மேவாரின் தலைநகரான சித்தூரில் இருந்து தப்பி ஓடிவந்து லூனி ஆற்றின் உப்பு நீரில் தந்தையின் மரணத்துக்கு நீராடிய அதே துறையில், கிட்டத்தட்ட அதே இடத்தில் தங்கள் வம்ச துர்ப்பாக்கியத்துக்கும் அவப் பெயருக்கும் காரணமான ஜகத்சிம்மன் தற்கொலை செய்துகொண்டு நீரின் நிர்மலத்தைத் தனது துரோக இரத்தத்தால் அசுத்தப்படுத்தியதைக் கண்டு, சில விநாடிகள் அந்த இரத்தத்தைப் பார்த்த வண்ணமே நின்றான், மண்டோர் மன்னன். பிறகு, பெருமூச்சு விட்டு “ஜகத்சிம்மா! மரணாந்தானி வைராணி (எந்த விரோதமும் மனிதனின் சாவு வரையில்தான்) என்ற மகாகவியின் உபதேசத்துக்குத் தலைவணங்குகிறேன். உன்னை மன்னித்து விட்டேன்” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டு பிருமச்சாரியும் மற்றவர்களும் இருந்த இடத்துக்கு வந்தான்.
அவன் வருவதற்குள் பிருமச்சாரி, மஞ்சாஜியின் சடலத்தின் காயத்துக்குக் கட்டுப்போட்டு கைகால் விரல்களைப் பிணைத்து சடலத்தைக் காந்தோஜியின் புரவியின் முதுகில் குறுக்கே போட்டிருந்தார். ராவ்ஜோடாவுக்கு சந்தசிம்மன் புதல்வர்கள் இருந்த நிலை அவன் உயிரையே கொண்டுபோய் விடும்படியான வேதனையை அளிக்கவே, அவன் காந்தோஜியின் கண்களை ஏறெடுத்து நோக்கினான், தனது துயரம் தோய்ந்த கண்களால். பிறகு தனது வாளை எடுத்து காந்தோஜியின் கையில் கொடுத்தான்.
காந்தோஜியின் கண்களில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. வீரனான அவன் கண்கள் நீரைச் சிந்தவில்லை, தம்பியின் சடலம் தனது புரவிக்குக் குறுக்கே தன் கண்களுக்கு எதிரே கிடந்த சமயத்தில்கூட.
ஜோடா வாளைக் கொடுத்ததும், வாங்கவில்லை காந்தோஜி.
“இது எதற்கு?” என்று வறண்ட குரலில் கேட்டான்.
“மேவார் மன்னனிடம் கொடுப்பதற்கு. அல்லது அவர் சார்பில் நீங்கள் வாங்கி என்னிடம் திரும்ப அளிப்பதற்கு” என்றான் ஜோடா சிறிதும் சலனம் அற்ற குரலில்.
“இதன் பொருள் தெரியுமா?” என்று காந்தோஜி வினவினான்.
“எந்த ராஜபுத்திரனுக்கும் தெரியும்” என்றான் ஜோடா.
“இந்த வாளை நான் ஏற்றுக்கொண்டால் மார்வார், மேவாரின் சிற்றரசு ஆகும்” என்று சுட்டிக் காட்டினான், காந்தோஜி.
“என்றும் அப்படித்தான் இருந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். அதன் சுக துக்கங்களில் மார்வார் பங்கெடுத்துக் கொள்ளும். போர்க் காலங்களில் மார்வார், மேவாரின் பிரதம அடிமையாக இருக்கும்” என்றான் ஜோடா.
“மார்வார் விரிந்து பேரரசானால்?” காந்தோஜியின் கேள்வி திட்டமாயிருந்தது.
“பணிமகனுக்கு என்ன செல்வம் வந்தாலும் அவன் எஜமானன் ஆவதில்லை” ஜோடாவின் பதிலும் திட்டமாயிருந்தது.
