மண்டோர் போரில் மாவீரர்களான சந்தசிம்மன் புதல்வர்கள் அடைந்த தோல்விக்குக் காரணம் தாங்கள் போரிடும் எதிரிகளின் திறனை அவர்கள் தவறாக எடைபோட்டதுதான் என்று கர்னல் ஜேம்ஸ்டாட் தமது ராஜபுதன வரலாற்று நூலில் தெளிவாக எழுதியிருக்கிறார்.
சந்தசிம்மன் புதல்வர்களுக்கு போர் புதிதல்ல என்றாலும், அவர்கள் சமரிடும் திறமையும் அற்ப சொற்பமில்லை என்றாலும், எதிரியின் எண்ணிக்கைக் குறைவையும் பிருமச்சாரியின் தளபதிப் பதவியையும் நினைத்து அவர்கள் ஏமாந்தார்கள் என்று சரித்திரம் சொல்கிறது.
பிருமச்சாரி ஹர்பாசங்கலா பெரிய வாள் வீரர் என்பது ராஜபுதனத்தில் பிரசித்தம். ஆனால் எங்கும் எந்தப் போரிலும் தளபதியாக இருந்து பணியாற்றியதாகவோ படைகளை அணிவகுத்ததாகவோ யாரும் கேள்விப்பட்டது இல்லை. ஆகையால் அனுபவம் இல்லாத ஒரு சிறு படையுடன், அனுபவம் இல்லாத ஒரு தளபதியுடன் ஜோடா தங்களை எதிர்க்க வந்தது சுத்த முட்டாள்தனம் என்றே சந்தசிம்மன் புதல்வர்கள் எண்ணினார்கள். அது மட்டுமல்ல, கோட்டைக் கதவுகளை எதிரி பெரும் மரம் கொண்டு உடைக்கத் தொடங்கியதும் தாங்களாகவே கதவுகளைத் திறந்துகொண்டு போர் முறைப்படி இரண்டு பிரிவுகளாக அணிவகுக்கப்பட்ட நாலாயிரம் புரவி வீரர்களுடன் சகோதரர் இருவரும் கோட்டைக்கு வெளியே வந்ததும் பிரமித்துப் போனார்கள்.
சுமார் எழுநூறுக்கு மேற்படாத ஒரு சிறு படை அவர்கள் கண் முன்பு தெரிந்தது. அதுவும் அவர்கள் வந்ததும் நூறு. நூறு பேராகப் பிரிந்தது. அந்தப் பிரிவுகளில் ஒன்றுக்குத் தலைமை வகித்தவளோ ஒரு வேட்டுவச்சி. புரவிமீது அலட்சியமாக அமர்ந்து, கையில் இருந்த வில்லை வளைத்து நாணில் அம்பை அமைத்து அதை இழுத்துப் பிடித்திருந்தாள் போருக்குத் தயாராக.
பிருமச்சாரி ஹர்பாசங்க்லாவும் ஜோடாவும் மற்றும் இரு சிறு பிரிவுகளுக்கு தலைமை வகித்து நின்றார்கள். இத்தனைக்கும் போரை அவர்கள் துவங்கவில்லை. அதனால் சற்று நிதானித்த சந்தசிம்மன் புதல்வர்களை நோக்கி போரை துவங்கலாம் என்பதற்கு அறிகுறியாகத் தமது பெரிய கோடரியை எடுத்துத் தலைமேல் ஆட்டி சைகை செய்தார் பிருமச்சாரி. அதற்குமேல் தாமதிக்காத காந்தோஜியும் மஞ்சாஜியும் தங்கள் பெரும் படையை எதிரிகளை நோக்கி நகர்த்தினார்கள்.
