விரிந்து படர்ந்து எரிந்த விளக்கின் சுடரை விந்தைக் கண்களுடன் நோக்கிய ராவ்ஜோடா. அதில் விரிந்த கதையைக் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனான்.
முதலில் அந்தச் சுடரில் ஏதும் தெரியாததால் புரியாமல் விழித்த மார்வார் இளவரசனை நோக்கிய ஜோகி, “விளக்கை நன்றாக உற்றுப்பார். கவனத்தை வேறு எங்கும் திருப்பாதே” என்று நிதானமாகக் கூறினார். “மலைஅரசி! பந்தத்தை அணைத்துவிடு” என்று அந்தப் பெண்ணுக்கும் உத்தரவிட்டார். அடுத்த விநாடி அவள் பந்தத்தை பக்கத்துப் பாறையில் தீய்த்து அணைத்துவிடவே, தீபத்தின் ஜோதி ஒன்றே குகையின் உட்புறத்தை ஆட்கொண்டது. “மார்வார் ராஜபுத்திரனே! இப்பொழுது பார் ஜோதியை” என்றார் ஜோகி சாந்தமான குரலில்.
ராவ்ஜோடா அகல்விளக்கின் ஆடாமல் நின்ற சுடரை நோக்கினான் அதன் உள்ளே வேகத்தில் விர்ந்தன காட்சிகள். “அதோ வருகிறார்கள்! அதோ வருகிறார்கள்!” என்று மெதுவாகக் கூறினான், மார்வார் இளவரசன்.
“எத்தனை பேர்?” அந்தப் பெண் கேட்டாள்.
“ஆயிரம் பேர் இருக்கும்” என்றான், ஜோடா.
“அத்தனை பேரும் சிதோதயர்கள். அவர்களுக்குத் தலைமை வகித்து வருகிறான் அவன். அவன்தான் சந்தசிம்மன். இந்த இடத்தை நோக்கித்தான் வருகிறான். இல்லை. திரும்பி விட்டான். இல்லை, திரும்பவில்லை. மீண்டும் இந்த வழி வருகிறான். என்னைக் கொல்ல வருகிறான். சித்தூரிலிருந்து நான் தப்பியது தெரிந்துவிட்டது அவர்களுக்கு. மார்வார் வம்சம் என்னுடன் ஒழிந்துவிட்டது, ஒழிந்தேவிட்டது” என்று பதட்டத்துடன் கூவினான்.
கூவினான். “ஒழிந்துவிட்டது, ஒழிந்துவிட்டது” என்ற அவன் குரலை குகையின் பாறைச் சுவர்கள் பயங்கரமாக எதிரொலி செய்தன. ராவ்ஜோடாவின் மூளை பெரும் அதிர்ச்சியுற்றதால், அவன் விளக்கின் முன்பு தலையை சாய்த்துக்கொண்டு மவுனமாகிவிட்டான்.
“மறுபடியும் பார்! அதைரியம் மனிதனின் முதல் எதிரி” என்றார் ஜோகி.
மீண்டும் சுடரை நோக்கிய ராவ்ஜோடா ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். “சந்தசிம்மன் திரும்பிவிட்டான். நல்ல வேளை தப்பினேன். ஐயோ அதோ, இன்னொரு புரவி வீரர் பட்டம் வருகிறதே, அது யார்? இந்த இடம் நோக்கி வருகிறது. அதன் தலைவன் இந்த மலைப்பக்கம் கையைக் காட்டுகிறான். யார் அவன்? அவன் என் உபதளபதி. நேராக இங்கு வா. வனப்பிரஸ்த ஜோகி மகான் முன்பு நான் இருக்கிறேன்” என்று இரைந்து கூறினான் மார்வார் ராஜாபுத்திரன்.
அந்த சமயத்தில் பந்தத்தைக் கொளுத்தினாள் அந்தப் பெண். “மலை அரசி! இவனுக்கு உணவு ஏதாவது கொடு, மிகவும் களைத்திருக்கிறான்” என்றார் ஜோகி, அனுதாபத்துடன்.
“இவளை ஏதோ பெயர் சொல்லி அழைத்தீர்களே” என்றான், ஜோடா.
“மலை அரசி” என்றார், ஜோகி.
“புதுப் பெயராக இருக்கிறதே.”
“தமிழ்ப் பெயர்.”
“தாங்கள்-?”
“ஜோகி சுற்றாத இடம் இல்லை, அறியாத மொழி இல்லை.” இதைச் சொன்ன ஜோகி, “சரி, முதலில் உணவு கொள்” என்றார்.
“உணவு தேவையில்லை” என்றான், மார்வார் ராஜபுத்திரன்.
“வேறு என்ன வேண்டும்?”
“தங்கள் அருள்.”
“ஆண்டவன் அருளைக் கேள். உனக்கு இப்பொழுது நிரம்பவும் தேவை” என்றார் ஜோகி.