இதைக் கேட்ட காந்தோஜி ஜோடாவின் வாளை தனது கையில் வாங்கி திருப்பிக் கொடுத்தான் மார்வார் மன்னனிடம். பிறகு புரவியைத் திருப்பினான், லூனி ஆற்றைக் கடந்து ஆரவல்லி மலைத் தொடருக்குச் செல்ல.
“காந்தோஜி” என்ற ஜோடாவின் குரல் காந்தோஜியை சிறிது தேக்கவே, அவன் புரவியில் இருந்த வண்ணம் திரும்பி நோக்கினான். அவன் வாயைத் திறந்து கேள்வி எதையும் கேட்காவிட்டாலும் அவன் கண்கள் கேட்டன “என்ன?” என்று.
“மஞ்சாஜியின் தகனத்துக்குப் பிறகு அஸ்திகளை எனக்கு அனுப்பிவிடு” என்றான் ஜோடா.
“எதற்கு?”
“அதன் மீது வெற்றித்தூணை இந்த இடத்திலேயே கட்டுகிறேன்.”
“சரி” என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்துவிட்டு காந்தோஜி புரவியை நடக்கவிட்டான். அவன் வீரர்கள் அவனைத் தொடர்ந்தார்கள். அவர்கள் போவதை சில விநாடிகள் பார்த்துக்கொண்டே நின்ற ஜோடா ஒருமுறை பெருமூச்சு விட்டு தனது புரவியின்மீது ஏறினான். அதற்கு முன்பே பிருமச்சாரி தமது புரவியில் ஏறிச் சென்றுவிட்டார். அதனால் தனித்து விடப்பட்ட ஜோடாவும் மலை அரசியும் அக்கம் பக்கத்தில் புரவியை விட்டுக்கொண்டு மௌனமாகவும் மெதுவாகவும் சென்றார்கள்.
முழுமதியின் கதிர்வீச்சில் பாலைவன மணல் அசாத்திய மெருகு பெற்று இருந்தது. எங்கும் வெள்ளிமயம். தூரத்தே பாகுர்ச்சிராவின் வசீகர எழுச்சி, பக்கத்தில் அந்த மலையைப் போலவே அழகுடன் வந்த மலை அரசியின் இணையிலா லாவண்யம். அத்தனை அழகும் சூழ்நிலையும் ஜோடாவின் மனத்துயரத்தை ஆற்ற முடியவில்லை. அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டே புரவியை நடத்திச் சென்றான்.
மலை அரசி தனது புரவியை அவன் புரவிக்கு வெகு அருகில் நடத்தி தனது வலது காலை அவனது இடது காலுடன் இடிக்க விட்டாள். அப்படியும் அவன் அசையாததையும், வெறித்து நேரே பார்த்துக்கொண்டு செல்வதையும் கண்ட மலை அரசி இடது கையில் தனது புரவியின் கடிவாளத்தை ஏந்திக்கொண்டு, வலக்கையை அவன் முழந்தாளின் மீது வைத்தாள். புரவியின் அசைப்பில் அவள் கை அவன் முழந்தாளுடன் அசைந்தது.
சாதாரண சமயமாக இருந்தால் ஜோடாவின் உணர்ச்சிகளை அந்த நிலை பெரிதும் புரட்டியிருக்கும். ஆனால், அந்த சமயத்தில் அவன் இதயம் முழுவதையும் வீரனான மஞ்சாஜியும் துரோகியான ஜகத்சிம்மனுமே ஆட்கொண்டிருந்த படியால் அவன் அவளைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இதனால் வெகுண்ட மலை அரசி தனது புரவியை எதிரே இருந்த மலைப் பகுதியை நோக்கி வெகு வேகமாக ஓடவிட்டாள்.
பாபுஜியால் பயிற்சி அளிக்கப்பட்டதும் அராபியக் குதிரைகளில் உயர்ந்த ஜாதியுள்ளதுமான அந்தப் புரவி மணலில் அலட்சியமாகப் பாய்ந்து சென்றது. வெண்மதியின் வெள்ளிக் கிரணங்களுக்கு இடையில் அம்பு போல் பறந்த அந்தப் புரவியின் குளம்பு ஒலியால் கனவில் இருந்து மீண்ட ஜோடா, வேகமாகச் செல்லும் மலை அரசியைக் கண்டான்.
