மலை அரசியின் மறுபிம்பம் போன்ற மின்னிடையாளுடன், ஜோடா கலந்து விளையாட இருந்த சமயத்தில் பிருமச்சாரி ஹர்பாசங்கலா அங்கு தோன்றியதும் கதவைத் தட்டியதும் பரமானந்தமாயிருந்தது, மண்டோர் படைத்தலைவன் ஜகத்சிம்மனுக்கு. ஜோடாவின் திருட்டுக் காதல் களியாட்டம் இன்றுடன் முடிந்துவிட்டது என்றும், அவனுக்கு பிருமச்சாரி உதவுவதுகூட சந்தேகம் என்றும் நினைத்த படைத்தலைவன், அடுத்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் நடப்பதைக் கேட்க காதுகளை நன்றாகத் தீட்டிக்கொண்டான்.
பிருமச்சாரி அடுத்த அறையை பலமாகத் தட்டியதோடு நில்லாமல் “திற, கதவை சீக்கிரம்” என்று அதட்டியது ஜகத்சிம்மன் காதில் தெளிவாக விழுந்தது.
பிருமச்சாரியின் கேள்விக்கோ அதட்டலுக்கோ அடுத்த அறையில் இருந்து எந்த பதிலும் வராததையும் படைத்தலைவன் கவனித்தான். “கதவைத் திறக்கிறாயா? உடைக்கட்டுமா?” என்று மீண்டும் எழுந்தது பிருமச்சாரியின் குரல்.
“யார் இப்படி அநாகரிகமாக கதவை உடைப்பது?” என்ற கேள்வி எழுந்தது அடுத்த அறையில் இருந்து. அது ஜோடாவின் குரல் என்பதைப் புரிந்து கொண்ட ஜகத்சிம்மன் அதில் ஒலித்த அதிகாரத்தைக் கண்டு பிரமித்தான்.
“மன உரம் அதிகந்தான்” என்று தன்னுள் சொல்லியும் கொண்டான் பிரமிப்பு ஒலித்த குரலில்.
பிருமச்சாரியின் குரல் முன்னைவிட பலமாக ஒலித்தது. “நான்தான் ஹர்பாசங்க்லா” என்று.
“இந்த நேரத்தில் என்னை ஏன் எழுப்புகிறீர்?” என்றான் ஜோடா.
“காரணம் இருக்கிறது” என்று சீறினார் பிருமச்சாரி.
“என்ன காரணம்?”
“மன்னர் படுக்க வேண்டிய இடம் இது அல்ல.”
“எந்த இடத்தில் படுக்கவேண்டும் என்பதற்கு நிபந்தனை உண்டா?”
“இன்று உண்டு. மணநாளில் படுக்க வேண்டிய இடம் - வேறு.”
இதற்குப் பிறகு சிறிது மௌன நிலை. “சரி போங்கள். நான் வருகிறேன் விடுதிக்கு, சிறிதுநேரம் கழித்து” என்றான் ஜோடா.
“எதற்காக சிறிது நேரம் கழிக்க வேண்டும்?” என்று கேட்டார் பிருமச்சாரி தமது முரட்டுக் குரலில்.
“இங்கு சிறிது வேலை இருக்கிறது” என்றான் ஜோடா.
இதைக் கேட்டதும் குமுறினான் ஜகத்சிம்மன், “என்ன துணிவு! என்ன அயோக்கியத்தனம்!” என்று வியந்தான் படைத்தலைவன்.
ஆனால், அடுத்த விநாடி எழுந்த ஹர்பாசங்க்லாவின், சொற்கள், அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தன.
“உடனே கதவைத் திறக்காவிட்டால் கதவை உடைப்பேன் ஒரே உதையில்” என்று சீற்றம் மிகுந்த சொற்களை இடியெனக் கொட்டினார் பிருமச்சாரி.
சிறிதுநேரத்திற்கு எல்லாம் பக்கத்து அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தனது அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போய் மன்னன் நாடகத்தின் முடிவுப் பகுதியைக் காணலாமா என்று எண்ணிய ஜகத்சிம்மன், அதில் ஆபத்து இருப்பதைப் புரிந்துகொண்டதால் தனது அறையின் கதவோரத்துக்கு வந்து உற்றுக் கேட்டான்.
அடுத்த நிகழ்ச்சிகள் அவன் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. பக்கத்து அறை திறந்ததும் பெரிதாக நகைத்தார் பிருமச்சாரி. “மகாராஜா! நீர் பெரிய பேர்வழி. இதை ஏன் எனக்கு முன்னமே சொல்லவில்லை?” என்று கேட்டார் நகைப்பின் ஊடே.
