மலை அரசியின் மதுர இதழ்களில் இருந்து உதிர்ந்த அந்தக் கொடுமையான சொற்களைக் கேட்டதும், வியப்பும் அச்சமும் கலந்த உணர்ச்சிகள் ராவ்ஜோடாவின் இதயத்தை மளடுருவிச் சென்றன. அப்படி அவன் நடுங்கியதை பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பிரம்மச்சாரியான ஹர்பா சங்க்லாவும் உணர்ந்திருக்க வேண்டும். அவர் கருணைக் கண்கள் மார்வார் இளவரசனை நோக்கின அனுதாபத்துடன். அதே சமயத்தில் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல ஜோகி சொன்னார் தீர்மானமான குரலில். “பிரம்மச்சாரிணியின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் என்றும் பொய்யாவது இல்லை.”
ஜோகியின் சொல் கேட்ட ராவ்ஜோடாவின் மனநிலை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ‘இவ்வளவு அழகிய பெண் பிரம்மச்சாரிணியா? மற்றவர்கள் தொடக் கூடாதவளா?’ என்று தனக்குள் கேள்விகளை எழுப்பிக் கொண்டான் ஜோடா.
ஜோகி மீண்டும் நகைத்தார். “ஏன், கிரிஜா பிரம்மச்சர்ய விரதம் பூண்டிருப்பது உனக்கு விந்தையாக இருக்கிறதா?” என்றும் கேட்டார் நகைப்பின் ஊடே.
“கிரிஜாவா?” வியப்பு, குரலில் ஒலிக்க வினவினான். மார்வார் இளவரசன்.
“அவள் பிறந்தபோது பெற்றோர்கள் இட்ட பெயர் மகாசக்தியான பார்வதியின் பெயர். கிரிஜா-அதாவது மலைமகள் - என்ற பெயரை கிரிராணி என்று நான் மாற்றினேன். அவள் மலையை ஆளத் துவங்கிய பிறகு கிரி ராணிக்கு தமிழ் மொழி பெயர்ப்பை அளித்து, மலை அரசி ஆக்கினேன். திராவிடப் பிரதேசத்தில் இருந்து என்னைக் காண வந்த ஒரு சித்தரை திருப்திபடுத்த” என்று ஜோகி விளக்கினார்.
ஜோடா மேலும் வாயைப் பிளந்தான், “திராவிட நாட்டு சித்தரா!” என்று கேட்டான் பிரமிப்புடன்.
ஜோகி நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டவர் போல் கண்களை மூடிக்கொண்டு பேசலானார்: “ஜோடா! இந்த பாரதம் ஒரு பெரும் புண்ணிய பூமி. இதில் ஆதி காலத்தில் இருந்து ரிஷிகளும், யோகிகளும், சித்தர்களும், பித்தர்களும் திரிந்து வருகிறார்கள். சிலர் நூறு ஆண்டில் ஜோதி சொரூபம் ஆகிறார்கள். இன்னும் சிலருக்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் ஆண்டு கழித்து அந்த பாக்கியம் கிடைக்கிறது. சிலர் அதையும் வேண்டாது தவமே சுகம் என்று, உலகம் ஏற்பட்ட நாளாய் இருந்துகொண்டு இருக்கிறார்கள். இந்திரிய வசப்பட்ட மக்களின் கண்களில் இவர்கள் படுவது இல்லை. ஆனால், தவசிகள் எங்கும் போகிறார்கள். கண நேரத்தில் விரும்பிய இடத்தை அடைகிறார்கள். அப்படி வந்தார் சித்தர் இங்கு நாங்கள் கலந்து பேசினோம்...” ஜோகி வாசகத்தை முடிக்கவில்லை.
இதையெல்லாம் கேட்டு பிரமித்த ராவ் ஜோடா கேட்டான். “ஒருவர் ஆயிரம் ஆண்டுகள் இருக்க முடியுமா?” என்று.
“அது அவரவர் சித்தியைப் பொறுத்தது. தவவலிமையைப் பொறுத்தது. ஆயிரம் ஆண்டு நீருக்குள் மூழ்கி தவம் புரிந்தவர்களைப் பற்றி நீ படித்தது இல்லையா?” என்று வினவிய போதும் ஜோகி கண்களைத் திறக்கவில்லை.
“புராணங்களில் படித்திருக்கிறேன்.” ஜோடா சொன்னான் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக.
“புராண காலங்களோடு அவர்கள் போகவில்லை. எந்த ஜோகியும் இஷ்டப்பட்டால் இந்த உடலை நீத்துவிடுவான்.”
“இல்லையேல்?”
“இருப்பான், பீஷ்மர் தமது சாவைத் தள்ளிப் போட்டு, வேண்டும் போது இறந்ததைப் படித்தது இல்லையா?”
“படித்திருக்கிறேன்.”
“அது மாதிரிதான் ஜோகிகளும் சித்தர்களும். இந்த ஹர்பா சங்கலாவும் அத்தகைய நிலையை அடையலாம் அவர் கட்டியிருக்கும் வாளைத் துறந்தால்.”
ஜோகியின் இந்த வார்த்தையைக் கேட்ட பிரம்மச்சாரி நகைத்தார். பெரிதாக, “அந்த பாக்கியம் எனக்கு இல்லை. வாளைத் துறப்பதைவிட உயிரைத் துறப்பேன்” என்றார் நகைப்பின் ஊடே.
“அது உன் விருப்பம் ஹர்பா சங்க்லா” என்றார் ஜோகி, பெருமூச்சுவிட்டு.
