மல். அவரது மகன் ராவ்ஜோடா அப்பொழுது சித்தூர் நகரில் வேறொரு மூலையில் இருந்ததால், செய்தி கேட்டு புரவியிலேறி அதன் வேகத்தால் தப்பினான். தப்பியும் பயனென்ன? இரண்டு நாள் பயணம் மாரூஸ்தலியில், மரணத்தின் பிடியில்.
இந்த நிகழ்ச்சிகளை எண்ணி “மேவாருக்கு இழைத்த பாவப் பாசியை மார்வார் தனது ரத்தத்தால் துடைத்துவிட்டது” என்று தீர்மானித்த ராவ்ஜோடா “இந்த மார்வார் ராஜ்யத்தை மீண்டும் நிலைநிறுத்துகிறேன். மார்வார் ராஜவம்சத்தில் இன்னுமொருவன், இந்த ராவ்ஜோடா, சாகவில்லை இருக்கிறான்’ என்று தனது மார்பை ஒருமுறை வலது கையால் தட்டிக்கொண்டான். அந்த பெருமிதத்துடன், உறுதியுடன் ஏக்கத்தை உதறி தூரத்தே கண்ணுக்கெழுந்த மலைச்சிகரமொன்றை நோக்கினான். அங்குதான் தனக்கு விடிமோட்சமிருக்கிறதென்பதையும் புரிந்துகொண்டான். பாகுர்ச்சிரா (பட்சிகளின் சரணாலயம்) என்று பிரசித்தி பெற்ற அந்த மலைச்சிகரம் பட்சிகளைப் போலவே தனக்கும் அடைக்கலம் அளிக்க முடியும் என்று எண்ணி அதை நோக்கிப் புரவியை நடத்தினான்.
நாழிகைகள் ஓடின. மெள்ள அந்த மலை உச்சி, மலைவாயிலில் கதிரவன் விழுந்துவிட்ட நேரத்தில் நன்றாகவே கண்ணுக்குத் தெரிந்ததால், மனத்தில் நிம்மதியுடன் புரவியைச் செலுத்தி அதன் அடிவாரத்துக்கு ராவ்ஜோடா வந்த நேரத்தில் இருள் ஓரளவு அடர்ந்தேவிட்டது. இருளில் பெரும் பிசாசு போல் உயர்ந்து நின்ற அந்த மலையும், மலையின் அடர்த்தியான மரங்களும், சலசலவென்று எங்கோ ஓடிய இரண்டொரு அருவிகளின் ஒலியும், மலைச்சிகரத்தை அடைந்து கூண்டுகளில் புகுந்துவிட்ட பட்சி ஜாலங்களின் நானாவித கூச்சல்களும் அச்சத்தையும் இன்பத்தையும் கலந்தே அளித்தாலும், அச்சமென்பதை லவலேசமும் அறியாத அந்த ராஜபுத்திர வீரன் இன்பத்தை மட்டும் மனத்தில் வாங்கி புரவியை மலைமீது ஏறவிட்டான்.
எத்தனையோ சுகதுக்கங்களை தனது எஜமானுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் அந்த வீரப்புரவியும் செங்குத்தான அந்த மலையில் சற்று கஷ்டத்துடனேயே ஏறிச் சென்றது. கரடு முரடான பாதையில் அதன் கால்கள் சிற்சில சமயங்களில் கற்களை இடறி உருட்டினாலும், மரங்கள் சில உடலில் உராய்ந்தாலும், அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு ஏறிய புரவியும் உச்சிக்கு சிறிது தூரத்தில் வந்ததும் வயிறு ஏறி இறங்கி இறைக்க வாயில் நுரை தள்ள சிறிது நின்றது. அதன் சிரமத்தை உணர்ந்த ராவ்ஜோடா அதன் முதுகிலிருந்து இறங்கி தனது சட்டைத் துணியில் அதன் வாயிலிருந்த நுரையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் தேடி வந்த இடம் கண்ணுக்குத் தெரியவில்லை. மலையின் உச்சியைச் சுற்றி வாயைத் திறந்து கொண்டிருந்த எத்தனையோ குகைகளில் எந்தக் குகையில் வனப்பிரஸ்த ஜோகி இருப்பார் என்று எண்ணிப் பார்த்தான் சில விநாடிகள். பிறகு மலைச்சரிவில் ஏறினான் கால் நடையாக. அவன் கண்களில் பக்கத்து மரங்களிலிருந்து தொங்கிய இரண்டொரு கயிறுகள் படவே ஜோகியின் இருப்பிடம் பக்கத்தில்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் இருபுறம் தலையைத் திருப்பி நோக்கிய ஜோடாவின் கண்களில் சிறிது தூரத்திலிருந்த ஒரு வெளிச்சம் தெரியவே அதை நோக்கி நடந்தான்.
