மண்டோர் படைத்தலைவனான ஜகத்சிம்மன் தனது மன்னனின் திருமணத்தையே நிறுத்த முயன்றதும், அதற்காகக் கூச்சலிட்டதும் பலருக்கு கோபத்தையும் சிலருக்கு வியப்பையும் உண்டாக்கினாலும், பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவோ, திருமணப் பந்தலில் உட்கார்ந்திருந்த ராவ்ஜோடாவோ மலை அரசியோ படைத்தலைவன் போக்கை லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. ஜகத்சிம்மனை வெட்டிப்போட வாட்களை உருவிய இரு வீரர்களை பிருமச்சாரி தமது கையசைப்பினால் தடுத்துவிட்டு, ஏதுமே நடக்காததுபோல் மணப்பந்தலைக் கவனிக்கலானார்.
ராவ்ஜோடாவும் மங்கல கங்கணத்தை மகிழ்ச்சியுடன் மலை அரசியின் கையில் முடிந்தான். வாத்தியங்கள் மீண்டும் முழங்கின. மங்கல சூத்திரமும் மலை அரசியின் கழுத்தில் புனையப்பட்டது.
விஷயம் அத்துடன் முடிந்திருக்க வேண்டியது நியாயமாக இருந்தாலும் முடியவிடாத படைத்தலைவன், “மன்னர் திருமணம் முடிந்துவிட்டாலும் ராஜபுத்திரன் என்ற முறையில் நான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று துவங்கினான். அவன் பேச்சை மேலே ஓடவிடாத பிருமச்சாரி, “அதைப் பின்னால் கேட்போம். பேசாமல் உட்கார்” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.
ஆனால் அவர் வார்த்தையைக் கேளாத ஜகத்சிம்மன் மேலும் கூவினான். “மன்னருக்கு மலை அரசி முதல். மனைவியல்ல” என்று.
“அதனால் என்ன?” என்று கேட்டார் பிருமசாரி சற்றே தலையை அவனை நோக்கித் திருப்பி.
“அதனால் என்னவா?” ஜகத்சிம்மன் குரலில் வியப்பு ஒலித்தது.
“ஆம், அதனாலென்ன? ராஜபுதன மன்னர்கள் பல பெண்களை மணம்புரிவது வழக்கந்தானே!” என்று வினவினார் பிருமச்சாரி.
“வழக்கந்தான்-” குழம்பினான் ஜகத்சிம்மன்.
“அப்படியானால் பேசாதிரு” என்ற பிருமச்சாரி, வாளை உருவிய இரு வீரர்களையும் நோக்கி “படைத்தலைவரை சிறிதுநேரம் பக்கத்து விடுதிக்கு அழைத்துச் சென்று உணவு அளியுங்கள்” என்றும் சிபாரிசு செய்யவே ஜகத்சிம்மன் பலவந்தமாக இரு வீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டான்.
உள்ளே திருமண வைபவம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. அடுத்த விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டைக் காவலனுக்கும் தெளிவாகக் காதில் விழுந்தது. உணவு விடுதிக்குச் சென்ற பின்பும் ஜகத்சிம்மன் உணவருந்த மறுத்து வாசலிலேயே உட்கார்ந்தான். அவனை அழைத்துவந்த, அதாவது பிடித்து இழுத்து வந்த இரு வீரரும் “படைத் தலைவரை உணவருந்துமாறு பிருமச்சாரி உத்தரவிட்டிருக்கிறார்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்கள்.
ஜகத்சிம்மன் அவர்களை கடும் கண்களுடன் நோக்கினான். “நான் பிருமச்சாரியின் அடிமையில்லை” என்று சீறினான்.
வீரர்கள் இருவரும் தலைவணங்கி, “உண்மை” என்றார்கள்.
ஜகத்சிம்மனுடன் வந்த கோட்டைக் காவலன் மட்டும் “படைத்தலைவரே! உங்களுக்கு திடீரெனக் கோபம் வரக் காரணம் என்ன?” என்று வினவினான்.
ஜகத்சிம்மன் கண்கள் காவலனை சீற்றத்துடன் நோக்கின. “மன்னர் மணம் புரிந்துகொண்டு விட்டார்” என்று குறிப்பிட்டான்.
காவலன் கேட்டான் “அது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா?” என்று.
“இல்லை” என்றான் ஜகத்சிம்மன் திட்டமாக.
காவலன் ஜகத்சிம்மனை சந்தேகப் பார்வையாகப் பார்த்தான். அவனை இழுத்து வந்த காவலரையும் நோக்கினான். ஆமாம் என்பதற்கு அறிகுறியாக இருவரும் தலையசைத்தார்கள்.
