மலை அரசியின் சொற்களோ உத்தரவுகளோ மந்திராலோசனை சபையில் இருந்தவர்களுக்குக் கட்டோடு பிடிக்காதிருந்தாலும் அவள் சொன்னதற்கு எல்லாம் ஜோடா தலையை ஆட்டியதால், அவள் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் எல்லோருமே முனைந்தார்கள்.
மறுநாள் இளவரசருக்கு மகுடாபிஷேகம் என்று மண்டோர் மக்களுக்கு அன்று பிற்பகலிலேயே தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டதன் விளைவாக மண்டோர் வெகு சீக்கிரம் விழாக்கோலம் பூண்டது. அன்று மாலைக்குள் தலை நகரின் பல இடங்களில் தோரணங்கள் தோன்றலாயின. மங்கள வாத்தியங்களும் பிரதான கோட்டை வாசல் தூரிகைகளும் பலமாக முழங்கத் தொடங்கின. முக்காடு அணிந்து ராஜபுத்திர பெண்கள் குடங்களில் நீர் ஏந்தி வெளிவந்து வாசல்களில் நீர் தெளித்துக் கோலமிட்டு செம்மண் பூசினர். வீரர்கள் பத்துப் பத்துப் பேராக அணிவகுத்து வீதிகளில் வலம் வந்து ஜெயகோஷங்களைக் கிளப்பினார்கள். மார்வாரின் பெரும் கொடி கோட்டை வாசல் மீது ஏற்றப்பட்டது. நகரம் எங்கிலும் பாடல்களும் மகிழ்ச்சிக் கூச்சல்களும் எழுந்த வண்ணம் இருந்தன. மாலை அணுகியதும் எங்கும் விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.
இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் மலை அரசி அரண்மனை உப்பரிகையில் இருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். அரண்மனையில் மட்டும் பெரிய மகா ராஜா காலமாகி நாட்கள் பத்து கூட ஆகாததாலும், மகாராணியின் துக்க காலமும் கோலமும் நீங்கவில்லை என்ற காரணத்தாலும் மங்கள அலங்காரங்கள் ஏதும் நடக்கவில்லை. அதைக்கண்ட மலை அரசி பணிப்பெண்களில் ஒருத்தியை அழைத்து, “இளைய ராஜா மகாராஜா ஆவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?” என்று வினவினாள் சிறிது சினத்துடன்.
“அப்படி ஏதுமில்லையே அம்மணி” என்றாள் பணிப்பெண் திகிலுடன்.
“அரண்மனை ஏன் மகுடாபிஷோகத்துக்கு அலங்கரிக்கப்படவில்லை?” என்று வினவினாள் மலை அரசி.
“மகாராஜா இறந்து பத்து நாள் ஆகவில்லை” என்றாள் பணிப்பெண்.
“அதனால் பாதகம் இல்லை. அரண்மனையை அலங்காரம் செய்யுங்கள்” என்று மலை அரசி உத்தர்விட்டாள்.
“மகாராணி இதற்கு ஒப்பமாட்டார்கள்” என்று பணிப்பெண் சுட்டிக் காட்டினாள்.
“நான் சொல்லிக் கொள்கிறேன் மகாராணியிடம். அலங்காரத்தைத் தொடங்குங்கள்” என்ற மலை அரசியின் உத்தரவு திட்டமாயிருந்தது.
இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் கஷ்டமிருந்ததால் பெரிய மகாராணியிடம் விஷயத்தை பணிப்பெண்கள் சொன்னார்கள். பெரிய மகாராணி முதல் அமைச்சரை வரவழைத்து, “இந்தக் காட்டுப்பெண் முறைகெட்ட உத்தரவுகளை எல்லாம் இடுகிறாளே, என்ன செய்வது?” என்று விசாரித்தாள்.
முதலமைச்சர் சிறிது சங்கடத்தில் ஆழ்ந்தார். “அப்படி என்ன உத்தரவு இட்டாள்?” என்று வினவினார்.
பெரிய மகாராணி பெருமூச்செறிந்தாள். “அரண்மனையை அலங்காரம் செய்யச் சொல்லுகிறாள். மகாராஜா இறந்து இன்னும் பத்து நாள் ஆகவில்லை” என்று பெருமூச்சுக்கு இடையே துன்பம் மிகுந்த குரலில் சொன்னாள் பெரிய மகாராணி. “இது எந்த நியாயத்தில் சேரும்?” என்றும் கேட்டாள்.