சுமார் நாலாயிரம் புரவி வீரர்களால் வேகமாகத் தாக்கப்பட்ட ஜோடாவின் படை ஒருமுறை சிறிது அசைந்து கொடுத்தது. ஆனால், பிருமச்சாரி பயங்கரமாக நகைத்து வெண் சங்கு ஒன்றை எடுத்து பலமாக ஊதவே சிறு சிறு பிரிவுகளாக நூறு நூறு வீரர்களைக் கொண்ட ஏழு பிரிவுகளும் எதிரி படைகளை பல இடங்களில் ஊடுருவியது. அதனால், ஏக காலத்தில் பல இடங்களில் ஊசிகளால் குத்தப்பட்ட சரீரத்தைப்போல் மேவார் படை சிறிது தெளிந்தது. அந்தத் தெளியலால் கிடைத்த இடங்களில் பல அம்புகள் போல் பிருமச்சாரியின் படை நுழைந்துவிட்டது. பிருமச்சாரியின் புரவி வீரர்கள் ஏதோ வெறி பிடித்தவர்கள் போல் எதிரிகளை நாசம் செய்யத் தொடங்கினார்கள்.
சம்பிரதாயத்துக்கு நேர்விரோதமான இந்தப் போரைக் கண்டு இரு சகோதரர்களும் பிரமித்தனர். பிரமித்ததும் அன்றி தங்கள் படைப்பிரிவுகளால் எதிரிகளைச் சூழ்ந்து அழித்து விடவும் தீர்மானித்து வாட்களை உயரத் தூக்கி ஆட்டினார்கள். அவர்கள் பெரும்படையும் எழுநூறு பேரை நொறுக்கி நசித்துவிட முயன்றது. அந்தச் சமயத்தில்தான் பாபுஜியின் வாயுவேகப் புரவிப்படை திடீர் எனத் தோன்றி அவர்கள் மீது விழுந்தது. நிதானமற்ற புரவிகள் பயங்கரமாக சந்தசிம்மன் புதல்வர் படையை ஏதோ சூறாவளிபோல் தாக்கவே நாலாயிரம் எண்ணிக்கை திடீரென அர்த்தமற்றது ஆயிற்று. பாபுஜி புரவிகளைப் பழக்குபவர், விற்பவர் என்பது காந்தோஜிக்கும், மஞ்சாஜிக்கும் தெரிந்தாலும், அந்தப் புரவிகளை வீரர்கள் நடத்தி வருவார்கள் என்றும், போருக்கும் அவருக்கும் சம்பந்தம் உண்டு என்றும் அவர்கள் அறியாததால் வியப்பை எய்தி மும்முரமாகப் போரிட்டார்கள்.
பாபுஜியின் வாயுவேகப் புரவிப் படையால் வலப் பக்கத்திலும், பிருமச்சாரியின் நூறு நூறாகப் பிரிக்கப்பட்ட சின்னஞ்சிறு படைப் பிரிவுகள் நடுமத்தியிலும் ஊடுருவிவிட்டதன் விளைவாக மேவார் படை சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டுக் குலைந்தது. அதே சமயத்தில் கடோத்கஜனே போருக்கு வந்துவிட்டதுபோல் கோடரியை உயர்த்தியும் திடீரென இறக்கியும் பிருமச்சாரி எதிரிகளை வீழ்த்திக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் போதாக் குறைக்கு திடீரென பக்கத்து மலைப்பகுதியில் தோன்றிய இரு நூறு வேடர்களின் விஷ அம்புகள் பறந்து வந்தன மேவார் படையை நோக்கி.
