மலை அடிவாரப் புதரில் மலை அரசி மல்லாந்து கிடந்த கோலம் மண்டோர் மன்னனின் வெறியைக் கிளறிவிடவே, அவன் உலகத்தையே மறந்து, அதுவரை நேர்ந்த நிகழ்ச்சிகளால் மனம் ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் தடைகளையும் உதறி அவள் பக்கத்தில் உட்கார்ந்து, இடது கையைத் தரையில் ஊன்றி வலது கையை அவள் பூவுடலின்மீது போட்டான். அதனால் அவள் சற்று நெகிழ்ந்த காரணத்தால், அவன் கையை நாடிவந்த திண்ணிய மார்பகம் ஒன்றன் மீது அவன் முரட்டுக்கரம் வளைய வரவே மலை அரசி நிதானத்தை அறவே இழந்தாள்.
அந்த நிலையில் அவன் அவள் அழகிய முகத்தை நோக்கிக் குனிந்து பங்கய விழிகளின்மீதும், கன்னத்தின் மீதும், முடிவில் அதர இதழ்கள் மீதும் அடுத்து அடுத்து அவன் தனது உதடுகளை மூர்க்கத்தனமாக பதியச் செய்யவே, அவள் சொர்க்கத்தில் இருந்தாள். இதழ்களில் இருந்து விலகிய அவன் வலிய உதடுகள் பிறகு அவள் காதுக்கு அருகில் சென்று சொற்களைப் பொழியலாயின.
உண்மையில் பேச்சுக்கு இடமில்லாத சமயந்தான் அது. இருப்பினும் சில நினைப்புகள், சில சொற்கள் இன்பத்துக்கு இசை ஊட்டும் வன்மை வாய்ந்தவையாகையால் அவன் மெதுவாக அவளை அழைத்தான் “மலை அரசி” என்று.
அவள் பதில் சொல்லவில்லை. கண்களை மூடிய வண்ணம் அந்திவேளை தாமரைபோல் கிடந்தாள். ஆனால் அவன் கை சரிந்து கிடந்த புலித்தோலை சரிப்படுத்தும் பாவனையில் அவள் அழகிய தொடைமீது பதியவே அவள் வேதனையும் இன்பமும் கலந்த ‘உம்’ என்று ஓர் ஒலியை மட்டும் வெளிப்படுத்தினாள். அவன் கை அத்துமீறவே “உம் உம்” என்று இருமுறை “உம்” காரத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தாள்.
ஆனால் எதிர்ப்பா அது? இல்லை இல்லை, அழைப்பு என்பதை ஜோடா புரிந்து கொண்டான். எனினும் “மலை, அரசி...!” என்று துவங்கினான்.
“என்னவாம்?” அவள் பூவிதழ்களில் இருந்து குழைந்து வந்தன சொற்கள்.
ஜோடா தரையில் ஊன்றியிருந்த இடது கையையும் எடுத்து அவள் மீது வைத்தான்.
“இன்னும் ஆட்சேபணையா?” என்று ரகசியமாக அவள் காதில் சொற்களை உச்சரித்தான்.
“எதற்கு?” தெரியாததுபோல் கேட்டாள் மலை அரசி.
“இந்த மலை....” ஏதோ உளறினான் ஜோடா. உளறும் சமயம்தானே, அது.
“இதற்கென்ன?” அவள் உறுதி அதிகமாயிற்று மேலுக்கு.
“ஜோடாகிரரின் ஒரு பகுதி” விளக்கினான் ஜோடா உதடுகளால். வலது கைகள் விளக்கத்தைத் தேடின
உணர்ச்சிப் பிரவாகத்தில் ரஸானுபவத்தில் சிக்கியிருந்தாள் மலை அரசி. இருப்பினும் சமாளித்துக்கொண்டு “தெரியும் எனக்கு....” என்றாள். அத்துடன் முனகினாள்.
“இங்கு நான் வருமுன்பு இதற்கு பாகுர்ச்சிரா (பறவைகளின் சரணாலயம்) என்று பெயர் என்று ஜோகி சொன்னார்.
என் வருகையால் இது ஜோடாகிர் (போர் மலை) ஆகியது. நினைப்பிருக்கிறதா உனக்கு?” என்று கேட்டான் ஜோடா.