“அரச நியாயத்தில், தர்மத்தில் சேரும்” என்ற மலை அரசியின் குரல் அவர்களைத் திகைக்க வைக்கவே இருவரும் திரும்பி அறை வாயிற்படியில் நின்ற அவளை நோக்கினார்கள்.
இருவருக்கும் அவள் வரவு சிறிது திகிலை அளித்தாலும் முதலமைச்சர் துணிவை வரவழைத்துக்கொண்டு, “அம்மணி! நீங்கள் இன்னும் மகாராணி ஆகவில்லை” என்று சிறிது கோபத்துடன் சுட்டிக் காட்டினார்.
“இந்த உண்மையைக் கண்டுபிடிக்க ஒரு முதலமைச்சர் தேவையில்லை. இந்த அரண்மனையின் சாதாரணப் பணிப்பெண்ணுக்கும் அது தெரியும்” என்ற மலை அரசி, “அமைச்சரே! மகாராஜா அடைந்திருப்பது வீரமரணம். மேவார் தலைநகரில் வாள்கூட இல்லாமல் நிராயுதபாணியாயிருந்த அவரை பத்து வீரர்கள் வளைத்துக் கொண்டார்கள். தனியாக அங்கிருந்த கேடயத்தை மட்டும் தாங்கி அதைக் கொண்டே ஆறுபேர் உயிரை மாய்த்தார் மகாராஜா. அத்தகைய மகாவீரர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள். அது துக்கப்படும் சம்பவம் அல்ல பெருமைப்படும் சம்பவம். தவிர, மற்றவர்களுக்குள்ள நியதி க்ஷத்திரியர்களுக்குக் கிடையாது. மரணத்துக்குப் பின் மகுடாபிஷேகம் நடப்பதும் மங்களம் தொடருவதும் ராஜபுத்திர வம்சங்களின் இயல்பு” என்று விளக்கினாள்.
இதைக் கேட்ட மகாராணி மட்டுமன்றி முதல் அமைச்சரும் வியப்பின் எல்லையை அடையவே முதல் அமைச்சர் கேட்டார், “காட்டில் இருக்கிற உங்களுக்கு நாட்டுப் பழக்கம் எப்படித் தெரியும்?” என்று.
மலை அரசி நகைத்தாள், “தூரத்தில் உள்ள மேவார் தலைநகரில் நடந்தது காட்டில் இருந்த எனக்கு எப்படித் தெரிந்தது?” என்று பதில் கேள்வியை வீசினாள்.
“இளவரசர் சொல்லியிருக்கலாம்” என்றார் முதலமைச்சர்.
சிரித்தாள் மலை அரசி சிறிது வாய்விட்டு, “இளவரசருக்கே நாங்கள்தான் காட்டினோம் சித்தூர் நிகழ்ச்சிகளை, வரப்போகும் சம்பவங்களை” என்று சொன்ன மலை அரசி, “உங்கள் இளவரசர் நான் சொல்வதை எல்லாம் ஏன் ஏற்க வேண்டும்?” என்றும் வினவினாள்.
முதலமைச்சர் தமது நகைச்சுவையைக் காட்டினார். “மயக்கம்” என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னார்.
“என்னிடம் மயங்கிவிட்டாரா?” மலை அரசியின் கேள்வியில் கேலி இருந்தது.
“ஆம்.”
“உங்கள் இளவரசரைப் பற்றி உங்கள் மதிப்பு அவ்வளவுதான்!”
“அவரைப்பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.”
“அவர் சபலபுத்தியைப் பற்றிச் சொல்கிறீர்கள்? எந்த பெண்ணைப் பார்த்தாலும் பல் இளிக்கும் புத்தி அவருக்கு இருக்கிறதாக்கும்?”
சம்பாஷணை விபரீத வழியில் இறங்குவதைப் பார்த்த முதலமைச்சர், “நான் ஏதும் சொல்லவில்லை” என்று பின் வாங்கினார்.
மலை அரசி அவரை விடவில்லை, “வேறு யார் சொல்கிறார்கள்?” என்று கேட்டாள்.
