பாவின் வாலிப முரட்டு முகம் அவள் வழவழத்த கழுத்தில் திடீரென அழுந்திப் புரண்டபோது, மலை அரசியின் இதயமும் அந்த வாலிபன் உள்ளத்தைப்போலவே உணர்ச்சி அலைகளில் உருண்டது.
அத்தனை உணர்ச்சி எழுச்சியிலும் அரசகுமாரன் தன் உடலை அடியோடு தூக்கி அணைத்துக்கொள்ளாமல், அவன் முகம் கழுத்தில் புரண்டும் இதழ்கள் விரிந்து விரிந்து கழுத்தில் பல இடங்களில் மாறி மாறிப் புதைந்த போதிலும், தனது உடலுக்குக் குறுக்கே பாய்ந்திருந்த அவனது வலக்கை திடமாக ஊன்றி அவனது உடலை சிறிது தூக்கியே வைத்து தனது கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் வலிய அவன் மார்புக்கும் இடைவெளி கொடுத்தே இருந்ததையும் உணர்ந்த அந்த காட்டு ராணி, பண்பில் ஊறியிருந்த ஒரு மகாவீரனிடம் தான் சிக்கியிருப்பதைப் புரிந்து கொண்டாள். அதனால் பெருமை கலந்த உணர்ச்சி மிகுந்த பெருமூச்சொன்றையும் வெளியிட்டாள்.
அந்தப் பெருமூச்சின் விளைவாகவும், மீண்டும் பெரிதாக உள்ளே இழுத்து நிறுத்தப்பட்ட சுவாசத்தின் விளைவாகவும் விம்மிய அவள் மார்பகம், அப்படியே நின்றுவிட்டதால் அந்தப் பகுதி ஜோடாவின் மார்புமீது லேசாக உராயவே செய்தது என்றாலும், அதையும் அதன் அழைப்பையும் ஜோடா உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ பெரும் மயக்கத்தில் சிக்கியவன் போல் ஜோடா அவள் கழுத்தில் பதிந்து புரண்ட முகத்தைக்கூட ஒரே இடத்தில் நிறுத்தினான். பிறகு அந்த இடத்தில் இருந்து முகத்தை எழுப்பி அவள் கண்களுடன் தன் கண்களை உறவாடச் செய்ய முயன்றான்.
ஆனால், மலை அரசியின் மான்விழிகள் மூடியே இருந்ததால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை என்றாலும் மூடிய நிலையிலும் அந்த முகம் இருந்த வசீகர எழிலைப் பருகவே செய்தான். மூடியிருந்த கண்கள் முத்துச்சிப்பிகளைப் போலக் காட்சியளித்தன. அவற்றின் மேலே கறுத்து வளைந்து இருந்த இரு விற்கள் அந்தச் சிப்பிகளைப் பாதுகாக்கவே ஏற்பட்டனபோல் தெரிந்தன, ஜோடாவின் விழிகளுக்கு.
அவன் விசால முகம், அவளுடைய முன்னுச்சி முடிகளின் விளையாடும் நிலமாகவும், குறுக்கே படுக்க வைக்கப்பட்ட அகன்ற தாமரை இதழ் போலும் இருந்ததை கவனித்த மார்வார் ராஜபுத்திரன், தனது வலக்கையை தரையில் இருந்து எடுத்து அவள் நுதலைத் தடவவும் செய்தான். அவள் கண்களை அணைத்து நின்ற கன்னங்களின் செழுமை அவனை வாவென்று அழைத்துங்கூட அவன் அவற்றை இதழ் கொண்டு நெருங்காமல் வலக் கையால் மெல்ல வருடினான். ஒருமுறை லேசாக்கி கிள்ளியும் பார்த்தான்.
அந்த கிள்ளல் அவள் இதயத்தில் ஏதோ ஒரு வாசலைத் திறந்திருக்க வேண்டும். அவள் அழகிய தேன் சொட்டும் அதர இதழ்கள் மெள்ள விரிந்து சேர்ந்தன ஒரு விநாடி. அப்படி விரிந்து சேர்ந்ததில் ஒரு துடிப்பும் இருந்ததை கவனித்தான் ஜோடா. ‘துடிப்பு ஏன்? மலை அரசியும் பயந்துவிட்டாளா? அல்லது சகுந்தலையும் துஷ்யந்தன் சமீபத்தில் இப்படித்தான் துடித்திருப்பாளா?’ என்று தன்னுள் வினவிக் கொண்டான், அந்த வாலிபன்.
