கோட்டைக் காவலன் சொன்ன செய்தியால் மலைத்த இருவரில் சாவுகாரே முதலில் திகைப்பை உதறிக்கொண்ட தன்றி சமயாசந்தர்ப்பம் தெரியாமல் கோப்தையும் காட்டினார். “காவலனே! வணிகர்களைத் தடை செய்யும் வழக்கம் மார்வாரில் கிடையாது என்பது உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று சீறினார்.
காவலன் நகைத்தான் பெரிதாக. “இங்கு இப்பொழுது நடப்பது மேவார் அரசு. இது உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று சாவுகாரின் சொற்களையே திருப்பி கேலியாகப் பேசினான்.
சாவுகார் மேலும் தமது அசட்டுத் துணிவைக் காட்டினார். “நீ மேவாரின் அடிமையா? அது தெரியாது எனக்கு” என்று சொல்லிக்கொண்டே காவலனை நெருங்கினார்.
காவலன் அவரை இகழ்ச்சியுடன் நோக்கினான். “தெரிந்தால் என்ன செய்வாய்?” என்று வினவினான்.
காவலன் பதில் சொல்லுமுன்பே அவனை நெருங்கிவிட்ட சாவுகார் “இதைச் செய்வேன்” என்று சொல்லி காவலன் முகத்தோடு தமது முகத்தைச் சேர்த்தார். பிறகு அவன் காதில் எதோ முணுமுணுத்தார்.
காவலனின் முகம் ஒரு விநாடி பெரும் பீதியைக் காட்டினாலும், அடுத்த விநாடி மந்தகாசத்தால் விரிந்தது.
“இதை ஏன் முன்பே சொல்லவில்லை நீங்கள்?” என்று வினவினான். அடுத்து மற்ற காவலருக்கு அவனிடம் இருந்து உத்தரவு பறந்தது, “கதவுகளைத் திறவுங்கள், இவர்கள் போகட்டும்” என்று.
இந்த உத்தரவு மற்ற காவலருக்கு வியப்பைத் தந்தாலும் தங்கள் தலைவன் உத்தரவை மறுக்க முடியாமல் கதவுகளைத் திறந்தார்கள். திறந்ததும் சாவுகாரும் குமாஸ்தாவும் மட்டுமின்றி காவலர் தலைவனும் அவர்களுக்கு முன்பு வெளியே சென்றான். கதவுகளைச் சாத்திவிடும்படி சைகையும் செய்தான்.
கோட்டைப் பெருங்கதவுகள் சாத்தப்பட்டு மூவரும் பத்தடி தூரம் சென்றதும் காவலர் தலைவன் சாவுகாரை நோக்கி “எப்பொழுது இந்த வேடம் தரித்தீர்கள்?” என்று வினவினான்.
“சில நாள்களாக” என்ற ஜகத்சிம்மன் தனது வேடத்தைக் கலைத்து “மகாராஜா! இவனுக்கு சகலமும் தெரியும், நீங்களும் இந்தப் பைத்தியக்கார வேடத்தைக் கலைக்கலாம்” என்று கூறினான்.
மன்னன் வேடத்தைக் கலைத்ததும் அவர் முன்பு மண்டியிட்டு வணங்கிய கோட்டைக் காவலன், “மகாராஜா! தங்களை எப்பொழுது மண்டோரில் எதிர்பார்க்கலாம்?” என்று வினவினான்.
“அடுத்த பவுர்ணமி அன்று” என்று ஜோடா தெரிவித்தான். அத்துடன் கேட்டான், “மண்டோர் மக்கள் நிலை எப்படியிருக்கிறது” என்று.
“பெரியவர் இருந்தவரை சரியாக இருந்தது...” என்று இழுத்தான் காவலர் தலைவன்.
“யார் பெரியவர்?” என்று ஜோடா வினவினான்.
“மேவாரின் ராஜப் பிரதிநிதி. மேவாரின் அரியணையில் அமர்ந்திருக்க வேண்டிய தியாகி. மகாவீரன் சந்தசிம்மன்.” இதை மிகுந்த பணிவுடன் சொன்னான் காவலன்.
“இப்பொழுது?”
“சிறுவர்கள் ஆட்சி நடக்கிறது. மண்டோர் மக்கள் அனாவசியமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். சில வேளைகளில் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.”
“எப்படி?”
“மேவாரைப்பற்றி எதைப் பேசினாலும் ராஜத்துரோகக் குற்றம் என்று கருதப்படுகிறது. பலர் சிறையில் இருக்கிறார்கள்.”
