பெற்றோர் புரிந்த பாவம் சிலரைப் பிடித்து வாட்டுகிறது. உற்றார் செய்த பாவமும் சிலரை விடுவதில்லை. பெற்றோரும் உற்றாரும் விளைவித்த பாவங்களுக்கு எப்பாவமும் அறியாத ஜோடா இலக்கானான். பேரனான மோகுல சிம்மனை சீராட்டும் முகாந்திரத்தால் மேவார் அரியணையை தந்தை விழுங்கப் பார்த்ததால் ஜோடா சித்தூரை விட்டு ஓட வேண்டியதாகிவிட்டது. சந்தசிம்மன் உறங்கியிருந்த சமயத்தில் இரவில் திடீரென ஜகத்சிம்மன் தாக்குதலைத் துவக்கியதால் ஜோடா மண்டோரில் இருந்தே ஓட வேண்டியதாயிற்று.
இப்படி மற்றவர் துர்ச்செயலால் தலைநகரையும் பறிகொடுத்து மாரூஸ்தலியின் மண்ணில் மயக்கமாக விழுந்துவிட்ட ஜோடாவின் காயத்தைப் பரிசோதித்த மலை அரசி, அது ஆழ்ந்த காயம் என்பதைப் புரிந்துகொண்டதால், சுற்றும் முற்றும் பார்த்தாள். எங்கும் யாரும் தென்படாததால் ஜோடாவின் அங்கியைக் கிழித்து தற்கால சாந்தியாக அவன் காயத்தை இறுகக் கட்டி இரத்தம் வெளியேறுவதை நிறுத்தினாள். அவன் முகத்தை நீரால் நனைத்தால் சிறிது சுரணை வரும் என்ற காரணத்தால், அவன் தலையை தன் மடியிலிருந்து இறக்கி மணலில் கிடத்திவிட்டு மீண்டும் மலைச்சரிவில் ஏறிச் சென்றாள். அங்கிருந்த ஒரு சிறு ஊற்றில் இருந்து இரு கைகளிலும் நீரை ஏந்தி வந்து அவன் முகத்தில் தெளிக்கவே, மெள்ளக் கண்விழித்த ஜோடா, தன்மீது குனிந்து நோக்கிய முகத்தைக் கண்டு பிரமித்தான். “இது சொப்பனம். மலை அரசி மீண்டும் என்னிடம் வரமாட்டாள்” என்று முணுமுணுத்துக்கொண்டு மறுபடியும் கண்களை மூடிக் கொண்டான்.
அவன் முணுமுணுத்தது அவள் காதில் விழவே செய்தது. அத்தனை துன்பச் சமயத்திலும் லேசாகப் புன்முறுவல் கொண்ட மலை அரசி “ஜோடா, என்னைப் பார். நீ காண்பது கனவல்ல” என்றாள்.
மெள்ளக் கண்விழித்த ஜோடா “மலை அரசி! நீ இங்கு எப்படி வந்தாய்? எதற்காக என்னைவிட்டுப் போனாய்?” என்று முணுமுணுத்தான்.
மலை அரசி மறுபடியும் அவன் தலையை எடுத்துத் தனது மடியில் வைத்துக் கொண்டாள். சிறிதாயிருந்த மரவுரி சிறிது அகன்றுவிட்டதால், வழவழத்த அவள் தொடைகளின் மீது தலை கிடந்தது. பெண்ணின் மடியளித்த இன்பத்தை நினைத்த ஜோடா “சொர்க்கம் என்று சொல்வார்களே, அது மலை அரசியின் மடியாகத்தான் இருக்கும்” என்று சொன்னான் வாய்விட்டு. அத்துடன் அவள் மென்மையும் திண்மையும் கலந்த தொடைகளில் தலையைப் புரட்டினான்.
மலை அரசி பரிதாபத்தால் அவன் கன்னங்களைத் தடவிக் கொடுத்தாள். பிறகு ஆகாயத்தைப் பார்த்தாள். “விடிய அதிக நேரமில்லை. நாம் மறைவிடத்திற்குப் போக வேண்டும். சற்று சமாளித்துக்கொண்டு எழுந்திருக்க முடியுமா?” என்று ஜோடாவை வினவினாள்.