அந்த வெளிச்சம் தெரிந்த இடம் கிட்டே வரவர அதன் ஜ்வாலையும் நன்றாகத் தெரிந்தது அவன் கண்களுக்கு. புரவி பின்னால் நடந்துவர அந்த ஜ்வாலையை நோக்கி நடந்த ராவ் ஜோடா, அது இருந்த இடத்தை சமீபித்ததும் தான் தேடிவந்த மலைக்குகை அதுதானென்பதைப் புரிந்துகொண்டதால் மகிழ்ச்சியையும் தன் துக்க சிந்தனையில் வரவழைத்துக் கொண்டு ஜ்வாலையை அணுகினான்.
அதே சமயத்தில் அந்த ஜ்வாலையும் குகைக்குள்ளேயிருந்து நகர்ந்து அந்த வாலினை நோக்கி வந்தது. குகைவாயிலை அடைந்ததும் ஜ்வாலை நகர்ந்து வந்த காரணத்தை மார்வார் இளவரசன் புரிந்து கொண்டான். அந்தப் பந்தத்தை ஏந்தி குகை வாயிலில் நின்றிருந்தாள் ஒரு பெண். மலையின் செழிப்பெல்லாம் அவள் வனப்பில் தெரிந்தது. உடை அதிகமாக இல்லை. மரவுரிதான் தரித்திருந்தாள். ஆனால் அவள் நாசியை அலங்கரித்த வைர நத்து அவள் துறவியல்லவென்பதை அறிவித்தது. அவள் கண்கள் ஜோடாவைக் கண்டதும் பளபளத்தன பந்தத்தின் வெளிச்சத்தில்.
“இங்கு ஏன் வந்தாய்?” என்ற அவள் கேள்வியில் குரூரம் இருந்தது.
“வனப்பிரஸ்த ஜோகியைப் பார்க்க வந்தேன்” என்றான் மார்வார் இளவரசன்.
அவள் சிறிது சிந்தித்தாள். “உன் கைகளை அதோ அந்தச் சுனையில் சுத்தம் செய்துகொண்டு வா” என்று கூறினாள், சிறிதும் கருணை ஒலிக்காத வரண்ட குரலில்.
“லூனியில் நீராடித்தான் வந்திருக்கிறேன்” என்றான் ராவ் ஜோடா.
“ரத்தம் படிந்த உன் கைகளை லூனி போக்க முடியாது. அந்த அருவியால் முடியும்” என்றாள் அந்த மலைப்பெண். மீண்டும் அருவியைச் சுட்டிக் காட்டினாள் தலையின் லேசான அசைப்பினால்.
“ரத்தமா? ஏது ரத்தம்?” என்று தனது கைகளை பந்த வெளிச்சத்தில் காட்டினான் மார்வார் அரசகுமாரன்.
“பாவத்தின் ரத்தம் பந்தத்தில் தெரியாது. போய் சுத்தம் செய்து வா” என்றாள் அந்த அழகி மீண்டும்.
அதிர்ச்சியுற்று நின்றான் மார்வார் இளவரசன். பந்தத்தின் சுடரின் பக்கத்தில் நின்றிருந்தாள் அந்த சுடர்க்கொடி. அவள் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமில்லையென்று சொல்ல முடியாது. வெறுப்பு தாண்டவமாடவே செய்தது.
அவளை மீண்டும் ஒருமுறை நோக்கிய அரசகுமாரன் அவள் கண்களில் தெரிந்த உறுதியால் சட்டென்று திரும்பி அருவியை நோக்கிச் செல்லக் காலடி எடுத்து வைத்தான்.
“நன்றாக அலம்பு சிசோதய வம்சத்துக்குச் செய்த பாவத்தின் கறையை” என்ற இரக்கமற்ற அவள் சொற்கள் அவன் காலடியைத் தேக்கின. சிந்தனையையும் தூண்டின.
திரும்பி நோக்கினான் அவளை ராவ்ஜோடா. “யார் சொன்னது உனக்கு?” என்று வினவினான்.
“முக்காலமும் அறிந்தவர்.”
“ஜோகியா?”
பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தாள் அவள். அந்த அசைப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்ததை அந்த வாலிப வீரன் புரிந்து கொண்டான்.