பாபுஜியும், பிருமச்சாரியும் விழிப்பதைப் பார்த்த ஜோடா, “உங்கள் இருவருக்கும் வரவர சுயநம்பிக்கை போய்விட்டது” என்று ஓர் அம்பை வீசினான்.
அதுவரை தாங்கள் கண்ட காட்சியால் குழப்பத்தில் இருந்த இரு பிருமச்சாரிகளும் ஜோடாவை சீற்றத்துடன் நோக்கினார்கள். “யார் சொன்னது?” என்று கேட்டார் ஹர்பா சங்க்லா.
“எந்த முட்டாள் சொன்னான்?” என்று வினவினார் பாபுஜி.
“இந்த முட்டாள்தான்” என்று தன்னைச் சுட்டிக்காட்டி மார்பில் தனது வலது கை நடுவிரலை ஊன்றினான் ஜோடா.
இதைக் கேட்ட பாபுஜியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “எதைக்கொண்டு எங்கள் சுயநம்பிக்கையை எடை போட்டாய்?” என்று கேட்டார் குரலில் கோபச்சாயை துலங்க.
ஹர்பாசங்க்லா கேள்வி ஏதும் கேட்கவில்லை. அவர் பார்வையிலேயே கேள்வி தொக்கி நின்றது. அவர் உஷ்ணப்பார்வை கலந்த கேள்விக்கோ, வெளிப்படையாக சீறிய பாபுஜியின் வினாவுக்கோ சிறிதும் அஞ்சாத ஜோடா “நான் சாம்ராஜ்ஜியத்தை ராஜபுதனத்தில் அமைப்பதைப் பற்றி சந்தேகம் தெரிவித்தீர்கள்” என்று சுட்டிக் காட்டினான்.
“ஆம்.” ஏக காலத்தில் வந்தது மற்ற இருவர் பதிலும்.
ஜோடா சிறிது சிந்தித்துவிட்டு மெள்ள சொன்னான். “நீங்கள் இருவரும் ராஜபுதனத்தின் மகாவீரர்கள்” என்று.
ஜோடாவின் புகழ்ச்சி இருவருக்குமே பிடிக்கவில்லை.
“நாங்கள் சொன்னோமா அப்படி உன்னிடம்?” என்று கேட்டார் ஹர்பாசங்க்லா.
“நீங்கள் சொல்லவில்லை, ராஜபுதனம் சொல்கிறது. இல்லாவிட்டால் வனப்பிரஸ்த ஜோகி உங்களிடம் என்னை அனுப்பியிருக்கமாட்டார். கரிய புரவி வீரரைப்பற்றி எங்கும் பேச்சு அடிபடுகிறது” என்று விளக்கினான் ராவ்ஜோடா.
“அதற்கும் உனது துர்நடத்தைக்கும் என்ன சம்பந்தம்?” என்று சீறினார் பாபுஜி.
“எது துர்நடத்தை?” ஜோடா கேட்டான், குழப்பம் இல்லாத குரலில்.
“கிரிஜாவைத் தொட்டது. தவிர...” இழுத்தார் சங்க்லா.
ஜோடா புன்முறுவல் கொண்டான். “உங்களுக்குத் தெரியாதது அல்ல பிருமச்சாரி. க்ஷத்திரிய தர்மம் எங்கள் காதலை அனுமதிக்கிறது. திருமணத்தைக்கூட அனுமதிக்கிறது” என்று கூறினான் ஜோடா.
சங்க்லாவின் முகத்தில் மறுபடியும் கோபத்தின் சாயை விரிந்தது. “அது சாதாரண நியாயம். கிரிஜா சுல்கத்தால் கட்டுப்பட்டவள். சாம்ராஜ்ஜியத்தை சிருஷ்டிக்காமல் அவளை நீ அடைய முடியாது” என்றார் குரலில் சினம் துளிர்க்க.
“சாம்ராஜ்ஜியத்தைத்தான் ஸ்தாபிக்கப் போகிறேனே.”
“எப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாய்?”
