இரவு தந்த இருளில், மலைக்காடு வீசிய இதமான காற்றில், சாளரத்துக்கு அருகில் இருந்த மகிழ மரம் பரவவிட்ட சுகந்தத்தின் சூழ்நிலையில், மலை அரசியை சூழ்ந்து நெருக்கிய ஜோடாவின் கரங்கள் நெருக்கியதோடு நில்லாமல் இன்ப இடங்களையும் தேடிச் சென்றதால், மலை அரசி அவன் கைகளில் லேசாகச் சுழல முற்பட்டாள்.
அப்படிச் சுழல முற்பட்டதால் ஏற்கனவே அவன் மார்பில் புதைந்திருந்த அவள் கவர்ச்சிப் பிரதேசம் அழுந்தி அசைந்ததன் காரணமாக ஜோடாவின் உணர்ச்சிகள் அவனை நிலை குலையச் செய்தன. அவன் தனது கைகளை நீக்கி அவளை அப்படியே தூக்கி சாளரக்கட்டையில் உட்கார வைத்தான். தானும் மண்டியிட்டு அவள் மடியில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
அபயத்தையும் அமைதியையும் நாடுவதுபோல் மடியில் புதைந்த தலையின் குழல்களை ஆதரவுடன் கோதிவிட்ட மலை அரசி, மெல்ல தனது உணர்ச்சிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தாள். “ஜோடா! இதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று மெதுவாகக் கூறினாள், தனது தலையைக் குனிந்து இதழ்களை அவன் காதுக்கு அருகில் கொண்டுபோய். அந்த சமயத்தில் ஜோடா தலையைத் திருப்பியதால் அவள் பூவிதழ்கள் அவன் கன்னத்தைத் தடவின.
இந்த நிலையில் அவள் சொன்னதற்குப் பதிலேதும் சொல்லவில்லை, ஜோடா. ஆனால் மலை அரசி மட்டும் சில விநாடியில் சுயநிலை அடைந்து, “ஜோடா! உனக்குத்தான் சொன்னேன்” என்றாள், இன்னொரு முறை.
மடியில் படுத்திருந்த ஜோடா சிறிது தலைநிமிர்ந்தான். “என்ன சொன்னாய் மலை அரசி?” என்றும் வினவினான்.
“இதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று சொன்னேன்” என்று முதலில் சொன்னதை மீண்டும் கூறினாள் மலை அரசி.
“எதற்கு மலை அரசி?” என்று வினவிய ஜோடா, மண்டியிட்ட நிலையிலேயே உடலை நிமிர்த்தி தலையை அவள் மார்பில் புதைத்துக்கொண்டான்.
மலை அரசி மீண்டும் அவன் குழல்களில் தனது விரல்களைக் கொடுத்து அவற்றைப் பிரித்தாள். “இதற்குத்தான்” என்றும் சொன்னாள்.
“என் தலைக்குழலை சிக்கு எடுப்பதற்கா?” என்று கேட்டு மெள்ள நகைத்தான் ஜோடா.
“இல்லை ஜோடா, உன் வாழ்க்கைச் சிக்கலை சரிப்படுத்துவதற்கு” என்று மலை அரசி சொன்னாள், துயரம் தோய்ந்த குரலில்.
“மலை அரசி! அது அனாவசியமான வேலை. உன்னை என்று பாகுர்ச்சிராவின் குகை வாயிலில் சந்தித்தேனோ அன்றே போய்விட்டது, எனது வாழ்க்கைச் சிக்கல். இன்று உன் மடியில் கிடந்தபோது நான் மண்ணில் இல்லை...” என்றான், ஜோடா.
“வேறு எங்கு இருந்தீர்கள்?” மலை அரசியின் இதழ்களில் புன்னகை அரும்பிற்று.
“சொர்க்கத்தில்.”
“இது தற்காலிக சொர்க்கம், ஜோடா.”
“நிரந்தர சொர்க்கத்துக்கு என்ன குறுக்கே நிற்கிறது?” என்று கேட்ட ஜோடா, எழுந்திருந்து அவளை மீண்டும் தூக்க முயன்றான்.
ஆனால், மலை அரசியின் நகைப்பு அவன் கைகளை, ஏன் ஆசையையுங்கூட, சட்டென்று தேக்கியது.
“ஏன் நகைக்கிறாய் பெண்ணே?” என்று வினவிய ஜோடாவின் குரலில் ஏமாற்றமும், அதனால் ஏற்பட்ட சினமும் இருந்தன.
“ஆண்களின் மறதியைப் பற்றி நினைத்துச் சிரித்தேன்” என்றாள் மலை அரசி.
“எனக்கு என்ன அப்பேர்ப்பட்ட மறதி ஏற்பட்டு விட்டது?”
“என்னை நீ அடைய வேண்டுமானால் சாம்ராஜ்யத்தை முதலில் அடைய வேண்டும் என்று பிருமச்சாரி சொல்லவில்லையா? அதை கன்னியா சுல்கம் என்று ஜோகி சொன்னதாக அவர் தெரிவிக்கவில்லையா?” என்று கேட்டாள் மலை அரசி.