“முடியும்” என்றான் ஜோடா பலவீனமான குரலில்.
“சரி எழுந்திரு. என்னை நன்றாகப் பிடித்துக்கொள்” என்று கூறிய மலை அரசி, அவன் வலது கையைத் தனது கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள். தனது கைகள் இரண்டாலும் அவனைத் தூக்கினாள் மெதுவாக. முதலில் முக்கி முனகி மண்டியிட்டு அவளைப் பற்றிக்கொண்டு எழுந்து நின்ற ஜோடா, வேல் பாய்ந்த தனது இடையைத் தொட்டுப் பார்த்தான். கிழிந்திருந்த மேலங்கியையும் கவனித்தான். மலை அரசியால் தான் பிழைத்திருப்பதைப் புரிந்து கொண்டு, மெள்ள அவளை நோக்கி, “மலை அரசி! உனக்கு வைத்தியமும் தெரியுமா?” என்று வினவினான்.
“தெரியும். காட்டில் இருப்பவர்களுக்கு முதலில் வைத்தியம் தேவையில்லை. அப்படி இயற்கையையும் மீறி நோய் வந்தால், அதைச் சமாளிக்க இயற்கை எத்தனையோ மூலிகைகளை அளித்திருக்கிறது” என்று பதில் சொன்ன மலை அரசி அவனை மெள்ள புரவியிடம் நடத்திச் சென்றாள்.
ஜோடா சிரமப்பட்டு முக்கி முனகி புரவியில் ஏறிப் படுத்துக் கொண்டான்.
மலை அரசி புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு அவனைப் பக்கத்து மலைமீது அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதும் மரங்கள் நெருக்கமாயிருந்த பகுதியில் அவனை இறக்கி மரச்சருகுகளைத் திரட்டி படுக்கையாக்கி அவனைப் படுக்க வைத்தாள். பிறகு எங்கோ சென்று சில மூலிகைகளைப் பிடுங்கி வந்து, அருகேயிருந்த மலைச்சுனைக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை அங்கிருந்த ஒரு கல்லை வைத்து நசுக்கினாள். அடுத்து ஜோடா படுத்திருந்த இடம் வந்து அவனைத் திரும்பச் சொல்லி பழைய கட்டை அவிழ்த்துவிட்டு, காயத்தில் மூலிகைச் சாற்றை இருமுறை கையால் இறுகிப் பிழிந்தாள். கசங்கிய மூலிகை இலைகளை காயத்தில் அடைத்து, மீண்டும் அதைக் கட்டினாள். “நாளைக்கு எழுந்து நடக்க முடியும்” என்று சொன்னாள்.
“நாளைவரை இங்கிருக்க முடியாது. எதிரிகள் தேடி வருவார்கள்” என்றான் ஜோடா.
“இங்கு யாரும் வரமாட்டார்கள்” என்று மலை அரசி திட்டமாகச் சொன்னாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“மண்டோர் இருக்கும் மலைத் தொடரில்தான் ஜோடா கிரும் இருக்கிறது. இங்கிருந்து தெற்கே சரியாக அரை காதம் ஜோகி இருக்கும் மலை உச்சி. இந்தப் பகுதி முழுவதும் அவரது ஆணைக்கு உட்பட்டது.”
“அதனால்?”
“இங்கு யாரும் பூசல்களில் இறங்க முடியாது. இறங்கினால், ஜோகியின் சாபத்துக்கு இலக்காவார்கள். அவர் சாபம்... நினைக்க பயங்கரம்” என்ற மலை அரசி, “அஞ்சாமல் படுத்திரு ஜோடா. இங்கு ஜோகியின் சட்டதிட்டங்களை மீறி யாராவது வந்தாலும் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு எழுந்து போகத் தொடங்கினாள்.
“எங்கு போகிறாய் மலை அரசி?” என்று கேட்டான் ஜோடா.