அதே சமயத்தில் புரவியொன்று வரும் சத்தம் கேட்டது.
ஜோகி பார்த்தார், மார்வார் இளவரசனை. “உனக்குத் துணை வந்துவிட்டது” என்றார்.
அந்தத் துணை உடனடியாக உள்ளே வரவில்லை. “வனப்பிரஸ்த ஜோகி” என்று வெளியில் இருந்து வந்தது, இடி போன்ற குரல்.
“வரலாம்” என்றார் ஜோகி.
அந்த உத்தரவை அடுத்து உள்ளே பெரும் காலடிச்சத்தம், ஏதோ பாறையை இரும்பு நசுக்குவது போன்ற ஒலி கேட்டது. அப்படி வந்த ராட்சஸனை வியப்புடன் நேராக நோக்கினான், மார்வார் இளவரசன்.
“அப்படியானால், நீ தப்பிவிட்டாய்?” என்று அந்த ராட்சஸன் ராவ்ஜோபாவை நோக்கி வினாவினான். மார்வார் ராஜபுத்திரன் தப்பியது பெரும் பிழை எனக் குறிப்பிடுவது போல் அமைந்திருந்தது, அந்தப் புதுமனிதன் குரல்.
ராவ்ஜோடாவின் முகத்தில் லேசாகச் சினத்தின் சாயை படர்ந்தது. “நான் தப்பியதில் தங்களுக்கு மகிழ்ச்சியில்லை போலிருக்கிறது?” என்று வினாவினான், ஜோடா அந்த ராட்சஸனை நோக்கி.
அந்த ராட்சஸன் வனப்பிரஸ்த ஜோகியை நோக்கினான். “ஜோகி! உயிருக்குப் பயந்து ஓடுபவனைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான் அடக்கத்துடன். கேட்டதன்றி, ஜோகிக்கு வணக்கமும் செய்துவிட்டுத் தரையில் உட்கார்ந்தான், ஜோடாவுக்கு அருகில்.
அப்படி உட்கார்ந்தபோது அந்த ராட்சஸன் தொடையொன்று ஜோடாவின் தொடைமீது அழுந்தி, ஏதோ கனமான பாறை ஒன்று தன் தொடையை நசுக்குவது போன்ற இம்சையைக் கொடுக்கவே மார்வார் ராஜபுத்திரன் முகத்தை லேசாகச் களித்தான்.
அதை கடைக்கண்ணால் கவனித்துவிட்ட ராட்சஸன் நகைத்தான்
“இவன் உள்ளத்தைப் போலத்தான் இருக்கிறது உடலும். உறுதியற்றது. சிறு கஷ்டத்தையும் தாங்க மறுக்கிறது” என்றான் ராட்சஸன் ஜோகியை நோக்கி.
அதுவரையில் அந்த ராட்சஸனின் அலட்சியத்தையும் இகழ்ச்சிச் சொற்களையும் தாங்கிக்கொண்டு இருந்த ராவ் ஜோடா, “இது வனப்பிரஸ்த ஜோகியின் சந்நிதானம். பூசல்களுக்கு இது இடம் இல்லை” என்றான்.
“வேறு இடம் இருக்கிறது வெளியில்” என்று சுட்டிக் காட்டினான், அந்த ராட்சஸன்.
அதுவரை எதும் பேசாமல் மவுனமாயிருந்த ஜோகி, குகையின் பாறையில் நின்ற பெண்ணை நோக்கி, “குழந்தாய்! இதுவரை இந்த மலையில் அமைதி நிலவியிருந்தது. பறவைகளின் சரணாலயமாயிருந்தது” என்றார். சிறிது பெருமூச்சும் விட்டார்.
சுகதுக்கங்களை சமமாகப் பாவிப்பவரான வனப்பிரஸ்த ஜோகி துன்பப் பெருமூச்சு விட்டதும் அந்தப் பெண் மட்டுமின்றி குகையில் இருந்த அனைவரும் பேசும் சக்தியை இழந்தனர். சில விநாடிக்குப் பிறகு ராவ்ஜோடா மட்டும் கேட்டான், “ஜோகி! இப்பொழுது என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?” என்று.
ஜோகி மிக மெதுவான குரலில், “இனி இது பறவைகளின் சரணாலயம் அல்ல. இனிமேல் அவற்றின் கிலகிலா சத்தத்தையும், இனிய கூவல்களையும் நாம் கேட்க முடியாது” என்றார்.
அதுவரை அடங்கிக் கிடந்த ராட்சஸன் “ஏன் ஜோகி? ஏன்?” என்று வினவினான், பணிவிலும் கடுமையுடன் ஒலித்த குரலில்.
“இனி இது ஜோடா கிர்” (போர் மலை) என்றார் ஜோகி. “மனிதன் காலடி எடுத்து வைக்கும் எந்த இடமும் பாழாகிறது. சண்டைக்கு இடமாகிறது” என்றும் கூறினார்.