புரவியின் வேகத்தால் காற்றில் விரிந்த அவள் தலைக்குழல்களின் பகுதிகள் சில, வெள்ளிக் கிரணங்களில் மிகவும் பளபளத்தன. அவள் உட்கார்ந்து இருந்த தோரணையில் பெரிய அலட்சியம் இருந்தது. சிற்றிடை அசைந்ததால் புரவியின் முதுகில் இழைந்த அவள் பருத்த அழகிய பின்புறங்கள் ஜோடாவின் துக்கத்தையும் துடைத்தன. புரவியின் வயிற்றை இறுக்கிப் பிடித்த கால்களின் மேல் பரிமாணம் அவன் இதயத்தைப் பல கயிறுகளால் பிணைத்து இழுத்தன. அடுத்த விநாடி ஜோடாவும் தனது புரவியைப் பறக்கவிட்டான்.
அவன் துரத்தினான். அவள் புரவியை நிறுத்தவில்லை. ஓடினாள். இந்தத் துரத்தலும் ஓட்டமும் ஆதிகாலம் முதல் இருந்துவரும் கதைதான். இருப்பினும் காலம் அதன் கதியை மாற்றவில்லை. வேகத்தைக் குறைக்கவில்லை. மலை அரசியைத் துரத்திய ஜோடா மெள்ள அவளைப் பிடித்தான், நீண்ட நேரத்துக்குப் பின்பு, பிடித்ததும் வெறி பிடித்தவன் போல் அவள் புரவிமீது தாவி அவளை இழுத்துக்கொண்டு மணலில் விழுந்தான். தெய்வகதியா, மனித விந்தையா, வேண்டும் என்றே அப்படி விழுந்த நிலையா? திட்டமாகச் சொல்ல முடியாது என்றாலும் மலை அரசியின்மீது ஜோடா விழுந்து கிடந்தான்.
அவள் செயலற்று மணலில் கிடந்தாள். புரவியை மிக வேகமாகச் செலுத்தியதால் அவளுக்குப் பெருமூச்சு வாங்கவே அவள் மார்பு, மேலே கிடந்த ஜோடாவின் கண்களுக்கு எதிரே எழுந்து எழுந்து தாழ்ந்தது. ஜோடா அவள் மீது கிடந்த நிலையில் அவள் ஒரு மார்பு மீது முகத்தை வைத்தான். இன்னொன்றில் இதயவேகத்தைக் கவனித்தான். அவள் அழகுக்கு அபயமளித்த கையுடன் ஜோடா கேட்டான்: “எதற்காக இப்படி இறைக்க இறைக்க ஓட வேண்டும்?”
அவள் பதில் சொல்லவில்லை. அவள் அணிந்து இருந்த புலித்தோல் ஆடையை மேற்பக்கம் சிறிது விலக்கி “சற்று நிதானப்படுத்திக் கொள்” என்றான் ஜோடா.
அவள் நிதானம் எங்கோ பறந்துவிட்டது. மார்பை சற்றே நிமிர்த்தி அசைத்தாள் மலை அரசி. அவன் கன்னமொன்றில் ஏதோ முரட்டு முகடு ஒன்று தடவியது. அடுத்து அவள் தன்னை விடுவித்துக்கொண்டு சற்று எட்ட இருந்த மலையின் அடிவாரத்தை நோக்கிச் சென்றாள். ஜோடா நிதானமாகப் பின்தொடர்ந்தான். மலை அடிவாரப் புதர் ஒன்றன் மறைவில் அவள் படுத்துக் கிடந்தாள். அவன் விலக்கிய மார்பு ஆடையை அவள் மூடவில்லை. இடுப்பில் இருந்த புலித்தோலும் சிறிது சரிந்து கிடந்தது. ஜோடா வெறியுடன் அவளை அணுகினான். மோகத்தின் தாகம் அவனுக்கு வேகத்தை ஊட்டியது. துணிவும் தடைகளைத் தகர்த்தது.