மலை அரசியை “காட்டு மலர்” என்று குறிப்பிட்டதோடு தனது பேச்சை ஜோடா நிறுத்திக்கொண்டு இருந்தால் ஜகத்சிம்மனின் கோபம் தலைக்கு ஏறியிருக்காது. “இவள் மார்வார் ராணி” என்றும் சொல்லவே ஜகத்சிம்மனுக்கு கோபத்துடன் திக்பிரமையும் சித்தத்தைச் சூழ்ந்து கொண்டதால், அவன் பேச நா எழாமல் நின்றான் பல விநாடிகள். பிறகு பேசியபோதும் பேச்சில் அச்சமும் குழப்பமும் கலந்து கிடந்தன. “இவளா! மார்வார் ராணியா!” என்று மார்வார் படைத் தலைவன் கேட்டபோது, ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போன்ற ஒலி அதில் பரவிக் கிடந்தது.
புரவியின் கடிவாளத்தை ஏந்திக்கொண்டு தரையில் நின்ற ஜோடா தனது படைத் தலைவனை சிறிது சினத்துடன் நோக்கினான். “ஜகத்சிம்மன்! உனக்கு மார்வார் ராணியைப் பற்றிப் பேசும் முறையே தெரியவில்லை. ‘இவளா’ என்று கேட்பது பெரும் குற்றம்” என்று சுட்டிக் காட்டவும் செய்தான் ராவ்ஜோடா.
ஜகத்சிம்மன் இதழ்களில் இகழ்ச்சிப் புன்முறுவல் அரும்பிற்று. மலை அரசிக்குத் தலைவணங்கிவிட்டு ஜோடாவை நோக்கித் திரும்பி “இவர்கள் உடனடியாக ராணி ஆக முடியாது” என்றான்.
“ஏன்?” ஜோடாவின் குரலில் சீற்றம் இருந்தது.
“தாங்கள் இன்னும் மகாராஜா ஆகவில்லை. நாளைக்கு மறுநாளைக்கு மறுநாள் அதற்கு நாள் வைத்திருக்கிறார் புரோகிதர். அதற்குப் பின்புதான் தாங்கள் மகாராஜா. மகாராஜாவுக்குத்தான் மகாராணி உண்டு. ராஜபுதனத்து சம்பிரதாயம் தாங்கள் அறியாதது அல்ல” என்று விளக்கினான் ஜகத்சிம்மன்.
“புரோகிதர் குறிப்பிட்ட நாளில் முடிசூட்டு நடக்காது. அதை நாளைக்கே நடத்திவிடுங்கள்” என்று குறுக்கிட்டுப் பேசிய மலை அரசி, “சேனாதிபதி! மீதி விஷயங்களை நாம் அரண்மனையில் பேசலாம்” என்றும் சொன்னாள் கட்டளையிடும் தோரணையில் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் புரவியை நகர்த்தவும் செய்தாள், தனது கால்களை அதன் வயிற்றில் உதைத்து.
அதற்குமேல் நிற்கவோ பேசவோ சந்தர்ப்பம் கிடைக்காததால் ஜோடா புரவிக்கு முன்பு கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு மார்வார் தலைநகரத்தின் ராஜவீதியில் நடந்தான். படைத்தலைவனும் இளவரசனைப் பின்பற்றிச் சென்றான்.
அரண்மனையின் முதல் கட்டுக்கு வந்ததுமே பத்து பணிப்பெண்கள் மலை அரசியை சூழ்ந்துகொண்டனர். “தாங்கள் இளவரசருடன் செல்ல முடியாது. இப்படி வரவேண்டும்” என்று மற்றொரு புறமாக வழிகாட்டினார்கள்.
