மண்டோரின் பெரும் கதவுகள் சாத்தப்பட்டதாலும் போர்முரசு பலமாக ஒலித்ததாலும் வருவது என்னவென்பதை அறிந்த புது மகாராஜாவான ராவ்ஜோடா, புரவியின் கடிவாளத்தை பிடித்த நிலையிலேயே திகைத்து அமர்ந்துவிட்ட சமயத்தில் மலை அரசியின் சொற்கள் ஒவ்வொன்றும் பலிப்பதை புரிந்துகொண்டான்.
முரசு ஒலித்ததால் கோட்டைப் பெருங்கதவை நோக்கிப் பறந்த படைத்தலைவனான ஜகத்சிம்மன் போன வேகத்தில் திரும்பி வந்து, புரவிச் சாலையின் முன்பு சிலையென குதிரையில் அமர்ந்திருந்த புது மகாராஜாவை நோக்கித் தலைவணங்கி, “போர்முரசு உங்கள் காதிலும் விழுந்து இருக்கும் என நினைக்கிறேன்” என்று கூறினான் மிகப் பணிவுடனும் பரபரப்புடனும்.
ராவ்ஜோடா எந்த பரபரப்பையும் காட்டவில்லை. “போர் முரசு காதில் விழாத அளவுக்கு உன் மன்னன் இன்னும் செவிடாகிவிடவில்லை” என்று பதில் சொன்னான் ஜோடா.
மன்னனின் மன ஓட்டமும், ஓட்டத்தின் திக்கும் ஜகத்சிம்மனுக்கும் புரிந்து இருந்ததால் சிறிது நேரம் பேச்சை எப்படித் தொடருவது என்று தெரியாமல் நின்றான். பிறகு கேட்டான் “முதலமைச்சரை அழைக்கட்டுமா?” என்று.
“இனி அமைச்சருக்கு வேலையில்லை. படைகளைத் திரட்டு, தலைநகரப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய். சந்தசிம்மனை முடியுமானால் தடுப்போம். இல்லையேல் களத்தில் சந்திப்போம்” என்று கூறிய ராவ்ஜோடா புரவியைத் தட்டிவிட்டு கோட்டை வாசலை நோக்கி விரைந்தான். கோட்டைச் சுவரின் பக்கத்தில் இருந்த படிகளில் ஒன்றில் ஏறி, கதவுகளுக்கு மேலிருந்த பார்வைக் கூடத்தில் இருந்து பாலைவனப் பகுதியை நோக்கினான்.
வெகுதூரத்தில் புரவிகள் எழுப்பிய மணல் தூசி, படைகளை முழுவதும் மறைக்காவிட்டாலும் வருவது பெரும்படை என்பதை உணர்த்தியது; அத்துடன் வரும் எதிரி எப்படியும் தன் நகரை நிர்த்தூளி செய்யும் உறுதியுடன் வருகிறான் என்பதையும் புலப்படுத்தியது.
வருபவன் ராஜபுதனத்தின் மகாவீரனும் மகா தியாகியுமான சந்தசிம்மன் என்பதையும், மேவாரின் மன்னனை பொம்மையாக்க முயன்ற மார்வார் வம்சத்தின் மிஞ்சிய தலைமுறை மீது பழிவாங்கும் கோபத்துடன் வருகிறான் என்பதையும் உணர்ந்து கொண்ட ஜோடா, கோட்டை மதில் மீதிருந்து கீழே இறங்கி மீண்டும் அரண்மனை வந்து தனது படைத்தலைவனையும் முதலமைச்சரையும் மந்திராலோசனை சபைக்கு வரவழைத்தான். இருவரும் வந்ததும் ஆலோசனை எதுவும் கேட்கவில்லை ராவ்ஜோடா. “முதலமைச்சரே! அரண்மனையை அமங்களமாக்கி சம்பிரதாயத்தை நிலைநிறுத்திவிட்டீர். இப்பொழுது சந்தசிம்மன் இந்தத் தலைநகரையே அமங்களப்படுத்த வருகிறான். அதற்கு என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவினான்.
மன்னன் சொல்வது என்னவென்று சந்தேகமறப் புரிந்தது முதலமைச்சருக்கு. “மகாராஜா! சந்தசிம்மனை சந்திப்பது உங்கள் கடமை. படையெடுப்புக்காகக் கண்ட காட்டுப் பெண்களின் யோசனையை ஏற்பதோ சம்பிரதாயத்தை மாற்றுவதோ சரியாகாது. என் புத்தியில் உதித்ததை, தர்மத்தை நான் செய்தேன். விளைவுக்கு நான் அஞ்சவில்லை. என் பதவியை நான் விட்டுவிடத் தயாராக இருக்கிறேன்” என்று கண்டிப்புடன் பேசினார் முதலமைச்சர்.
ராவ்ஜோடாவின் இதழ்களில் புன்முறுவல் அரும்பிற்று. “முதலமைச்சரே! பதவியை நீர் விட வேண்டிய அவசியமில்லை. அதுவே உங்களை இன்னும் இரண்டொரு நாளில் விட்டுவிடும். சந்தசிம்மன் மண்டோரில் புக முற்படுவது உமது பதவியை நிலைநிறுத்த அல்ல” என்று கூறினான் புன்முறுவலின் ஊடே. பிறகு ஜகத்சிம்மனை நோக்கி “படைத்தலைவர் பதவி துறக்க இஷ்டப்படுவாரானால் அதற்கும் ராவ்ஜோடா தயார்” என்றும் கூறினான்.