மார்வார் இளவரசன் மனம் நொந்தான். “ஜோகி! நான் வந்ததைச் சொல்கிறீர்களா? என் பெயர் ஜோடா! என்பதற்காக, அந்தப் பெயரைக் கொண்டு இந்த மலைக்கும் அவப் பெயரை அளிக்கிறீர்களா?” என்று கேட்டான், துன்பம் துளிர்ந்த குரலில்.
எலும்புக்கூடாகக் கூனிக் குறுகியிருந்த ஜோகி சற்று நிமிரிந்து பின்னால் இருந்த பாறையில் சாய்ந்தார். “இல்லை ஜோடா, இல்லை. நீ வருமுன்பே இதெல்லாம் தீர்மானமாய் இருக்கிறது. நான் உன்னையும் நோகவில்லை, ஹர்பா சங்க்லாவையும் நோகவில்லை. நம்மையும் மீறிய சக்தி நம்மை ஆட்டுகிறது” என்றார், ஏதோ கனவில் பேசுவதைப் போல், அவர் குரல் தீனமாயிருந்தாலும், அதன் பலவீனத்திலும் ஓர் ஒளி ஊடுருவிச் சென்றதை மற்றவர்கள் உணர்ந்தார்கள்.
அந்த உணர்ச்சியுடன் ராவ்ஜோடாவின் உடலில் வேறொரு பயங்கர உணர்ச்சியும் ஊடுருவிச் சென்றது. ஹர்பா சங்க்லா என்ற பெயரைக் கேட்டதும் மயிர்க்கூச்செறிந்தது மார்வார் ராஜ்புத்திரனுக்கு. ராஜஸ்தானத்திலேயே இணையற்ற வீரன் என்று பெயர் பெற்றவரும், நைஷ்டிக பிரம்மச்சாரியும், நல்ல காரியம் எதற்கும் யாரும் வேண்டாமலே கைகொடுப் பவருமான ஹர்பாசங்க்லாதான் தன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ராட்சஸன் என்பதை உணர்ந்ததால் சற்றே சங்கடத்தாலும் அச்சத்தாலும் அசைந்த ராவ்ஜோடாவை நோக்கிய மலை அரசியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது.
அவள் சொன்னாள், “ஆம். மார்வார் ராஜபுத்திரனே! இவர்தான் ஹர்பா சங்க்லா. இவரைத்தான் உனக்குத் துணையாக நியமித்திருக்கிறார் ஜோகி” என்று.
அவளைத் திரும்பிப் பார்த்தார் பிரம்மச்சாரி. “இவனுக்கு நான் துணையா?” என்று வியப்பு குரலில் மண்ட வினவினார்.
“சற்று முன்பு ஜோகியின் வாயிலிருந்து வந்த வார்த்தை அதுதான்” என்றாள் மலை அரசி வரண்ட குரலில்.
“இந்த பாவிக்கா நான் உதவ வேண்டும்?” என்று கேட்டார் பிரம்மச்சாரி.
“பாவம் இவன் செய்யவில்லை. தந்தை செய்தது. அந்த வினை இவன் தலையில் இருக்கிறது” என்றார் ஜோகி. அத்துடன் சொன்னார். “பாவம் யார்தான் செய்யவில்லை? நீ கூட இப்பொழுது மார்வார் இளவரசனை சண்டைக்கு இழுத்தாய்- பாகுர்ச்சிரா (பட்சிகள் சரணாலயம்) ஜோடகிர் (போர் மலை) ஆகிவிட்டது. அதற்கு நீயும் ஒரு காரணம் ஹர்பா சங்க்லா! சரண் அடைந்தவர்களை நீ கைவிட்டதில்லை. இவனையும் கைவிடதே. இவனால் மார்வார் வம்சம் தழைக்கப் போகிறது” என்றார் ஜோகி.
ஹர்பா சங்க்லா ஜோகிக்குத் தலை வணங்கினான். “அப்படியானால் இப்பொழுது இவன் தனது தலை நகரத்துக்குப் போகட்டும். சுத்த விரதத்தன்று என் இருப்பிடம் வரட்டும்” என்றான், பிரம்மச்சாரியான ஹர்பா சங்க்லா...
“தலைநகரத்துக்கா?” என்று கேட்ட அந்தப் பெண் நகைத்தாள். ஜோகியும் புன்னகை பூத்தார்.
இருவர் நகைப்பிலும் ஏதோ மர்மம் இருந்ததைப் புரிந்து கொண்டான் ராவ்ஜோடா. அந்த விபரீத மர்மத்தை மலை அரசியே விளக்கனாள்.
“நீ தலைநகரத்துக்குள் புகுந்த நான்காவது நாள் அதை விட்டு வெளியேற நேரிடும்” என்றாள் மலை அரசி.