அவருடன் சேர்ந்து நகைத்தான் ஜோடா. “சொன்னால் சுவாரசியம் கெட்டுவிடும்” என்று கூறி, மீண்டும் நகைத்தான்.
“இப்பொழுது?” விஷமமாகக் கேட்டார் பிருமச்சாரி...
“சுவாரசியம் அதிகமாகும்” என்று ஜோடா கூறினான்.
“ஆம் ஆம் அதிகமாகும்” என்று பிருமச்சாரி குதூகலித்தார்.
பிருமச்சாரியான ஹர்பாசங்க்லா இந்த மாதிரி விரசமான உரையாடலில் இறங்கியது விசித்திரமாக இருந்தது ஜகத்சிம்மனுக்கு. ஒருவேளை அவரது பிருமச்சாரி ஆசிரமம் வெளிவேடமோ என்று நினைத்தான்.
அவன் நினைப்புப்படி ஒரு கேள்வியை ஜோடா கேட்டான், “இவளை நான் தனித்து அழைத்து வந்ததில் தவறு ஏதுமில்லையே?” என்று.
“ஒரு தவறுமில்லை. தவிர, இது உங்கள் கடமையுங்கூட” என்றார் பிருமச்சாரி.
“பார்ப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்தால்?” என்று ஜோடா கேட்டான்.
“நினைத்துவிட்டுப் போகட்டுமே!” பிருமச்சாரியின் குரலில் அலட்சியம் இருந்தது.
“ஏதாவது பேசினால்?” ஜோடாவின் குரலில் கவலை தெரிந்தது.
“அவன் நாக்கை வெட்டிவிடுவேன்” என்று உறுதி கூறினார் பிருமச்சாரி.
பிருமச்சாரியின் போக்கு பரம விசித்திரமாக இருந்தது ஜகத்சிம்மனுக்கு. வேறொரு பெண்ணுடன் மண நாளன்று சரசமாட முற்பட்ட மன்னனுடன் அவர் எப்படி உறவாட முடியும் என்று எண்ணியும் ஏதும் புரியவில்லை அவனுக்கு.
அந்தச் சமயத்தில் பிருமச்சாரி அந்தப் பெண்ணைப் பார்த்து சொன்னார், “மன்னனை கைக்குள் ஒரே நாளில் போட்டுக் கொண்டுவிட்டாய்” என்று.
“இல்லை. நீண்டநாள் ஆயிற்று” என்று வெட்கம் இல்லாமல் அந்தப் பெண் பேசினாள்.
அதையும் ஆட்சேபிக்கவில்லை பிருமச்சாரி, “அம்மா! நீ உள்ளே போ. நானும் இவரும் சிறிது பேசவேண்டும்” என்று கூற, பக்கத்து கதவு மீண்டும் மூடப்பட்டது. ஆனால் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று மட்டும் தெரியவில்லை ஜகத்சிம்மனுக்கு. திடீரென்று அவன் மனதில் பெரிய சந்தேகம் ஒன்று உதித்தது. உடனே அவன் சற்று இரைந்தே சொல்லிக் கொண்டான், “இருக்காது. ஒருகாலும் இருக்காது” என்று.
அது, வெளியே இரகசியம் பேசிக்கொண்டு இருந்த இருவர் காதிலும் விழுந்திருக்க வேண்டும். இருவர் இரகசியப் பேச்சும் சட்டென்று நின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“நன்றாக வலை விரித்தீர்கள் மகாராஜா” என்று சொல்லி புன்முறுவல் பூத்தார் பிருமச்சாரி.
“வலை இருந்தால்தான் பறவைகள் விழுகின்றன” என்றான் ஜோடா, சட்டென்று சமாளித்துக்கொண்டு.
“இப்பொழுது விழுந்திருக்கும் பட்சி எப்படி?” என்று கேட்டான்.
“அழகான பட்சி” என்று பாராட்டினார் பிருமச்சாரி.
அத்துடன் பிருமச்சாரி நடந்து செல்லும் சத்தம் கேட்டது. சிறிதுநேரம் கழித்து ஜகத்சிம்மன் வெளியே வந்தான். அப்படியும் இப்படியும் பார்த்தான். தாழ்வரையில் இருந்த ஒரே விளக்கு சிறிது மங்கலாகவே எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து அறையில் சிரிப்பு ஒலி சற்று நேரத்திற்கு ஒருமுறை வந்துகொண்டு இருந்தது. அதை ஒரு விநாடி நின்று கேட்ட ஜகத்சிம்மன் வாயிலை நோக்கி நடந்தான்.