இப்படி திடீர் திடீரென ஏற்பட்ட தொடர் போரால் கட்டுக் குலைந்து மேவார் படை பெரும் நாசத்திற்கு உள்ளானதால் சினம் மிகப்பெற்ற காந்தோஜியை ஜோடா தாக்கினான். காந்தோஜியின் வாளை அவன் தட்டிவிட்டபடியாலும், பாபுஜியின் புரவிகளின் மோதலால் மஞ்சாஜி புரவியில் இருந்து தூக்கி எறியப்பட்டதாலும் காந்தோஜியின் சைகையைக் கண்டு அவன் படை பாலைவனத்துக்குள் விரைந்து பின்வாங்கியது. பின்வாங்கிய சமயத்தில் காந்தோஜி தான் சிறிது காலம் ஆண்ட மண்டோரை நோக்கினான். பந்தங்களை ஏந்திய மக்கள் ஜெய முழக்கங்களுடன் கண்ட ஆயுதங்களுடன் வெளிவந்தார்கள் தங்கள் மன்னனை வரவேற்க.
அப்பொழுது சொன்னான் காந்தோஜி, பக்கத்தில் ஒரு புதுப் புரவியில் உட்கார்ந்து இருந்த தனது தம்பியை நோக்கி, “தம்பி! பார்த்தாயா! மண்டோர் மக்கள் தங்கள் மன்னனை எத்தனை நேசிக்கிறார்கள். இந்த மக்கள் பலத்துக்கு முன்பு நமது படைபலம் என்ன செய்ய முடியும்?” என்று கூறினான்.
“அது மட்டுமல்ல அண்ணா! பிருமச்சாரியையும் பாபுஜியையும் நாம் தவறாக எடைபோட்டோம். என்ன புதுவிதமான அணிவகுப்பு! புரவிகள் வேகம் என்ன! இந்த விந்தையாலும் நாம் ஏமாந்தோம்” என்றான் மஞ்சாஜி.
“ஆம் தம்பி! எண்ணிக்கை மட்டும் வெற்றியை அளிப்பதில்லை என்று கூறிய காந்தோஜி தனது புரவியை நடத்தினான் மேவார் இருந்த திசை நோக்கி. அவன் படை கிட்டத்தட்ட மார்வாருக்கும் மேவாருக்கும் இடையில் உள்ள லூனி ஆற்றை அடைந்த சமயத்தில் மண்டோர் திசையில் பெரும் தூள் கிளம்பியது.
“இதென்ன அண்ணா?” என்று வினவினான் மஞ்சாஜி.
“ஜோடா தன் கேவலத்தை நிரூபிக்கிறான். பின்வாங்கிய படையை அழிப்பது ராஜபுதன தர்மம் அல்ல” என்றான் காந்தோஜி.
“இருப்பினும் மேவார் சந்ததி கோழையல்ல என்பதை நிரூபிப்போம்” என்ற காந்தோஜி யுத்தத்தில் சிறுத்துவிட்ட படையை நிறுத்தித் திருப்பினான். அந்தப் படையின்மீது வேகமாக விழுந்தான் ஜகத்சிம்மன், சுமார் இருநூறு வீரர்களுடன். இரண்டு படைகளும் கை கலக்கு முன்பே ஜகத்சிம்மன் எறிந்த குறுவாள் ஒன்று மஞ்சாஜியின் மார்பில் பாய்ந்தது. மஞ்சாஜி புரவியில் இருந்து சரிந்து பாலைவன மணலில் புரண்டான். அவன் இதயத்தில் இருந்து குபுகுபுவென்று கிளம்பிய இரத்தம் பாலைவன மணலை நனைத்தது.
