ஜோடாவின் பரம விரோதியான சந்தசிம்மனின் மூத்த மகன் காந்தாஜி தன் வாளை உருவிக்கொண்டு ராவ் ஜோடாவை அணுகுவதற்கு முன்பே ஜோடா பிருமச்சாரியளித்த தனது பெரிய வாளை உருவி எதிரியைத் தடுத்தான். அவனைச் சேர்ந்த பத்து பதினைந்து வீரர்களையும் தனது புரவியில் சுழன்று தாக்கினான். ஏதோ மந்திரத்தால் இயக்கப்பட்டது போல் சுழன்ற அந்த வாளின் லாகவத்தைக் கண்டு ஜோடாவே பெரு வியப்புக்கு உட்பட்டான்.
அப்படி அவன் போராடிக்கொண்டு இருக்கையில் அவனை மற்றொருபுறம் எதிர்க்கச் சென்ற சந்தசிம்மனின் இளைய மகன் மஞ்சாஜியை சரேலென்று பிருமச்சாரியின் வாள் மட்டுமன்றி குரலும் தடுத்தது. “காந்தாஜியையும் ஜோடாவையும் தவிர மற்றவர்கள் விலகி நில்லுங்கள்” என்று கர்ஜித்தார் பிருமச்சாரி. அவர் குரலைக் கேட்ட மற்ற வீரர்கள் விலகிவிட்டனர். சில விநாடிகளில் மஞ்சாஜி மாத்திரம் கேட்டான், “பிருமச்சாரி! எங்கள் குல எதிரியைத் தாக்குவதில் நீங்கள் ஏன் குறுக்கிடுகிறீர்கள்?” என்று.
“மஞ்சா! நீ சிறுவன். வீரர்களின் வழிகளை அறியமாட்டாய். என்றாவது ஒருநாள் நீ அற்பாயுசாக மடிவது நிச்சயம். நீ முயல்வது ஜோடாவைத் தாக்குவதோ போரிடுவதோ அல்ல. பத்து பதினைந்து பேர் தனி மனிதனைச் சூழ்ந்து வெட்ட முயல்வது போர் அல்ல, கொலை. அதை நான் அனுமதிக்க முடியாது. க்ஷத்திரிய தர்மமும் முக்கியமான மேவார் தர்மமும் இதை அனுமதிக்காது” என்று மஞ்சாஜியைக் கண்டித்த பிருமச்சாரி, அவன் கையைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் தனியாக நிற்க வைத்துக்கொண்டார்.
இரும்பு உலக்கை போன்ற பிருமச்சாரியின் ராட்சதக் கையால் பிடித்து நிறுத்தப்பட்ட மஞ்சாஜியின் கோபம் எல்லை கடந்தது. “என்னைத் தடுக்க நீ யார்?” என்று சீறி திமிற முயன்றான். அவன் கை உடையும் நிலைக்கு வந்ததேயொழிய பிருமச்சாரியின் பிடியில் இருந்து அவனால் தப்ப இயலவில்லை.
அவனது இளமைத் துடிப்பையும் திமிறலையும் கண்ட பிருமச்சாரி பெரியதாக நகைத்தார். “நான் யார் என்று கேட்கிறாய்? உன் தந்தையைக் கேட்டுப்பார். ராஜஸ்தானத்தில் உள்ள யாரை வேண்டுமானாலும் கேள். தர்மம் இருக்கும் இடத்தில் பிருமச்சாரி இருப்பான் என்று சொல்வார்கள். தர்மம் மட்டும் என் கையைத் தடுத்திராவிட்டால் நீயும் உன் அண்ணனும் உன் வீரர்கள் கூட்டமும் இத்தனை நாழி எமன் உலகில் இருப்பீர்கள்” என்றார் நகைப்பின் ஊடே.
அதுவரை பொறுமையாயிருந்த மஞ்சாஜி “இந்தத் துரோகியையும் பிடியுங்கள்” என்று தன் வீரர்களை நோக்கிக் கூவினான்.
ஆனால், அவனது கூவலையோ அதில் வெளிவந்த அவன் உத்தரவையோ ஒரு வீரன்கூட காதில் வாங்கவில்லை. அவர்கள் கவனம் எல்லாம் ஜோடாவுக்கும் காந்தாஜிக்கும் நடந்து கொண்டிருந்த வாள் போரில் நிலைத்திருந்தது. தன் இரு எதிரிகளும் மிக அழகாகப் போரிட்டார்கள். காந்திரஜி தனித்து தரையில் நின்று போரிட்டதால் ஜோடாவும் தனது புரவியில் இருந்து மணலில் குதித்துப் போராடினான். வேகமாகச் சுழன்ற அவன் மூதாதைகளின் பெருவாள் தற்காப்புப் போரையே நடத்தியது. ஜோடாவுக்கு காந்தாஜியைக் கொல்லும் நோக்கம் அணுவளவும் இல்லை. காந்தாஜி கத்தியைச் சுழற்றிய முறையிலேயே ஒரு கவர்ச்சியும் தனிப்பட்ட திடமும் இருந்ததால் அதன் அழகை லாகவத்தை, வியந்த வண்ணம் போரிட்டான். காந்தாஜியின் ஒவ்வொரு தாக்குதலையும் ஜோடாவின் வாள் தடுத்தது. அப்படித் தடுத்த ஓரிரு சமயங்களில் எதிரியின் மார்பை ஊடுருவ சந்தர்ப்பம் கிடைத்தும் ஜோடா அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தனது வாளைப் பின்னுக்கு இழுத்தே போரிட்டான்.