ஜோடா புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். அத்துடன் அவனையும் உடன் அழைத்துக்கொண்டு சற்று தூரத்தில் இருந்த சிறு மலைப்புதர்களை நாடிச் சென்றான். அங்கிருந்த ஒரு புதருக்கு அருகில் கட்டப்பட்டிருந்த தனது புரவியை அவிழ்த்துக்கொண்டு “ஜகத்சிம்மா! உனக்கு இனி மண்டோரில் வேலை இல்லை. இவனையும் அழைத்துக்கொண்டு பிருமச்சாரி இருப்பிடம் வந்து சேர்” என்று உத்தரவிட்டு மலைக்காடுகளின் வழியே புரவியைச் செலுத்தினான்.
ஜகத்சிம்மனுக்கும் காவலனுக்கும் புரவி இல்லாததால் கால்நடையாகவே பயணம் செய்தார்கள். அடிக்கடி மண்போர் புரவி வீரர்கள் தப்பிச் சென்றவர்களைத் தேடியதால் துரிதமாகப் பயணம் செய்ய முடியாததன் விளைவாக அவ்வப்பொழுது காடுகளிலும் மலைப்பாறைகளிலும் மறைந்தே நடந்தார்கள். மலைப்பகுதியும் தேடப்பட்டதால் வழியை மாற்றி சுற்றுப்புறமாகச் சென்ற ஜகத்சிம்மன் காவலனை நோக்கி, “நாம் நேராக பிருமச்சாரி இருப்பிடம் செல்ல முடியாது. நம்மைப் பிடிக்கும் முயற்சி தணியும்வரை மலையின் அடுத்த பக்கத்தில் உள்ள யாதவர் குடிசைகளில் தங்குவோம்” என்று கூறினான்.
காவலன் சிறிது சிந்தித்தான்.
“அதுவும் அபாயம்” என்றான்.
“வேறு எங்கு தங்கலாம்?” என்று ஜகத்சிம்மன் வினவினான்.
“ஒருநாள் பயணத்தில் வேடர் இல்லங்கள் இருக்கின்றன. அங்கு யாரும் வருவது கிடையாது” என்று காவலன் கூறினான்.
ஜகத்சிம்மன் அதற்கு ஒப்புக்கொள்ளவே மலைப் பகுதியைச் சுற்றிச் சென்று மறுநாள் பகல், வேடர்கள் இருப்பிடத்துக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள். அந்தக் குடிசைகளை அவர்கள் அணுகுமுன்பே, இரண்டு வேடர்களால் தடுக்கப்பட்டார்கள். அவர்கள் இருவர் கைகளிலும் இருந்த விற்களில் கணைகள் பூட்டப்பட்டு இருந்தன. நாண்களும் இழுக்கப்பட்டு அம்புகள் இருவர் மார்புக்கும் குறி வைக்கப்பட்டு இருந்ததால் இருவரும் சட்டென்று நின்றார்கள்.
வேடர் ஜாதியால் நிறுத்தப்பட்டதால் வெகுண்ட ஜகத்சிம்மன் தனது வாளை உருவ முயன்றான்.
“அந்த முட்டாள்தனத்தைச் செய்யாதே. உன் வாள் வெளிப்படுமுன்பு அந்த அம்பு உன் மார்பை ஊடுருவிவிடும்” என்று எச்சரித்தான் வேடரில் ஒருவன்.
“நான் யார் தெரியுமா?” என்று ஜகத்சிம்மன் வினவினான்.
“யாராக இருந்தாலும் இந்தக் குடிசைகளுக்கு அருகில் வரமுடியாது” என்றான் வேடன்.
“ஏன்?”
“காரணம் சொல்வதற்கில்லை.”
“இத்தனை ஆண்டுகளாக இப்படி தடையில்லையே, வேடர்களின் விருந்தோம்பல் பிரசித்தமாயிற்றே.”
“உண்மை. ஆனால், பழக்கம் இந்த ஆண்டு மாறியிருக்கிறது.”
வேடன் பேச்சு பரம விசித்திரமாக இருந்தது ஜகத்சிம்மனுக்கு. “எல்லா முடிவும் நீங்களே எடுக்கிறீர்களா? உங்கள் தலைவர் எடுக்கிறாரா?” என்று வினவினான்.
“தலைவர்தான்” தடங்கல் இன்றி பதில் வந்தது.