பெண்கள் மலை அரசியைச் சூழ்ந்ததும் ஜோடா சிறிது விலகி நின்றான். “மகாராணி! சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்” என்று கூறி வேறுபுறம் திரும்பிச் சென்றான். பெண்கள் மலை அரசியை பெரிய அரசி இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஜோடாவின் தந்தை மேவார் தலைநகரில் கொல்லப்பட்ட செய்தியை முன்னதாகக் கேள்விப்பட்டு இருந்ததால் முகத்தை நன்றாக மறைத்துக்கொண்டு துக்கக் கோலத்தில் தனியாக பஞ்சணையில் அமர்ந்திருந்தாள் மார்வார் மகாராணி. அவளுக்குப் பணிவதைவிட்டு நேராக அவள் இருந்த பஞ்சணையை அடைந்த மலை அரசி அவள் அருகில் உட்கார்ந்து அவளை இறுக அணைத்துக் கொண்டாள். “மகாராணி! இந்த உலகம் இன்பமும் துன்பமும் கலந்தது. கிரமமும் அக்கிரமமும் கலந்தது. ஆயைால் கவலையை விடுங்கள். உங்கள் புதல்வர் மார்வாருக்கு ஜெயத்தையும் மங்களத்தையும் அளிப்பார்” என்று தைரியமும் தத்துவமும் கலந்த சொற்களை உதிர்த்தாள்.
அந்த அணைப்பில், அந்த சொற்களில், சிறிது ஆறுதலைப் பெற்ற மகாராணி, “பெண்ணே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டாள்.
“ஜோட்கிர்ரில் இருந்து வருகிறேன். வனப்பிரஸ்த ஜோகியின் மகள் நான்” என்று சொன்னாள், மலை அரசி.
மகாராணி சற்று மலை அரசியின் அணைப்பில் இருந்து விலகி “ஜோட்கிர்ரா? அப்படி எதுவும் இந்தப் பகுதியில் கிடையாதே” என்றாள்.
“பெயர் இப்பொழுது மாறிவிட்டது. முன்பு பாகுர்ச்சிரா என்று பெயர்” என்று சொன்னாள் மலை அரசி.
மகாராணியின் கண்களில் வியப்பு தெரிந்தது. “ஏன் அப்படி மாறியது? யாரால் மாற்றப்பட்டது?” என்று வினவினாள் குரலிலும் வியப்பு பெரிதும் ஒலிக்க.
“வனப்பிரஸ்த ஜோகியால் மாற்றப்பட்டது. இனி அந்த மலை போர்களைத் தூண்டும் என்பதால் மாற்றினார். அதற்குக் காரணம் உங்கள் புதல்வர். அவர் அங்கு அடி எடுத்து வைத்த அன்றே ராஜஸ்தானம் போர்க்களமாக வித்து விதைக்கப்பட்டது” என்றாள் மலை அரசி.
மகாராணி திக்பிரமை அடைந்தாள். “ஆம், ஆம், உண்மைதான். சந்தசிம்மன் படையெடுத்து வருகிறானாம் மாண்டோர் மீது” என்று சொன்னாள், துன்பம் தோய்ந்த குரலில்.
“அஞ்சாதீர்கள் மகாராணி, அந்தப் படையெடுப்பால் மண்டோருக்கோ உங்கள் மகனுக்கோ எந்தத் தீங்கும் இல்லை” என்ற மலை அரசியை அச்சத்துடன் நோக்கினாள் மகாராணி.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்” என்றும் கேட்டாள்.
சிறிது சிந்தித்தாள் மலை அரசி. “சாதாரண மனிதர்களின் கண்ணுக்கோ புத்திக்கோ எட்டாத பல விஷயங்கள் என் வளர்ப்புத் தந்தைக்குத் தெரியும். அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். இந்த ராஜாபுதனத்தின் பிற்காலத்தைப் பற்றி. இந்த மண்டோர் சில காலம் கை மாறலாம். ஆனால், மார்வார் கைமாறாது. உங்கள் கணவர் மேவாரை ஆக்கிரமிக்க முயன்றதால் ஏற்பட்ட விளைவுகளை உங்கள் மகனின் நிதானமும் நேர்மையும் சரிப்படுத்தும். இந்த நாட்டில் இரத்தப் பூசல்கள் இன்னும் தீரவில்லை. உங்கள் மகன் அப்பூசல்களுக்கு முடிவு கட்டுவார். இந்த மார்வார் இவர் காலத்தில் பெரிதும் விரியும், அமைதி நிலவும். மேவாருக்கும் மார்வாருக்கும் இடையில்” என்று சொல்லிவிட்டு, “நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்று பணிப்பெண்களுடன் சென்றுவிட்டாள்.