“உம் உம்.” இதுதான் மலை அரசியின் பதில்.
“அப்பொழுது உன்னை பிரமச்சாரினி என்று அறிமுகப்படுத்தினார் எனக்கு” என்றான் ஜோடா.
“ஆம்.” மலை அரசி நகைத்தாள்.
“அந்த பிரமச்சரியம்...” என்று துவங்கிய ஜோடா வார்த்தையை முடிக்கு முன்பு அவள் மீண்டும் நகைத்தாள்.
“அடுத்த ஆசிரமம் வந்ததும், முதல் ஆசிரமம் போயிற்று”
என்றாள், உடலைத் திருப்பினாள் அவனை நோக்கி.
ஜோடாவின் வலது கை அவளைச் சுற்றி வளைத்து இறுக்கியது. “இரண்டாவது ஆசிரமமா?” என்று வினவினான் ஜோடா ஏதோ பேச வேண்டும் என்பதற்காக.
“பிருமச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், பைக்ஷயம் என நான்கு ஆசிரமங்கள் இந்து மதத்தில் உண்டு” என்ற அவள், “முதல் ஆசிரமத்தை ஜோகி தந்தார். அதை நீங்கள் உடைத்துவிட்டீர்கள்.”
“ஏன்? மூன்றாவது ஆசிரமத்துக்குப் போவதுதானே?”
“அதற்கு வயதாகவில்லை. தவிர, நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது!”
இதைக் கேட்ட ஜோடா அவளை அதிகமாக இறுக்கினான். “அடி கள்ளி! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று கூறி வெறியுடன் அவள் உடலில் தனது தலையைப் புரட்டினான்.
அவள் கண்களை அரைகுறையாகத் திறந்து அவனை நோக்கினாள். அந்தப் பார்வை அவன் சித்தத்தைத் தவிடு பொடியாக்கியது. தலையைச் சிறிது தூக்கினான். எதிரே நிமிர்ந்து எழுந்த அழகுகள் அவன் சுயநிலைக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தன. அவளைத் தரையில் அழுத்தினான். பிறகு “சேசே! இதென்ன முரட்டு மலைப்பகுதி. உடலில் கற்கள் குத்துமே. நீ பஞ்சணையில் படுக்க வேண்டியவள், மண்டோர் மகாராணி” என்று சொல்லி அவளிடம் இருந்து விலக முயன்றான்.
ஆனால், அவள் கைகள் எழுந்து, அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தன.
“நான் மலை அரசி. முரட்டு மலையே எனக்கு பஞ்சணை. முரட்டுத்தனம் எதுவாயிருந்தாலும் எனக்குப் பிடிக்கும்” என்று அவள் முணுமுணுத்தாள், அவனை இழுத்தாள் தன்னை நோக்கி.
எதிரே கிடந்தாள் மலர் அரசியென மலை அரசி, அவனுடைய முரட்டுத்தனத்தை எதிர்பார்த்து. ஆனால், அவன் எண்ணங்கள் பாலைவனத்தில் முதன் முதலாக வந்தபோது நினைத்த விஷயங்களை நோக்கி வட்டமிட்டன. சரித்திரம், பூமி, வாழ்க்கையின் கர்ம பலன்கள் அனைத்திலும் ஒரு சுழற்சியும் தொடர்ச்சியும் இருப்பதை அன்றும் எண்ணினான். இன்றும் எண்ணினான். அன்று தான் ஓடி வராவிட்டால் இந்த மலைக்கு வந்திருக்க முடியாது. வந்திருக்காவிட்டால் இந்த மலை மோகினியைச் சந்தித்திருக்க முடியாது என்று நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்தான்.
“வாழ்க்கையின் சுழற்சி விசித்திரம்” என்று முனகவும் செய்தான்.
அவள் கண்களை லேசாக விரித்தாள். மெள்ள அவனைப் பார்த்தாள். பிறகு தைரியமாகவே சொன்னாள்.
“ஏன் யோசிக்கிறீர்கள்?” என்று.
அவன் யோசனை பலமாயிற்று.
“உன்னை மண்டோரில் மகாராணியாக நான் பார்க்கப் போகிறேன். பிறகு அங்கு என் பஞ்சணையில் நீ கிடப்பாய்” என்றான் யோசனைக்குக் குறுக்கே.
