காந்தோஜியின் குறுவாள் அழுந்தியதாலும், எச்சரிக்கையாலும், அவன் பின்னால் நின்றிருந்த மஞ்சாஜியின் உதடுகளில் துளிர்த்திருந்த குரூரப் புன்முறுவலாலும், சாவுகார் அஞ்சி நடுநடுங்கிவிடுவார் என்றோ, முன்னே நடந்துவிடுவார் என்றோ மேவார் ராஜ வம்ச இளவல்கள் நினைத்திருந்ததால் ஏமாந்தே போனார்கள்.
சாவுகார் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் இடித்த புளியென நின்ற இடத்தில் நின்றிருந்தார்.
“உம்! நட முன்னே!” என்று காந்தோஜி இரண்டாம் முறை எச்சரித்தபோதுகூட அவர் நகரவில்லை.
“உங்கள் கத்தி என் கழுத்தில் நேராகப் பதிந்து இருக்கும்போது நான் எப்படித் திரும்புவது?” என்று வினவினார். பிறகு நகைத்தார் இகழ்ச்சியாக.
மஞ்சாஜியின் சினம் எல்லை கடந்தது. அவர் நெஞ்சின் அழுத்தத்தையும், சிரிப்பில் கண்ட இகழ்ச்சியையும் கண்டு, “எதற்காக நகைக்கிறீர்?” என்று வினவினான் மஞ்சாஜி, சினத்தின் சாயை குரலில் தெரிய.
சாவுகார் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார், “ஆயுதமற்ற ஒரு சாவுகாரை மிரட்ட அரசகுமாரர் இருவர் வந்திருக்கிறீர்கள். சாதாரணமாக இதற்கெல்லாம் சாதாரண வீரர்கள் வருவது வழக்கம்” என்று சுட்டிக் காட்டினார் சாவுகார்.
காந்தோஜி அவரது கழுத்தில் இருந்த கத்தியை எடுத்தான். “நீர் சாதாரண சாவுகார் அல்லர். அதனால், நாங்களே வந்தோம்” என்றான் காந்தோஜி.
“என்ன அசாதாரணத்தை என்னிடம் கண்டுவிட்டீர்கள்” என்று மேலும் பேச்சுக் கொடுத்தார் சாவுகார்.
மஞ்சாஜி அவரை கண்களில் இகழ்ச்சி ததும்ப நோக்கினான். “நீர் இந்த நகரத்தின் பெரிய சாவுகார்...” என்று வாசகத்தை இழுத்தான்.
“அது தவிர சமநோக்குள்ளவர்” என்றான் காந்தோஜி.
“சமநோக்கா!” வியப்பைக் காட்டினார், சாவுகார்.
“ஆம்.” காந்தோஜியின் குரலில் நகைப்பு இருந்தது.
“எப்படி?”
“உமக்கு பிச்சைக்காரர், பணக்காரர் வித்தியாசம் கிடையாது.”
“யார் சொன்னது?”
“ஊரில் அப்படிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றான் காந்தோஜி.
“அதைப் பார்க்க வந்தோம்” என்றான் மஞ்சாஜி.
சாவுகார் மேலும் பேச்சு கொடுக்க முயன்றார்.
“டேய்! சாவுகார்! நட முன்னே. நீ ஆடிய நாடகம் போதும்” என்றான் காந்தோஜி.
மஞ்சாஜி அவரைப் பிடித்து பலவந்தமாகத் திருப்பி ஒரு தள்ளு தள்ளினான். தனது நீண்ட வாளையும் உருவிப் பிடித்துக் கொண்டான்.
சாவுகார் தள்ளாடி இரண்டு மூன்று அடிகள் விழுந்து விடுவதுபோல் ஓடினார். பிறகு சமாளித்துக்கொண்டு முன்னே நடந்தார்.
“ராஜதுரோகி! உன்னை அப்பொழுதே வெட்டிப்போட்டு உள்ளே சென்று இருக்க வேண்டும். இத்தனை நேரம் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது தவறு” என்றான் மஞ்சாஜி.
சாவுகார் சட்டென்று திரும்பினார், “ராஜத்துரோகக் குற்றம் சாட்டுவது தவறு” என்று வாதித்தார்.
“ஏன்?” என்று வினவினான் காந்தோஜி, அவரை நோக்கி இரண்டடி நடந்து.
“நீங்கள் மண்டோர் அரசர்கள் அல்லர், ஆகையால் அரசத்துரோகம் இதில் எதுவும் கிடையாது” என்றார் சாவுகார்.