“அப்படியானால் உங்கள் தலைவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்னை” என்று உத்தரவிட்டான் ஜகத்சிம்மன்.
வேடர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“தலைவர்கள் இவர்களைப் பார்ப்பார்களா?” என்று ஒரு வேடன் மற்றொருவனைக் கேட்டான்.
“எதற்கும் பழைய தலைவரைக் கேட்போம்” என்றான் ஒரு வேடன்.
அவர்கள் பேச்சு கோட்டைக் காவலனுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. “பழைய தலைவர், புதிய தலைவர் என்பது உண்டா?” என்று கேட்டான்.
“இப்பொழுது ஏற்பட்டு இருக்கிறது” என்ற வேடன் “சரி, உங்கள் வாட்களைக் கழற்றிக் கொடுங்கள்” என்று கையை நீட்டினான்.
ஜகத்சிம்மனின் கோபம் எல்லை கடந்தது. “என் வாளை என்னிடம் இருந்து பிரிப்பதற்கு புதிதாக ஒருவன் பிறக்க வேண்டும்” என்று சீறினான்.
வேடன் அதற்குமேல் பேச்சை வளர்க்கவில்லை. “நீங்கள் யாராயிருந்தாலும் அக்கறையில்லை. உங்கள் வாளின் அழகைக் கண்டு நாங்கள் அதைக் கேட்கவில்லை. நீங்கள் வந்த வழி செல்லலாம். இங்கு எங்கள் எல்லைக்குள் வருவதானால் நிராயுதப் பணிகளாகத்தான் வரவேண்டும்” என்று திட்டமாகக் கூறினான்.
வேடர் குடிசை வட்டாரத்தில் இந்த மாதிரி ஒரு விசித்திரமுண்டு என்பதை அன்றுவரை கேள்விப்படாத ஜகத்சிம்மன், அங்கு என்னதான் நடக்கிறது என்பதை அறிய தனது வாளைக் கழற்றிக் கொடுத்தான். காவலனும் வாளைக் கொடுத்ததும் இருவரையும் வேடர்கள், குடிசைகளின் கூட்டத்துக்குள் அழைத்துச் சென்றனர். குடிசைகள் கூட்டம் பெரிய அரணாக அமைந்திருந்தது. ஒவ்வொரு குடிசை வாயிலிலும் வில் ஏந்திய வேடனொருவன் காவல் புரிந்துகொண்டு இருந்தான். இப்படிப் பல குடிசைகளைத் தாண்டியவுடன் தலைவன் குடிசைக்கு வந்த இருவரையும் வெளியிலேயே நிறுத்திய வேடர்கள் உள்ளே சென்றனர். சில விநாடிகளுக்கெல்லாம் வயோதிகனான ஒருவன் வெளியே வந்தான்.
வந்தவன், “யார், படைத்தலைவரா?” என்று வியப்பு துலங்க வினவினான்.
ஜகத்சிம்மன் கண்கள் அவனை ஏறெடுத்து நோக்கின. ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். வேடர் தலைவன் அவனை நோக்கி “உங்களை நாங்கள் இங்கு எதிர்பார்க்கவில்லை” என்றான்.
ஜகத்சிம்மனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.
“எதிர்பார்க்கவில்லையா?”
“இல்லை.”
“ஏன்?”
“புதுத் தலைவர் நீங்கள் வருவதாகச் சொல்லவில்லை.”
“யார் அவர்?”
“சற்று என் குடிசையிலேயே இளைப்பாறுங்கள். நானே அழைத்து வருகிறேன்” என்று கூறிய வேடர் தலைவன் மற்ற இரு வேடர்களையும் நோக்கி “படைத்தலைவருக்கு உணவளியுங்கள். வேண்டிய பணிவிடையைச் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டு எட்ட இருந்த வேறு குடிசைகளை நோக்கிச் சென்றான்.
மாலைவரை அவன் திரும்பவில்லை. பொறுமை இழந்த ஜகத்சிம்மன் குடிசைகளில் இருந்து வெளியே வந்து மற்ற வேடர்களை விசாரித்தான், “உங்கள் தலைவர் எங்கே?” என்று.
யாரும் நேரடியாக பதில் சொல்ல மறுத்தார்கள். அந்த வேடர் குடிசைகளை ஏதோ பெரிய மர்மம் சூழ்ந்திருப்பதை ஜகத்சிம்மன் புரிந்துகொண்டான்.