“ராஜபுதனத்தின் இரண்டு மகாவீரர்களின் துணை இருக்கும் போது அதில் சந்தேகம் எதற்கு? உங்களுக்கு சுயநம்பிக்கை இருந்தால் இந்த ஆட்சேபணையைக் கிளப்பியே இருக்க வேண்டாம். அடக்கத்தினால் உங்கள் இருவர் பலமும் உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் இருவரும் அனுமார் மாதிரி. பிறர் சொல்லித்தான் உங்கள் பலம் தெரியும்.”
“அப்படியானால் நீ ஜாம்பவானா, எங்கள் பலத்தை எடுத்துரைக்க?”
“அத்தனை வயதாகவில்லை. இருந்தாலும் காரியச் கிரமத்துக்கு அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்ற ராவ் ஜோடா “பிருமச்சாரி! பாபுஜி! இன்றிலிருந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் நாம் மண்டோரைப் பிடிக்கிறோம், சந்தேகம் வேண்டாம்” என்று வேகத்துடன் கூறிவிட்டு விடுவிடு என்று பிருமசாரியின் விடுதியை நோக்கி நடந்தான். மற்ற இருவரும் அவனைப் பின்பற்றிச் சென்றார்கள்.
விடுதியின் வாசலிலேயே மலை அரசி நின்றிருந்தாள் மந்தகாச வதனத்துடன்.
“வாருங்கள். உணவு தயாராயிருக்கிறது” என்று மூவரையும் முகமன் கூறி அழைத்தாள். மூவருக்கும் அவளே உணவும் பரிமாறினாள். மூவரும் பேசாமல் மௌனமாகவே உணவருந்தி முடித்தார்கள். பிறகு, மலை அரசியையும் அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த போர்ப் பயிற்சி அரங்கத்திற்குச் சென்றார்கள். அங்கு முற்றத்துத் தாழ்வரையில் அமர்ந்ததும் ஹர்பாசங்கலா பேச்சை நேர்முகமாகத் துவக்கி “நடந்ததை மறந்துவிடுவோம். நடக்கப் போவதைக் கவனிப்போம்” என்றார்.
அவர் நடந்தது என்று எதைக் குறிப்பிடுகிறார் என்பதை மலை அரசியும் ஜோடாவும் உணர்ந்து கொண்டதால் இருவா கண்களும் ஒரு விநாடி சந்தித்துப் பிரிந்தன.
அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் பேச்சைத் துவங்கிய பிருமச்சாரி “மேவார் சம்பவங்கள் நடந்து மாதங்கள் ஓடிவிட்டன. சந்தசிம்மன் மண்போர் கோட்டையை நன்றாகப் பலப்படுத்திவிட்டான். அதிகப்படி படைகளை வரவழைத்து அந்தக் கோட்டையை தனது மைந்தர் இருவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். இன்னும் ஒரு மாதத்திற்குள் நாம் அதைத் தாக்க வேண்டும். அவர்கள் மண்டோரை திடப்படுத்த மேலும் அவகாசம் கொடுத்து அவர்கள் காலை ஊன்றிவிட்டால் அந்தக் கோட்டையைப் பிடிப்பது சுலபம் அல்ல” என்று விளக்கினார். தாம் சொல்வது மற்றவர் மனதில் இறங்கட்டும் என்பதற்காக சில விநாடிகள் மௌனம் சாதித்தார்.
“இன்னும் ஒரு மாதத்தில் தாக்கலாம்” என்றான் ஜோடா மெதுவாக.
ஹர்பாசங்க்லா அவன்மீது கண்களை நிலைக்கவிட்டார். “எப்படி அத்தனை நிச்சயமாகச் சொல்கிறாய்?” என்று வினவினார்.
“இங்கு தங்களிடம் பயிற்சி பெறும் வீரர்கள் இருநூறு பேருக்குமேல் இருக்கிறார்கள்...” என்றான்.
“ஆம்.” பிருமச்சாரியின் குரலில் உணர்ச்சி ஏதுமில்லை.
“நாம் இங்கில்லாதபோது மலை அரசி அவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறாள்.”
“அதனால்?”
“மிருகங்களையே அவள் பழக்கும்போது வீரர்களைப் பழக்குவது கஷ்டமா?”
இந்தக் கேள்வியைக் கேட்ட பாபுஜி கோபநகை நகைத்தார்... “மிருகங்களைப் பழக்குவதும் மனிதர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிப்பதும் ஒன்றா?” என்று வினவினார் குரலில் கோபம் தொனிக்க.
