வனப்பிரஸ்த ஜோகியின் குகையைவிட்டு வெளியேறிய மலை அரசி, வேகமாக மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்து சென்றதும், விளைவித்த இரண்டு விந்தைகளும் மகாவீரனான மார்வார் இளவரசனை திகில் கொள்ளச் செய்தன என்றால், அவற்றின் விளைவாக அவன் வந்த திசையை நோக்கிப் பறந்துவிட்டன என்றால், அதில் வியப்புற ஏதுமேயில்லை. ஜோடாவின் நிலையில் யார் இருந்திருந்தாலும் அவன் வழியைத்தான் பின்பற்றியிருப்பார்கள். உலகில் யாரும் நம்பமுடியாத அத்தனை பயங்கர விந்தைகளை அவன் பார்த்தான்.
மலை அரசி ஜோடாவை சிறிதும் இலட்சியம் செய்யாமலும் கண்களை அவன் பக்கம் அறவே திருப்பாமலும் குகையிலிருந்து வெளியேறியதும் நேராகக் காட்டுப் பகுதியில் நுழைந்தாள். அவளைப் பின்தொடர்ந்த ஜோடா அந்த அடர்ந்த மலைக்காட்டில் குத்து குத்தாகக் கிளம்பி காலைக் குத்திய கற்களை சிறிதும் சட்டை செய்யாமல் அவள் வேகமாக நடந்ததைக் கண்டான். அப்படி அவள் பத்தடி தூரம் சென்றதும், ஒரு மரத்தில் இருந்து குறுக்கே ஏதோ தொங்கியதையும், அது தொப்பென்று நிலத்தில் விழுந்ததையும் கண்டதும் அது பெரும் விஷப்பாம்பு என்பதை உணர்ந்து அவளை எச்சரிக்க குரல் கொடுக்க முற்பட்டான். ஆனால் அவன் வாயைத் திறக்கு முன்பு அந்தப் பாம்பு மலை அரசியின் காலில் சுற்றிக்கொண்டு விட்டதைப் பார்த்து, அத்துடன் தொலைந்தாள் மலை அரசி என்று நினைத்து அலறும் நிலைக்கு வந்தான். ஆனால், மலை அரசியின் முகத்தில் அச்சத்திற்குப் பதில் மந்தகாசம் உலாவுவதைக் கண்டதும் பிரமித்தான். அவனது பிரமிப்பை அதிகப்படுத்தவோ என்னவோ, மலை அரசி காலை வளைத்துவிட்ட பாம்பின் தலையைக் குனிந்து கையில் அனாயாசமாகப் பற்றி எடுத்தாள். அதை உற்று நோக்கினாள் சில விநாடிகள். பிறகு கையால் சுழற்றி தூர எறிந்துவிட்டு மேலே நடந்தாள்.
இந்தக் காட்சியைக் கண்ட ஜோடா ஒரு விநாடி திகைத்து நின்றான். அந்த பாம்பு சரசரவென்று ஓடி சருகுகளில் மறைந்துவிட்டதாலும், வேறு பாம்புகளும் இருக்கலாம் என்ற பீதியாலும், வெகு எச்சரிக்கையுடன் அவளைப் பின் தொடர்ந்தான். அவன் பின்னால் வருவது அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிலையின் தன்மைகளை அறிந்த அந்தப் பெண் பின்னால் ஜோடா நடந்ததால் ஏற்பட்ட சருகுகளின் ஒலியைக் காதில் வாங்கிக் கொண்டிருப்பாள் என்பதில் ஜோடாவுக்கு சிறிதும் சந்தேகம் இல்லை. அப்படி அறிந்தும் அவள் அவனை திரும்பிப் பார்த்தாள் இல்லை. நேராக நடந்து அந்த மலை உச்சியின் மற்றொரு பகுதிக்கு வந்து ஒரு பெரிய பாறையில் உட்கார்ந்து கொண்டாள்.
எங்கிருந்தோ இரண்டு புலிக் குட்டிகள் அவளை நோக்கி ஓடி வந்தன. அவை இரண்டையும் தூக்கி முத்தமிட்டு மடியில் படுக்க வைத்துத் தடவினாள். பிறகு அவற்றை தூக்கி மிகுந்த எச்சரிக்கையுடன் தரைவில் விட்டு “போங்கள் நாளைக்கு குகைக்கு வாருங்கள்” என்றாள். புலிக்குட்டிகள் அவள் கால்களை நக்கிவிட்டு ஓடி மரங்களுக்கு இடையே மறைந்தன.
