அடர்ந்த அந்த அடவிக்குள் நாலைந்து பங்கஜங்களை நீர்மட்டத்துக்குமேல் காட்டிக்கொண்டிருந்த சிறு வாவியின் கரையில் மலை அரசியும் ஜோடாவும் உட்கார்ந்திருந்த நிலையைக் கண்டதும் இரண்டு பிருமச்சாரிகளும் தங்கள் பிருமச்சாரியத்துக்கு பெரும் ஆபத்து நேர்ந்துவிட்டதை நினைத்து ஒருவரை ஒருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டார்கள்.
வாவிக் கரையில் உட்கார்ந்திருந்த இருவரும் பரஸ்பர பிணைப்பில் இருந்தார்கள்.
அந்த நிலையிலும் ஜோடா மட்டும் தனது தலையை சிறிது விலக்கி, மலை அரசியின் மலர் வதனத்தையும் செங்கமல கன்னங்களையும் சங்குக் கழுத்தையும் தனது உதடுகளால் திரும்பத் திரும்பத் தடவினான். தனது நாசியால் அவள் கமல முகத்தை முகரவும் செய்தான். அவள் கன்னம், கழுத்து, இவற்றின் சுகந்தத்தை அனுபவித்த ஜோடா, “மலை அரசி!” என்று மெதுவாக அழைத்தான்.
“என்ன!” என்று அவள் மிக இரகசியமாக வினவினாள்.
“பெண்களின் உடலில் இத்தனை நறுமணம் இருக்கும் என்று இத்தனை நாள் வரை எனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டு அவள் கழுத்தில், முகம் பூராவையும் புதைத்துக்கொண்டு, இடையை இறுக்கிய இடக்கையால் அதற்குமேல் எதையோ தேடினான்.
மலை அரசியின் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. “உம்!” என்று அதட்டினாள்.
“என்ன மலை அரசி!” கழுத்தில் இருந்த உதடுகள் திறந்து சொற்களை உதிர்த்ததால் அவள் இன்ப இம்சை அதிகமாயிற்று.
“உங்கள் கை...” என்று தடுமாறினாள் மலை அரசி.
“அதற்கென்ன?”
“என்ன தேடுகிறது?”
“எனக்குத் தெரியாது.”
“உங்கள் கைதானே அது?”
“எது என் கை, என்ன செய்கிறது என்று எனக்கே தெரியவில்லை.”
இதைக் கேட்ட மலை அரசி அவன் முகத்தில் தன் கழுத்தை நன்றாக அழுத்தி “தெரியாது, தெரியாது. எப்படித் தெரியும்?” என்று முனகினாள்.
அந்த முனகல் அவனுக்குச் சங்கீதமாயிருந்தது. அவன் எதுவுமே பேசவில்லை. தலையை கழுத்திலிருந்து அகற்றி அவள் கண்களைச் சந்திக்க முயன்றான். அந்தக் கண்கள் திறக்கவில்லை. அந்தி வேளை பங்கஜங்கள் போல் மூடிக் கிடந்தன. முகம் பூராவிலும் ஏதோ ஒரு சாந்தியும் வேட்கையும் கலந்த சாயை படர்ந்து கிடந்தது. ஜோடா அவளை நன்றாகத் தன்னை நோக்கித் திருப்பி அவள் கழுத்துக்குச் சிறிது கீழே முகத்தை வேகமாகப் பதித்தான். அவள் உடல் நடுங்கியது. ஆனால், அவள் கவர்ச்சிப் பிரதேசங்களின் உச்சி அவன் முகத்தை நோக்கி அழுந்தவே செய்தது.
அந்த அழுத்தம் அவனுக்குத் துணிவை அளித்திருக்க வேண்டும். ஜோடாவின் வலது கை ஆராய்ச்சியில் இறங்கியது. அவன் இடது கைவிரல்களும் வலது கைவிரல்களும் இணைந்து அவளை இறுக்கிச் சிறை செய்தன. சிறையிலும் இன்பம் உண்டு என்பதை மலை அரசி புரிந்து கொண்டாள்.