இதனால் வெகுண்ட மஞ்சாஜி “அண்ணா, இவனுடன் நமக்குப் பேச்சென்ன? இவனை ஒழித்துவிட்டு வந்தவனைப் பார்ப்போம்” என்று கூறிவிட்டு சாவுகார் முதுகில் வாளைப் பாய்ச்சிவிட இழுத்தான். ஆனால் அவன் வாள் பாயவில்லை. சாவுகார் புலிபோல் துள்ளி ஓடினார்.
“இறப்பதானால் என் மார்பில் காயத்துடன் இறப்பேன். முதுகுக் காயம் வீரனுக்கு அழகல்ல” என்று கூறிக்கொண்டு ஒரு மூலைக்கு ஓடி அங்கிருந்த வாளை எடுத்து இருமுறை சுழற்றினார்.
இந்த புது சாவுகாரைக் கண்ட இரு இளவல்களும் பிரமித்தனர்.
“வணிகர்களுக்கு போர் முறை ஏது? க்ஷத்திரிய தர்மம் ஏது?” என்று வினவினான் காந்தோஜி.
பதிலுக்கு சாவுகார் தமது தலையில் இடது கையைக் கொடுத்து பொய் முடியை அகற்றினார்.
சாவுகாரின் இடத்தில் ஒரு வாலிபன் நின்றிருந்தான். அவன் முகத்தில் வீரக்களை சுடர்விட்டது. இந்த மாற்றத்தைக் கண்ட இரு இளவல்களின் முகத்திலும் பிரமை விரிந்தது பெரியதாக.
“நீ யார்?” என்று வினவினான் காந்தோஜி.
“மண்டோரின் படைத்தலைவன் ஜகத்சிம்மன்” என்று பதில் வந்தது. பதிலைத் தொடர்ந்து நகைப்பும் வந்தது.
“ஜகத்சிம்மனா! இரவில் அதர்மயுத்தம் செய்பவன்” என்றான் மஞ்சாஜி வெறுப்புடன்.
ஜகத்சிம்மன் மீண்டும் நகைத்தான். “பேசிக்கொண்டு இருப்பதைவிட போர் தொடங்குவது இருவருக்கும் பயன்தரும்” என்றும் சொன்னான் நகைப்பின் ஊடே.
காந்தோஜி சிறிது சிந்தித்தான். “சரி மஞ்சாஜி! நீ இவனுடன் போரிடு, ராஜபுத்திரர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒருவனைக் கொல்லும் வழக்கம் கிடையாது” என்று கூறிவிட்டு பின்னால் நகர்ந்து விட்டான், இருவரும் போரிட இடமளித்து.
அப்பொழுது அவனுக்குப் பின்னால் இருந்து யாரோ கனைத்தார்கள்.
“அவசியமில்லை காந்தோஜி! இருவருக்கும் இருவர் இருக்கிறோம்” என்ற கனைப்பைத் தொடர்ந்து குரலும் வந்தது.
காந்தோஜி திரும்பினான். பெரிய வாளை உருவிப் பிடித்துக்கொண்டு பிச்சைக்காரன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னாலிருந்த வாயிற் கதவு மூடப்பட்டிருந்தது. காந்தோஜி நிலைமையைப் புரிந்துகொண்டான். ஜகத்சிம்மன் கதவைத் திறக்கையில் போலிப் பிச்சைக்காரன் கதவுக்கருகில் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் என்றும், தாங்கள் உள்ளே வந்ததும் கதவை ஓசைப்படாமல் தாளிட்டுவிட்டான் என்பதையும் உணர்ந்துகொண்டதால் அவனும் வாளை உருவ கொண்டான்.
“ஜோடா! உன் வேஷம் சரியாகத்தானிருக்கிறது. நீ நாடிழந்த பிச்சைக்காரன்” என்றும் கூறினான் காந்தோஜி.
ஜோடா நகைத்தான். “நாடிழந்தது உண்மை. ஆனால் வீரம் இழக்கவில்லை” என்றான். வாளைச் சிறிது நீட்டவும் செய்தான்.
“இருமுறை ஓடிய மகாவீரன்” என்றான் மஞ்சாஜி.
அதனால் ஜோடா சினம் கொள்வான் நிதானமிழப்பான் என்று எதிர்பார்த்தான் காந்தோஜி. ஆனால் சர்வ நிதானத்தைக் காட்டினான் ஜோடா. சொல்லம்புக்குப் பதிலாக வாளைச் சுழற்றினான். நான்கு வாட்கள் சந்தித்தன. இளவல் இருவரும் சிங்கத்தின் குட்டிகள் என்பதை நிரூபித்தார்கள் அவர்கள். சந்தசிம்மனின் அரிய வாள் திறன், போர் நுணுக்கம் அத்தனையும் அவர்கள் வாள் சுழற்றலில் இருந்ததைக் கவனித்தான் ஜோடா. ஆனால் பல மாதங்களின் சோதனையும் விடாத வாள் பயிற்சியும் அவன் போர்த்திறத்தை முந்திய நாள்களைவிட திடமுள்ளதாகச் செய்திருந்தன.