அடுத்து அவள் மலைப்பாறையில் மல்லாந்து படுத்தாள். மேலே வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் வீசிய சிறு வெளிச்சத்தில் அவள் வனப்பு மிகுந்த உடல் மனோகரமாகக் காட்சி அளித்தது. அவள் மலைப்பாறையில் நன்றாக மல்லாந்து படுத்ததால் அவள் செழித்த மார்பு நன்றாக நிமிர்ந்து ஆகாயத்தை ஊடுருவிவிடும் எண்ணத்தைக் கொண்டது போல் செங்குத்தாக நின்றது. அவள் நிதான மூச்சுவிட்ட போதும் நன்றாக எழுந்து தாழ்ந்த இரட்டை அழகுகள் ஒருமுறை துடித்தன. என்ன காரணத்தாலோ, எந்த உணர்ச்சியாலோ ஏற்பட்ட அந்தத் துடிப்பு மார்வார் இளவரசனின் மனத்தை எங்கோ அள்ளிச் சென்றதால், அவன் தன்னை திடப்படுத்திக் கொள்ள, மறைந்திருந்த மரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
ஒருமுறை சிலிர்த்து திடப்பட்டு கெட்டிப்பட்டு நின்றுவிட்ட அவள் மார்பகத்தை அடுத்து, அவளது திரண்டு உருண்ட தொடைகள் இரண்டும் ஒருமுறை நெருங்கி இழைந்து நின்றன. அவள் இடையிலிருந்து முழங்கால் மட்டுமே மறைந்த மரவுரியின் கீழ்ப்பாகம் உராய்ந்ததால் சற்றே அதை சரிப்படுத்திய மலை அரசி லேசாக ஏதோ நகைத்தாள். பிறகு கனிவாய் இதழ்களைக் குவித்து ஊதினாள் மெதுவாக. அந்த ஊதலில் பிறந்தது ஆத்மாவை மயக்கும் கீதம்.
செம்பருத்தி மொட்டுகள் போல் குவிந்து சிறிது திறந்துவிட்ட வாயிலிருந்து புல்லாங்குழல் இசைப்பது போன்ற ஒலி தொடர்ந்து மிக மிருதுவாகக் கிளம்பியது. அதில் பிறந்தது, மார்வார் இளவரசன் ராஜஸ்தானத்தில் எங்கும் கேட்டு இராத புது ரக இசை. அது மானிடருக்காக ஏற்பட்டது அல்ல, மானிடரால் அமைக்கப் பெற்றது அல்ல என்பதை அடுத்த இரண்டு விநாடிகளில் ஜோடா புரிந்து கொண்டான்.
அவள் அழகிய இதழ்களில் இருந்து பிறந்த அந்த சொர்க்க கீதம், மலையின் அந்தப் பகுதியை ஆட்கொண்ட சிறிது நேரத்தில் எல்லாம் மரக் கூண்டுகளில் இருந்த பலரகப் பறவைகள் மெள்ள மெள்ள பறந்து அவள் படுத்திருந்த பாறைமீது இறங்கின. மைனா, குயில், கிளி, மரங்கொத்திப் பறவை, ஆந்தை, இந்த வர்க்கங்களின் குஞ்சுகள் அவள் மீது தொத்தித் தொத்தி ஏறத் தொடங்கின. அவற்றை சிறிதும் லட்சியம் செய்யாமல் அவள், இதழ்க்குழலால் இசையை எழுப்பிக்கொண்டே இருந்தாள்.
அடுத்தபடி, இரண்டு அன்னப் பறவைகள் நடந்து வந்து பாறைமீது ஏறி அவள் மீது படுத்துக்கொண்டன. அவை செய்த சைகையை ஒட்டி மற்ற பறவைகளும் அவள் மீது படுத்ததால், ஏதோ ஒரு புதுவிதப் பறவை ஆடை அணிந்த பெண்பாவை போல் ஆனாள் மலை அரசி.
இத்தனையும் போதாது என்று இரண்டு குருவிகள் மரத்திலிருந்து இறங்கி அவள் செழுமிய மார்பகத்தில் இரு உச்சிகளிலும் உட்கார்ந்தன. அந்த சமயத்தில் அவள் கண்விழித்து, அந்த இரண்டு குருவிக் குஞ்சுகளையும் எடுத்து முத்தமிட்டாள்.
பிறுகு படுத்த நிலையை விட்டு எழுந்து உட்கார்ந்தாள். உட்கார்ந்துகொண்டு தன் மீது எழுந்து தவழத் தொடங்கிவிட்ட பறவைகளைப் பார்த்து, “நாளைக்கு வாருங்கள், குகைக்கு. ஜோக் அவர் கையாலேயே உங்களுக்குப் பிரசாதம் கொடுப்பார்” என்று சொன்னாள்.
