மண்டோர் அரசின் முதலமைச்சராயிருந்து, சந்தசிம்மன் ஆக்கிரமிப்புக்குப் பின்பு அந்தப் பதவியில் இருந்து விலகி, அரண்மனையில் தமக்கு முன்னாள் மன்னனால் அளிக்கப்பட்டு இருந்த இடத்தையும் சந்தசிம்மனிடம் ஒப்புடைத்துவிட்டு, வணிகர் வீதியில் இருந்த ஒரு சாதாரண வீட்டில் குடியேறிவிட்ட பெருமகன், இரவு ஏறிவிட்ட பிறகும் தூக்கம் வராமல் தமது படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.
மண்டோரின் பழைய நிலைமையையும் சிறப்பையும், மேவாரயும் இணைத்துவிட வேண்டும் என்ற பேராசையில் சொந்த அரசையும், உயிரையுங்கூட துறந்த ராவ் ரின்மல் மகாவீரனான ஜோடாவின் பிற்காலத்தையும் பாழ்படுத்திவிட்டுச் சென்றதை நினைத்து ஏங்கிக்கொண்டு இருந்தார். அவரது ஏக்கமும் தூக்கமின்மையும் அவர் பக்கத்தில் படுத்திருந்த அவரது வயோதிக மனைவிக்கும் புரிந்திருந்ததால், அவள் சொன்னாள் மெதுவாக, “மேவார் சிங்கங்கள் இரண்டு மண்டோரை ஆளுகின்றன. நீங்கள் உறக்கம் விழித்தால் உடம்புதான் கெடும். மண்டோர் உருப்படாது” என்று.
பெயருக்கு மூடியிருந்த கண்ணை விழித்த முதன் மந்திரி மோட்டுவளையை நோக்கினார்.
அதைக் கவனித்த மனைவி சொன்னாள் “இரவு உச்சியைத் தாண்டிவிட்டது” என்று.
“அதனால் என்ன?” என்று வினவினார் முதல்வர்.
“நாளை நாம் ஏழைகளுக்கு அன்னம் அளிக்கும் நாள். விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும்” என்று சுட்டிக் காட்டினாள்.
இதைக் கேட்ட முதல்வர் பெருமூச்செறிந்தார். “சந்தினி! இந்த ஒரு வருடம் அதை நிறுத்திக்கொண்டால் என்ன?” என்று வினவினார்.
குழப்பம் மிகுந்த கண்களை மூதாட்டி கணவன்மீது திருப்பினாள். “ஏன் நிறுத்த வேண்டும்?” என்று கேட்டாள்.
“இப்பொழுது நம்மிடம் பணம் ஏது, பழையபடி உணவளிக்க?” என்று வினவினார்.
“அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் ஏற்பாடு செய்துவிட்டேன்” என்றாள் மூதாட்டி.
பெருவியப்பாக இருந்தது முதல்வருக்கு. “எப்படி ஏற்பாடு செய்தாய்? என் பதவிக்கு உண்டான மகர கண்ட தங்கக் கேடயம் எல்லாவற்றையும் சந்தசிம்மன் மக்களிடம் ஒப்படைத்துவிட்டேனே” என்று வினவினார்.
“எனது சீதன நகைகள் எங்கு போயின?” என்று மூதாட்டி வினவினாள்.
முதல்வரின் முகத்தில் கோபம் துளிர்த்தது. “அவற்றை யார் விற்கச் சொன்னது உன்னை?” என்று சீறினார். படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.
“விற்கவில்லை. என்னுடைய ஆபரணத்தை மட்டும் அடகு வைத்தேன்.”
“அதற்கு என்ன பிரமாத பணம் கிடைத்துவிடப் போகிறது?”
“ஆயிரம் மோகராக்கள் வாங்கி வந்திருக்கிறேன்.”
“ஆயிரம் மோகராக்களா! எந்த மடையன் கொடுத்தான் ஆயிரம் மோகராக்கள் ஓர் ஆபரணத்துக்கு?”
“நமது வணிகர் வீதியில் பெரிய கடை சாவுகார் இல்லையா?”
“ஆம் அவரா கொடுத்தார்? எப்படிக் கொடுத்தார்? பெரிய கஞ்சன் ஆயிற்றே!”