“பயப்பட வேண்டாம். நீங்கள் செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று காவலன் தைரியம் சொன்னான் அந்த வீரர்களுக்கு.
வீரர்களில் ஒருவன் வினவினான், “இவரை உங்கள் ஒருவரால் சமாளிக்க முடியுமா?” என்று.
“முடியும். கவலைப்படாதீர்கள்” என்று காவலன் கூற இரு வீரரும் சென்றார்கள் திருமண விடுதியை நோக்கி.
அவர்கள் சென்ற பின்பு ஜகத்சிம்மன் காவலனை நோக்கி “என்னை பைத்தியம் என்று தீர்மானித்துவிட்டாய்?” என்று சீறினான்.
“சேசே! அப்படியொன்றும் இல்லை. வாருங்கள் சாப்பிடுவோம். சாப்பிட்டால் சிறிது நிதானத்துக்கு வருவீர்கள்” என்றான் காவலன்.
“மனிதனுக்கு சாப்பாடுதான் முக்கியமா?” ஜகத்சிம்மன் கேள்வியில் வெறுப்பு இருந்தது.
“சந்தேகமாக இருக்கிறதா உங்களுக்கு? இரண்டு நாளாக நாம் கிடந்த உபவாசம்...” காவலன் சொற்களை முடிக்கவில்லை.
“பத்து நாள் வேண்டுமானாலும் பட்டினி கிடக்க என்னால் முடியும்” என்றான் ஜகத்சிம்மன் காவலனை மறுத்து ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக.
“அது சரி. இப்பொழுது உணவு கிடைக்கும் போது சாப்பிட்டால் என்ன?” என்று காவலன் கேட்டான்.
ஜகத்சிம்மன் பதில் சொல்லாததால் காவலன் தான் மாத்திரம் உள்ளே சென்று உணவருந்தி வந்தான். ஜகத்சிம்மன் முகத்தில் அப்பொழுதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் விவரிக்க இயலாத ஒரு வெறியும் துளிர்த்தது. இந்த விபரீதக் குறிகளைக் கண்ட காவலன் “படைத்ததலைவரே!” என்று மெள்ள அழைத்தான்.
“என்ன?” உஷ்ணமாக வந்தது படைத்தலைவன் பதில்.
“மன்னர் திருமணத்துக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் காவலன்.
“மண்டோருக்கும் மன்னனுக்கும் உள்ள சம்பந்தம்.”
“அது என்ன சம்பந்தமோ?”
“மலை அரசி! பாவம்!”
“இஷ்டப்பட்டுத்தானே மணந்துகொள்கிறாள்.”
“ஆம், ஆனால் அவளுக்கு மன்னனைப் பற்றி உண்மை தெரியாது.”
“என்ன உண்மை?”
“வேறொரு பெண்ணை மன்னர் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார் என்பது.”
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“ஒட்டுக் கேட்டேன்.”
“ஒட்டுக் கேட்டீர்களா?” காவலன் குரலில் பிரமிப்பு இருந்தது.
“ஆம்” என்றான் ஜகத்சிம்மன்.
“எங்கு?”
“வேடவர் குடிசையில்.”
“ஒட்டுக் கேட்பது வீரனுக்கு அழகல்லவே.”
“அது சமய சந்தர்ப்பங்களை மனிதர்களைப் பொறுத்தது.”
“தாங்கள் அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர் போலிருக்கிறது?”
இதற்கு ஜகத்சிம்மன் பதில் சொல்லவில்லை. எழுந்து வெளியே சென்றுவிட்டான். பகல் முழுவதும் அவன் திரும்பவில்லை. அவனைப்பற்றி யாரும் விசாரிக்கவும் இல்லை. இரவும் வந்தது. ஐந்தாம் பிறைச்சந்திரன் வானத்தில் உலாவலானான்.
அதை தமது விடுதி வாயிலில் நின்று கவனித்த பிருமச்சாரி “இன்னும் சரியாக பத்து நாட்கள் இருக்கின்றன” என்று முணுமுணுத்துக் கொண்டார். பிறகு தமது பக்கத்தில் யாரோ வந்து நிற்பதை அறிந்து திரும்பி நோக்கினார். மண்டோர் கோட்டைக் காவலன் நின்றுகொண்டிருந்தான்.
“நீங்கள்தான் மண்டோர் கோட்டைக் காவலரா?” என்று வினவினார் பிருமச்சாரி.