எதிரி தன்னிடம் தயவு காட்டுவதைக் கண்ட காந்தாஜி கோபத்தின் உச்ச நிலையை அடைந்தான். ஜோடாவின் பெருவாள் சுழலும் சக்கிர நிலத்துக்குள் தான் நுழைய முடியாது என்பதை உணர்ந்துகொண்டதால் சண்டைக்கு ஒரு முடிவுகட்ட ஜோடாவின்மீது தனது வாளை ஓங்கி அடித்தான். ஜோடாவின் தலைக்குமேல் இறங்கிய அந்த வாள் அடுத்த விநாடி வானில் பறந்தது. காந்தாஜி நிராயுதபாணியாய் நின்றான்.
அடுத்து மஞ்சாஜி, அண்ணன் பணியைத் தொடர முயன்றபோது பிருமச்சாரி அவன் கையைத் தனது கையில் இருந்து விடுவித்தார். சந்தசிம்மன் புதல்வர்களுக்கும் ஜோடாவுக்கும் குறுக்கே நின்றார். “இத்துடன் இன்றைய சண்டை முடிவடைகிறது” என்று உத்தரவிடும் தோரணையில் கூறினார்.
காந்தாஜியைப் பார்த்து மேலும் சொன்னார் “சந்தசிம்மன் மகனே! ஜோடாவிடம் இன்று நீ அடைந்தது தோல்வி அல்ல. உன்னைவிட ஜோடா பெரியவன். வாள் போரில் நிகரற்றவன் என்று பெயர் பெற்றவன். இவன் வாள் உங்கள் மேவாருக்குத் துணையிருக்க வேண்டும். ஆனால், ராஜபுதனத்தின் துரதிர்ஷ்டம் மேவாருக்கும் மார்வாருக்கும் பூசலைக் கிளப்பிவிட்டது. பெரும் போர்கள் நிகழ இருக்கின்றன. ரத்தம் இந்தப் பாலைவனத்தில் ஆறாக ஓடும். அதற்குக் காலம் இருக்கிறது. இந்த சண்டை இத்துடன் முடியட்டும்” என்ற
அவர் குரலில் வருத்தம் தோய்ந்து கிடந்தது.
“இப்படி என்னை அவமானப்படுத்தியதைவிட கொன்று இருக்கலாமே!” என்று கேட்டான் காந்தாஜி.
“கொல்லும் உத்தேசம் ஜோடாவுக்கு இல்லை. ஜோடா அவன் தந்தையின் பேராசைக்குப் பலியானவன். ஆனால், தர்மயுத்தம் செய்பவன். இன்று உன்னைக் கொல்ல அவனுக்கு நியாயம் இருக்கிறது. அவனை அவன் ஆட்சியில் இருந்து ஓட்டிவிட்டீர்கள். நாடோடியாக அலைகிறான். அந்த சினத்தில் உன்னைக் கொன்று இருக்கலாம். இருப்பினும் செய்யவில்லை பார்” என்று சமாதானப்படுத்தினார் பிருமச்சாரி. “ஜோடா! நாம் போகலாம் வா! இங்கு நாம் தங்குவது இவர்களுக்கும் நல்லது அல்ல, உனக்கும் நல்லது அல்ல” என்று கூறிவிட்டு, தமது புரவியில் ஏறினார். ஜோடாவும் புரவியில் ஏறிக்கொள்ள இருவரும் பாலைவன மணலில் விரைந்தனர்.
இருள் கவிந்துவிட்ட அந்த நேரத்திலும் பிருமச்சாரி ஏதோ திசையைக் குறி வைத்துக்கொண்டு வேகமாகப் புரவியைச் செலுத்தினார். இருவரும் லூனி ஆற்றின் கரைக்கு வந்ததும் அங்கேயே அன்று இரவைக் கழிக்கத் தீர்மானித்த பிருமச்சாரி புரவியில் இருந்து இறங்கி லூனியில் கைகால்களைக் கழுவிக்கொண்டார். அதன் உப்பு நீரைக் கைநிறைய எடுத்து வாயைக் கொப்புளித்தார். பிறகு மணலில் தமது தலைப்பாகைத் துணியை எடுத்து விரித்துப் படுத்துக்கொண்டார்.