ஜகத்சிம்மனின் மூர்க்கத்தனமான போராட்டத்துக்கும் ஜோடாவின் நிதானமான போராட்டத்துக்கும் பெரு வித்தியாசம் இருப்பதை இரு இளவல்களும் கவனித்ததால் இருவரும் பதற்றத்தைச் சிறிதுங்காட்டாமல் போராடினார்கள். அதிகநேரம் போர் நீடிக்கவில்லை. நேரம் ஆக ஆக பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டால் ஆபத்து என்ற காரணத்தால் வாளைக் கொண்டு காந்தோஜியைத் தாக்காமல் ஒரு சுழற்றி சுழற்றி காந்தோஜியின் வாளைக் கையிலிருந்து பறக்கச் செய்தான்.
“மஞ்சாஜி! வாளைக் கீழே எறிந்துவிடு” என்றும் உத்தரவிட்டான். அதைக் கேட்ட மஞ்சாஜி திரும்பிய நேரத்தில் அவன்மீது வாளைப் பாய்சிசிட எண்ணிய ஜகத்சிம்மன் முயற்சியை “நிறுத்து” என்ற ஜோடாவின் அதிகாரச் சொல் தேக்கியது. அடுத்த விநாடி மஞ்சாஜிமீது பாய்ந்து அவன் கையிலிருந்த வாளைப் பறித்துக் கொண்டான் ஜோடா. அடுத்து இரு இளவல்களையும் நோக்கி, “சந்தசிம்மன் மக்களே! நான் படுத்திருந்த அந்த அறைக்குள் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டான்.
இருவருமே நகர மறுத்ததால் பணிவுடன் கேட்டான் ஜோடா, “வீரர்களான உங்களை ரணகளத்தில் சந்திக்கிறேன், தயை செய்து ஒத்துழையுங்கள்” என்று.
அவன் குரலையும் அதில் ஒலித்த பணிவையும் கண்ட இளவல்கள் சிங்கநடை நடந்து பள்ளியறைக்குள் புகுந்தார்கள். அடுத்த விநாடி அறை பூட்டப்பட்டது. வெளியே இருந்த ஜகத்சிம்மன் கேட்டான்.
“வெளியே செல்லும் சுரங்க வழி அந்த அறையில்தானே இருக்கிறது?” என்று.
“ஆம்.”
“இப்பொழுது எப்படி வெளியே செல்வதாக உத்தேசம்?”
“நீ பழையபடி சாவுகார் ஆகிறாய்?” என்றான் ஜோடா.
“நீங்கள்?”
“உன் குமாஸ்தா.”
“உங்கள் முகத்தைப் பார்த்தால் குமாஸ்தா ஆகவா தெரிகிறது!” என்று கேட்டான் ஜகத்சிம்மன்.
“சற்று நேரத்தில் பார்” என்றான் ஜோடா.
அடுத்த சில நிமிடத்தில் அந்த இல்லத்தை விட்டுக் கிளம்பிய பழைய சாவுகாருடன் அசட்டுக்களை வழிந்த முகத்துடனும் பெரிய முண்டாசுடனும் குமாஸ்தா தொடர்ந்தான். வாயிலில் நின்றிருந்த இரண்டு கோவேறு கழுதைகளின் மீது ஏறி இருவரும் கோட்டை வாசலுக்கு வந்தனர்.
கோட்டை வாசலில் காவல் பலமாயிருந்தது. வாசலின் பெருங்கதவுகள் மூடியும் இருந்தன.
“கதவைத் திறவுங்கள்” என்று சாவுகார் அட்டகாசமாக அதட்டினார். “எந்த அரசாங்கத்திலும் வணிகர்களைத் தடை செய்யும் பழக்கம் கிடையாது” என்று கூறினார்.
குமாஸ்தாவின் அசட்டுக்களை அதிகமாயிற்று.
“கோட்டைக் கதவை ஏன் சாத்தியிருக்கிறீர்கள்? பயமா?” என்று உளறினான் குமாஸ்தா.
கோட்டை வாயில் காவலன் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
“இரவில் அரண்மனையில் இருந்து சென்ற இரு இளவரசர்களையும் காணோமாம். அதனால் காலை முதல் கதவைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவு. திரும்பிப் போய் விடிந்ததும் வாருங்கள்” என்றான் கோட்டை வாயில் காவலன்.
இதைக் கேட்ட சாவுகார், குமாஸ்தா இருவருமே திகைத்து நின்றனர்.