பாபுஜியின் நூறு புரவிகள் ஏதோ பெரும் புயலைப் போல் மலைச்சரிவில் வந்ததாலும், அவை கண்ணிமைக்கும் நேரத்தில் தனது புரவியில் இருந்து தன்னை வீழ்த்திவிட்டதாலும் மலைப்பாறையில் புரண்ட ஜோடா வெகு துரிதமாகப் பாறையில் உருண்டான். தன்னைத் துவைக்க இருந்த நான்கு குளம்புகளுக்குமேல் கைக்கு அகப்பட்ட இரு கால்களைப் பிடித்து வளைத்துத் திருகித் தள்ளிவிட்டு எழுந்து கும்பலாகவும் ஏதோ ராணுவத்திற்காகப் பழக்கப்பட்டவை போல் வரிசை தவறாமலும் வந்த புரவித் தொடரில் இருந்த ஒரு புரவியின்மேல் தாவி உட்கார்ந்தும் விட்டான். அதன் வயிற்றைத் தனது இரு கால்களாலும் பக்கவாட்டில் உதைத்துக் கழுத்தை வளைத்துத் திருப்பி தன்னுடைய புரவிக்கு அருகில் வந்து அதன்மீது தாவி அதன் கடிவாளத்தைப் பிடித்து அதை சற்று நகர்த்தியும் நிறுத்திக் கொண்டான். அந்தச் சமயத்தில் பாபுஜி “ஹோ” என்று ஏதோ சத்தம் கொடுக்கவே அந்த ராட்சதப் புரவிகள் மந்திரத்தால் இயக்கப்பட்டவைபோல் சட்டென்று நின்றன. பாபுஜியைச் சுற்றிக்கொண்டு, அவர் கால்கள் மீது முகங்களால் உராய்ந்தன.
பாபுஜி அப்படி வந்த சில புரவிகளைத் தடவிக் கொடுத்தார் தமது கைகளால். அந்தப் புரவிகள் சிலவற்றை ஈட்டியால் முதுகில் தட்டினார். கடைசியாக ஈட்டியை உயரத் தூக்கி “சலோ” என்று கூவினார். வந்த புரவிகள் வந்த முறையில் வரிசையாக, ஆனால் அடக்கமாக மலைச்சரிவில் ஏறிச் சென்றன. ஓரிரண்டு மட்டும் தலைகளைத் திருப்பி பாபுஜி வருகிறாரா இல்லையா என்று தங்கள் பெரிய கண்களை விழித்துக் கேள்வி கேட்டன.
பாபுஜி அந்த குதிரைகளையே வெறிபிடித்தவர் போல் பார்த்துக் கொண்டிருந்தார். நிலத்தில் உருண்டு மாள இருந்து மீண்டும் எழுந்த ஜோடாவைப்பற்றி அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. பிருமச்சாரியைக்கூட கவனித்தார் இல்லை. கடைசியாகக் கவனித்தபோது சொன்னார். “பிருமச்சாரி! இனியும் நாம் போகாதிருந்தால் குழந்தைகள் பொறுக்கமாட்டார்கள். வாருங்கள் போவோம்” என்று கூறிவிட்டு, தமது கரிய புரவியை மலைச்சரிவில் ஏறவிட்டார். பிருமச்சாரி அவருக்கு ஏதும் பதில் சொல்லவில்லை. பாபுஜியின் போக்கிலும் அவருக்கு ஏதோ கசப்பு இருந்திருக்க வேண்டும். ஆகையால் மௌனமாகவே தமது புரவியை நடக்கவிட்டார். புரவியைத் தூண்டுமுன்பு ஜோடாவை ஒருமுறை கவனித்து உடன் வரும்படி தலையால் சைகை செய்தார். ஜோடா தனது புரவியைத் தட்டிவிட்டான்.
இரண்டரை நாழிகை நேரம் பயணம் செய்த பின்பு ஒரு சமவெளிக்கு வந்தார்கள். நான்கு மலைச்சரிவுகளுக்கு இடையில் இருந்த அந்த சமவெளியின் பசும்புல் தரை மிக ரமணியமாயிருந்தது. பல குடிசைகளும், மண் கட்டடங்களும்கூட அந்த வட்டத் தட்டில் தெரிந்தன. அவற்றின் கூரைமீது சுற்றிலும் மரங்கள் நானாவித வண்ண மலர்களை உதிர்த்திருந்தன. அந்த வீடுகளைத் தள்ளி சிறிது தூரத்தில் அவற்றுக்கு எல்லாம் நடுநாயகமாய் தனிவீடு ஒன்று பெரிதாகத் தெரிந்தது. அந்த வீட்டை அணுகியதும் அதன் முன்பு இறங்கிய பாபுஜி, பின்னால் வந்த இருவருக்கும் முகமன் கூற முற்பட்டு “இதுதான் இந்த ஏழையின் குடிசை, உள்ளே வர வேண்டும்” என்றார்.
