ஜோடாவைப்பற்றி விசாரித்ததும் மலை அரசியின் மதிமுகம் அந்திவானம் போல் சிவந்துவிட்டதைக் கண்டதுமே நைஷ்டிக பிருமச்சாரியும், எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதவரும், பிருமச்சாரி விரதம் கெடக்கூடாது என்பதற்காகவே காட்டில் வாழ்ந்து வந்தவருமான ஹர்பா சங்க்லா உண்மையை ஊகித்துக்கொண்டார். “அப்படியா விஷயம்?” என்று கேட்டு மலை அரசியை நோக்கி சிறிது - நகைக்கவும் செய்தார்.
மலை அரசியின் முகம் அந்திவானத்தைவிட அதிகமாகச் சிவந்தது. அவள் முகத்தில் வெட்கம், மகிழ்ச்சி, சங்கடம் ஆகிய மூன்று உணர்ச்சிகளும் கலந்து தாண்டவமாடின. யாரையும் துணிவுடன் நோக்கும் அவள் மலர்விழிகள் எதிரே நின்ற அந்த மகாவீரனைப் பார்க்காமல் தரையை நோக்கின.
“என்ன அப்படிப் புரிந்துவிட்டது உங்களுக்கு? எதற்காக நகைக்கிறீர்கள்?” என்று வினவினாள் மலை அரசி, இதழ்களை சற்றே அசைத்து.
பதிலுக்குப் புன்முறுவல் செய்தார் பிருமச்சாரி. “நீ மந்திரத்தால் கட்டுண்டு இருக்கிறாய்” என்றும் சொன்ன அவர் குரலில் விஷமத்தின் ஒலி கூட இருந்தது.
“யார் போட்டார்கள் மந்திரம்? எனக்கு ஜோகி சொல்லிக் கொடுத்துள்ள மந்திரங்களால் உடைக்க முடியாத மந்திரம் என்ன இருக்கிறது?” என்று சற்றே சினம் துளிர்த்த குரலில் கேட்டாள் மலை அரசி.
இதற்கு உடனடியாகப் பதில் சொன்னார் ஹர்பா சங்க்லா. “ஜோகியைவிட உயர்ந்த சக்தி சிருஷ்டித்த மந்திரம் அது” என்றார்.
“ஜோகியைவிட சிறந்த சக்தி உலகத்தில் கிடையாது” என்று உறுதியுடன் சொன்னாள், மலை அரசி.
“இருக்கிறது. ஜோகிகூட தப்ப முடியாத சக்தி அது.”
“எது?”
“இயற்கை!”
“இயற்கையா?”
“ஆமாம். இயற்கை சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை யாரும் வெல்ல முடியாது. விசுவாமித்திரனே வெல்ல முடியவில்லை” என்று சுட்டிக்காட்டிய பிருமச்சாரி, “கிரிஜா! தவசிரேஷ்டரும் உறுதியில் சிறந்தவருமான கவுசிகனே மேனகையின் உருவத்தில் மயங்கினான். தவத்தைத் துறந்தான் பல காலம். அப்படியிருக்க நீ யார், மோகத்தின் சக்தியை எதிர்த்து நிற்க? இந்த ஜோடா உனக்கு நன்றாக தூபம் போட்டிருக்கிறான்” என்றும் கூறினார்.
மலை அரசி முறுவல் காட்டினாள். “இது ஜோகியின் தவறு” என்று முணுமுணுத்தாள்.
“ஜோகிக்கும் உன் காதலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று - கேட்டார் பிருமசாரி.
“ஜோடாவுடன் என்னை ஏன் அனுப்பினார்?” என்று கேட்டாள் மலை அரசி.
“அவரா அனுப்பினார்?”
“போ என்று வாய்விட்டுச் சொல்லவில்லை. ஆனால், அவர் எண்ணம் எனக்குத் தெரியும்.”
“அப்படியானால் உங்கள் இருவர் மயக்கமும் அவர் சித்தப்படிதான் ஏற்பட்டிருக்க வேண்டும்!”
“ஆமாம், அவர் எண்ணாத எதுவும் ஜோடாகிர் பகுதியில் நடப்பதில்லை. விலங்குகள் கூட அவர் எண்ணத்தை உணர்ந்து நடக்கின்றன. அப்படியிருக்க...” என்று பேசிக்கொண்டு போன மலை அரசி சட்டென்று பேச்சை நிறுத்தி, கூடத்தின் வாயிற்படியை நோக்கினாள்.
ஹர்பாசங்க்லாவை நோக்கி வந்த ராவ்ஜோடா, பிருமச் சாரியையும் மலை அரசியையும் மாறிமாறி நோக்கினான். மலை அரசியின் தலை குனிந்த நிலை அவன் சந்தேகத்தைக் கிளறவே, “பிருமச்சாரி! இங்கு என்ன, ஏதாவது...” என்று, கேட்டுத் தடுமாறினான்.
“விசேஷந்தான்” என்றார் பிருமச்சாரி.