“என்னவோ கொடுத்தார். நல்ல காரியம், பாதகமில்லை, எடுத்துப் போங்கள் என்று சொன்னார்.”
“இதில் ஏதோ சூது இருக்கிறது. நாளை விசாரிக்கிறேன்” என்ற முதலமைச்சர் படுத்தார். சிறிது நேரத்தில் அலுப்பால் கண்ணயர்ந்தார்.
மறுநாள் காலையில் வீட்டிலும் வீட்டுக்கு எதிரிலும் கேட்ட பேரிரைச்சலால் கண்விழித்து சாளரத்தின் மூலம் வெளியே பார்த்தார்.
வீட்டுக்கு எதிரில் ஏரானமான பிச்சைக்காரக் கும்பல் நின்றிருந்தது, முதல்வர் வேகமாக எழுந்து நீராடி காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தார். இரண்டு பெரிய அண்டாக்களில் சப்பாத்திகளும் இன்னொரு பாத்திரத்தில் பருப்புக்கறி வகையறாக்களும் தயாராக இருந்தன.
முதல்வர் ஓர் அண்டாவின் பக்கத்தில் நின்றுகொண்டார். அன்று வெள்ளிக்கிழமை விரதத்தை விடியற்காலையில் முடித்து நல்ல குங்குப் பொட்டுடனும் தலையில் குழல் வகிட்டில் நீட்டித் தீட்டப்பட்ட குங்குமக் கோட்டுடனும் மகாலட்சுமிபோல் காட்சியளித்த அவர் மனைவி பக்கத்துப் பாத்திரத்தில் இருந்த பருப்புக்கறியை எடுக்க தனது கையில் ஒரு சிறு கரண்டியை ஏந்திக் கொண்டாள். திண்ணையில் நறுக்கி வைக்கப்பட்டு இருந்த இலைகளை ஒவ்வொரு பிச்சைக்காரராக எடுத்துக்கொண்டு முன்னே வர, முதல்வர் அண்டாவில் இருந்த ரொட்டிகளை இரண்டு இரண்டாகக் கொடுக்க, அவற்றின் மீது கரண்டியால் “தாலை” எடுத்து மூதாட்டி வைக்க, வெள்ளி விரத தர்மம் தொடங்கிற்று.
வந்த பிச்சைக்காரர்கள் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டு வந்துங்கூட பொறுமை இழக்காமல் அந்த வயோதிக தம்பதிகள் தர்மம் செய்தனர். அந்தப் பிச்சைக்காரர்களில் ரொம்ப குடு குடு கிழவராக இருந்த ஒருவன் மற்றவர்களின் இடிகளைத் தாங்க முடியாமல் விழுந்து மிதிபட இருந்தான்.
முதல்வர் சட்டென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவனை நோக்கி விரைந்து மெள்ள அவனைத் தூக்கி வந்து திண்ணையில் உட்கார வைத்தார். அங்கேயே இலையைப் போட்டு இரண்டு சப்பாத்திகளை வைத்து பருப்யையும் தாமே வைத்தார். இருந்தும் அவனால் உண்ண முடியவில்லை. நரைத்த தாடியும் தலைமுடியும் சுருக்கங்கள் நிறைந்ததால் கிழக்கண்கள் பஞ்சடைந்த நிலையில் இருந்த அந்தக் கிழவன் உணவைத் தொடவில்லை. அப்படியே மயக்கமுற்று சாய்ந்து விட்டான். அவன் கண்களைப் பிரித்துப் பார்த்தார் முதல்வர். கண்கள் சரியாகத் திறக்க முடியவில்லை.
அங்கு இருந்த ஒருவனை அழைத்து “மருத்துவரைக் கூப்பிட்டு வா” என்று கூறிய முதல்வர் மிகத் துரிதமாக சப்பாத்திகளைக் கொடுத்தார். அப்படியும் கிட்டத்தட்ட நடுப்பகலில்தான் அந்த தர்ம கைங்கர்யம் முடிந்தது. அதற்கு வெகுநேரம் முன்பே வந்துவிட்ட மருத்துவர் அந்தக் கிழவனை இருவரை விட்டு தூக்கி வரச்சொல்லி அந்த விடுதியின் கூடத்துக்கு எடுத்துச் சென்று பக்கத்தில் இருந்த ஓர் அறையில் அவனைப் படுக்க வைத்தார். பிறகு தாதுவைப் பார்த்தார் நீண்ட நேரம். “இவன் வயதுக்கு தாது பலமாகத்தான் இருக்கிறது” என்று கூறி அவனை நிம்மதியாகப் படுக்கவிட்டார்.