வாயிலில் அவனை எதிர்பார்த்ததுபோல் நின்றிருந்தார் பிருமச்சாரி. அவன் காலடி ஓசை கேட்டதும் திரும்பினார். “யார் படைத்தலைவரா? இன்னும் ஏன் உறங்கவில்லை?” என்று கேட்டார்.
“உறக்கம் வரவில்லை” என்றான் படைத்தலைவன்.
பிருமச்சாரி படைத்தலைவனை அனுதாபத்துடன் பார்த்தார். “ஆம் ஆம், எப்படி வரும்?” என்று சொன்னார் அனுதாபம் குரலிலும் ஊடுருவ.
“பிருமச்சாரி!” என்று சற்றுக் கடுமையான குரலில் அழைத்தான் ஜகத்சிம்மன்.
“என்ன படைத்தலைவரே?” என்று பிருமச்சாரி வினவினார்.
“நீங்கள்...” இழுத்தான் ஜகத்சிம்மன்.
“உம்.”
“தர்மம் தெரிந்தவர்.”
“மகிழ்ச்சி.”
“அப்படிப்பட்டவர் அதர்மத்துக்குக் கைகொடுக்கக் கூடாது.”
“நியாயம்.”
“நீர் நியாயமாக நடக்கவில்லை.”
“அப்படியா?”
“ஆமாம். சற்று முன்பு நீங்களும் மன்னரும் பேசியதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன்.”
“ஒட்டுக் கேட்டீரா?”
“இல்லை. அதற்கு அவசியம் இல்லை. உங்கள் இருவர் குரலும் பலமாக இருந்தது.”
பிருமச்சாரி படைத்தலைவனை உற்று நோக்கினார். “எங்கள் உரையாடலில் இருந்து என்ன தெரிந்துகொண்டீர்?” என்று வினவினார்.
“ஏதும் தெரியவில்லை.”
“அதர்மம் ஏதும் நடக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டீர் அல்லவா?”
“இல்லை.”
“என்ன இல்லை?”
“பிருமச்சாரி!”
“சொல்லும்.”
“என் மூளை குழம்பி இருக்கிறது.”
“இரண்டு மூன்று நாட்களாக நீர் நடக்கும் முறையில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது” என்ற பிருமச்சாரி, படைத்தலைவனை நோக்கி “படைத்தலைவரே! வீணாக மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம். மனதில் உள்ள மாசுகளைக் களைந்துவிடும். அது உமக்கும் நல்லது” என்று உபதேசம் செய்தார்.
அத்துடன் அவனை விட்டுச் சென்றார். உளைந்த மனதுடன் ஜகத்சிம்மன் வாயிலிலேயே நீண்டநேரம் நின்றான். ஆகாயத்தில் இருந்த வெண்மதியை நோக்கினான். “போருக்கு அதிகநாள் இல்லை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். நீண்டநேரம் வாயிலில் உலாவிக்கொண்டு இருந்துவிட்டு படுக்கச் சென்றான். பழையபடி நேரம் ஓடிவிட்டதால் அவனையும் அறியாமல் கண்கள் மூடின. நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.
நீண்டநேரம் கழித்தே எழுந்திருந்த ஜகத்சிம்மன் காதில் வெளியே வீரர்கள் அணிவகுத்து நடமாடும் சத்தம் கேட்டது. வெளியே வேகமாக வந்தான் படைத்தலைவன். அங்கு அவன் கண்ட காட்சி அவனைத் திகைகக்க வைத்தது.
சுமார் ஐந்நூறு வீரர்கள் பூர்ண ஆயுதங்களுடன் புரவிகளில் ஏறி இருந்தார்கள். புரவிகள் அணிவகுப்புக்கு நடை போட்டன. அவற்றை இஷ்டப்படி திருப்பியும் நேராக நடக்கச் சொல்லியும் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் பிருமச்சாரி.
வெளியே வந்த ஜகத்சிம்மனை அருகில் அழைத்த ஜோடா “நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது” என்று கூவினான்.
“என்ன அதிர்ஷ்டம் மகாராஜா?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“நமது படைகளுக்குத் தலைவராயிருக்க பிருமச்சாரி சம்மதித்துவிட்டார்” என்று கூவினான் உற்சாகத்துடன்.
“அப்படியானால் நான்?” என்ற ஜகத்சிம்மன் கேள்வியில் அதிர்ச்சி தெரிந்தது.
“பிருமச்சாரிக்கு அடுத்தபடி உபதளபதி” என்றான் ஜோடா.
தனது பதவி இறக்கத்தைப் புரிந்துகொண்ட ஜகத்சிம்மன் சிலையென நின்றான்.