அதைக் கேட்ட பறவைகள் சிறகுகளைத் தூக்கி அடித்துக்கொண்டன. பிறகு பலவித சப்த ஜாலங்களைக் கிளப்பின. மலை அரசியும் ஏதேதோ பலவித ஒலிகளை எழுப்பினாள். பறவைகள் அவளது ஒலிகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவை பதிலுக்கு அதேவித ஒலிகளைக் கிளப்பின. அவள் கையசைத்தாள். சட்டென்று சகல ஒலிகளும் அடங்கின; நிசப்தம் நிலவியது. அப்பொழுது அவள் குயிலைப் பார்த்து சைகை செய்ய குயில்மட்டும் கூவ ஆரம்பித்தது. அதற்கு அவள் மெதுவாகத் தாளம் போட்டாள்.
அதற்குமேல் ஜோடாவால் தாங்க முடியவில்லை. “முதலில் சர்ப்ப வித்தை, பிறகு பட்சி ஜாலம். இதில் ஏதோ மாயம் இருக்கிறது. இவள் சாதாரணப் பெண் அல்ல. மோகினிப் பிசாசு என்று சொல்வார்களே, அப்படி ஏதாவது இருக்க வேண்டும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அடுத்த விநாடி அங்கு நிற்கவில்லை. ஜோடா திரும்பிப் பறந்தான் ஜோகியின் குகையை நோக்கி.
குகைப் பிராந்தியம் மிக அமைதியாயிருந்தது. எங்கும் ஆழ்ந்த இருளைத் தவிர வேறு ஒளி ஏதுமில்லை. சற்று எட்ட ஓடிய அருவியின் சலசலப்பைத் தவிர வேறு எந்தவித ஒலியும் இல்லை.
அவன் விட்டுப் போயிருந்த புரவிகூட எந்தவித சத்தத்தையும் செய்யாமல் மந்திரத்தால் கட்டுண்டதுபோல் அசைவற்று நின்றிருந்தது. அதைக் கண்ட ஜோடா தனது புரவியையும் மலை அரசி மயக்கிவிட்டாளோ என்ற நினைப்பில் தயக்கத்துடன் அதை அணுகினான். ஆனால், தன்னைத் திரும்பிப் பார்த்து முகத்தால் தன் முகத்தில் உராய்ந்ததால் அதன் சுரணை கெடவில்லை என்று அதன் மீது மெதுவாக ஏறினான். அது சில அடிகள் நகர்ந்ததும், மலை அடிவாரத்தில் பல புரவிகள் வரும் சத்தம் கேட்கவே சட்டென்று கடிவாளத்தை இழுத்து புரவியை நிறுத்தினான்.
புரவிகள் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது. வரட்டும் என்று காத்திருந்தான், ஜோடா.
அந்தச் சமயத்தில் அவன் முன்பு தோன்றினாள் மலை அரசி. அவன் புரவிக்கு எதிரே நின்று, “இளவரசனே! வருபவர்கள் உன் வீரர்கள்” என்றாள்.
இதனால் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்ட ராவ்ஜோடா “எப்படித் தெரியும் உனக்கு?” என்று கேட்டான்.
“நீ வந்தது எப்படித் தெரிந்தது? நீ என்னைத் தொடர்ந்தது எப்படித் தெரிந்தது?” என்று கேட்டாள் அந்தப் பெண். அத்துடன் சொன்னாள், “உன் வீரர்கள் வந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடு, உன் தலைநகருக்கு” என்று.
இதைக் கேட்டு பிரமித்தான் ஜோடா. “ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?” என்று வினவினான் பிரமிப்பின் ஊடே...
“நீ அவர்களுடன் சென்றால், நீங்கள் அனைவரும் உயிர் இழப்பீர்கள்” என்றாள் அவள்.
“அவர்கள் போய்விட்டால் எனக்குத் துணை யார் வருவார்கள்?” என்று ஜோடா வினவினான்.
“நான்” என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னாள் அவள்.
ஜோடாவின் மலைப்பு எல்லை கடந்தது. “நீயா!” என்று திகைத்த குரலில் கேட்டான்.
“என் தலைநகருக்கா வருவாய்?”
“ஆம்.”
“வேறு உடையிருக்கிறதா உனக்கு?”
“இல்லை.”
“இந்த உடையிலேயா வருவாய்?”
“ஆம்.”
ஜோடா இந்த சங்கடத்துக்கு என்ன செய்வது என்று அறியாமல் பிரமிப்பில் ஆழ்ந்து சிலையென நின்றுவிட்டான்.