தனது படைகளை ஜகத்சிம்மன் மீது ஏவ காந்தோஜி முயன்ற சமயத்தில் ஜகத்சிம்மன் புரவியில் இருந்து சரிந்து விழுந்தான் மணலில். அவன் இடையிலும் ஒரு குறுவாள் பாய்ந்திருந்தது. அடுத்த விநாடி வேகமாக வந்த இரு புரவிகள் மஞ்சாஜி விழுந்திருந்த இடத்தை அணுகின. அதில் இருந்து ராவ்ஜோடாவும் பிருமச்சாரியும் குதித்து மஞ்சாஜியின் உடலைப் புரட்டிப் பார்த்தார்கள். பிருமச்சாரி குறுவாளை மெள்ள மஞ்சாஜியின் இதயத்தில் இருந்து எடுத்து, பக்கத்தில் இருந்த ஜோடாவின் அங்கியைச் சிறிது கிழித்து காயத்தில் அடைத்து இரத்தத்தை நிறுத்தினார். மஞ்சாஜி மெள்ள கண் விழித்தான். ஆனால் அவன் சுவாசம் பெரிதாக வந்துகொண்டு இருந்தது. அவனைச் சுற்றி நின்ற ஜோடாவும், காந்தோஜியும் இதர வீரர்களும் அவன் உயிர் அதிக நேரம் நிலைக்காது என்பதைப் புரிந்துகொண்டதால் அனைவர் முகத்திலும் சோகக்களை அபரிமிதமாக விரிந்தது. தம்பியை நோக்கிக் கண்ணீர் உதிர்க்கவில்லை காந்தோஜி. அவன் கண்களில் நீருக்கு பதில் நெருப்பு நிரம்பி நின்றது.
“தம்பி! அஞ்சாதே. உன்னைக் கொன்றவனைப் பழி வாங்குகிறேன். அத்துடன்....” என்று மேலும் ஏதோ சொல்லப் போனான்.
அப்பொழுது பிருமச்சாரி காந்தோஜியைப் பார்த்தார் சினத்துடன். “காந்தோஜி! சபதம் எதையும் செய்யாதே. மார்வாரும் மேவாரும் சிந்திய ரத்தம் போதும். இந்த இரண்டு வம்சங்களின் போர்களில் ராஜபுதனப் பூண்டே அடியோடு அழிந்துவிடும்” என்றார். அத்துடன் மணலில் மற்றொருபுறம் கிடந்த ஜகத்சிம்மனை சுட்டிக்காட்டி, “இந்தத் துரோகிதான் இத்தனைக்கும் காரணம். அவனை அழைத்துச்செல். தூக்கிலிடு, வெட்டு, எதை வேண்டுமானாலும் செய்” என்றார்.
“அவனை வெட்டினால் என் தம்பியின் உயிர் வருமா?” என்று வினவினான், காந்தோஜி.
“யார் போனாலும் உயிர் வராது. அதைத் திரும்ப வரவழைப்பவன் மனித வரலாற்றில் இதுவரை யாரும் கிடையாது” என்றார்.
“ஜகத்சிம்மன் எனக்குத் தேவையில்லை” என்றான் காந்தோஜி.
“வேறு யார் தேவை?”
“உங்கள் மன்னன் ஜோடா” என்றான் காந்தோஜி.
ராவ்ஜோடா இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. மஞ்சாஜிக்கு அருகில் மண்டியிட்ட நிலையில் இருந்து எழுந்தான்.
“இதோ என் வாள்! எடுத்துக்கொள். உன்னுடன் வருகிறேன்” என்றான் மண்டோர் மன்னன்.
காந்தோஜியின் கண்களில் வியப்பு துலங்கியது. அந்த வியப்பை நூறு மடங்காக்க இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது.
“அரசன்தான் வேண்டுமா? அல்லது அரசி வரலாமா உங்களுடன் கைதியாக” என்ற குரல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த வேட்டுவப் பெண் சுற்றியிருந்த வீரர்களை விலக்கிக்கொண்டு முன்னே வந்தாள்.
“நீயா! அரசியா!” என்று வியப்புக் குரலில் துலங்க வினவினான் காந்தோஜி.
“ஆம்.”
“எந்த ஊருக்கு அரசி?”
“முன்பு மலை அரசி. இப்பொழுது மண்டோரின் அரசி” என்ற அவள் கம்பீரமாக நடந்து தனது இரு கைகளையும் நீட்டினாள் காந்தோஜி முன்பு. “உம், கட்டுங்கள் என் கைகளை.” என்றும் கேட்டுக் கொண்டாள்.