அவள் ஒரு வெடியை எடுத்து வீசினாள். “நான் மண்டோருக்கு வரப்போவதில்லை” என்று.
அதிர்ச்சி காமத்தை விரட்டியது ஜோடாவுக்கு “ஏன்?” என்று கேட்டான்.
“முதலில் நான் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது....” என்றாள் மலை அரசி.
“ஜாதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
“நிரம்ப இருக்கிறது. இப்பொழுது மோகவெறியில் நீங்கள் எதற்கும் சம்மதிக்கலாம். பிறகு வருந்துவீர்கள். அதனால்....” அவள் பதிலை முடிக்கவில்லை. அவனை இறுக அணைத்தாள், இழைந்தாள் அவனுடன். தர்க்கம் மறைந்தது, ஜாதி மறைந்தது, ஆண் பெண் என்ற உணர்ச்சியும் வேகமும் இருவரையும் ஆட்கொண்டன.
விடிந்தது தெரியவில்லை இருவருக்கும். தெரிந்தபின் மலை அரசியே முதலில் எழுந்தாள். அவனை எழுப்பாமலே நடந்தாள். புலித்தோல் ஆடையை மீண்டும் புனைந்தாள். புரவி இருக்குமிடம் தள்ளாடி நடந்து சென்று அதன்மீது ஏறினாள். இரவின் நிகழ்ச்சியால் சிவந்து கிடந்த அவள் மேனியை சூரியன் அதிக சிவப்பாக அடித்தான்.
அவள் நிதானமாகப் புரவியை மலைமீது செலுத்தி ஜோகியின் குகை அருகில் வந்து அருவியில் நீராடினாள். பிறகு எழுந்து பக்கத்து குகைக்குச் சென்று வேறு புலி ஆடை அணிந்து குகைக்குள் சென்றாள்.
ஜோகி நிஷ்டையில் இருந்தார். அவரை வணங்கி, பாறையில் சாய்ந்து நின்றாள் அவள். ஜோகி கண்ணைத் திறந்தார். மலை அரசியை ஏறிட்டுப் பார்த்தார். அந்த சமயத்தில் பிருமச்சாரியும் பாபுஜியும் உள்ளே நுழைந்தனர்.
“நீ இங்கேயா வந்துவிட்டாய்? ஜோடா எங்கே? உங்கள் இருவருக்கும் மண்டோரில் வரவேற்பு தயாராக இருக்கிறதே” என்றார் பிருமச்சாரி.
ஜோகி தலையை நிமிர்த்தினார்.
“மண்டோர் போர் முடிந்துவிட்டது. நீங்கள் இருவரும் உங்கள் இருப்பிடம் போகலாம். ஜோடா இந்தக் குகையை நோக்கி வந்துகொண்டு இருக்கிறான்” என்றார்.
அவர் சொல்லி முடிக்கும் தறுவாயில் ஜோடா உள்ளே நுழைந்தான். அங்கு இருந்தவர்களைக் கண்டு விழித்தான். பிறகு நெடுஞ்சாண் கட்டையாகத் தரையில் விழுந்து ஜோகியை வணங்கினான். ஜோகி சொன்னார், “ஜோடா! மலை அரசி மேவார் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். அதனால்தான் நீ அவள் அடிமையாகிவிட்டாய். மேவாரின் பிரதம மந்திரிக்குப் பிறந்தவள் மலை அரசி. ஆகையால் நீ அவளை ஏற்கலாம்” என்று.
இதைக் கேட்ட பிருமச்சாரியும் பாபுஜியும் பிரமித்தார்கள். மலை அரசியும் விழித்தாள். குழப்பம் அடைந்த கண்களுடன்.
“இந்த உண்மையைப் பின்னால்தான் நான் அறிந்தேன் விளக்கின்மூலம். இந்த ஜோடாகிர் ஜோட்பூர் ஆகும். இவள் சந்ததிகள் இங்கு பெரும் அரசை அமைப்பார்கள். அதற்குக் காலம் இருக்கிறது. இப்பொழுது அவளை அழைத்துச் செல்” என்றார் ஜோகி. பிறகு மலை அரசியைப் பார்த்துச் சொன்னார், “மகளே! ஜோடா மகாவீரன். உங்கள் சேர்க்கையால் மார்வாரும் மேவாரும் பெரிதும் இணையும். பிற்காலத்தில் மார்வார் பலத்த அரசாகும்” என்று கூறி ஆசீர்வதித்தார்.