அந்தத் துடிப்பு தனது இதழ்களுக்கு அழைப்பு என்பதை அந்த ஆண் மகன் புரிந்துகொள்ளவில்லை. அந்தச் சமயத்தில் அது காமத்தின் துடிப்பு, அச்சத்தின் துடிப்பு அல்ல என்பதை அவன் உணரவில்லை. அப்பொழுது அவள் உடலும் அசைந்ததையும், பருத்த அவள் தொடைகள் கூட லேசாக அசைந்து கூடிக் கொண்டதையும் பார்த்த ஜோடா, முதலில் துணிந்த மலை அரசியின் கற்பின் வலிமை அவளைக் காப்பாற்ற முன்வந்துவிட்டதாக எண்ணினான்.
இப்படி அவள் ஒவ்வோர் அசைவையும் தர்மக் கண்கொண்டு பார்த்த மார்வார் ராஜபுத்திரனுக்கு, உண்மைக்கு மாறுபட்ட அர்த்தங்களே புத்தியில் தொனிக்கவே அவளை சமாதானப்படுத்த முயன்றான் அவன். அவளுக்கு துணிவைக் கொடுப்பது தனது கடமை என்று எண்ணிய ஜோடா, மடமை என்பது பெண்களின் தனிச் சொத்தல்ல என்பதை நிரூபிக்கத் தொடங்கினான். “பெண்ணே!” என்று அவள் காதுக்கு அருகில் குனிந்து மெள்ள அழைத்தான்.
அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
அவனே மீண்டும் சொன்னான், “உன்னைக் காக்க மார்வார் இளவரசன் இருக்கும் வரை நீ அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்று.
மௌனம் எழுப்பிய உணர்ச்சிகளில் அனாவசியமான பேச்சு குறுக்கிடவே சட்டென்று சுயநிலை எய்திவிட்ட மலை அரசி மிக மதுரமாக மெல்ல நகைத்தாள்.
ராவ்ஜோடா நன்றாக நிமிர்ந்து தரையில் உட்கார்ந்து இரு கைகளையும் அவள் உடலுக்குக் குறுக்கே கொடுத்துத் தூக்கி முகத்தை தனது முகத்துக்கு அருகில் கொண்டு வந்தான். அந்த நிலையில் கேட்டான், “மலை அரசி ஏன் சிரிக்கிறாய்?” என்று.
அப்பொழுதும் அவள் கண்களை விழிக்கவில்லை. அவள் தலை பூமியை நோக்கி சாய்ந்து, முடிந்த குழல் அவிழ்ந்து தொங்கி தரையில் புரண்டு கொண்டு இருந்தது. தலை அப்படி சாய்ந்து இருந்ததால், முன்பு அவனது முகம் புரண்ட கழுத்து நன்றாக நீண்டு அவன் கண் எதிரில் காட்சியளித்ததால், அதன் மோகனகாரத்தில் அவன் இரண்டாம் முறையாக மூழ்கினான். இதழ்களை அந்தக் கழுத்தில் அழுத்தினான். கழுத்து செய்த பாக்கியத்தைத் தாங்கள் செய்யவில்லையே என்ற எரிச்சலால் இரட்டை எழில் பகுதிகள் அந்த வாலிபனை நோக்கி முறைத்தன. மார்பின் எரிச்சலை நோக்கியதாலோ என்னவோ அவள் அழகிய இடை வெட்கத்தால், அதர்மத்தைக் காணும் நல்ல மனிதர்களைப் போல, மிகவும் குறுகியது. குன்றிவிட்ட மனிதர்களின் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் தீயவர்களைப் போல கீழ்ப்பரிமாணங்கள் அகன்று இடத்தைப் பிடித்து, அது இருந்த இடத்தைத் தெரியாமல் அடித்துவிட்டன.
ராவ்ஜோடா மீண்டும் தனது முகத்தை அவள் கழுத்தில் இருந்து எடுத்தான். அவள் உடலை நன்றாகத் தூக்கி தனது மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டான். “மலைஅரசி! அடி காட்டு மலரே!” என்று இன்பமாக அழைத்தான்.
