கழுத்தில் பதித்திருந்த ஈட்டி சற்றும் அசையாமல் இருந்தாலும் அதில் ஒரு திடமும், ஈட்டியைப் பிடித்திருந்தவன் கையில் ஈவு இரக்கமற்ற ஓர் உறுதியும் இருந்ததைக் கவனித்த ராவ்ஜோடா, தான் சிறிது அசைந்தாலும் அந்த ஈட்டி வாழைப்பழத்தில் இறங்கும் ஊசியைப்போல் தனது ஊட்டியில் இறங்கிவிட முடியும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டான்.
எழுந்திருக்க வேண்டாம் என்று எச்சரித்த அந்தக் குரலின் கரகரப்பில் இருந்தே அதன் கடுமையையும் உணர்ந்து கொண்டதால், எதிர்ப்பு எந்தவித பலனையும் அளிக்காது என்பதை உணர்ந்த ஜோடா, சிலைபோல் படுத்துக் கிடந்தானானாலும், அவன் புத்தி மட்டும் வெகு வேகமாக வேலை செய்துகொண்டு இருந்தது.
சந்திரன் உதித்துவிட்டதால் பிருமச்சாரி எந்த விநாடியிலும் விழித்துக்கொள்ளலாம் என்பதும், அப்படி விழித்துக் கொண்டால் வந்தவன் கதி அதோ கதிதான் என்பதும் ஜோடாவுக்குத் தெரிந்தாலும், தனக்கு வந்த அபாயத்தைத் தானே சமாளிப்பதே தனது வீரத்துக்கு அத்தாட்சியாக முடியும் என்பதைத் தீர்மானித்துக்கொண்டான்.
அந்த மனிதன் அடுத்து வார்த்தைகளை உதிர்க்கு முன்பாக மின்னல் வேகத்தில் செயலில் இறங்கினான், ஜோடா.
எதிரி முற்றும் எதிர்பாராத நிலையில் அவன் ஈட்டியைத் தனது இரு கைகளாலும் பிடித்து சற்று உயரத் தூக்கிக் கழுத்தில் இருந்த ஈட்டியை அகற்றியதுடன், வேகமாக மணலில் புரண்டு எழுந்திருக்கவும் முயன்றான்.
ஈட்டி அப்படி வலுவுள்ள இரு கைகளால் நீக்கப்பட்டதை அறிந்த அந்த கறுப்புக் குதிரை வீரன் மேற்கொண்டு எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அவன் புரவி மட்டும் பெரிதாகக் கனைத்து தனது இரு முன்னங்கால்களை மேலே தூக்கி புரண்டுவிட்ட ஜோடாவின் மார்பில் ஒரு குளம்பையும் வயிற்றில் ஒரு குளம்பையும் பதித்து அவனை மீண்டும் எழுந்திருக்க முடியாமல் செய்துவிட்டது. அவனை நோக்கித் தனது முகத்தைத் தாழ்த்தி தனது வெள்ளைப் பற்களை பயங்கரமாகக் காட்டியது.
புரவி தனது ஊட்டியைக் கடித்துக் குதறிவிட முற்படுகிறது என்பதை அறிந்த ஜோடா, ‘இப்படியும் ஒரு ராட்சதப் புரவி உண்டா?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். தன்னைக் கடித்துக் குதற முயன்ற அந்தப்புரவியின் கழுத்தை சரேலெனக் கட்டிக்கொண்டு எழுந்திருக்கவும் முன்றான் ஜோடா. ஆனால், புரவி எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை. மெள்ள அவன் ஊட்டியைக் கவ்வியும் விட்டது. இனி எமலோகம் தனக்கு வெகு அருகில் வந்துவிட்டதை ஜோடா உணர்ந்தான். “இத்தனைக்கும் அந்தப் பிருமச்சாரி எப்படித் தூங்குகிறார்? அவர் என்ன கும்பகர்ணன் வாரிசா?” என்று எரிந்து விழுந்துகொண்டான், தனக்குள்ளேயே.
அவன் மனதுக்குள் எண்ணியது பிருமச்சாரியின் மனதையும் தொட்டிருக்க வேண்டும். “போதும், ஜோடாவை விட்டுவிடு” என்ற அவர் குரல் கணீரெனக் கேட்டது.
அதைக் கேட்ட மாத்திரத்தில் புரவி சட்டென்று ஜோடாவை விட்டு விலகியது. புரவிமீது அமர்ந்து இருந்தவனும் பெருவியப்பை எய்தி, “யார் ஹர்பாசங்கலா!” என்று பெரிய குரலில் அழைத்துக்கொண்டே புரவியில் இருந்து கீழே குதித்தான்.
பிருமச்சாரி சரேலென்று எழுந்து, “விசித்திரம்! விசித்திரம்! நீ எதற்காக இங்கு வந்தாய், உன் மறைவிடத்தை விட்டு” என்று உற்சாகத்துடன் கூவினார். இப்படிக் கூறிக்கொண்டே எழுந்த வேகத்தில் கரிக்குதிரை வீரனைத் தழுவியும் கொண்டார்.