“நீராடி வருகிறேன். உணவு தயார் செய்ய வேண்டும் அல்லவா?” என்று கூறிவிட்டு சுனையை நோக்கிச் சென்றாள்.
சுனையை நெருங்கியதும் ஒரு மரத்தின் மறைவுக்குச் சென்று மரவுரியையும் மேலே போர்த்தியிருந்த புலித்தோலையும் உதறினாள். இதையெல்லாம் ஒருக்களித்த நிலையில் இருந்து கவனித்த ஜோடா ஏக்கப் பெருமூச்சு விட்டான். இருப்பினும் மரத்தின் மறைவை விட்டு அவள் வெளிவந்துதானே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஜோடாவுக்குப் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. மரத்தின் மறைவில் இருந்த மலை அரசி, மின்னல் வேகத்தில் ஆழமான மலைச்சுனையில் பாய்ந்துவிட்டாள். ஏதோ ஒரு நட்சத்திரம் குறுக்கே ஓடியதுபோல் தெரிந்த அவள் சரீரம் நீருக்குள் மறைந்துவிட்டதால், எதையும் காணமுடியாத தனது துரதிருஷ்டத்தை நினைத்துப் பெரிதும் மனம் நொந்தான் மார்வார் மன்னன்.
“எத்தனையோ ராஜபுத்திரர்கள் ராஜபுத்திரப் பெண்களைத் தூக்கிக்கொண்டு போய் ராக்ஷஸ விவாகம் செய்து கொள்கிறார்கள். என் அருகிலேயே இருக்கும் பெண்ணை நான் நெருங்கக்கூட முடியவில்லை. நான்தான் பெண்போல் இருக்கிறேன். அவள் தான் என் காயத்துக்குக் கட்டுப் போடுகிறாள். என்னைக் காப்பாற்றி புரவியில் ஏற்றி மறைவிடம் அழைத்து வருகிறாள். மண்டோர் வீதியில் அவள் புரவியில் அமர்ந்துவர கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நான் நடந்து சென்றேன். அப்பொழுதே மக்கள் நகைத்தார்கள். அரண்மனையில் கூட சலசலப்பு அதைப்பற்றி. இப்பொழுது கதை தலைகீழாகிவிட்டது. நான் புரவியில் வர அவள் கடிவாளத்தைப் பிடித்து வந்தாள். இப்பொழுது அவள் இஷ்டப்படி நான் ஆடுகிறேன்” என்று உள்ளூர எண்ணினான். இப்படி அவன் சிந்தனையில் இருந்த சமயத்தில் மலை அரசி நீராடி மரவுரி புலித்தோல் தரித்து அவன் முன்பு வந்து நின்றாள். ஈரத்தலையையும் அவிழ்த்து உதறினாள். அதிலிருந்த தண்ணீர்த் திவலைகள் ஜோடாவின் முகத்தின் மீது விழுந்தன. அந்தத் துளிகள் அவனுக்குப் புத்துயிரைத் தந்தன. அவன் இதழ்களில் புன்முறுவல் உதயமாயிற்று.
மலை அரசியும் பதிலுக்குப் புன்முறுவல் செய்தாள். “ஜோடா! எழுந்திரு நாம் அந்த குகைக்குப் போவோம்” என்று எட்ட இருந்த குகையைக் காட்டினாள்.
அப்பொழுது, பொழுது நன்றாகவே புலர்ந்துவிட்டதால் அந்த மலைக்காட்டுப் பிரதேசம் ரம்மியமாயிருந்தது. ஜோடாவை எழுந்திருக்கச் சொன்ன மலை அரசி அவனுக்கு எந்தவித உதவியையும் செய்ய முன்வரவில்லை.
ஜோடா கையை நீட்டினான் அவளை நோக்கி, “அவசியமில்லை ஜோடா. நீயே எழுந்திருக்கலாம். இத்தனை நேரம் பச்சிலை உன் காயத்தின் இரத்தத்தை அடியோடு நிறுத்தியிருக்கும்” என்றாள்.