அன்றுவரை அவளுக்கு இருந்த திடசித்தம் எங்கோ பறந்து பலவீனத்துக்கு இடங்கொடுத்தது. ஜோடாவின் கையில் தான் ஈரக்களி மண் என்பதை அவள் உணர்ந்தாள். அவன் தன்னை எப்படி வேண்டுமானாலும் உருட்டலாம் துவைக்கலாம் என்பது அவளுக்கு சந்தேகமறத் தெரிந்தது. அவன் கைகளை அவள் வேகமாக ஒதுக்கினாள். தலையைக்கூட தனது மார்பகத்தைவிட்டுப் பலவந்தமாகப் பிடித்துத் தள்ளினாள். பிறகு தரையில் மெல்ல மல்லாந்து படுத்தாள். வாவிக்கரையில் தழைத்துக் கிடந்த ஒரு முல்லைக் கொடியின் மலர்கள் அவள் மீது விழுந்தன.
ஜோடா அவளை நோக்கிக் குனிந்தான். அவள் மீது கிடந்த முல்லை மலர்களைப் பொறுக்கி முகர்ந்தான். “மலை அரசி! இந்த மலர்கள் உன் மீது விழுந்ததால் அதிகமாக நறுமணத்தைக் கொடுக்கின்றன” என்றான்.
அவள் பதில் கூறவில்லை. கண்களையும் திறக்கவில்லை. ஜோடா அவள் கன்னங்களை வருடினான். அவளை லேசாக ஒருக்களிக்கும்படிப் புரட்டினான். இடைக்குக் கீழிருந்த திண்ணிய எழுச்சியில் இடதுகையை ஊன்றி, வலதுகையை அவள் உடலுக்குக் குறுக்கே போட்டு அவளை நோக்கிக் குனிந்து “மலை அரசி!” என்று அவள் காதுக்கருகில் மெதுவாக அழைத்தான்.
“உம்” என்று உம் கொட்டினாள் மலை அரசி.
“நீ படுத்திருக்கிற நிலை...” என்றான் ஜோடா.
“அதற்கென்ன?”
“சகுந்தலைமாதிரி இருக்கிறது.”
“நீங்கள்தான் சகுந்தலை ஆக்கினீர்கள்.”
“நானா?”
“ஆம். என்னைப் புரட்டி ஒருக்களிக்க வைத்திருக்கிறீர்கள்.”
ஜோடா புன்முறுவல் கொண்டான். “நாடகத்தை மாற்றுகிறாய் மலை அரசி. துஷ்யந்தன் திருப்பவில்லை சகுந்தலையை. அவளே திரும்பிப் படுத்திருந்தாள், தாமரை இலையில் ஓலை தீட்ட. அந்தச் சந்தர்ப்பமே வேறு” என்று காளிதாசன் நாடகத்தை அவிழ்த்தான் ஜோடா.
“இருக்கலாம்” என்று மலை அரசி நகைத்தாள். முகத்தை லேசாகத் திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவள் உதடுகளின் ஈரம், அந்த உதடுகளை நீரோட்ட முள்ள சிவப்பு கற்கள் போல் அடித்திருந்தன. அவள் திரும்பித் தரையில் படுத்திருந்ததால் ஒரு கன்னத்தில் ஒரு சிறு கல் லேசாகப் பதிந்து அந்த இடத்தை மட்டும் சிவக்க அடித்திருந்தது. அதைக் கண்ட ஜோடா பதறினான்.
“மலை அரசி! இது என்ன?” என்று அந்த இடத்தைத் தொட்டான்.
“ஒன்றுமில்லை, சிறு கல் குத்தியது” என்றாள் மலை அரசி.
“வேறு எங்காவது குத்தியிருக்கிறதா, பார்க்கட்டுமா?” என்று அவள் விலாப்புறத்திலும் கீழேயும் வலது கையால் தடவினான்.
“எங்கும் எதுவும் குத்தவில்லை. சும்மா இருங்கள். உங்கள் திருட்டுத்தனம் எனக்குத் தெரியும்” என்ற மலை அரசி சற்று திரும்பி சட்டென்று எழுந்திருக்க முயன்றாள்.
அவளை எழுந்திருக்க விடாமல் பிடித்துப் படுக்க வைத்த ஜோடா “என்ன அவசரம் இதற்குள் மலை அரசி?” என்று கேட்டான்.
“உங்களுக்கு என்ன அவசரம் இதற்குள்?” என்று மலை அரசி கேட்டாள்.