ஜோடா அவரைப் பார்த்து, “பிந்தியது சுலபம்” என்றான். அத்துடன் மேலும் சொன்னான்: “மலை அரசியே வாள் எடுத்துப் போரிடுவாள். ஆனால் நான் அதை அனுமதிக்கமாட்டேன். மண்டோரை வெல்ல மூன்று சக்திகள் இருக்கின்றன. ஒன்று, உங்கள் புரவிப்படை; இரண்டு, எனது புரவி வீரர்களும், பிருமச்சாரியால் பயிற்சி பெற்ற வீரர்களும்; மூன்றாவது, முந்தைய இரண்டையும்விட பலமானது...” இந்த இடத்தில் சிறிது நிறுத்தினான்.
பிருமச்சாரி முகத்தில் குழப்பம் தெரிந்தது. “அந்த மூன்றாவது என்ன?” என்று கேட்டார்.
ஜோடாவின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது. “மார்வார் மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். ராஜபக்தி உள்ளவர்கள். இன்னொரு அரசு தங்களை ஆள விடமாட்டார்கள். இந்த ஜன சக்தி இப்பொழுது பொங்கிக்கொண்டிருக்கும். நாம் கோட்டை முன்பு தோன்றும்போதே உள்ளே கிளர்ச்சி ஏற்படும்” என்று திட்டமாகக் கூறினான்.
பாபுஜி ஜோடாவை நோக்கினார் வெறுப்புடன். “அந்த ராஜ பக்தி, ஜனசக்தி இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்ததா?” என்று வினவினார் வெறுப்பு சந்தேகமின்றி ஒலித்த குரலில்.
“தூங்கவில்லை. மக்கள் தாங்களாக இயங்குவதற்கு நாள் பிடிக்கும். தவிர, உள்ளே புதிதாக வருபவன் அநீதியும் அதிகப்பட வேண்டும். ஆக்கிரமித்த படையில் யாராவது ஒருவன் மக்களைக் கொடுமைப்படுத்தினால் போதும், அந்த ஒரு பொறி, தீயாகப் பிடிக்கும்” என்ற ஜோடா “அங்கு நிலைமை தற்சமயம் என்ன என்பதை அறிய வேண்டும்” என்றான்.
“எப்படி அறிவது?” என்று கேட்டாள் மலை அரசி.
“மார்க்கம் இருக்கிறது” என்ற ஜோடா “இன்னும் ஒரே வாரத்தில் நிலைமையை அறிந்து வருகிறேன்” என்றான்.
மலை அரசியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“நீங்களா?” அதிர்ச்சியுடன் கேட்கவும் செய்தாள்.
“ஆம்.”
“எப்படி?”
“ஊருக்குள் போய்.”
“எப்படிப் போக முடியும்?”
“இப்பொழுது அங்கிருப்பவர்களுக்குத் தெரியாத வழி எனக்குத் தெரியும்.”
இதைக் கேட்ட மூவரும் அவன் திட்டத்தை எதிர்த்தார்கள். “நீ அங்கு வெட்டப்பட்டால் இத்தனை நாள் ஏற்பாடும் குலைந்துவிடும்” என்றாள் மலை அரசி.
பாபுஜி அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். “அப்படியானால் மலை அரசியின் கதி என்ன?” என்று கேட்டார் பிருமச்சாரி.
ஜோடா அவர்கள் ஆட்சேபணையை உதறினான். “என் மக்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. மண்டோருக்குள் என்னை யாரும் தொட முடியாது. நான் இருக்கும் இடத்தையும் அறிய முடியாது. கவலைப்படாதீர்கள்” என்று திட்டமாகச் சொன்ன ஜோடா அன்று இரவே மண்போருக்குப் பயணமானான்.
மூவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். ஒரு வாரம் ஜோடாவைப் பற்றி செய்தி ஏதுமில்லை. பாபுஜி தமது இருப்பிடம் கிளம்பினார்.
“என் வாக்குப்படி நான் அடுத்த பவுர்ணமி அன்று மண்டோர் வாசலில் இருப்பேன்” என்று கூறிச் சென்றார்.
ஒரு வார காலம் மலை அரசி மரண அவஸ்தையில் இருந்தாள். ஜோடா திரும்பவில்லை.