“ஆம்” என்றான் காவலன் அவருக்குத் தலைவணங்கி. “நாம் மண்டோரை முற்றுகையிட்டால் ஊர் நிலைமை எப்படியிருக்கும்?” என்று பிருமச்சாரி வினவினார்.
“மக்கள் புரட்சி செய்வார்கள். கோட்டைக் கதவுகள் திறக்கப்படும்” என்றான் காவலன்.
“இப்பொழுது இருக்கும் ஆட்சி...”
“மக்களுக்குப் பிடிக்கவில்லை.”
“ஏன்?”
“ராவ்ஜோடாவை மக்கள் நேசிக்கிறார்கள். தவிர மார்வாருக்கும் மேவாருக்கும் சில காலமாகவே பூசல் இருந்து வருகிறது. இப்பொழுது சந்தசிம்மன் புதல்வர் ஆட்சியில் மக்கள் வெறுப்பு அதிகப்பட்டிருக்கிறது.”
திருப்திக்கு அறிகுறியாகத் தலையசைத்தார் பிருமச்சாரி. திடீரென்று “படைத்தலைவர் எங்கே?” என்று விசாரித்தார் காவலனை.
“காணவில்லை” என்றான் காவலன்.
அதை பிருமச்சாரி பொருட்படுத்தவில்லை. “நல்லது. படைத்தலைவர்கள் அதிகமாக ஆக தொல்லைதானே தவிர வேறில்லை” என்றார்.
இதைக்கேட்டு பிரமித்தான் காவலன். “மன்னருக்கு வேறு படைத்தலைவர் இருக்கிறாரா?” என்று வினவவும் செய்தான், பிரமிப்பு குரலிலும் ஊடுருவ.
“இரண்டு பேர் இருக்கிறார்கள்” என்று சர்வ சாதாரணமாகச் சொன்ன பிருமச்சாரி “நான் ஒருவன் இங்கிருக்கும் படைகளுக்கு; தெற்கில் இருந்துவரும் புரவிப் படைகளுக்குப் பாபுஜி இருக்கிறார்” என்று விளக்கினார்.
இதைக் கேட்ட காவலன் பிரமித்தான். “மண்டோரை இரண்டு படைகள் தாக்கப் போகின்றனவா?” என்றும் வினவினான்.
“ஆம்” என்ற பிருமச்சாரி “ஆகையால் ஜகத்சிம்மன் தேவையில்லை” என்று தெரிவித்துவிட்டு உள்ளே சென்றார்.
காவலன் அதிர்சிசியுற்று நின்றான். “இந்த நிலையில் படைத்தலைவர் எங்குதான் போயிருப்பார்” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
அதே சமயத்தில் காவலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை அடைந்திருந்தான் ஜகத்சிம்மன். அன்று பகல் முழுவதும் எதிரேயிருந்த அடவிக்குள் அலைந்த அவன், இரவு மூண்டுங்கூட அங்கிருந்த மரத்தடி ஒன்றில் சாய்ந்து தீவிர சிந்தனையில் இருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்திருந்த புதர்களுக்கு அப்பால் இருவர் பேசும் குரல் கேட்டது. அதனால் எழுந்திருந்த ஜகத்சிம்மன், தான் இருந்த மரத்தின் மறைவில் இருந்து ஓசைப்படாமல் நடந்து சென்று புதருக்கு சற்று எட்ட இருந்த மரத்தடியில் மறைந்து நின்றான். அவன் காதில் ஜோடாவின் குரலைத் தவிர, வேறொரு பெண் குரலும் கேட்டது. அதுவும் அன்று வேடவர் குடிசையில் கேட்ட அதே குரல். மன்னன் தன் கையில் சிக்கிவிட்டான் என்ற குதூகலத்துடன் குரல் வந்த திசையை நோக்கினான்.
அங்கு ராவ்ஜோடாவின் அணைப்பில் ஒரு பெண் இருந்தாள். அவள் சற்றே தலையைத் தூக்கி நகைத்தபோது அவள் முகத்தில் சந்திர வெளிச்சம் பூரணமாக விழுந்தது. அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்ட ஜகத்சிம்மன் ஏதும் புரியாமல் மிதமிஞ்சிய குழப்பத்தாலும் அதிர்ச்சியாலும் பல நிமிடங்கள் அசைவற்று நின்றுவிட்டான். அவன் தலை சுற்றும் நிலைக்கு வந்துவிட்டது. சந்திரனையும் பழிக்கும் முகம் அது. அவனுக்கு நன்றாகப் பரிச்சயமான முகமுங்கூட.