“எதைக் கேட்கிறாய்?”
“உங்கள் மனதைக் கேளுங்கள் தெரியும்”
மனதைக் கேட்க அவசியமே இல்லை ஜோடாவுக்கு. இருவருக்குமே தங்கள் நிலைகளின் காரணம் தெரிந்திருந்தது. அப்பொழுது திடீரென ஒரு சந்தேகம் வரவே ஜோடா அவளைக் கேட்டான், “மலை அரசி, எனக்கு ஒரு சந்தேகம்” என்று.
“என்ன சந்தேகம்?” என்று கேட்டாள் அவள்.
“இத்தனை நாள் நீ என்னை ஜோடா என்று பெயர் சொல்லி அழைத்தாய். நீ, போ என்று ஏக வசனத்தில் கூப்பிட்டுக் கொண்டிருந்தாய்” என்று அவன் சொன்னான்.
“ஆமாம்” என்றாள் அவள், இதழ்களில் முறுவல் கொட்டி.
“இப்பொழுது நீங்கள், போங்கள், என்று மரியாதையில் திரும்பிவிட்டாயே.”
“அதை கவனிக்கவில்லை நான்.”
“ஒன்று சொன்னால் கேட்பாயா மலை அரசி?”
“சொல்லுங்கள்.”
“இனிமேல் பழையபடி அழைக்கவேண்டும்.”
“முடியாது.”
“ஏன் முடியாது?”
“நாலுபேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”
“இதற்கு முன்பு என்ன நினைத்தார்கள்?”
மலை அரசி நகைத்தாள், “அப்பொழுது நிலை வேறு” என்றாள்.
“எந்த நிலை?”
“நமது பரஸ்பர உறவு.”
“இப்பொழுது மாறிவிட்டதா என்ன?”
“மாறாமலா இத்தனை நேரம்....” மலை அரசி சொற்களை முடிக்கவில்லை. ஜோடா எழுந்தான் உட்கார்ந்த நிலைவிட்டு. அவளை அப்படியே இரு கைகளாலும் தூக்கினான்.
மலை அரசிக்கு பழைய முரட்டுத்தனம், இயற்கைக் குணம் எங்கிருந்தோ திரும்பிவிட்டது. “ஜோடா! விடு என்னை” என்று கூவினாள்.
“விடாவிட்டால் என்ன செய்வாயாம்?” என்று கேட்டான் ஜோடா.
“கத்துவேன்” என்றாள் மலை அரசி.
“கத்து” என்றான் ஜோடா.
“கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று கூவினாள் மலை அரசி.
“நான் என்ன துச்சாதனனா? நீ என்ன திரௌபதியா? எந்த கிருஷ்ணனும் இங்கு வரமாட்டான்” என்று கூறிக்கொண்டே நடக்க முயன்றான் ஜோடா.
அடுத்த விநாடி அவன் அதிர்ச்சியடைந்து நின்றான். கிருஷ்ணன் தன் பெரிய பற்களைக் காட்டிக்கொண்டு சற்று எட்ட நின்றிருந்தது. பெரிதாக ஒரு கனைப்பு கனைத்துக்கொண்டு கால்களை நிலத்தில் கீறிவிட்டு அவனை நோக்கி சீற்றத்துடன் நடந்து வந்தது. அருகில் வந்ததும் அவன் முகத்தை நோக்கி வாயை உயர்த்தியது. அடுத்த விநாடி ஜோடாவின் முகச்சதைகள் பிய்ந்து இருக்கும். மலை அரசி இடைபுகுந்து “வேண்டாம் கிருஷ்ணா! அவரை ஒன்றும் செய்யாதே” என்று கதறினாள்.
கிருஷ்ணன் திறந்த வாயை மூடாது முகத்தை மலை அரசியின் முகத்தை நோக்கித் திருப்பி அதை முகர்ந்தது செல்லமாக.
“ஜோடா! பார்த்தாயா?” என்று கேட்டாள் மலை அரசி.
“மிருகம் உன் முகத்தை முகர்கிறது” என்று அலுத்துக் கொண்டான் ஜோடா.
“நீயுந்தான் சற்றுமுன் முகர்ந்தாய். நீயும் மிருகந்தானே!” என்று மலை அரசி மதுரமாக நகைத்தாள்.