ஜோடாவும் அவரைப் பின்பற்றித் தரையில் எதையும் விரிக்காமல் படுத்துக்கொண்டபின் பிருமச்சாரி ஆகாயத்தைப் பார்த்து நட்சத்திரங்களைக் கணக்கு எடுத்த வண்ணம் “ஜோடா, இன்று நேரம் கழித்துத்தான் நிலவு வரும். கிருஷ்ணபட்சம் அல்லவா?” என்றார்.
ஏதோ யோசித்தவண்ணம் வானைப் பார்த்துக் கொண்டிருந்த ஜோடா கேட்டான், “அதனால் என்ன?” என்று.
“சந்திர வெளிச்சமாவது இருந்தால் பயணப்படலாம்” என்றார்.
“இருள் பயணத்துக்குத் தடையா?” என்று வினவினான் ஜோடா.
“இந்தப் பயணத்துக்குத் தடைதான்” என்றார் பிருமச்சாரி.
“ஏன்?”
“பாபுஜி பொல்லாதவர். அவர் மலைக்குள் நாம் நுழையும்போது வெளிச்சம் இருந்தால் எச்சரிக்கை மட்டும் வரும். இல்லாவிட்டால் வேல்கள் பாய்ந்து வரும். அது கூட பாதகமில்லை...” என்ற பிருமச்சாரி இழுத்தார்.
“வேறு என்ன?” என்று கேட்டான் ஜோடா.
“அவர் குழந்தைகள் பாய்ந்து வராதிருக்க வேண்டும். அவை வந்தால் பேராபத்து” என்றார் பிருமச்சாரி.
பிருமச்சாரியே அஞ்சும் அந்த பேராபத்து எதுவாயிருக்க முடியும் என்று யோசித்த ஜோடாவுக்கு ஏதும் விளங்கவில்லை. குழந்தைகள் என்று அவர் குறிப்பிடுவது பாபுஜியின் புத்திரர்களாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்ததால் கேட்டான், “அவருக்கு எத்தனை குழந்தைகள்?” என்று.
“முன்பு நான் பார்த்தபோது நூறு; இப்பொழுது எத்தனையோ!”
“நூறா! பாபுஜி திருதிராஷ்டிரனா, நூறு குழந்தைகளைப் பெற?”
இதைக் கேட்ட பிருமச்சாரி அந்த இருளில் பேய்போல் நகைத்தார். “குழந்தைகள் என்றால் பிள்ளைகள் அல்ல,” என்றார் நகைப்பின் ஊடே.
ஜோடாவின் பிரமை அதிகமாயிற்று. “பெண்களா?” என்று கேட்டான்.
“அவருக்குப் பிள்ளைகளும் இல்லை, பெண்களும் இல்லை. என்னைப்போல பிருமச்சாரி அவர்” என்ற பிருமச்சாரி, “சரி, ஜோடா! தூங்கு. சந்திர வெளிச்சம் வந்த பின்பு தான் பயணத்தைத் தொடங்குவோம்” என்று கூறிக் கண்களை மூடினார்.
ஜோடாவும் கண்களை மூடினாலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. வந்தபோதும் மனம் ஒரு நிலையில் இல்லை. மலை அரசியின் அழகிய வதனம் அவ்வப்பொழுது அவன் கண் முன்பு எழுந்து, அவன் உணர்ச்சிகளை அலைக்கழித்தது, பல திசைகளில். அவள் லாவண்யம் மயக்கத்தைத் தந்தது நித்திரையிலும்.
அப்படியே உறங்கிவிட்ட ஜோடா திடீரென விழித்துக்கொண்டு உட்கார முயன்றான். எழுந்திருக்க முடியாததால் திணறினான். அவன் கழுத்தில் நீண்ட ஓர் ஈட்டி பதிந்து நின்றது.
மல்லாந்து படுத்த வண்ணம் கண்களை கசக்கிக்கொண்டு மேலே நோக்கினான். அவன் கண்ட இடம் எல்லாம் பிரமாண்டமான ஒரு கறுப்புப் புரவியின் கால்களும், நீண்ட வயிறும் தெரிந்தன. அந்த வயிற்றின் ஒரு புறத்தில் உலக்கை போன்ற ஒரு கால் தொங்கிக்கொண்டிருந்தது. ஈட்டியைப் பற்றிய கையில் கணுக்கைக்குமேல் ரோமம் கரேல் என்று அடர்த்தியாகத் தெரிந்தது.
“அப்படியே படுத்திரு. எழுந்திருக்காதே” என்று ஜோடாவை எச்சரித்த குரல் மிகக் கடுமையாக இருந்தது.