நீண்டநாள் பிரிந்த மகனை ஆர்வத்துடன் தழுவும் தந்தை போல ஜோடாவை பல விநாடி தழுவி நின்ற பாபுஜி, கடைசியில் அவனுக்குத் தமது கைகளில் இருந்து விடுதலை அளித்தபோது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு தேங்கியிருந்ததை பிருமச்சாரியும் பார்த்தார். ஜோடாவும் கண்டான்.
“மண்டோர் மன்னனே! இனி கிருஷ்ணன் உன்னைச் சேர்ந்தவன். அவனை அழைத்துப் போய் உன் சொந்த மகனைப்போல் காப்பாற்று” என்று கூறிய பாபுஜியின் சொற்கள் தழுதழுத்து வந்ததையும் இருவரும் கவனித்தார்கள்.
அப்பொழுது ஜோடா பாபுஜியைப் பார்த்துச் சொன்னான், “பாபுஜி! உங்களிடம் இருந்து கிருஷ்ணனைப் பிரிக்க நான் விரும்பவில்லை. அவனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று.
இதைக் கேட்டதும் பாபுஜி சுயநிலை அடைந்து தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ராவ்ஜோடா! கிருஷ்ணனை பரீட்சையின் பரிசாக வைத்துவிட்டேன். நீ பரீட்சையில் தேறியதால் கிருஷ்ணன் உன் சொத்தாகி விட்டான்” என்றார். அவர் குரலில் சாந்தம் தெரிந்தது, சிறிது கடுமையும் ஒலித்தது.
ஜோடா பதிலேதும் பேசாமல் கிருஷ்ணனிடம் சென்று அதன் கடிவாளத்தைப் பிடித்து பாபுஜியிடம் அழைத்து வந்து, பாபுஜியின் கைகளில் கொடுத்து, “பாபுஜி! ஜோடா தாயையும் குழந்தையையும் பிரிக்க விரும்பவில்லை” என்று கூறினான்.
பாபுஜியின் கண்கள் உயர்ந்தன, ஜோடாவின் முகத்தை நோக்கி, “கொடுத்துவிட்டதைத் திரும்பிப் பெறும் வழக்கம் பாபுஜியிடம் கிடையாது” என்றார்.
“எனக்கும் கிடையாது” என்றான் ஜோடா, புன்முறுவல் இதழ்களில் படர.
“நீ இப்பொழுது கொடுப்பது தானம்” என்று சுட்டிக் காட்டினார் பாபுஜி.
“இந்த மேவார் சிற்றரசு மார்வாரின் ஆட்சிக்கு உட்பட்டது. மார்வார் மன்னனான நான் கொடுக்கும் எதையும் நீங்கள் மறுக்க முடியாது” என்று பதிலுக்குச் சுட்டிக் காட்டினான் ஜோடா.
பாபுஜி பதிலேதும் பேசவில்லை. கிருஷ்ணனின் சேணத்தைக் கையில் இறுகப் பிடித்துக்கொண்டார். “நான் உன்னைக் கொடிய பரீட்சைக்கு இலக்காக்கிக் கொல்லப் பார்த்தேன். நீ என்னைக் கருணையால் கொல்லுகிறாய்” என்று கூறினார் பாபுஜி. அத்துடன் பிருமச்சாரியைத் திரும்பி நோக்கி “கிருஷ்ணனை நான் திரும்பப் பெறுவது நியாயத்துக்கும் தர்மத்துக்கும் ஒத்ததா?” என்று கேட்டார்.
“அந்தப் புரவியையும் உம்மையும் இணைத்துத்தான் ராஜபுதனம் பேசுகிறது. பாபுஜி என்ற பெயரைவிட கரிய புரவி வீரன் என்ற பெயர்தான் பிரசித்தம். அந்தப் புரவி மீது நீர் அமர்ந்து போர்க்களத்துக்கு வருவது அரசனுக்குப் பணிபுரிவதாகும். அதனால் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்வது நியாயத்துக்கும் பொருந்தும், தர்மத்துக்கும் பொருந்தும், ஏன் நீர் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட கடமைக்கும் அது பொருந்தும்” என்று விவரித்தார் பிருமச்சாரி.