பிருமச்சாரி தமது நகைச்சுவையைக் காட்டினார். “லூனி ஆற்றங்கரையில் மண்டோர் மன்னர் தன்னை மேவாரின் அடிமையாக்கிக் கொண்டார் நேற்று இரவு. ஆனால் அதற்கு முன்பே மேவார் அரச குலமகளின் அடிமையாகிவிட்டது இப்பொழுதுதான் தெரிகிறது” என்று கூறி நகைத்தார்.
பாபுஜியும் நகைத்தார். பிறகு இருவரும் ஜோகியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
கடைசியாக நின்ற மலை அரசியையும் ஜோடாவையும் போகலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையை குகைக்கு வெளியே காட்டினார் ஜோகி. மலை அரசியின் கண்களில் நீர் திரண்டது.
“அப்பா” என்று நாத் தழுதழுக்க அழைத்தாள்.
“அம்மா! இங்கு நீங்கள் இருவருமே திரும்புவீர்கள். ஜோட்பூர் கோட்டையைக் கட்ட. அதுவரை மண்டோரில் இருங்கள். பெண்ணாகப் பிறந்தவள் என்றாவது ஒருநாள் புகுந்த வீட்டுக்குப் போகத்தானே வேண்டும்” என்று கூறி அவளைக் குனியச் சொல்லி அவள் தலையைத் தடவிக் கொடுத்தார். அவர் கண்கள் பிறகு மூடின. மீண்டும் மோன நிலைக்குச் சென்றுவிட்டார், வனப்பிரஸ்த ஜோகி.
இரண்டுநாள் கழித்து தனது பள்ளியறைக்குள் வந்த மலை அரசியின் கையில் இருந்த பழத்தட்டையும் பால் குவளையையும் வாங்கி மஞ்சத்தில் வைத்தான் ஜோடா. பிறகு அவளைத் தூக்கிப் பஞ்சணையில் படுக்க வைத்தான். “இது மார்வார் அரசகுலப் பழக்கம்” என்றும் கூறினான் சம்பிரதாயத்தைச் சுட்டிக் காட்டி.
“இது மார்வார் சம்பிரதாயமல்ல. மனிதகுல சம்பிரதாயம். மனிதன் தோன்றிய நாள் முதலாகத் தொடரும் ஒரு நிகழ்ச்சி” என்றாள் மலை அரசி பஞ்சணையில் கிடந்த வண்ணம்.
ஜோடா பஞ்சணையின் முனையில் உட்கார்ந்து கொண்டு “இது மலைத் தரையல்ல” என்று உணர்த்தினான்.
“என்ன வித்தியாசம்?” என்று கேட்டாள் மலை அரசி.
“இது மிருதுவானது....” என்றான் ஜோடா.
“ஆனால்...” அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தாள் மலை அரசி.
“ஆனால், என்ன?”
“இது மிருதுவாயிருக்கலாம்.”
“வேறு எது மிருதுவல்ல?”
“நீங்கள், உங்கள் முரட்டுத்தனத்தில் வித்தியாசம் இருக்காதே” என்று சொன்ன மலை அரசி முகத்தை தலையணையில் புதைத்துக் குப்புறப் படுத்துக்கொண்டாள்.
அவளைப் புரட்டினான் ஜோடா முரட்டுத்தனமாக அவள் நகைத்தாள். காரணம் அவனுக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவன் முரட்டுத்தனம் தொடர்ந்தது.
பின்னுரை
ராவ்ஜோடா மஞ்சாஜிக்கு கல்லால் ஸ்தூபி கட்டினான் என்பதையும், ஜோடாகிர்மீது ஜோட்பூர் கோட்டையைக் கட்டி, அதை மார்வாரின் தலைநகர் ஆக்கினான் என்பதையும், ஜோடாவின் வம்சம் பெரிதாக வளர்ந்து பலத்த அரசாக ஆகியது என்பதையும் சரித்திரம் கூறுகிறது. இத்தனைக்கும் மார்வார், மேவாரின் ஆணைக்கு உட்பட்டதாகவே இருந்து வந்தது.