மகாராணி அவள் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். “என் மகனுக்கு ஏற்ற அழகிதான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
அறையை விட்டுக் கிளம்பிய மலை அரசியை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பணிப்பெண்களில் ஒருத்தி அவள் மரவுரியைக் களையச் சொல்ல, மற்றவர் வேறோர் ஆடையளித்தார்கள் நீராட்டத்திற்காக. பிறகு குளியல் அறையில் மங்களஸ்நானமும் செய்வித்தார்கள். அடுத்து அவளுக்கு என்று ஒதுக்கிவிடப்பட்ட தனி அறை காட்டப்பட்டது. அந்த அறைக்குள் அவர்களால் அளிக்கப்பட்ட பட்டாடையை தாறுமாறாகச் சுற்றிக்கொண்டாள். மலை அரசி மற்றவர்களை ஆடையை அணிந்து விடவும் அனுமதிக்கவில்லை. அவள் குழலைக்கூட யாரையும் சீவ அனுமதிக்காமல் தானே கோதி முடிந்துகொண்டாள். நெற்றியில் பளிச்சென்று குங்குமம் அணிந்து, அவர்கள் கொண்டுவந்த மலர்ச்சரத்தைத் தன் குழலின் பெருமுடிப்பில் அணிந்து கொண்டாள்.
இந்த அலங்காரத்துக்குப் பிறகு அவளைப் பார்த்த பணிப்பெண்கள் பிரமித்தார்கள். தாறுமாறாக உடலை மூடி சுற்றப்பட்ட ஆடையும், குழலில் அனாயாசமாக சுற்றப்பட்ட மலர்ச்சரமும் அவளுக்குப் பேரழகைக் கொடுத்திருந்ததைக் கண்ட பெண்கள், “மகாராணி! இந்த மார்வார் சிம்மாசனத்தில் என்றைக்கு அமரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள் பயபக்தியுடன்.
மலை அரசி அவர்களை அன்புடன் நோக்கி முறுவல் செய்தாள். “அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்றாள்.
“ஏன் மகாராணி?” என்று கேட்டாள் ஒரு பணிப்பெண்.
“இளவரசருக்கு அரசு இன்னும் நிலைக்கவில்லை. அதற்கு காலம் இருக்கிறது” என்ற மலை அரசி, அவர்களை அதற்கு மேல் பேசவிடாமல் ஒரு பெண்ணை நோக்கி, “இளவரசர் காலைக்கடன்களை முடித்து உணவு அருந்தியதும் மந்திராலோசனை சபையைக் கூட்டச் சொல்” என்று கூறினாள்.
பணிப்பெண் பிரமித்தாள். “அம்மணி! இது அரசாங்க விஷயம்” என்றாள்.
“ஆம்” என்றாள் மலை அரசி.
“அதில் தாங்கள் தலையிடுவது... இளவரசருக்கு ஆணையிடுவது...”
“நியாயம்.”
“நியாயமா?”
“நியாயந்தான். அவசியமுங்கூட” என்றாள் மலை அரசி.
அதற்குமேல் பேசவில்லை, பணிப்பெண் பறந்தாள் அந்த அறையில் இருந்து. ஆனால் பணிப்பெண்களுக்கு அடுத்த நிகழ்ச்சிகள் வியப்பாயிருந்தன. மலை அரசியின் உத்தரவை மேற்கொண்டான் இளவரசன் ஜோடா. காலையில் பத்து நாழிகைக்கெல்லாம் அவசரமாக மந்திராலோசனை சபையைக் கூட்டினான். அதில் கலந்துகொள்ள அவனே வந்து மலை அரசியை அழைத்துப்போனான்.
மந்திராலோசனை தொடங்கியது. இளவரசரை நோக்கி முதலமைச்சர் வினவினார். “தங்கள் மகுடாபிஷேகத்தை என்று வைத்துக் கொள்ளலாம்?” என்று
இதற்கு இளவரசன் பதில் சொல்லவில்லை.