அதைக் கேட்டதும் பிருமச்சாரியை அணுகி அவர் கைகளை நன்றியுடன் பிடித்துக்கொண்டார் பாபுஜி. “நீங்கள் சொன்ன நேரத்தில் மண்டோர் முன்பு என் புரவிப் படையுடன் நிற்பேன். பிருமச்சாரி! மண்டோரில் ராவ்ஜோடா அரியணையில் உட்கார்ந்த பின்பு திரும்புகிறேன்” என்றும் சொன்னார் உறுதி சுடர்விட்ட குரலில். அத்துடன் அவர் கைகளை வீசி, எதிரே நின்ற புரவி வீரர்கள் புரவிகளை செலுத்திக்கொண்டு செல்ல சைகை செய்யவே, எதிரில் இருந்த சதுக்கம் சில நிமிடத்தில் காலி ஆயிற்று. “வாருங்கள், நாம் உள்ளே செல்வோம்” என்று பாபுஜி பிருமச்சாரியையும் ஜோடாவையும் அழைத்துச் சென்றார். உள்ளேயிருந்த முற்றத் தாழ்வாரத்தில் மூவரும் அமர்ந்ததும் பாபுஜி மண்டோரைப் பற்றிய விவரங்களைக் கேட்கத் தொடங்கினார். “ஜோடா! மண்டோர் கோட்டையின் பலவீனமான பாகம் எது?” என்று வினவினார்.
“எதுவும் கிடையாது” என்றான் ஜோடா பெருமிதத்துடன்
“நல்லது. பாபுஜி சொத்தைக் கோட்டையைப் பிடித்தான் என்ற அவதூறு கிடையாது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பாபுஜி.
“என் வீரர்களைத் தவிர, உன்னிடம் இருக்கும் படைபலம் எத்தனை?” என்று விசாரித்தார் பாபுஜி.
சிறிது தயங்கினான் பதில் சொல்வதற்கு. பிறகு மெதுவாகச் சொன்னான் “நூற்று இருபத்து ஐந்து புரவி வீரர்” என்று.
பாபுஜியின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன மேல் நோக்கி. “நூற்று இருபத்து ஐந்து பேர்தானா?” என்று கேட்கவும் செய்தார், வியப்பு குரலிலும் ஒலிக்க.
“அவ்வளவு பேர்தான் என்னுடன் ஓடிவந்தார்கள்” என்று சொன்னான் ஜோடா.
மகிழ்ச்சியை முகத்தில் காட்டினார் பாபுஜி, “என்னிடம் தற்சமயம் நூறு வீரர்கள் கொண்ட புரவிப்படை இருக்கிறது. இதை இருநூறாகவும் செய்ய வசதி இருக்கிறது. ஆனால், மீதி நூறு புரவிகள் முழுவதும் பழக்கப்படவில்லை...” என்று ஏதோ சிந்தித்தார் பாபுஜி.
அதுவரை ஏதும் பேசாமல் இருவர் உரையாடலையும் கேட்ட ஹர்பாசங்க்லா எழுந்து நின்றார் ராட்சதன்போல. “பழக்கப்பட வேண்டிய புரவிகள் வேண்டாம். பழக்கப்பட்ட நூறு வீரர் படை போதும். ஜோடாவின் நூற்று இருபத்து ஐந்து பேரும் சாமானிய வீரர்கள் அல்ல. தவிர, அவர்கள் இப்பொழுது சிறந்த ஒருவரால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்த இருநூற்று இருபத்து ஐந்து புரவி வீரர்களைக் கொண்டு மண்டோரை நாம் தாக்குவோம்” என்று சொன்னார்.
“பயிற்சி அளிப்பது யார்?” என்று கேட்டார் பாபுஜி.
“மலை அரசி” என்றார் பிருமச்சாரி.
“பெண்ணா!” என்று வாயைப் பிளந்தார் பாபுஜி.
“ஆம்.”
“பெண்ணால்...”
“பயிற்சி அளிக்க முடியுமா என்று கேட்கிறீர்கள்?”
“ஆம்.”
“நாம் மண்டோரைத் தாக்குமுன்பு ஒருநாள் என் இருப்பிடத்துக்கு வாரும். அப்பொழுது புரியும்.”
இதைச் சொன்ன பிருமச்சாரி புன்முறுவல் கொண்டார். பாபுஜியின் முகத்தில் வியப்பும், ஏதோ வேட்கையும் கூட விரிந்தது. “இந்த விநோதத்தைப் பார்க்க வேண்டும் அவசியமாக. இப்பொழுதே உங்களுடன் வருகிறேன்” என்று கூறினார் பாபுஜி.
அன்று பகல், மூவருமே கிளம்பினார்கள் பிருமச்சாரியின் இருப்பிடத்தை நோக்கி புறப்படுமுன்பு தமது வீரர்களில் ஒருவனை அழைத்து மற்ற வீரர்களைப் போருக்குத் தயார் செய்யுமாறு கூறிய பாபுஜி, பிருமச்சாரியையும் ஜோடாவையும் தொடர்ந்து சென்றார்.
அன்று பகல் முழுவதும் பயணம் செய்த மூவரும் அடிக்கடி மலைப்பகுதிகளால் மறைந்தும், இரவு தலைகாட்டிய சமயத்தில் பாலைவனத்தில் சஞ்சரித்தும் பயணம் செய்தார்கள். இடையிடையே பிருமச்சாரி மட்டும் அவர்களை விட்டுப் பிரிந்து பாலைவனத்தில் சிறிதுதூரம் பயணம் செய்து வந்தார்.
