மலை அரசியை தரையில் கிடத்திவிட்டு குகையின் வாயிலுக்கு வந்த ராவ்ஜோடாவின் செவிகளில் ஜகத்சிம்மனும் மற்ற வீரர்களும் ஏறிவந்த புரவியின் குளம்படி ஒலிகள் கூடக் கேட்கவில்லை. குகைக்கு உள்ளே மலை அரசியின் அருகாமையிலும் தனது பிற்காலத்தைப்பற்றி அவள் கூறிய விவரங்களாலும் மனம் நெகிழ்ந்திருந்த காரணத்தால், அவன் பிரமை பிடித்து நின்றுகொண்டிருந்தான்.
சிறிதுநேரம் கழித்து ஜகத்சிம்மன் அவன் முன்பு புரவியில் இருந்து குதித்து வணங்கி நின்றபோது சுரணை அடைந்த ஜோடா, தனது படைத்தலைவனை வெறுப்புடன் நோக்கினான். “வெற்றிச் செய்தி கொண்டுவந்திருக்கிறாயா?” என்று வெறுப்புடன் வினவவும் செய்தான் மார்வார் மன்னன்.
ஜகத்சிம்மன் தனது மன்னன் கேள்வியால் அசரவில்லை “போரில் தோல்வியும் வெற்றியும் சகஜம்” என்று கூறினான்.
இதைக் கேட்ட ராவ் ஜோடா பெரிதாக நகைத்தான். “முந்தியது நமக்குப் பழக்கம் இல்லை, பிந்தியது சகஜம்” என்று கூறினான், ஜகத்சிம்மனை நோக்கி நகைப்பின் ஊடே.
ஜகத்சிம்மன் சங்கடத்தால் அசைந்தான். “சந்தசிம்மன் படைபலம் அதிகம். அதன் பயிற்சியும் அதிகம்” என்று விளக்கினான்.
அந்த விளக்கம் ராவ்ஜோடாவின் வெறுப்பை அதிகப்படுத்தியதால், “தோற்பவன் காரணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவன். அது கிடக்கட்டும் ஜகத்சிங்! இன்னொன்று சொல்ல மறந்துவிட்டாயே!” என வினவினான்.
“என்ன அது?” என்று மார்வார் படைத்தலைவன் வினவினான்.
“சந்தசிம்மன் நம்மைவிட வீரன் என்பது. இன்னொன்றும் மறந்துவிட்டாய்...”
“சொல்லுங்கள்.”
“தர்மம் அவன் பக்கத்தில் இருக்கிறது.”
“எந்த தர்மத்தைச் சொல்கிறீர்கள்?”
“போர்முறை” என்ற ராவ்ஜோடா, “சாஸ்திரப்படி, தர்மப்படி, போரை இரவில் தொடங்கவில்லை சந்தசிம்மன். அவன் உறங்குகிறான் என்று நீதான் அவனைத் தாக்கினாய், இரவில் அவன் படை விழித்திருக்காது என்ற நினைப்பால். அதற்கு உண்டான பலன் கிடைத்தது” என்று கூறினான். அத்துடன் வினவினான், “ஜகத்சிம்மா! நீ எப்படி க்ஷத்திரியனாகப் பிறந்தாய்?” என்று.
ஜகத்சிம்மன் தலைநிமிர்ந்து நின்றான். “மன்னவா! அந்தக் கேள்வியை நானும் தங்களைக் கேட்டு இருக்கலாம். முதலில் மேவார் தலைநகரைவிட்டு ஓடினீர்கள். இப்பொழுது மண்டோர் ரணகளத்தில் இருந்து ஓடினீர்கள்” என்றும் சொன்னான் துணிவுடன்.
ராவ்ஜோடா அவனை மிதமிஞ்சிய இகழ்ச்சியுடன் நோக்கினான். “ஜகத்சிம்மா! உன் துணியை நான் வியக்கிறேன். மன்னனை எதிர்ப்பவருக்கு மரண தண்டனை கொடுக்கலாம். அதோ உன் பின்னால் நிற்கும் நூற்று இருபத்தைந்து பேரும் நான் கையசைத்தால் உன்னை வெட்டிப் போடுவார்கள். ஆனால், அத்தகைய தண்டனையில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகையால் நீ பிழைத்திருக்கிறாய்; அது கிடக்கட்டும். நீ கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியும். ஆம், இருமுறை ஓடினேன். இருமுறையும் அதர்மத்தின் விளைவிலிருந்து ஓடினேன். முதலில், நம்பிய தன் மகளை வஞ்சித்து, பேரனை வஞ்சித்து, மேவார் அரியணையைக் கைப்பற்ற முயன்ற என் தந்தை செய்த அதர்மம் என்னை விரட்டியது சித்தூரிலிருந்து. மண்டோரில் இரவில் உறங்கியிருந்த படையை அழிக்க முயன்ற உன் வஞ்சகம் விளைவித்த அதர்மத்தில் இருந்து ஓடினேன், இரண்டாவது முறை. எப்பொழுதும் ஏதாவது ஓர் அதர்மம் என்னைத் துரத்துகிறது” என்று கூறினான் ஜோடா, இகழ்ச்சியும் துன்பமும் நிறைந்த குரலில்.