“ஆம், ஆம், அதற்காகத்தானே இந்த வாளையும் கொடுத்தார் பிருமச்சாரி” என்ற ஜோடாவின் குரலில் ஏமாற்றம் இருந்தது. அடுத்த விநாடி அந்த ஏமாற்றத்தாலோ என்னவோ நகைத்தான் ஜோடா.
“ஏன் நகைக்கிறாய் ஜோடா?” என்று மலை அரசி கேட்டாள். அவள் கண்களில் ஒரு தனிப்பட்ட சோபை இருந்தது, சந்தேகமும் இருந்தது.
ஜோடா அவள் முன்பு நின்றான், தலைகுனிந்து பல விநாடிகள். “ஜோகியின் சோதிடம்கூட தவறிவிட்டதை நினைத்தேன். அதனால் நகைத்தேன், மலை அரசி” என்று சொன்னான், சிறிது நேரத்துக்குப் பிறகு.
மலை அரசியின் முகத்தில் வியப்பின் சாயை பெரிதும் விரிந்தது. “ஜோகியின் சொற்கள் பொய்ப்பது இல்லை. அது சத்திய வாக்கு” என்று மலை அரசி கூறினாள் உறுதியான குரலில்.
ஜோடா சாளரத்தின் தண்டில் ராணிபோல் உட்கார்ந்திருந்த மலை அரசி முன்பாக இருமுறை அப்படியும் இப்படியும் நடந்தான். பிறகு சட்டென்று நின்று கேட்டான். “மலை அரசி! உன்னை மணப்பதற்கு சுல்கம் வைத்தது சரி. ஆனால், அதற்குமுன்பு நமது மனம் ஒன்றிவிட்டதே. நாம் இருவரும் சற்றுமுன் இருந்த நிலையை எண்ணிப்பார். சுல்கம் உடைந்துவிட்டது உனக்கே தெரியும். அப்படி இருக்க நாம் சாம்ராஜ்யாதிபதி ஆகாவிட்டாலும் நீயோ நானோ ஒருவரை ஒருவர் எப்படிப் பிரிய முடியும்?” என்று.
பதில் சொல்ல மலை அரசி சிறிதும் சிந்தித்தாள் இல்லை. “ஜோடா! நீ சாம்ராஜ்யத்தை நிறுவ முடியாது என்றால் உன்னுடன் என்னை அனுப்பியிருக்கமாட்டார் ஜோகி. என் மன உறுதியில் நம்பிக்கையில்லாவிட்டால் உன்னைத் தொடர்ந்து நானும் மண்டோர் வந்திருக்கமாட்டேன். நீ என்று ஜோகியை சரண் அடைந்தாயோ அன்றே உன் பாவம், தோல்வி அத்தனையும் அகன்றுவிட்டன. நீ சாம்ராஜ்யம் நிறுவுவதும் நிச்சயம். நான் ராணியாவதும் நிச்சயம்” என்று கூறினாள். “அது மட்டும் அல்ல, ஜோடா...” என்ற மலை அரசி சிறிது தயங்கினாள்.
“சொல், மலை அரசி.”
“என் அருகில் கூட இதுவரை யாரும் வந்தது இல்லை. உனக்கு நான் எவ்வளவு இடமளித்துவிட்டேன்! அதற்குக் காரணம்...”
“காரணம்...”
“நீ உத்தமன், வீரன். இப்பொழுது உனக்கு ஏற்பட்டது இடைக்கால கஷ்டம். நீ சாம்ராஜ்யத்தை அவசியம் நிறுவுவாய். இது என் மனம் சொல்லியது.”
ஜோடா அவளை நெருங்கினான். ஆனால், தொடவில்லை. “மலை அரசி! நீ மண்டோர் அரசியாகும் நாள் அதிக தூரத்தில் இல்லை இது சத்தியம்” என்று கூறிவிட்டு சரேலெனத் திரும்பிச் சென்றுவிட்டான், அந்த விடுதிக்கு வெளியில். வெளிக்கதவை அவன் திறந்து சாத்தும் சத்தம் அவள் காதில் விழுந்தது.
மலை அரசி மீண்டும் சாளரக்கட்டையில் ஏறி உட்கார்ந்து வெளியே நோக்கினாள். மகிடமரம் தனது சிறு மலர்களை உதிர்த்தது. குயில் ஒன்று இன்பமாகக் கூவியது. அவள் இன்பப் பெருமூச்சு விட்டாள். கண்களை மூடினாள்.
இரவு கழிந்து பொழுது புலர இருந்த நேரத்தில் தமது அறையை விட்டு வெளியே வந்த பிருமச்சாரி, சாளரத்து அருகில் கீழே தரையில் படுத்துக்கிடந்த மலை அரசியைப் பார்த்தார். கிட்டேவந்து “மலை அரசி! மலை அரசி! கிரிஜா” என்று மும்முறை அழைத்தார்.