பிருமச்சாரி இறங்கவில்லை. அந்த வீட்டைச் சுற்றிலும் நடந்தும், அடக்கமாக மேய்ந்தும் கொண்டிருந்த அந்த நூறு அசுரப் புரவிகள் மீது கண்களை ஓட்டினார். இந்தப் புரவிகளை இஷ்டப்படி நடத்த பாபுஜியிடம் என்ன மந்திரம் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். ஏதும் விளங்காததால் அதைப்பற்றிய சிந்தனையை விட்டு முடிவில் தமது புரவியில் இருந்து இறங்கினார். ஜோடாவும் இறங்கினான் தனது புரவியில் இருந்து. அதன் கடிவாளத்தை அதன் முதுகிலேயே போட்டுவிட்டு, பாபுஜியின் வீட்டு முகப்பில் இருந்த பெரிய திண்ணையில் உட்கார்ந்துகொண்டான்.
பிருமச்சாரி உட்காரவில்லை. பாபுஜியை நோக்கி “அடுத்து என்ன வித்தை காட்டப் போகிறீர்கள்?” என்று சற்று சூடாகக் கேட்டார்.
தமது கரிய புரவியில் இருந்து குதித்து உடனே உள்ளே செல்லாமல் கீழே உட்கார்ந்து அதன் கால்களை உருவிவிட்டுக் கொண்டிருந்த பாபுஜி, சற்றே தலையை நிமிர்த்தி “இதுவரை என்ன வித்தை காட்டிவிட்டேன்?” என்று கேட்டார்.
“இந்தப் புரவிகளை ஏதோ வித்தைக்குப் பழக்கியிருப்பதுபோல் பழக்கியிருப்பதைக் காட்டினீர். வேறு ஏதாவது உண்டா?” என்று வினவினார் பிருமச்சாரி. அவர் குரலில் வெறுப்பு இருந்தது.
பாபுஜி தமது புரவியின் கால்களை உருவிக்கொண்டே சொன்னார், “இங்கு யாரும் வித்தை காட்டவில்லை. நல்ல சாதிப் புரவிகள் மனிதனைப் புரிந்துகொள்கின்றன” என்று. “இவற்றைக் குழந்தைகளாக வளர்க்கிறேன். எனக்கு வேறு குழந்தைகள் இல்லை. மனிதக் குழந்தைகளாக இருந்தால் ஏற்படும் தொல்லை இவற்றால் இல்லை. அன்புக்குக் கட்டுப்படும். மண்ணாசை, பொன்னாசை கிடையாது. சொத்தில் பாகம் கேட்கமாட்டா. அவை இருப்பது என்னைக் காக்க, எனக்குச் சேவை செய்ய. எனக்கு மட்டுமல்ல, எனது நண்பர்களுக்கும் உதவும் நான் சொன்னால்” என்றும் தொடர்ந்து சொன்னார் பாபுஜி.
இப்படிப் பேசிக்கொண்டே கரிய புரவியின் கால்களை உருவிவிட்டு, முதுகையும் உருவி அதைத் தட்டி, “கிருஷ்ணா, போ” என்று சொல்ல, அந்தப் புரவி தாவிச் சென்று மற்ற புரவிகளுடன் கலந்துகொண்டது. மெள்ள மெள்ள அந்தக் காட்டில் பொழுதும் புலரத் தொடங்கியது. பிருமச்சாரி பாபுஜியைப் பார்த்து “நானும் ஜோடாவும் காலைக் கடனை முடித்து வருகிறோம்” என்று கூறிவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஜோடாவை அழைத்துக்கொண்டு சென்றார்.
பாபுஜியின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருந்த ஒரு மலை அருவிக்கு வந்ததும் பிருமச்சாரி, ராவ்ஜோடாவை நோக்கி “பாபுஜியைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று வினவினார்.
“சாதி குதிரைகளைப் பழக்கி வைத்திருக்கிறார்” என்றான் ஜோடா.
“இந்தப் புரவிகளை ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று மாதிரி விந்தையைப் பார்த்ததில்லை. இவர் புரவிகளை நடத்தி வருகிறார் என்றால் ராஜபுதனத்தில் பலருக்குக் குலை நடுக்கம். போர்க்களத்தில் இவை மனிதர்களை விடத் திறமையாக இயங்கும் என்று கேள்வி” என்றார் பிருமச்சாரி.