மன்னனின் போக்கு விசித்திரமாக இருந்தது. படைத்தலைவனுக்கு. “எதிரியைப் புகழ்கிறீர்கள்!” என்றான்.
“எதிரியை அல்ல. தர்மத்தைப் புகழ்கிறேன், வீரத்தைப் புகழ்கிறேன், ஜகத்சிம்மா! வீரம் எனக்கு இருக்கிறது. இனி தர்மத்தைச் சம்பாதிக்க வேண்டும்” என்று சொன்னான் நாடு இழந்த மன்னன்.
“அதற்கு என்ன செய்ய உத்தேசம்?” ஜகத்சிம்மன் கேட்டான் கோபத்துடன்.
“தவம் செய்யப் போகிறேன்.”
“எப்படி?”
“வனப்பிரஸ்த ஜோகியின் அடிமையாக”
“ஏற்கனவே அடிமை ஆகிவிட்டீர்களே.”
“உனக்கு எப்படித் தெரியும்?”
“பின்னால் பாருங்கள்.”
ஜகத்சிம்மனின் சொற்களைக் கேட்டதும் சட்டென்று திரும்பிய ஜோடா தனக்குப் பின்னால் மலை அரசி நிற்பதைக் கண்டான். அந்தச் சமயத்தில் ஒலித்தது. ஜகத்சிம்மன் குரல், “ஜோகியின் மகளுக்கு அடிமையானாலும் ஜோகிக்கு அடிமை ஆனாலும் ஒன்றுதானே?” என்று.
இந்தச் சொற்களால் ராவ்ஜோடா மனம் கலங்கிப் போய் விடுவான் என்று ஜகத்சிம்மன் எதிர்பார்த்திருந்ததால், அவன் ஏமாந்தே போனான். ராவ்ஜோடா படைத்தலைவனை வருத்தத்துடன் நோக்கினான். பிறகு மலை அரசியை நோக்கி, “மலை அரசி! உள்ளே என் வாள் இருக்கிறது, எடுத்து வா” என்று கட்டளையிட்டான், வருத்தம் நிரம்பிய குரலில்.
மலை அரசி அடுத்து வரும் நிகழ்ச்சியை உணர்ந்தாள். இருப்பினும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் உள்ளே சென்று ஜோடாவின் வாளை எடுத்து வந்தாள். வாளை உறையில் இருந்து உருவிக்கொண்டு உறையை மலை அரசியிடம் கொடுத்த ஜோடா, குகை வாயிலில் இருந்து ஜகத்சிம்மன் நின்றிருந்த இடத்துக்கு வர -
“ஜகத்சிம்மா, நீ என் உறவினன். அதனால் உன் சொற்களை இத்தனை நேரம் பொறுத்தேன். மன்னனாகிய என்னை இகழ்ந்தாய், பொறுத்தேன். இப்பொழுது மலை அரசியை இகழ முற்பட்டு இருக்கிறாய். மலை அரசி உன் மகாராணியாகப் போகிறவள் என்பதைத்தான் மறந்தாய். மகாராணிப் பதவி அளிக்கப்பட்டபோது அதை அவள் உதறியதையும் மறந்தாய். அதர்ம யுத்தம் நடத்திய ஒரு படைத்தலைவன், தான் படைத்த ரணகளத்தை விட்டு ஓடிவந்தவன், இஷ்டப்படி யாரையும் இகழலாம் என்ற ஆணவத்தையும் விடவில்லை. இது அத்தனைக்கும் தண்டனை உண்டு. வாளை எடுத்துக்கொள்” என்றான்.
ஜோடாவின் சொற்களில் ஆத்திரம் இல்லை, கோபம் இல்லை. உணர்ச்சிப்பெருக்கு எதுவுமே இல்லை. ஏதோ கடமையைச் செய்பவன் போல் வாளைக் கையில் ஏந்தி நின்றான். ஜகத்சிம்மனும் வாளை உருவிப் பிடித்துக் கொண்டான்.
“மன்னவா!” என்றான் மெதுவாக.
“இப்பொழுது மன்னன் இல்லை. ஆகையால் அந்த நிலையை நினைக்காதே” என்றான் ஜோடா.
“தங்களிடம் போராட நான் இங்கு வரவில்லை” என்று சுட்டிக் காட்டினான்.
“இப்பொழுது நான் உனக்கு அளிக்கப்போவது போர் அல்ல, தண்டனை” என்று விளக்கினான், ஜோடா.
ஜகத்சிம்மன் தன் வாளை முதலில் நீட்டி சண்டையைத் தொடங்கினான்.