“நாளைக்கு” என்றாள் மலை அரசி.
“நாளைக்கு மறுநாளைக்கு மறுநாள் புரோகிதர் நாள் வைத்திருக்கிறார்” என்றார் முதலமைச்சர்.
“அன்று மகுடாபிஷேகம் நடக்காது” என்று திட்டமாகச் சொன்னாள் மலை அரசி.
முதலைமச்சர் வெகுண்டு எழுந்தார்.
“ஏன் நடக்காது? யார் தடுக்க முடியும்?” என்று சீறினார்.
மலை அரசி சபையை உற்று நோக்கினாள், அமர்ந்த வண்ணம். “சந்தசிம்மன்” என்றாள் திடமாக.
“சந்தசிம்மனா! இந்த மண்டோருக்குள் ஆயிரம் சந்தசிம்மனாலும் நுழைய முடியாது” என்றான் ஜகத்சிம்மன்.
மலை அரசியின் கண்களில் இகழ்ச்சி தாண்டவம் ஆடியது.
“இன்று உங்கள் இளவரசர் அமர்ந்திருக்கும் இடத்தில் இன்றில் இருந்து நான்காவது நாள் சந்தசிம்மன் அமர்ந்திருப்பான்” என்றாள் மலை அரசி, உறுதி நிரம்பிய குரலில்.
“நீங்கள் பேசுவது ராஜத் துரோகம்” என்றார் முதலமைச்சர்.
“பெண்களை மந்திராலோசனைக்கு அழைப்பதால் ஏற்பட்ட தவறு” என்று சீறினான் ஜகத்சிம்மன்.
இன்னும் சில அமைச்சர்களும் படைத்தலைவர்களும் பல படி கேள்விகளைக் கேட்டார்கள்.
இத்தனையிலும் ஜோடா தலையிடவில்லை. மலை அரசியே தொடர்ந்து பேசினாள். அவள் கண்களில் சீரிய ஒளி ஒன்று புலப்பட்டது. “உங்களை எச்சரிக்கிறேன். மீண்டும் ரத்தத்தை இந்த மாரூஸ்தலியில் சிந்தாதீர்கள். மேவாரில் சிந்தப்பட்ட ரத்தம் போதும். போருக்கு சன்னத்தம் செய்யாதீர்கள். நாளைக்கு இளவரசருக்கு மகுடம் சூட்டுங்கள்” என்றாள் மலர் போன்ற உதடுகளைத் திறந்து.
“நாளைக்கு நாள்...” முதலமைச்சர் தடுமாறினார்.
“நல்ல நாள், இளவரசரை மார்வாரின் நிரந்தர மன்னன் ஆக்கும் நாள். ஐந்து கிரகங்கள் நாளைக்கு உச்சத்துக்கு வருகின்றன.” இதைத் தீர்மானமாகச் சொன்னாள் மலை அரசி. பிறகு ஜோடாவை நோக்கித் திரும்பி. “ஜோடா! இத்தனையும் உன் நன்மைக்காகவே செய்கிறேன்” என்று சொன்னாள்.
இளவரசரை அவள் ஏகவசனத்தில் பேசியது வெறுப்பாயிருந்தது மற்றவர்களுக்கு. ஆனால் ஜோடா அதைப் பாராட்டவில்லை. “மகுடாபிஷேகத்தின் போது நீயும் என் பக்கத்தில் மகாராணியாக அமருவாய் அல்லவா?” என்று வினவினான்.
“அதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்றாள் மலை அரசி. “நான் உட்காரும்போது இந்த சிம்மாசனம் உறுதியாயிருக்கும். இப்போது இது நிலையற்ற அரசு” என்று அதிகாரத் தோரணையில் கூறினாள்.
“இப்பொழுது உறுதியில்லையா?” என்று வினவினான் ஜோடா.
அதற்குப் பதிலாக ஓர் அதிர்வெடியை எடுத்து வீசினாள் மலை அரசி.