அப்பொழுது இடைபுகுந்து கேட்டான் ஜோடா. “ஜோகி! தாங்கள் அந்த திராவிட சித்தருடன் என்ன பேசினீர்கள்?” என்று.
“உலக முறையில் பேசவில்லை. இருவரும் வாயைத் திறக்கவில்லை” என்றார் ஜோகி.
அதுவரை வாளாவிருந்த அந்தப் பெண் குறுக்கே புகுந்து “சித்தர்கள் சந்திக்கும்போது வாயால் பேசுவது இல்லை. சிந்தையால் பேசிக்கொள்கிறார்கள். நீ அதைப் புரிந்து கொள்வது கஷ்டம்” என்றாள்.
இந்த ஜோகி சித்தர் விவகார வேதாந்தம் மண்டையைக் குழப்பியதால் ஜோடா அதைவிட்டு தனது சொந்த விவகாரத்தைப் பற்றிக் கேட்டான். “ஜோகி! அடுத்து நான் என்ன செய்யட்டும்?” என்று வினவினான்.
“உன் தலைநகருக்குப் போ” என்றார் ஜோகி.
“மண்டோருக்கா?”
“ஆம்,”
“அங்கு இருந்து நான்கு நாளில் நான் வெளியேற நேரிடும் என்று மலை அரசி சொன்னாளே.”
“அவள் சொன்னால், அது சாத்தியம்.”
“நான்கு நாளில் மீண்டும் நான் ஓடவேண்டுமா?”
“ஆம்.”
“அப்படியானால் நான் போவானேன்?”
“உன் கர்மாவைப் பூர்த்தி செய்ய. இந்த ஹர்பா சங்கலாவின் உதவி கிடைக்கும் வரை நீ நாடு இழந்து, நகரம் இழந்து ஓடுவாய். பிறகு நீ இந்த மலைமீது ஒரு கோட்டையைக் கட்டுவாய். அது உன் பெயரால் ஜோட்பூர் என்று பிரசித்தமாகும். பெரும் அரசை நீ நிறுவுவாய். இது உன் தலையெழுத்து. ஆனால், மேலும் உன் கைகளில் ரத்தக்கறை படியும். எப்படியென்று கேட்காதே. கர்ம வினைகளில் இருந்து நீ தப்ப முடியாது. ஆகையால் சொல்கிறபடி செய்... போ உன் நகரத்துக்கு” என்று உத்தரவிட்டார், ஜோகி. பிறகு மவுனமாகிவிட்டார். அவர் கண்கள் மூடின. அதை அறிந்து கொண்டது போல் அவர் எதிரில் இருந்த விளக்குச்சுடர் மெள்ள இழிந்து இழிந்து அடங்கியது.
“ஜோகி சமாதியில் ஆழ்ந்துவிட்டார். செல்லுங்கள் வெளியே” என்ற மலை அரசியின் கண்டிப்பும் அதிகாரமும் நிறைந்த குரலைக் கேட்ட மார்வார் இளவரசனும் ஹர்பா சங்க்லாவும் எழுந்தார்கள்.
ஹர்பாசங்கலா வெளியே நடந்தார் பதில் பேசாமல். அவர் பெரும் காலடிச் சத்தம் குகையை அதிரச் செய்தது. அடுத்த சில வினாடிகளில் அவர் புரவி, மலைச்சரிவில் பாய்ந்து செல்லும் பெரு ஒலியும் ஜோடாவின் காதில் விழுந்தது.
ராவ்ஜோடா ஜோகியை நோக்கினான். அவர் முகம் ஏதோ பெரிய விளக்கு போல் பிரகாசித்தது. அப்பொழுது மீண்டும் பந்தத்தை அணைத்துவிட்டாள் பிரம்மச்சாரிணி. “நீயும் வெளியே செல்லலாம்” என்றாள் அதிகாரத்துடன்.
ஜோகியின் முகத்தின் பிரகாசம் குகைக்கு மந்தமான வெளிச்சத்தை அளித்தது.
அதில் ஆழ்ந்துவிட்ட மலை அரசியின் கண்கள் மூடின. அவள் முகம் ஜோகியின் முகத்தில் இருந்து கிளம்பி குகையில் பரவிவிட்ட ஜோதியில் மங்கலான உதயகால சந்திரன் போல் பெரு மயக்கத்தை அளித்தது. ஏதோ தேவதை போல் அசைவற்று உணர்வற்று நின்றிருந்தாள், அவள்.
அவளுடைய வனப்பு மார்வார் வாலிபன் மனதை பார்த்தும் அவனால் அவளை நோக்கி ஓர் அடியெடுத்து வைக்க முடியவில்லை.
சில நிமிடத்துக்குப் பிறகு கண்களைத் திறந்தாள் அவள். எதிரே நின்ற ராஜபுத்திரனை ஏறிட்டுப் பார்க்காமல், கனவில் நடப்பதுபோல் அவனையும் தாண்டி குகைக்கு வெளியே நடந்தாள். ராவ்ஜோடா அவளைப் பின்பற்றினான்.
குகைக்கு வெளியே வந்த பின்பும் அவள் நிற்கவில்லை. மலைக்காட்டுக்குள் போய்க் கொண்டிருந்தாள். அவள் கீழோ மேலோ பக்கங்களிலோ பார்க்காமல் நடந்தாள்.
அவளைப் பின்பற்றிய ஜோடா இரண்டு விந்தைகளைக் கண்டான். இரண்டும் அவனைப் பிரமிக்க வைத்தன. அவள் மானிடப் பெண் அல்ல, ஏதோ மோகினிப் பிசாசு என்று திகைத்தான். அதன் விளைவாகத் திரும்பி ஓடினான் வந்த திசையை நோக்கி.