ஜகத்சிம்மன் வாள் போரில் நிகரற்றவன் என்று ராஜபுதனத்தில் பிரசித்தம். அது உண்மை என்பதை அந்த இரவில் நிரூபித்தான் படைத்தலைவன். அவன் ஒவ்வொரு வாள் வீச்சும் பயங்கரமாக இருந்தது. அவன் வாள் ஜோடாவின் இதயத்தையும், கழுத்தையும், கண்களையும் நோக்கி அடுத்தடுத்து வந்தது. மின்னல் வேகத்தில். குறி வைப்பதற்காகவும் வேகம் திரட்டுவதற்காகவும் இடம் மாறி மாறி, பாய்ந்து பாய்ந்து போரிட்டான் ஜகத்சிம்மன்.
ராவ்ஜோடா இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவன் வாள் ஜகத்சிம்மன் வாளை அனாயாசமாகத் தடுத்து நின்றது. ஜகத்சிம்மன் குறி ஒவ்வொன்றும் மிக வேகமாக வந்தும் அவன் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றும் ஜோடாவின் வாள் அந்த இடங்களில் எல்லாம் மந்திரத்தால் தோன்றுவதுபோல் தோன்றி படைத்தலைவனின் வாளைத் தடுத்தது.
ஜகத்சிம்மன் மெள்ள மெள்ள உண்மையை உணர்ந்தான். ராஜபுதனத்தில் தான் எடுத்திருக்கும் பெயருக்கு அழிவுகாலம் வந்துவிட்டதை உணர்ந்தான். அதனால் அதிகத் துரிதமாக வாளை திரும்பத் திரும்ப சுழற்றி மன்னனை நோக்கி வந்தான்.
அத்தகைய ஒரு சமயத்தில்தான் ஜோடா தனது வாளினால் படைத்தலைவன் வாளை ஓங்கியடித்து நிலத்தில் ஊன்ற வைத்து அவன் மணிக்கட்டையும் தனது இடக்கையால் பிடித்து நெறித்து, எதிரி வாள் உதறி விழும்படி செய்தான். பிறகு காலால் அந்த வாளை தூரத்தில் தள்ளிவிட்டு, “ஜகத்சிம்மா! இப்பொழுது உன் மகாராணியிடம் உன் நடத்தைக்கு மன்னிப்புக்கேள்” என்றான்.
நிராயுதபாணியாக நின்ற சமயத்தில் ஜகத்சிம்மன் அசையவில்லை. “வாளை என் இதயத்தில் பாய்ச்சி விடுங்கள்” என்று சொன்னான், ஜோடாவை நோக்கி.
தன் வாளை ஒருமுறை நோக்கி மலை அரசியையும் நோக்கிய ஜோடா “மலை அரசி! படைத்தலைவனுக்கு நீயே தண்டனை கொடு” என்று கூறினான்.
மலை அரசி தண்டனை கொடுக்கும் நிலையில் இல்லை. படைத்தலைவனைப் பரிதாபத்துடன் பார்த்தாள். கடைசியில் சொன்னாள், “படைத்தலைவரே! பெரும் வீரர்கள் பிறர் மீது வசைபாடுவது இல்லை. ஆகையால் உங்கள் போக்கை சிறிது மாற்றிக்கொள்ளுங்கள். மார்வார் பெரும் நாடாகப் போகிறது. அதை நிர்மாணிக்கும் பணியில் உங்கள் வாள் பெரிதும் பயன்படலாம். ஆகவே, செல்லுங்கள் ஜோடா கிருக்கு” என்று.
“அங்கு எதற்கு?” தலை குனிந்தவண்ணம் கேட்டான், ஜகத்சிம்மன்.
“மார்வார் அரசு தழைக்கும் வித்து அங்குதான் ஊன்றப்படும். ஜோடாகிர் வெகுசீக்கிரம் உங்கள் மன்னன் பெயரைத் தாங்கும். ஜோட்பூர் என்ற பெயரில் அங்கு மார்வார் தலைநகரம் உருவாகும். அங்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்” என்றாள் மலை அரசி அதிகாரம் நிரம்பிய குரலில்.
“தாங்கள்?” இம்முறை ஜகத்சிம்மன் குரலில் மரியாதை பெரிதும் ஒலித்தது.
“நானும் இவரும் வேறு இடத்துக்குப் போகிறோம்” என்றாள் மலை அரசி.
“அந்த இடத்தை நான் அறியலாமா?” என்று ஜகத்சிம்மன் கேட்டான்.
“சீக்கிரம் அறிந்துகொள்வீர்கள். போய் வாருங்கள். உங்கள் வீரர்களையும் அழைத்துச் செல்லுங்கள்” என்று மலை அரசி உத்தரவிட்டாள்.
அப்பொழுது யாரும் எதிர்பாராத விந்தை ஒன்று நிகழ்ந்தது. அதைக் கண்டு ஜோடாவே பிரமித்தான்.