அதற்குள் உள்ளே வந்த முதல்வர் மனைவியை சிறிது நீர் கொண்டுவரச் சொல்லி “மருத்துவரே! இதைப் புகட்டலாமா?” என்று வினவினார்.
“கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டுங்கள். திடீர் என்று விக்கினால் கஷ்டம்” என்ற மருத்துவர் பாத்திரத்தைத் தாமே வாங்கி சிறிது சிறிதாக நீரைப் புகட்டலானார்.
நான்கு வாய் நீரை விழுங்கியதும் சற்று கண்ணை விழித்த அந்தக் கிழவன் மிரள மிரள விழித்தான்.
“பேசாமல் படுத்திரு. இன்னும் ஒரு மணி நேரத்தில் கொஞ்சம் சுரணை வரும். அப்புறம் உணவு அருந்தலாம்” என்றார் மருத்துவர்.
கிழவன் பதில் பேசவில்லை. தனது கையைப் பக்கவாட்டில் துழாவினான். “என்ன தேடுகிறாய்?” என்று மருத்துவர் வினவினார்.
“என்...” என முக்கிய கிழவன் பிறகு சமாளித்துக்கொண்டு “என் ரொட்டி...” என்று முனகினான்.
“அட தரித்திரப் பிணமே, உன் ரொட்டி எங்கும் போகாது, சற்று இளைப்பாறு” என்று எரிந்து விழுந்தார் மருத்துவர். பிறகு தனது பையில் இருந்து ஒரு குளிகையை எடுத்து நீரில் இழைத்து “முதல்வரே! இதை இவன் நாக்கில் தடவுங்கள்” என்றார். பிறகு, “இவன் அழுக்கு ஆடைகளை அகற்றுங்கள். இவன் இருக்கிற அழகுக்கு கிழிந்த அங்கி வேறா? அதையும் கழற்றுங்கள்” என்றார்.
முதல்வர் கழற்றத் துவங்கினார். அடுத்த விநாடி கிழவனின் இரும்புக் கைகள் முதல்வரின் கைகளைச் சிறை செய்தன. “அங்கியைக் கழற்ற வேண்டாம். கதவை மூடுங்கள்” என்று ஆணையிட்டான் கிழவன்.
முதல்வர், மருத்துவர் இருவருமே திகைத்தார்கள். அந்தக் குரல் இருவருக்கும் புதியது அல்ல. இருவரும் ஏதோ பேச வாயெடுத்தார்கள். பேச வேண்டாம் என்ற எச்சரிக்கை அவன் கண்களில் இருந்து வந்தது. பஞ்சடைந்த கண்கள் பளிச்சிட்டன. முதல்வர் வேகமாகக் கதவைத் தாளிட்டார். ஜோடா எழுந்து உட்கார்ந்துகொண்டான். “இன்று நல்ல நாள், அதனால்தான் வந்தேன்” என்றான்.
முதலமைச்சர் முகத்தில் கிலி விரிந்தது. “எப்படி வந்தீர்கள்? ஏன் வந்தீர்கள்?” என்று வினவினார் முதல்வர்.
“மிகுந்த அபாயம்,” என்றார் மருத்துவர்.
ஜோடா மிக நிதானமாகப் பேசினான். “மனிதனுடன் அபாயம் பிறக்கிறது. சிலர் அதை நினைத்து அஞ்சிச் சாகிறார்கள். சிலர் அதை அலட்சியப்படுத்தி கடமையைப் புரிகிறார்கள். அது கிடக்கட்டும். இப்பொழுது மண்டோர் நிலைமை என்ன?” என்று கேட்டான்.
“மக்கள் அடங்கிக் கிடக்கிறார்கள். மேவார் படைவீரரின் ஐரூர் மக்களை அடக்கி வைத்திருக்கிறது” என்றார் முதல்வர்.
“நல்லது. மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?” வினவினான் ஜோடா.
“இல்லை. அடிமை மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” என்ற முதலமைச்சர் வருத்தம் கலந்த குரலில் கூறினார்.