அவள் மெள்ள கண்விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். “என்ன பிருமச்சாரி?” என்றும் மெதுவாகக் கேட்டாள்.
பிருமச்சாரி ஒரு விநாடிதான் யோசித்தார். “ஏன் இங்கு படுத்திருக்கிறாய்?” என்று கேட்கவில்லை. “பொழுது புலர அதிக நேரமில்லை, சீக்கிரம் நீராடி வா, பூஜை அறைக்கு” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
வெளியே ஒரு மரத்தடியில் படுத்துக்கிடந்த ஜோடாவுக்கும் அதே உத்தரவை இட்டுவிட்டு, சுனையை நோக்கிச் சென்றார்.
அவர் திரும்புவதற்குள் ஜோடா, மலை அரசி இருவருமே நீராடி மாற்றுடை புனைந்து, பூஜை அறையில் நின்று இருந்தார்கள்.
பயணத்துக்கு சரியாக உடையணிந்து வாளை இடுப்பில் கட்டிக்கொண்டு வந்த பிருமச்சாரி, பூஜை அறையில் இருந்த பெரிய லிங்கத்தைச் சுட்டிக்காட்டி, “மலை அரசி! இந்த மலைர்களை பகவான்மீது தூவு” என்று தமது கையில் இருந்த பூக்களை மலை அரசியின் கையில் கொடுத்தார்.
மலர்களை அவள் லிங்கத்தின்மீது தூவினாள். ஹர்பா சங்க்லா ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு நெடுஞ்சாண் கட்டையாக லிங்கத்தின் முன்பு விழுந்து வணங்கினார்.
மற்ற இருவரையும் வணங்கச் சொன்னார். அவர்கள் வணங்கி எழுந்த பின்பு மலை அரசியை நோக்கிச் சொன்னார். “கிரிஜா! நாங்கள் பாபுஜியைப் பார்க்கச் செல்கிறோம். நாங்கள் திரும்பும்வரை ஜோடாவின் வீரர்களுக்கும், என்னிடம் வாள் பயிற்சியை நாடி வரும் என் நண்பர்களுக்கும் நீயே பயிற்சி அளித்துவிடு” என்று கூறினார்.
“ஜோடா! நாம் நட்பை மட்டுமல்ல, அபாயத்தையும் நாடிச் செல்கிறோம். பாபுஜியின் இருப்பிடத்தை அடையுமுன்பு எதிரி நிலத்தின் வழியாகப் பயணம் செய்யவேண்டும். உன் வாளும் புத்தியும் தயாராயிருக்கட்டும், எந்த விநாடியிலும் இயங்க” என்று உத்தரவிட்டு, வாயிலில் தயாராயிருந்த தமது புரவி மீது தாவினார்.
ஜோடாவும் தனது புரவியில் ஏறினான்.
அடுத்த விநாடி இரு புரவிகளும் மலைச்சரிவில் விரைந்து ஓடின.
அன்று பகல் முழுவதும் ஹர்பாசங்க்லா மலைப்பகுதிக்கு முன்பு இருந்த மாருஸ்தலியின் பாலைவனத்தில் பயணம் செய்தார். கடும் வெயிலை அவர் லட்சியம் செய்யவில்லை. எங்கும் நில்லாமல் புரவியைச் செலுத்தினார்.
அந்தி வேளை வந்தது. இரவு மூண்ட வேளையில் சற்று புரவியை நிறுத்தி, அங்குமிங்கும் நோக்கினார். தூரத்தில் ஒரு கூடாரம் தெரிந்தது. அதிலிருந்து சிறிது வெளிச்சமும் வந்துகொண்டிருந்தது.
“ஜோடா! இன்று இரவு கூடாரத்தில் தங்குவோம், வா” என்று சொல்லி புரவியைத் தூண்டினார்.
இருவரும் கூடாரத்தை அடைந்தபோது, அதைச் சுற்றிலும் காவல் இருந்தது. காவலை அலட்சியம் செய்து, மறித்த ஈட்டிகளைக் கையால் விலக்கிக்கொண்டு ஜோடாவுடன் கூடாரத்தை அடைந்தார் பிருமச்சாரி. “யார் கூடாரத்தில்?” என்று உரக்கக் கூவவும் செய்தார்.
இரு வாலிபர்கள் கூடாரத்துள் இருந்து வெளிவந்தனர். “யார், பிருமச்சாரியா?” என்று வியப்புடன் வினவினான், அவ்விருவரில் ஒருவன்.
“அண்ணா! அவர் பின்னால் பார், ஜோடா நிற்கிறான்” என்று வியப்புடனும் சினத்துடனும் கூவினான் இன்னொருவன்.
அவன் கூவியதோடு நிற்கவில்லை. தனது வாளை உருவிக்கொண்டு ஜோடாவின் புரவியை நோக்கிச் சென்றான். காவல் இருந்த வீரர்களும் ஜோடாவை வளைக்க மெள்ள நெருங்கினர். கண நேரத்தில் பதினைந்து வீரர்கள் ஜோடாவைச் சூழ்ந்தனர்.