“அப்படி இயங்குமானால் பாபுஜியின் புரவிப்படையை அழிப்பது பிரும்மப் பிரயத்தனம்” என்று ஒப்புக்கொண்ட ஜோடா, “இன்று ஏதோ எனக்குப் பரீட்சை வைக்கப் போவதாகச் சொன்னாரே, அது என்ன?” என்று கேட்டான்.
“நாம் நீராடிச் சென்றதும் அது தெரியும்” என்ற பிருமச்சாரி, தமக்குப் பின்னால் வந்து நின்ற தமது புரவியைக் குளிப்பாட்டிவிட்டு நீராடினார். அருவியின் கீழ்ப்புறத்தில் சற்று தள்ளியிருந்த இடத்தில் தனது புரவியையும் குளிப்பாட்டிவிட்டுத் தானும் நீராடினான் ஜோடா.
இருவரும் திரும்பி வந்தபோது பாபுஜி வீட்டின் வெளியில் இருந்த சமதரையில் வேலும் வாளும் தாங்கிய நூறு வீரர்கள் ஒவ்வொரு புரவிக்கு அருகிலும் நின்று இருந்தார்கள். அந்த முரட்டுப் புரவிகள் எல்லாமே சேணமிட்டு நின்றன. வீட்டின் முகப்பில் நின்ற பாபுஜி “மேவார் சமஸ்தான வீரர்களே! இதோ போரில் இணையற்ற பிருமச்சாரி ஹர்பாசங்கலா. இதோ ராவ்ஜோடா, மார்வார் வம்சத் தலைவன், மண்டோர் அரசன், இவர்களுக்கு நமது உதவியை அளிக்கப் போகிறோம். அதற்கு முன்பு மார்வார் மன்னன் நமது கிருஷ்ணன் மீது ஏறி அதைத் தமது பக்கம் சேர்த்துக்கொள்வார்” என்று கூறினார்.
வீரர்கள் கரகோஷம் செய்தார்கள் ஒருமுறை, ஏதோ சம்பிரதாயத்தை அனுஷ்டிப்பவர்கள் போல. பாபுஜி தமது பெரிய ஈட்டியுடன் வீட்டின் முகப்பில் அசையாமல் நின்றிருந்தார். அவருக்கு நேர் எதிரில் பத்தடி தள்ளி, தலை குனிந்த வண்ணம் நின்றிருந்தது ‘கிருஷ்ணன்’. ராவ் ஜோடா பாபுஜியின் அறிவிப்பைக் கேட்டதும் பிருமச்சாரியை வணங்கிவிட்டு அந்தப் புரவியிடம் சென்றான். அசுவ லட்சணங்களை முற்றும் அறிந்திருந்த ஜோடா அந்தப் புரவியை வலம் வந்தான் ஒருமுறை. அதன் உடல் அமைப்பைக் கவனித்தான். பிறகு திரும்பி தனது கூரிய கண்களால் பாபுஜியை நோக்கினான். “பாபுஜி! நான் இந்தப் புரவி மீது ஏறுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை” என்றான்.
“என்ன?” என்று கேட்டார் பாபுஜி.
“இதை எனக்குக் கொடுத்துவிட வேண்டும்” என்றான் ஜோடா.
“அதைவிட என் ராஜ்ஜியத்தைக் கேள்” என்றார் பாபுஜி சினத்துடன்.
“எனக்கு வேண்டியது இந்தப் புரவி” என்று பிடிவாதமாகச் சொன்னான் ஜோடா.
“நீ வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போகலாம்” என்றார் பாபுஜி உஷ்ணத்துடன்.
“நான் இந்த இடத்தைவிட்டு நகரும்போது இந்தப் புரவியின் மீதுதான் நகருவேன்” என்றான் ஜோடா.
இதைக் கேட்ட பாபுஜியின் கண்கள் தீயைக் கக்கின. “பிருமச்சாரி! உமது சீடனுக்கு ஏதும் மூளைக்கோளாறு இல்லையே?” என்று வினவினார்.
“இருப்பதாகத்தான் தெரிகிறது” என்றார் பிருமச்சாரி.
“பிருமச்சாரி!” என்று அழைத்தான், கிருஷ்ணன் பக்கத்தில் நின்ற ஜோடா.
“ஏன்?”
“எனக்கு மூளைக்கோளாறு இல்லை.”
“நல்ல புத்தியுடன் இருந்தால் அந்தப் புரவியின்மீது ஏறத் துணியமாட்டாய்.”