“மக்கள்” என்ற முதலமைச்சர் “ஒரு காட்டுப் பெண்ணை மரவுரி தரித்தவளை, புரவியில் அமர்த்தி கடிவாளம் பிடித்து சேவகனைப்போல் நடக்கும் இளவரசரை நகர மக்கள் நேரிடையாகப் பார்த்துவிட்டார்கள்” என்றும் கூறினார்.
“அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?” என்று கேட்டாள் மலை அரசி.
இதற்கு சரியாகப் பதில் சொல்லத் தெரியாததால் விழித்தார் முதலமைச்சர்.
மலை அரசியே பேச்சைத் தொடர்ந்தாள். “அமைச்சரே! ஏதோ சூசகமாகப் பேசுகிறீர்களே தவிர, எதையும் ஆராய நீங்கள் முற்படவில்லை. ஜோடா போன்ற ஒரு மகாவீரன் புரவியில் அமர்ந்து ஒரு பெண்ணை நடக்கச் சொல்ல முடியாது. அது அவர் கண்ணியத்துக்கோ, வீரத்துக்கோ, பண்பாட்டுக்கோ அடையாளமாகாது. ஆகையால் இளவரசர் செய்கையை மண்டோர் மக்கள் பாராட்டவே செய்கிறார்கள். அவர்கள் நகரை அலங்கரிக்கும் உற்சாகத்தைப் பாருங்கள். உமது சம்பிரதாயத்தை மூட்டை கட்டிவையும் அமைச்சரே! நாளை நடக்கப்போவதை கவனியும். ஜோடா தனது மூதாதைகள் சிம்மாசனத்தில் அமரும்போது, இந்த அரண்மனை அமங்களமாயிருக்கக்கூடாது அமங்களத்தை மங்களமாகத் திருப்புவதைத் தான் சாஸ்திரம் அனுமதிக்கிறது” என்று உலக நீதியைச் சொன்னாள் மலை அரசி. அத்துடன் கேட்டாள் “முதலமைச்சரே! நீர் அந்தணர்தானே?” என்று.
“ஆம்” என்றார் முதலமைச்சர்.
“தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்கிறீரா?”
“செய்கிறேன்,”
“அக்கினி மூட்டி?”
“ஆம்.”
“அகில் அக்கினி குண்டத்தை நகர்த்தும் போது என்ன சொல்கிறீர்?”
முதலமைச்சர் பிரமையில் ஆழ்ந்ததால் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆகையால் மலை அரசி சொன்னாள். “சேசமாய் புனராகமனாச, அதாவது திரும்பி சுபகாரியத்துக்கு வா என்று சொல்கிறீர். அமங்களத்தை அமங்களமாகவே வைக்கக்கூடாது என்பது சாஸ்திரம். மங்களத்தை அழைப்பதும், அமைப்பதும் சாஸ்திரத்தின் நோக்கம். ஆகவே சொல்வதைக் கேளும். அரண்மனையும் மங்களமாகத் திகழட்டும். அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக நடக்கட்டும்” என்று உத்தரவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
முதலமைச்சர் அப்பொழுதும் அவள் வார்த்தையைக் கேட்கவில்லை. அரண்மனையில் மட்டும் அலங்காரத்தை அனுமதிக்கவில்லை. மறுநாள் மகுடாபிஷேகம் மங்கள தீபங்கள் அற்ற அரண்மனையிலேயே நடந்தது. மகுடாபிஷேக மண்டபத்தில் திரளாக வீரர்கள் வந்திருந்தார்கள். ஆனால், மலை அரசி மட்டும் வரவில்லை. இருமுறை ஜோடா சொல்லியனுப்பியும் அவள் தனது அறையை விட்டு வர மறுத்தாள். ஆகவே மகுடாபிஷேகம் முடிந்து, அரச முடியும் மாலையும் தரித்தவனாய் ராவ் ஜோடாவே மந்திரிப்பிரதானிகளுடனும், பிரதான படைத்தலைவனுடனும் அவள் அறையை அடைந்தான்.