ஜோடா மெள்ள எழுந்திருந்தான். காயத்தில் வலி தெரியவில்லை. நன்றாகவும் அவனால் நிற்க முடிந்தது. இரண்டடி நடந்து பார்த்தான். எந்தவித வலியும் இல்லை. “இதென்ன பச்சிலை மலை அரசி?” என்று வினவினான் ஜோடா, வியப்புடன்.
“உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. நீ மருத்துவன் அல்ல” என்றாள் மலை அரசி.
“நீ மருத்துவச்சியா?” என்று ஜோடா கேட்டான்.
“இல்லை. ஆனால் மருத்துவம் தெரியும். ஜோகி சில இரகசிய மூலிகை வைத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார்.”
“எதற்கு?”
“மலைப் பிராணிகளுக்கு நோய் வருமானால் சிகிச்சை செய்ய.”
“ஆடு மாடுகளுக்காக?”
“புலி சிங்கங்களுக்கும் பட்சிகளுக்குங்கூடத்தான்” என்றாள் மலைஅரசி சர்வசாதாரணமாக. “அதனால்தான் பாகுர்ச்சிராவில் பட்சிகள் சரணடைகின்றன. அந்த மலை ஆரோக்கியமானது. ஜோகி அங்கிருப்பதால் மலையின் மகத்துவம் பன்மடங்காகிறது” என்ற மலை அரசி மேற்கொண்டு ஏதும் பேசாமல் நடந்தாள் குகையை நோக்கி.
ஜோடாவும் புரவியும் அவளைத் தொடர்ந்து சென்றார்கள். குகையை அடைந்ததும் புரவிக்கு கீழேயிருந்த புல்தரையைக் காட்டினாள் மலை அரசி. அவளை உற்று நோக்கிய புரவி தலை குனிந்து புல்லை மேயலாயிற்று. அதன் மீதிருந்த சேணத்தையெல்லாம் கழற்றி அதை சுதந்திரமாகத் திரியவிட்ட மலை அரசி, ஜோடாவை குகைக்குள் அழைத்துச் சென்றாள். “ஜோடா, இங்கேயே படுத்திரு. உணவு கொண்டு வருகிறேன்” என்று கூறிச் சென்றாள்.
மலை அரசி வெயில் நன்றாக ஏறிய பின்பே திரும்பினாள். அவள் கையில் பழவகைகள் நிரம்ப இருந்தன. எங்கிருந்தோ ஒரு குடுவையும் கண்டுபிடித்து அதில் சிறிது பாலும் கொண்டு வந்திருந்தாள். ஜோடாவுக்கு பழங்களையும் பாலையும் அளித்த பிறகு, தானும் சிறிது உண்டு மறுபடியும் வெளியே சென்றாள். திரும்பி அவள் இரவு முற்றிய பின்புதான் வந்தாள். அவள் கைக்குடுவையில் சுடச்சுட பால் இருந்தது. “ஜோடா! இதைக் குடி” என்றாள்.
ஜோடா அதை வாங்கி அருந்தினான். ஏதோ புத்துயிர் பெற்றுவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவன் பலமும் மீண்டது. “மலை அரசி! ஏது பால்?” என்று கேட்டான் ஜோடா.
“சிறிது தூரத்தில் யாதவர் குடிசைகள் இருக்கின்றன. அங்கிருந்து வாங்கி வந்தேன்” என்றாள் மலை அரசி.
“அப்படியானால் நாம் அங்கேயே தங்கலாமே” என்றான் ஜோடா.
“அது சவுகரியப்படாது” என்றாள் மலை அரசி.
“ஏன்?”
“நாம் தனித்திருக்க முடியாது.”
“எதற்காகத் தனித்திருக்க வேண்டும்?”
இதைக்கேட்ட மலை அரசி நகைத்தாள். “ஜோடா! நீ ஒரு முட்டாள்” என்று கூறினாள். அடுத்து வேறொன்றும் சொன்னாள். அதைக் கேட்ட ஜோடா திணறினான். திகைத்தான். “மலை அரசி! உனக்குப் பைத்தியம் இல்லையே” என்றும் குளறினான்.