இதைக் கேட்டதும் ஜோடா நகைத்தான். “பிருமச்சாரி! நான் சித்தூரில் இருந்து ஓடியிருக்கலாம். மண்போரில் இருந்து ஓடியிருக்கலாம். ஆனால், எந்தப் புரவியிடம் இருந்தும் ஓடியது இல்லை” என்று கூறிக்கொண்டே அந்தக் கரிய புரவியின் முகத்துக்கு எதிரே நின்றுகொண்டு அதன் கண்களை உற்று நோக்கினான். பிறகு, அதன் வாயை இறுக்கிப் பிடித்தான், ஒரு கையால். அந்த ராட்சதப் புரவி தலையை ஒருமுறை ஆட்டியது. பிறகு அவன் கையை உதறியது. வாயைத் திறந்து தனது பெரிய பற்களால் அவனைக் கடிக்க வந்தது. ஜோடா அதன் வாயை மீண்டும் பிடித்தான், இறுக்க. புரவி திணறியது, திமிறியது. ஆனால், ஜோடாவின் இரும்புப் பிடியை அகற்ற முடியவில்லை. தானாகவே அதன் வாயை விட்ட ஜோடா, பக்கவாட்டில் வந்து திடீரென அதன் முதுகின் மீது தாவி கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டான்.
அடுத்த விநாடி கரிய புரவி ஆகாசத்தில் எழுந்தது, உடலை உதறியது, கடுவேகத்துடன் கனைத்தது பயங்கரமாக. திடீரெனக் கீழே விழவும் முயன்றது ஒரு புறமாக. அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ஜோடா, கடிவாளத்தை இறுகப் பிடித்துத் தனது கால்களை அதன் வயிற்றில் இறுக்கினான். பலமாக இறுக்கப்பட்ட கடிவாளத்தால் புரவியின் தலை நிமிர்ந்தது.
அடுத்து தொடர்ந்தது அந்தப் புரவியின் பேயாட்டம். திடீரெனக் குதித்தது, சுழன்றது. முன்னும் பின்னும் நகர்ந்தது, பாய்ந்தது பக்கவாட்டில். இப்படிப் பலபடியாக ஜோடாவைத் தள்ள முயன்றும் முடியாமல் தவித்தது.
ஜோடா அதன்மீது பதுமைபோல் உட்கார்ந்திருந்தான். அவன் கைகள் கடிவாளத்தை ஏதோ யந்திரங்கள் போல் இயக்கின. கால்கள் வயிற்றில் இருந்து விலாப்பக்கம் உதைத்தன. ‘கிருஷ்ணன்’ அந்த உதையினால் எதிரேயிருந்த மரங்கள் இடையே பாய்ந்து சென்றது.
அரை நாழிகை, புரவி மனிதன் இருவரையும் காணோம்.
பாபுஜி வீட்டின் சதுக்கத்தின் எதிரில் பயங்கர அமைதி நிலவியிருந்தது. முதன் முதலாக பாபுஜியின் முகத்தில் பயத்தின் சாயை விரிந்தது.
“அந்த வாலிபன் என்ன ஆகியிருப்பானோ?” என்று கேட்டார் பிருமச்சாரியை நோக்கி.
பிருமச்சாரி முகத்தில் கவலை லவலேசமில்லை. “சீக்கிரம் திரும்புவான். கவலை வேண்டாம்” என்று கூறினார் சங்க்லா.
அவர் இதைச் சொல்வதற்கும் ராவ்ஜோடா அந்தக் கரிய புரவியின்மீது திரும்புவதற்கும் சமயம் சரியாயிருந்தது. புரவி வெகு அடக்கமாக வந்தது. ராவ்ஜோடா அரச தோரணையில் அதன்மீது அமர்ந்திருந்தான். பாபுஜிக்கும் பிரும்மச்சாரிக்கும் எதிரே வந்து இறங்கினான்.
பாபுஜி ஆறுதல் பெருமூச்சு விட்டார். “ராஜபுதனத்தின் இணையற்ற வீரனே! பரீட்சையில் தேறிவிட்டாய். இனி பாபுஜி உன் நண்பன். என்ன வேண்டும். கேள்” என்றார்.
ஜோடா ஏதும் கேட்கவில்லை. “அடுத்த பௌர்ணமி உங்களை இருநூறு வீரர்களுடன் மண்டோர் கோட்டை வாசலின் முன்பு எதிர்பார்க்கிறேன்” என்றார் பிருமச்சாரி.
“அப்படியே” என்று தலைவணங்கினார் பாபுஜி.