அவன் வந்ததும் மலை அரசி அறை வாயிலில் தோன்றினாள். “மகாராஜா! நீங்கள் மகுடாபிஷேகம் கொண்டது நல்லது. ஆனால் அரண்மனை அதில் பங்கு கொள்ளவில்லை அந்த அமங்களம் எப்படியும் உங்களை பாதிக்கும்” என்று கூறிவிட்டு அவன் நெற்றியில் இடது கையிலிருந்த குங்குமத்தை எடுத்து திலகமாகத் தீட்டினாள்.
ராவ்ஜோடா அவள் முன்பு தலைவணங்கி நின்றான். “மலை அரசி! வருந்தாதே முதலமைச்சர் சகலத்தையும் சொன்னார். சம்பிரதாயங்களை உடைக்க முடியவில்லை அவரால்” என்றும் சொன்னான் அவளுக்கு ஆறுதலாக.
மலை அரசியின் முகத்தில் துன்பம் பரவி நின்றது “சாஸ்திர சம்மதமற்ற சம்பிரதாயம் உடைக்கத் தகுந்தது. அதை இனி நினைத்துப் பயனில்லை. சம்பிரதாயத்தை உடைக்கவில்லை முதலமைச்சர். ஆனால் நாட்டை உடைத்துவிட்டார். இந்த மாரூஸ்தலியில் இன்னும் ரத்தம் அதிகமாக ஓடும்” என்று சொன்னாள். அவள் கண்களில் கனவு படர்ந்தது. “இன்னும் ஒரே நாள்! மீண்டும் ஓடப் போகிறோம்” என்ற மலை அரசி, மன்னன் செல்ல விடை கொடுத்தாள். அறைக் கதவையும் சாத்திக்கொண்டாள்.
மறுநாள் மலை அரசி மண்டோரில் காணப்படவில்லை. அவளைப் பார்க்கச் சென்ற ராவ்ஜோடா அவள் பஞ்சணை மீது புது உடைகள் வைக்கப்பட்டு இருப்பதையும் அவளது புலித்தோலும் மரவுரியும் காணாததையும் கவனித்தான்.
ஜோடாவைத் தொடர்ந்து வந்த ஜகத்சிம்மன் கேட்டான், “மகாராஜா! அந்தப் பெண் எங்கே?” என்று.
“காட்டுக் கிளி பறந்துவிட்டது” என்ற ஜோடாவின் குரலில் துன்பம் மிதமிஞ்சி ஒலித்தது.
அந்தச் சமயத்தில் பஞ்சணையை நோக்கிய ஜகத்சிம்மன் “மகாராஜா! அதோ ஓர் ஓலை இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.
ஓலையை எடுத்துப் பார்த்தான் ஜோடா. அதில் இருந்தது ஒரே வார்த்தை “சுத்த விரதம்” என்ற சொல்லை இரைந்து படித்தான் மார்வாரின் புது மன்னன், திரும்பிப் படைத் தலைவனைப் பார்த்து “நான் மார்வாரை விட்டுச் செல்ல காலம் வந்துவிட்டது. போக வேண்டியதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்று உத்தரவிட்டான்.
“இன்றைக்குத்தானே முடிசூடினீர்கள் மகாராஜா?” என்று முதலமைச்சர் கேட்டார்.
“ஆம் முதலமைச்சரே! இது நிலையற்ற அரசு என்று மலை அரசி மந்திராலோசனையில் சொல்லவில்லையா?” என்றான் ஜோடா.
“சொன்னாள்” என்றார் முதலமைச்சர்.
“தெரியாமல் அவள் சொல்லவில்லை. நமக்குப் புரியாதது அவளுக்கு முன்னோக்கிப் புரிகிறது” என்ற ஜோடா, விடுவிடு என்று அரண்மனையின் அந்தப்புரப் படிகளில் இறங்கிச் சென்றான், புரவிச்சாலையை நோக்கி. “அவளை எப்படியும் பிடித்துவிடுகிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தனது புரவியை அவிழ்த்து அதன் மீது தாவி ஏறினான்.
அதே சமயத்தில் மண்டோரின் வாயிற்கதவுகள் பெரிய சத்தத்துடன் சாத்தப்பட்டன. போர் முரசு பலமாக ஒலித்தது. புரவியில் தாவி ஏறிய ஜோடா புரவியை நகர்த்தவில்லை, அப்படியே மலைத்து நின்றான், கையிலேந்திய கடி வாளத்துடன்.