கடைசியாக பிருமச்சாரி வந்தபோது “சந்தசிம்மன் புதல்வர் இருவரும் மண்டோருக்குச் சென்றுவிட்டார்கள். இன்னும் ஒரு படைப்பிரிவும் சென்றிருக்கிறது” என்று அறிவித்தார்.
பிருமச்சாரி அடிக்கடி பிரிந்து பயணம் செய்த காரணத்தை முன்னதாக அறிந்திருந்த ஜோடா “அப்படியானால் மண்டோரின் தற்காப்பு பலப்படுத்தப்படுகிறது” என்றான்.
ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தார் பிருமச்சாரி. அதற்குப் பிறகு அவர் ஏதும் பேசவில்லை. தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். அதே சிந்தனையுடன் மௌனமாகவே பயணம் செய்த பிருமச்சாரி தமது இருப்பிடம் வந்ததும் பாபுஜியையும் ஜோடாவையும் உள்ளே அழைத்துச் சென்றார்.
உள்ளே நுழைந்தபோதே “கிரிஜா! மலை அரசி” என்று அழைத்துக்கொண்டே நுழைந்தார். அவரது அழைப்புக்கு பதிலேதும் கிடைக்காது போகவே “யாரது?” என்று குரல் கொடுத்தார். வெளியில் இருந்த வீரன் ஒருவன் ஓடிவரவே “மலை அரசி எங்கே?” என்று அவனை நோக்கிக் கேட்டார்.
“காட்டுக்குள் போயிருக்கிறார்கள்” என்றான் வீரன்.
“இந்த இரவிலா?” ஜோடா கவலையுடன் வினவினான்.
“முன்பே போய்விட்டார்கள். வரும் சமயமாகிவிட்டது” என்றான் வீரன்.
அவன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே ஒரு புரவி துள்ளும் ஒலி கேட்கவே மூவரும் வெளியே ஓடினார்கள். மூவரில் முன்னே ஓடிய ஜோடா அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தான்.
“மலை அரசி! இறங்கிவிடு. அந்தப் புரவி உன்னைக் கொன்றுவிடும்” என்று கூவினான். பின்னால் வந்த இருவரில் பிருமச்சாரி திகைத்து நின்றார். பாபுஜி “கிருஷ்ணா! நில்! அசையாதே!” என்று கடுமையுடன் உத்தரவிட்டார்.
அவர் குரலைக் கேட்டதும் புரவி சிறிது நின்றது. ஆனால், மலை அரசி அதை நிற்க விடவில்லை. பெரிதாக நகைத்து தனது கால்களால் அதன் வயிற்றில் உதைக்கவே புரவி பயங்கரமாக ஒருமுறை சுழன்றது. விரைந்தது, புயல்போல் காட்டுக்குள்ளே. மலை அரசி என்ன ஆனாளோ என்ற பயத்தில் புரவி சென்ற திக்கில் ஜோடா வெகு வேகமாக ஓடினான்.
பிருமச்சாரி மிகுந்த உஷ்ணத்துடன் பாபுஜியைப் பார்த்தார். “என்னிடம் கோபித்துப் பயனில்லை. நான் நிறுத்திய புரவியை ஏவிவிட்டாள் அந்த முரட்டுப் பெண்” என்றார் பாபுஜி. அவர் குரலிலும் மிதமிஞ்சிய திகைப்பு இருந்தது.
அவர்கள் இருவரில் பிருமச்சாரி ஒரு முக்கிய விஷயத்தை மறந்துவிட்டார். ஆகவே நெடுநேரம் மலை அரசியோ ஜோடாவோ திரும்பாததில் இருந்து ஏதோ பெரிய விபரீதம் நேர்ந்துவிட்டது என்று பிருமச்சாரி தீர்மானித்துவிட்டார். அவர் தீர்மானத்துக்கு அத்தாட்சி காட்டுவதுபோல் கிருஷ்ணன் மட்டும் காட்டுக்குள் இருந்து திரும்பி வந்தது. ஜோடா, மலை அரசி இருவருமே காணவில்லை.
வந்த அந்த கரிய புரவியும் சற்று நின்றது. பிறகு காதுகளை உயரத் தூக்கி எதையோ கேட்டது. மீண்டும் திரும்பி வேகமாக காட்டுக்குள் அம்புபோல் பாய்ந்து சென்றது. அதன் சைகை பிருமச்சாரி, பாபுஜி இருவருக்கும் புரிந்ததால் இருவரும் புரவி சென்ற திக்கில் சென்றனர்.
காட்டுக்குள் சிறிது தூரத்தில் புரவி தனித்து நின்றது. அதை அடுத்துத் தெரிந்த காட்சி பிருமச்சாரியை அசர வைத்தது. பாபுஜிக்கு ஏதும் புரியவில்லை.