அந்த இருவரின் தழுவலில் இருந்து புரவியும் ஏதோ தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அது ஜோடாவிடம் இருந்து விலகி நின்றது. தலையைத் தூக்கி, தழுவி நின்ற இருவரையும் பார்த்து ஒருமுறை பெரிதாகக் கனைத்தது. அந்தக் கனைப்பு புரவியின் நகைப்பாகத் தெரியவில்லை. யாரோ ஒரு ராட்சதன் நகைப்பதுபோல், பாதி மனிதக்குரலும் பாதி மிருகக் குரலுமாக மிகப் பயங்கரமாயிருந்தது ஜோடாவின் காதுக்கு.
ஆனால், தழுவி நின்ற இருவரும் புரவியையோ அதன் கனைப்பையோ கவனித்ததாகத் தெரியவில்லை. சற்று நேரம் இறுகத் தழுவி நின்ற பிறகு விலகிய இருவரில் பிருமசாரியே பேசினார். “பாபுஜி! நான் உனக்கு எழுதியனுப்பியதில் தவறு ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்.
“பிருமச்சாரி போடும் எடையில் ஏதாவது தவறு இருக்குமா?” என்று கேட்ட பாபுஜி, அப்பொழுதுதான் எழுந்து உடையிலிருந்த மணலைத் தட்டிக்கொண்டிருந்த ஜோடாவை, நன்றாக எழுந்துவிட்ட சந்திர வெளிச்சத்தில் கவனித்தார். நன்றாகக் கன்னம் புடைத்திருந்தாலும் கரிய புருவங்களின் அளவுக்கு மீறிய அடர்த்தியாலும், நுதலும் சற்றே மேடிட்டு இருந்ததாலும் சின்னஞ்சிறிதாக இருந்த பாபுஜியின் கண்கள் ஜோடாவை நன்றாக அளவெடுத்தன. திருப்திக்கு அறிகுறியாக அவர் தலையும் அசைந்தது. “வீரன்தான், சந்தேகமில்லை” என்று சற்று இரைந்தே சொன்னார் அவர். பிறகு எட்ட நின்றிருந்த பிருமச்சாரியின் புரவியையும் ஜோடாவின் புரவியையும் கவனித்த பாபுஜி “இவை இரண்டும் உங்கள் புரவிகளா?” என்று வினவினார். அவர் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது. “இவையா உங்களைத் தாங்கி வந்தன?” என்று இரண்டாவது கேள்வியையும் வீசினார் பாபுஜி.
“ஆம்” என்றார், பிருமச்சாரி.
“இந்தப் பாலைவன மணலில்?” என்று வினவினார் பாபுஜி இகழ்ச்சியுடன்.
“ஆம். ராஜபுதனமே பாலைவனந்தானே?” என்றார் பிருமச்சாரி.
“அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்” என்றார் பாபுஜி.
“மணலைச் சொல்லவில்லை.” பிருமச்சாரியின் குரல் சர்வ சாதாரணமாயிருந்தது.
“வேறு எதைச் சொல்கிறீர்?”
“ராஜபுதனத்தின் மனதைச் சொல்கிறேன்.”
“அதற்கென்ன கெடுதல் வந்துவிட்டது?”
“கருணை என்ற நீர் அதில் சிறிதளவும் இல்லை. வீரர்கள் ஓடுபவர்களை விரட்டுகிறார்கள்.”
“ஏன் ஓட வேண்டும்? வீரனாயிருப்பவர் திரும்பி எதிர்க்க வேண்டியதுதானே?”
“திரும்பிப் போரிடுவதும் அல்லாததும் எண்ணிக்கையையும் பொறுத்தது.”
“அல்ல; துணிவைப் பொறுத்தது. என்னிடம் இருக்கும் இருநூறு வீரர்கள் எந்தக் கோட்டையையும் பிடித்து அழித்துவிடுவார்கள்.”
“இருநூறு பேரை வைத்துக்கொண்டு கோட்டையைப் பிடிக்க முடியுமா? வெட்டிப்பேச்சு” என்றார் ஹர்பாசங்க்லா.
“சந்தர்ப்பம் வரட்டும் காட்டுகிறேன்!” என்றார், பாபுஜி.
சற்று நிதானித்தார் ஹர்பாசங்க்லா. பிறகு சொன்னார், “சந்தர்ப்பம் வந்திருக்கிறது” என்று. இதைச் சொல்லி ஜோடாவை நோக்கிக் கையையும் நீட்டினார்.
பாபுஜியின் முகத்தில் தீவிர சிந்தனை படர்ந்தது. “இவர்தான் ராவ்ஜோடாவா?” என்று வினவினார். அந்தக் கேள்வியில் வெறுப்பு பெரிதும் மண்டிக் கிடந்தது.
“ஆம்.” அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை ஹர்பா சங்க்லா.
“தோற்று ஓடியவர் ஏன் உதவியை நாடி வந்திருக்கிறார்” என்று வினவினார் பாபுஜி.
“தோற்காதவர்கள் உங்கள் உதவியை நாடிவர அவசியம் என்ன?” என்று கேட்டார் பிருமச்சாரி.