“உங்கள் இரகசியத்தில் நான் கலந்துகொள்ளலாமா?” என்று வினவினான் ஜோடா.
“விஷயமே உன்னைப் பற்றியதுதான்” என்றார் பிருமச்சாரி.
“அப்படியா!” ஜோடா திகைத்தான்.
“ஆமாம்” என்ற பிருமச்சாரியின் பதில் திட்டமாகவும் இருந்துது; விஷமமாகவும் இருந்தது.
அவர் குரலில் இருந்த உறுதியைத்தான் கண்டான் ஜோடா. விஷமத்தை உணரவில்லை. “சிறிது விளக்கமாகச் சொல்லுங்கள். என்மேல் தவறு ஏதாவது இருந்தால் திருத்திக்கொள்கிறேன்” என்றேன் ஜோடா, சங்கடம் மிகுந்த குரலில்.
பிருமச்சாரி அவனை நெருங்கி அவன் தோள் மீது கையை வைத்தார். “விளக்கமுடியாத விஷயம் அது. அதைப்பற்றி இப்பொழுதென்ன!” என்று மழுப்பினார். மலை அரசியை ஓரக் கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்தார்.
ஜோடாவுக்கு ஏதும் புரியாததால் “மலை அரசி நீயாவது சொல்லேன். எனக்கும் உனக்கும் இரகசியம் ஏது?” என்று கேட்டான்.
மலை அரசி மற்ற இருவரையும் நோக்கவில்லை. சாளரத்தை நோக்கிச் சென்றாள். அந்தி கதிரவனின் செங்கதிர்கள் சில அந்தக் காட்டின் மரங்களையும் ஊடுருவி சாளரத்துக்குள் பாய்ந்தன. சட்டென்று திரும்பிய மலை அரசி உள்ளே சென்று ஒரு செம்புக் குவளையில் நீர் கொண்டுவந்து பிருமச்சாரியிடம் கொடுத்து “சந்தியா காலம் வந்துவிட்டது” என்றாள்.
பிருமச்சாரி தரையில் உட்கார்ந்து சந்தியாவந்தனத்தை முடித்தார். அதற்குள் அவரது பெரிய வாளை எடுத்து வந்த மலை அரசி “இதோ உங்கள் வாள்” என்று அவரிடம் கொடுத்தாள். அந்த வாளை பத்மாசனம் போட்டிருந்த தமது மடியில் வைத்துக்கொண்ட பிருமச்சாரி, அதன் மீது வலக்கையைப் பொருத்தினார். “இந்த வாள், மார்வாரின் பாவக்கறை துடைக்கப்படும்வரை ஜோடாவுக்கு உதவும்” என்று சபதம் செய்தார், உரத்த குரலில். அவர் கண்கள் தியானத்தில் மூடியிருந்தன. உதடுகள் மட்டுமே பிரமாணத்தை உதிர்த்தன பெரிதாக.
ஜோடா அவர் முன்பு மண்டியிட்டு வணங்கினான். அவன் தலையில் கையை வைத்து ஆசீர்வதித்தார், பிருமச்சாரி. பிறகு சட்டென்று எழுந்து, “ஜோடா, இப்படி வா” என்று மார்வார் மன்னனை அழைத்துக்கொண்டு தமது இல்லத்தின் பக்கவாட்டில் இருந்த ஒரு சிறு வீட்டுக்குச் சென்றார்.
அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டு கூடத்திலேயே நின்றாள் மலை அரசி மந்தகாச வதனத்துடன். தன் எண்ணம் ஈடேறிவிட்டதை நினைத்ததால் மிதமிஞ்சிய மகிழ்ச்சி அவள் மனத்தில் நிரம்பிக் கிடந்தது. “மார்வாருக்கு ஒரு புது சகாப்தம் உருவாகிறது” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். பிறகு அவளும் அவர்கள் சென்ற திசையை நோக்கி நடந்தாள்.
தனி வீட்டுக்கு ஜோடாவை அழைத்துச் சென்ற பிருமச்சாரி அந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அவருடன் நுழைந்த ஜோடா அந்த சிறு வீட்டின் உட்புறத்தை கவனித்ததும் பிரமிப்படைந்தான்; அந்த வீட்டில் அறை ஏதும் இல்லை. ஒரு கூடமே இருந்தது. அதன் சுவர்களில் பெரிய கனமான வாட்களும் கேடயங்களும், கோடரிகளும், மாட்ச்லாக் துப்பாக்கிகளும் மாட்டியிருந்தன.
“இத்தனை ஆயுதங்கள் எதற்கு தங்கள் ஒருவருக்கு?” என்று கேட்டான் ஜோடா.