அவளைக் கோபத்தால் கீழே போட்டான் ஜோடா. அவள் கால்களை ஊன்றி நின்றாள்.
“கிருஷ்ணா, வா!” என்று அழைத்து அந்தக் கரிய புரவியின் மீது ஏறிக்கொண்டாள்.
அதை அவள் நகர்த்த முற்பட்ட சமயத்தில் இரு பிருமச்சாரிகளும் மறைவிடத்தில் இருந்து வெளியில் வந்தார்கள். அவர்களை நோக்கிப் புன்முறுவல் செய்தாள் மலை அரசி.
“மன்னிக்கவேண்டும்” என்று கூறிக்கொண்டே ஜோடா அவர்களை நோக்கி வந்தான்.
“ஜோடா!” என்று கடிந்த குரலில் அழைத்தார் ஹர்பா சங்க்லா.
“மலை அரசி!” என்று அதைவிடக் கடுமையான குரலில் அழைத்தார் பாபுஜி.
“ஏன் பாபுஜி?” மலை அரசியின் குரல் மதுரமாக இருந்தது.
“இங்கு நடந்ததை எல்லாம் பார்த்தோம்” என்று சீறினார் பாபுஜி.
“ஜோடா! உன் நிலையை நீ புரிந்துகொள்ளவில்லை,” என்று கண்டித்தார் பிருமசாரி.
“நான் எந்தத் தவறும் செய்யவில்லையே!” என்று மன்றாடினான் ஜோடா.
“மீண்டும் பாவத்தைத் தேடிக்கொண்டாய். மலை அரசியை சுல்கமாக வைத்திருக்கிறார் ஜோகி. சாம்ராஜ்ஜியத்தை நிறுவுபவனைத் தவிர அவளை வேறு யாரும் தொட முடியாது” என்று சுட்டிக் காட்டினார் சங்க்லா.
“நான்தான் சாம்ராஜ்ஜியத்தை நிறுவப்போகிறேனே!” என்றான் ஜோடா.
“அதற்கு முன்பு மலை அரசியை ஏன் தொட்டாய்?” என்று சீறினார் பிருமச்சாரி.
“அவள் ஏன் உடன்பட்டாள்?” என்று கேட்டார் பாபுஜி.
மலை அரசி தலையைக் கவிழ்த்துக்கொண்டு நகைத்தாள்.
“பிருமச்சாரிகள் இருவரையும் இங்கு யார் வரச்சொன்னது?” என்று சொல்லிவிட்டு புரவியைப் பறக்கவிட்டாள் மலை அரசி.
இரண்டு பிருமச்சாரிகளுக்கு இடையில் ஜோடா அகப்பட்டுக் கொண்டான்.
“கிருஷ்ணன் அவள் சொல்படி கேட்கிறதே!” என்று வியந்தார் பாபுஜி.
“கிருஷ்ணன் என்ன, எந்த கோவிந்தனும் அவள் சொல்படி கேட்கும். மிருகங்களிடமும் பட்சிகளிடமும் அவளுக்கு அசாத்திய பிடிப்பு. இதை நான் மறந்துவிட்டேன்” என்றார் சங்க்லா.
“இதை ஏன் முன்பே சொல்லவில்லை?” என்று பாபுஜி கேட்டார்.
“சொல்லியிருந்தால் என்ன செய்துவிடுவீராம்?” என்று சங்க்லா வினவினார்.
“இங்கு வந்தே இருக்க வேண்டாமே!” என்றார் பாபுஜி.
இதைக் கேட்ட ஜோடா பெரிதாக நகைத்தான். அவ்விருவரும் அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டார்கள் பலமாக.
“வா! இந்தப் பாவத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும்” என்றார் சங்க்லா.
“காதலிப்பது பாவமா?” என்று கேட்டான் ஜோடா உஷ்ணத்துடன்.
“தகாத சமயத்தில் பாவந்தான்” என்றார் பிருமச்சாரி.
“உண்மை” என்றார் பாபுஜி.
ஜோடாவின் பொறுமை எல்லை கடந்தது. “காதலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான் மிகுந்த உஷ்ணத்துடன்.
இரண்டு பிருமச்சாரிகளும் பரஸ்பரம் பார்த்து விழித்துக் கொண்டார்கள்.