“மிக நல்லது, முதலமைச்சரே! மக்களில் முக்கியமானவர்களை அழைத்து ஊரில் சிறிது அமைதியின்மையை ஏற்படுத்தும். அடுத்த பவுர்ணமி அன்று நான் இங்கு வருவேன்” என்ற ஜோடா, “மருத்துவரே! அரண்மனைக்கு இப்பொழுதும் நீர்தான் மருத்துவரா?” என்று மருத்துவரை நோக்கி வினவினான்.
“இந்த ஊரில் வேறு மருத்துவர் ஏது?” என்று பெருமையுடன் மருத்துவர் சொன்னார். அத்துடன் விடவில்லை. “நாளடைவில் கொல்லும் விஷம் இருக்கிறது. சந்திசிம்மன் புதல்வர்களுக்கு அதைக் கொடுக்கட்டுமா?” என்று வினவினார்.
ஜோடா அவரைக் கோபத்துடன் பார்த்தான். “மருத்துவரே! சந்தசிம்மனின் மக்கள் மகாவீரர்கள். அவர்களை அதர்ம வழியில் அழிக்க நான் விரும்பவில்லை. நான் விரும்புவது ஒன்றுதான். எனது படைகள் இங்கு வரும் போது உள்ளிருக்கும் மக்கள் எழ வேண்டும்” என்று கூறினார்.
“அதற்கு தனி முயற்சி தேவையில்லை. இப்பொழுதே மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள்” என்றார் முதல்வர்.
ஜோடா மீண்டும் படுத்துக்கொண்டான். “என்னை இப்படியே தூக்கிப்போய் பெரிய சாவுகாரின் வீட்டில் விட்டு விடுங்கள்” என்றான்.
முதல்வர் நகர்ந்துகொண்டார். வேறு ஏதும் சொல்லாமல் ஆள்களை விட்டு பெரிய சாவுகாரின் வீட்டில் ஜோடாவைக் கொண்டு சேர்த்தார். சாவுகார் அந்தப் பிச்சைக்காரனை தமது பள்ளியறைக்குக் கொண்டுவரச் சொல்லி பஞ்சணையில் படுக்க வைத்தார்.
அதற்குள் இரவும் வந்தது. அரண்மனையில் காந்தோஜியின் முன்பு நின்றுகொண்டு இருந்த வீரன் ஒருவன் “ஆம், மகாராஜா! நானே பார்த்தேன்” என்றான்.
“பிச்சைக்காரனை பெரிய சாவுகார் பஞ்சணையில் படுக்க வைத்தாரா?” என்று வியப்புடனும் சந்தேகத்துடனும் வினவினான் காந்தோஜி.
“ஆம்” திட்டமாக வந்தது வீரன் பதில்.
இதைக் கேட்ட காந்தோஜி, “மஞ்சாஜி! மஞ்சாஜி!” என்று இரு முறை குரல் கொடுக்க, மஞ்சாஜி பக்கத்தில் இருந்து விரைந்து வந்தான்.
“என்ன அண்ணா?” என்று வினவினான்.
“வாளை எடுத்துக்கொள்.”
“எதற்கு?”
“பெரிய சாவுகாரைப் பார்க்க வேண்டும்.”
மஞ்சாஜி பதில் ஏதும் சொல்லவில்லை. சிறிது நேரத்திற்கெல்லாம் இரு இளவல்களும் சாவுகார் இல்லத்தை நோக்கிச் சென்றனர். “தம்பி! சாதாரணமாக நடந்துகொள். நம்மை சாவுகார் சந்தேகிக்கக்கூடாது” என்றான்.
இருவரும் சாவுகார் வீட்டை அடைந்ததும் கதவை மெதுவாகத் தட்டினார்கள்.
“யாரது?” உள்ளிருந்து சாவுகாரின் குரல் கேட்டது.
“முதலமைச்சர், சத்தம் வேண்டாம்” என்று குரல் மாற்றிப் பேசினான் மஞ்சாஜி.
சாவுகார் மெள்ள கதவைத் திறந்தார். அடுத்த விநாடி காந்தோஜியின் குறுவாள் அவர் கழுத்தில் அழுந்தியது.
“சத்தம் செய்ய வேண்டாம். முன்னே செல்லுங்கள்” என்றான் மஞ்சாஜி.