“நாம் படை திரட்டினால் எனது நண்பர்களின் உபயோகத்துக்கு” என்றார் பிருமசாரி. “ஆம், கிராமங்களில் இருந்து என்னிடம் வாள் பயிற்சி பெற சிலர் வருவார்கள். அவர்களுக்குப் பயிற்சியளிக்க இவை உபயோகப்படுகின்றன. இப்பொழுது பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களும் உன்னிடம் சேவைக்கு அமருவார்கள்” என்ற பிருமச்சாரி அந்த சுவரில் இருந்த மிகக் கனமும் நீளமுமான ஒரு வாளை எடுத்து “இதைப் பிடி” என்று ஜோடாவிடம் எறிந்தார்.
ஜோடா கையைச் சிறிது திருப்பி அதன் பிடியை மிக லாகவமாகப் பிடித்தான். வாள் மட்டுமின்றி பிடியும் மிகக் கனமாயிருந்ததைக் கண்ட ஜோடா “இதைக் கையாள்பவன் மிகச்சிறந்த வீரனாயிருக்க வேண்டும் பலசாலியாகவும் இருக்க வேண்டும்” என்றான்.
பிருமச்சாரி ஜோடாவை மிகுந்த திருப்தியுடன் நோக்கினார். “ஜோடா! நீ கூறியது உண்மை. இந்த வாளை சமீப காலத்தில் என்னைத் தவிர வேறு யாரும் கையாண்டது கிடையாது. உன் வாள் இனி அதுதான்” என்றார்.
இதைக் கேட்ட ஜோடா சொன்னான், “எனக்கு என் சொந்த வாள் இருக்கிறது பிருமச்சாரி” என்று.
“அதை எடுத்துக்கொள் பார்ப்போம்” என்றார் பிருமச்சாரி.
கையிலிருந்த பெரிய வாளை பிருமச்சாரியிடம் கொடுத்துவிட்டு இடைக்கச்சையிலிருந்த தனது வாளை உருவினான் ஜோடா.
“சரி, ஒரு சுற்று வருவோம்” என்று பிருமச்சாரி, சந்தியா வந்தனத்தை முன்னிட்டு சற்று முன்பு இடையில் அணிந்து இருந்த மான் தோல் ஆடையை நீக்காமலே அந்தப் பெரும் கத்தியை சுழற்றிக்கொண்டு பயிற்சிக்குத் தயாராக நின்றார்.
அந்தச் சிறு வீட்டின் ஒரே கூடம் போர்ப் பயிற்சிக்காகவே ஏற்பட்டு இருந்தது என்பதை உணர்ந்த ஜோடாவும், தனது வாளைக் கொண்டு பிருமச்சாரியை சந்தித்தான். ஆரம்பத்திலேயே அவன் எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. வாளை நீட்டிப் போரிட வந்த ஜோடா, தனது வாள் பிருமச்சாரி வாளின் ஒரே அடியால் இரண்டாகத் துண்டிக்கப்பட்டு ஒரு பாதி கீழே பெரும் ஒலியுடன் விழுந்துவிட்டதைக் கண்டு பெரும் பிரமிப்பு அடைந்தான்.
கையில் பாதி வாளுடன் நின்ற ஜோடாவை நோக்கி வந்த பிருமச்சாரி “அந்தப் பாதியை எறிந்துவிடு. இனி இதுதான் - உன் வாள்” என்று கூறி தமது கையில் இருந்த பெரிய வாளை ஜோடாவிடம் கொடுத்தார். “ஜோடா! இந்த வாள் செய்து நீண்ட காலமாகிறது. என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இது உனக்குத்தான் சொந்தம். சந்தேகம் இருந்தால் பிடியைப் பார்” என்றார்.
பிடியை நோக்கிய ஜோடா மகிழ்ச்சியும் பிரமிப்பும் ஒருங்கே அடைந்தான். பலமான அந்த வாளின் பிடியில் வைரம் மரகதம் இவற்றைக் கொண்டு மார்வார் ராஜகுலச் சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது.
“பிருமச்சாரி! இது தங்களிடம் எப்படி வந்தது?” என்று விசாரித்தான்.
“ஜோகி கொடுத்தார்.”
“எப்பொழுது?”
“அதுதான் சொன்னேனே, சில ஆண்டுகளுக்கு முன்பு.”
“எதற்காக உங்களிடம் கொடுத்தார்?”
“தகுந்த வீரனுக்குக் கொடுக்க” என்றார் பிருமச்சாரி.
“அது மட்டுமல்ல” என்ற ஹர்பாசங்கலா “இது கன்யா சுல்கமுங்கூட” என்றும் கூறினார்.
வியப்புடன் வாளையும் நோக்கி பிருமச்சாரியையும் நோக்கினான் ஜோடா. “கன்னி மலை அரசி” என்றும் ஓர் அதிர்வெடியை வீசினார் பிருமச்சாரி. “இதைக் கொண்டு சம்ராஜ்ஜியத்தை நிறுவுபவன்தான் மலைஅரசியை அடைய
முடியும்” என்றும் சொன்னார்.
திகைத்துப் பல விநாடி நின்ற மார்வார் மன்னனுக்கு வாளின் கதையை விவரிக்க முற்பட்டார் ஹர்பாசங்க்லா.
விசித்திரக் கதை அது.