மலை அரசி மெள்ள கண்களை விழித்தாள். “காட்டு மலரா?” என்று மெதுவாக வினவினாள்.
“ஆம். நாட்டில் மலர்கள் இத்தனை செழிப்பதில்லை” என்றான் ஜோடா. அவள் உடலின் பின்புறத்தில் கண்களை ஓட விட்டு.
“காட்டில் மட்டும் செழிக்கிறதா? உண்மையாகவா?” என்று வினவினாள், மலை அரசி மெதுவாக.
“ஆம்.” ஜோடாவின் கண்களில் கனவு விரிந்து, கனவுக் கண்கள் அவள் வசீகரத்தைப் பருகின.
“ஏனோ?” அவள் முணுமுணுத்தாள்.
“நாடு நாகரிகத்தில் திளைக்கிறது. செயற்கையை வளர்க்கிறது. இயற்கை வாழ்விலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது. அதனால்தான்.”
“காட்டில்?”
“கட்டுப்பாடு இல்லை. கேட்பார் இல்லை. இயற்கை கொடுக்கிறது உரம். சுதந்திரம் அளிக்கிறது சூழ்நிலை. கவலையற்று வளர்கிறது காட்டுச் செடி. அதன் மலர்களுக்கு, மனிதன் பறித்துவிடுவானே என்ற அச்சமில்லை. அதனால் செழித்து வளர்ந்து மலர்ந்து காற்றில் விளையாடுகிறது.”
“உங்களுக்கு நாடு பிடிக்கவில்லையா?”
“உன்னை பார்த்ததில் இருந்து பிடிக்கவில்லை.”
“நீங்கள் கவிஞரா?”
“உன்னைப் பார்த்தபின் அப்படியானேன்.”
“நான் இல்லாமல் நீங்கள் ஊர் சென்றால்?”
“இன்பக் கவி துன்பக் கவியாவான். கவி மனம் ஒரு முறை ஊற்றெடுத்து விட்டால் வரண்டு போவதில்லை.”
மீண்டும் மலை அரசி நகைத்தாள். “வாலிபரே!” என்று அழைத்தாள் கண்களை அகல விரித்து, அவன் கண்களுடன் உறவாடவிட்டு.
“மலரே! ஏன்?” கவிதையிலேயே பேசினான். அரசமகன்.
“மன்னனே...!” என்று தொடங்கினாள் மலை அரசி.
“என்ன மலரே?” இன்ப முறுவல் கூட்டினான். இளவரசன்.
“மன்னன் கையில் மலர் கிடக்கிறது.”
“உம்.”
“காட்டு மலரை அவன் பறித்தது தவறு.”
“பறித்தது அவன் அல்ல. அது இடறியது” என்று சொல்லியிருக்கலாம் அவன். ஆனால். சொல்லவில்லை. அதை நெருங்கினான், முகர்ந்தான்.
“அது?”
“தவறல்ல, இயற்கை நியதி. ஆனால்...”
“ஆனால்?”
“முகந்ததுடன் நின்றுவிட்டான். அது அதர்மம். இன்னொருவன் அதை முகர முடியாது.”
“அதனால்?”
“நுகருவது தர்மம். சாஸ்திரம் அனுமதிக்கிறது.”
“எதை?”
“எதை துஷ்யந்தன் ஏற்றான்?”
“காந்தருவத்தை.”
“அது க்ஷத்திரிய தர்மம் அல்லவா?”
ஜோடா தீர்க்கசிந்தனையில் இறங்கினான். பிறகு மெதுவாகச் சொன்னான் : “நீயும் க்ஷத்திரியப் பெண்ணாயிருந்தால் அது தர்மம். இல்லையேல்...” என்று.