கடைசியாக ஒரு கேள்வி கேட்டார் பாபுஜி, “இவர் பக்கத்தில் என்னைச் சேர்க்க வந்திருக்கிறீர்?” என்று.
“ஆம்.”
“இவனிடம் தர்மம் இருக்கிறதா?”
“இருக்கிறது.”
“வீரம் இருக்கிறதா?”
“இருக்கிறது.”
“தர்மமும் வீரமும் உள்ள இடத்தில் வெற்றியும் இருக்க வேண்டுமே?”
“அவசியமில்லை. சந்தர்ப்பங்கள் எந்த வீரனுடைய வாழ்க்கையையும் நசிக்கச் செய்யும்” என்ற பிருமச்சாரி பாபுஜியை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார்.
பாபுஜி நீண்டநேரம் சிந்தனை வசப்பட்டு நின்றார். “சரி, எதற்கும் இவனுக்கு நாளைக் காலையில் பரீட்சை வைப்போம்” என்று சொன்னார்.
இதை அனுமதிக்கவில்லை பிருமச்சாரி. “இப்பொழுது நீங்கள் நடத்திய பரீட்சை போதாதா?” என்று கேட்டார்.
“போதாது” என்று பாபுஜி சொன்னார்.
“என்ன! உறங்கியிருந்தவன் கழுத்தில் ஈட்டியை ஊன்றினீர். அதிலிருந்து தப்பினான். அந்தக் கறுப்பு ராட்சதன் பற்களால் இவன் கழுத்தை கடிக்க முயன்றான். அதையும் சமாளித்தான். உங்களைப் போன்ற இரு ராட்சதர்களைச் சமாளித்தது போதாதா?” என்று எரிச்சலுடன் கேட்டார் பிருமச்சாரி.
“போதாது. ஈட்டியில் இருந்தும் கிருஷ்ணனிடம் இருந்தும் தப்பியது லாகவத்தைக் குறிக்கிறது. வீரத்தைக் குறிக்கவில்லை. இவனுக்குப் பரீட்சை வைத்துத்தானாக வேண்டும்” என்று கண்டிப்பாகச் சொன்னார் பாபுஜி.
அதுவரை வாளாயிருந்த ஜோடா “பாபுஜி! எந்தப் பரீட்சைக்கும் தயாராக இருக்கிறேன்” என்றான், அவர்கள் உரையாடலில் இடைபுகுந்து.
“அதைவிட நீ இங்கேயே பிராணனை விடலாம்” என்று எச்சரித்தார் பிருமச்சாரி.
“அப்படியென்ன அபாயப் பரீட்சை?” என்று வினவினான், ஜோடா.
“நூறு குழந்தைகளில் ஒரு முரட்டுக் குழந்தையுடன் உன்னை விளையாட விடுவார்” என்றார் சங்க்லா.
“அது எனக்கு மகிழ்ச்சிதான்” என்றான் ஜோடா.
“விஷயம் புரியாமல் உளறாதே. நூறும் நூறு எமன்” என்று சுட்டிக் காட்டினார் பிருமச்சாரி.
“அதனால் பாதகமில்லை” என்றான் ஜோடா.
அதற்குப் பிறகு மௌன விரதத்தைக் கடைப்பிடித்தார் பிருமச்சாரி. ஏதும் பேசாமல் தமது புரவியிருந்த இடத்துக்குப் போய் அதன் மீது தாவி ஏறினார்.
அவர் வழியை ஜோடாவும் பின்பற்ற, பாபுஜியும் “கிருஷ்ணா! வா! வீட்டுக்குப் போவோம்” என்று தமது கரிய புரவியை அசைத்து அதன் மீது ஏறிக்கொண்டார். மூவரும் சற்று தூரத்தில் இருந்த மலைக்காட்டை நோக்கிச் சென்றனர்.
வழியில் யாரும் பேசவில்லை. விடிய சிறிதுநேரம் இருக்கையில் மலைக்காட்டுக்குள் புகுந்த மூவரும் தொடர்ந்து பயணம் செய்தனர். மரங்கள் மிக அடர்த்தியாயிருந்தன. எங்கும் பறவைகளின் ஓசை ஒலித்தது. அதற்கும் மேலாக புயல் போல் பெரிய சத்தம் கேட்டது. மலைச்சரிவில் இருந்து “ஜோடா” என்ற பெரிய பயங்கர ஒலி மூவர் காதிலும் விழுந்தது. பாபுஜி மட்டும் பேசினார், “குழந்தைகள் நம்மை எதிர்கொள்ள வந்துவிட்டன” என்று.
இதைச் சொன்ன பாபுஜி பெரிதாக நகைத்தார். அந்த நகைப்பு மலையின் பல பகுதிகளில் தாக்கியதால் பெரிதாக எதிரொலி செய்து, ஜோடாவின் காதில் மிகப் பயங்கரமாக விழுந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விபத்து நேர்ந்துவிட்டது. ஜோடா தனது புரவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான். பல கால்கள் அவனை மிதித்துத் துவைத்துவிட முயன்றன. ஜோடா ஒழிந்தான் என்றே நினைத்தார் பிருமச்சாரி.