அவன் வாசகத்தை முடிக்கவில்லை. “என்னை நீங்கள் தொட்டதே பாவம். பிறகு செய்வதெல்லாம் அழிக்க முடியாத அதர்மம். இப்பொழுது - மலரைத் தாங்கியிருக்கிறீர்கள். மீளா நரகத்திற்குச் செல்ல இதுதான் வழி” என்று அவன் வாசகத்தை வெட்டிய மலை அரசி, “உங்களுக்கு மனச்சாட்சியில்லை. துஷ்யந்தன் தனது மனம் சகுந்தலையிடம் சென்றதும் சிறிது சிந்தித்தான். பிறகு தர்மவானான அவனே சொல்லிக் கொண்டான், ‘நல்ல மனிதர்கள் மனம் தவறான வழியில் செல்லாது’ என்று. பிறகு அவன் கடமையைச் செய்யத் தவறவில்லை. உங்கள் மனத்தில் தெளிவில்லை, திடமில்லை” என்ற மலை அரசி சட்டென்று அவன் கைகளை உதறி எழுந்து நின்றான்.
ஜோடாவும் எழுந்தான்.
எழுந்து அவள் நின்றபோது மேலேயிருந்து வந்த கிரணங்கள் அவள் உடலை நிலவில் குளிப்பாட்டின. விரிந்த கருங்குழலை அவள் எடுத்து முடித்துக்கொண்டு ஜோடாவை நோக்கி, “ராஜபுத்திரனே! இரவு கண்களை மூடிவிட்டது. உதயம் கண்ணை விழிக்கப் போகிறது. அருவிக்குச் சென்று காலைக் கடனை முடித்து புரவியைத் தயார் செய்துகொள். அருணோதயத்தில் நாம் புறப்படுகிறோம்” என்று உத்தரவிட்டாள்.
ராவ்ஜோடா ஏதும் பேசாமல் குகைக்கு வெளியே சென்றான். அதுவரை அவன் பட்ட உஷ்ணத்துக்கு அருவி நீர் அமுதமாயிருந்தது. அவன் அதில் மூழ்கினான். அருணன் கிழக்கே மெல்லத் தலை காட்டினான். சந்தியாவந்தனத்தை முடித்த ராஜபுத்திரன் கரைக்கு வந்து தனது உடைகளைப் புனைந்தான். பிறகு எட்ட இருந்த தனது புரவிக்கு சேணமிட்டான்.
அந்தச் சமயத்தில் மலை அரசி புது மரவுரியை இடையில் தரித்து, ஒரு புலித்தோலை தாவணியாகப் போட்டுக்கொண்டு குகையில் இருந்து வெளியே வந்து நேராக புரவி இருக்குமிடம் சென்று அதன்மீது தாவி அனாயாசமாக ஏறினாள். “ஜோடா! நீயும் ஏறிக்கொள்” என்றாள் மலை அரசி.
அவள் சொற்படி அவனும் ஏறியதும் புரவி மலைச்சரிவில் வேகமாக இறங்கிச் சென்று, பாலைவனப் பகுதியை அடைந்தது. இப்படிப் பயணம் செய்த இரண்டாவது நாள் இருவரும் மார்வார் தலைநகரத்துக்கு எதிரில் தோன்றினார்கள். அவர்களைக் கண்டதும் மண்டோரின் கோட்டைக் கதவுகள் திறக்கவே, ராவ்ஜோடா புரவியில் இருந்து இறங்கி கடிவாளத்தைக் கைகளில் ஏந்தி தலைநகரில் நுழைந்தான்.
அவனை ஜகத்சிம்மன் கோட்டை வாயிலிலேயே எதிர் கொண்டான். “உங்களுக்குத் துன்பச் செய்தி வைத்திருக்கிறேன்” என்று சொன்னான் ஜகத்சிம்மன், மலை அரசியை வெறுப்புடன் பார்த்து.
“அது என்ன என்பது எனக்குத் தெரியும்” என்ற மலை அரசி, “சந்தசிம்மன் வருவதைப் பற்றிக் கவலைப்படாதே” என்றும் சொன்னான்.
இதைக் கேட்ட மார்வார் படைத்தலைவனை ஜகத்சிம்மன் பிரமை பிடித்து கல்லாய் சமைந்து நின்றான். பிறகு கோபம் தலைக்கு ஏற, “நீ ஒரு...” என்று ஏதோ தொடங்கினான்.
“காட்டுமலர்” என்று அதட்டலான குரலில் அவன் வாசகத்தை வெட்டிய இளவரசன், வேறொன்றும் சொன்னான். அதை மலை அரசிகூட எதிர்பார்க்கவில்லை.