ஜகத்சிம்மன் தனது வாளின் மீது கையை வைத்தான். “மன்னருக்காக மடிவது என் கடமை” என்று சொன்னான் வீராவேசம் ஒலித்த குரலில்.
“கடமையை சிறிது மாற்றிக்கொள்ளலாம். மன்னருக்காக உயிர் வாழ முயற்சி செய் ஜகத்சிங்” என்ற ராவ்ஜோடா, “ஜகத்சிங்! மேவார் ராஜப்பிரதிநிதி சந்தசிம்மனுக்கு சரியான வரவேற்பு கொடுக்கத் தயார் செய். நான் ராஜ மாதாவிடம் விடைபெற்று வருகிறேன்” என்று கூறிவிட்டு மந்திரா லோசனை முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாக தலையை அசைத்துவிட்டு அரண்மனை அந்தப்புரத்தை நோக்கிச் சென்றான்.
மகாராணி தனது பஞ்சணையில் கம்பீரமாக அமர்ந்து மகனை வரவேற்றாள். “மகனே! எதிரி வந்துவிட்டான். அதைப் பற்றி ராஜபுத்திரர்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது” என்று சொன்னாள்.
ராவ்ஜோடா அந்த வீரமாதாவின் முன்பு தலைவணங்கி நின்றான். “வீரனுக்குக் கவலை கிடையாது, கடமை உண்டு” என்றான்.
“என்ன கடமை மகனே?” என்று வினவினாள் மகாராணி.
“எதிரி உட்புகுவதால் உங்களுக்கும் மற்ற பெண்களுக்கும் ஜோகருக்கு ஏற்பாடு செய்வது” என்றான் ஜோடா.
ராஜபுத்திர பெண்மணிகள் எதிரி நுழைந்தவுடன் தீக்குளித்துவிடும் புனித வழக்கமான ஜோகரைப்பற்றி மகன் உரைத்தவுடன் மகாராணி புன்முறுவல் செய்தாள். “மகாராஜா!” என்று மகனை அவள் பதவி சொல்லி அழைத்து, “ஜோகருக்கு யார் ஏற்பாடும் தேவையில்லை. ராஜபுத்திர பெண்களுக்கு அது கைவந்த கலை. தவிர இப்பொழுது வருபவன் ராஜபுத்திரப் பெண்களைக் கற்பழிக்கும் பழக்கமுள்ள விரோதியல்ல. வருபவன் ராஜபுதனத்தின் மகாவீரன். உன் சகோதரி மகனுக்காக தனது அரசு உரிமையை விட்டுக் கொடுத்த மகாதியாகி. ஆகையால் உனக்கு எங்களைப்பற்றி கவலை வேண்டாம். நீ புறப்படு” என்று கூறி பக்கத்தில் இருந்த பணிப்பெண் ஏந்தி நின்ற தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து மகன் நெற்றியில் இட்டாள். “வெற்றிச் செய்தி அனுப்பு, இல்லையேல் உன் மரணச் செய்தி கிடைக்கட்டும்” என்று ஆசீர்வாதமும் செய்தாள் அந்த வீரமாதா.
தலைவணங்கி அந்தப்புரத்தில் இருந்து வெளியேறிய ராவ்ஜோடா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரிடையாகப் பார்வையிட்டான். கோட்டைமீது இருந்த வேல்களையும் அம்புக்கூடங்களையும் தீப்பந்தம் எரியும் யந்திரங்களையும் கவனித்தான். அன்று மாலை சந்தசிம்மன் மண்டோருக்கு எதிரில் பாசறை அமைத்துத் தங்கியபோது எந்தச் சமயத்திலும் போருக்கு சித்தமாயிருந்தான் ராவ்ஜோடா.
மண்டோர் கோட்டை வாயிலுக்கு வெளியே எறி அம்புகளும் வேல்களும் பாயக்கூடிய தூரத்திலேயே கூடாரங்களை அமைத்திருந்த சந்தசிம்மன், தனது கூடார வாயிலில் நின்று எதிரேயிருந்த கோட்டையையும் அதன் பெரு வாயிலையும் உற்று நோக்கினான். நல்ல உயரத்துடனும் திரண்ட புயங்களுடனும் கூரிய விழிகளுடனும் காட்சியளித்த சந்தசிம்மன் முகத்தில் சினத்துடன் விசனக்குறியும் கலந்து கிடந்தது. அதை பக்கத்தில் நின்ற அவன் துணைத்தலைவன் கவனித்து, “இதில் விசனப்படுவதற்கு ஏதும் இல்லையே. நம்மை அழிக்க முயன்றவர்களை நாம் அழிக்க முயலுகிறோம்” என்றான்.
“நம்மை அழிக்க முயன்றதற்காக நான் ஜோடாவைப் பின்தொடர்ந்து வரவில்லை. வஞ்சகத்தால் மேவாரைக் கைப்பற்றச் செய்த முயற்சிக்காக தொடர்ந்து வந்தேன்” என்றான் சந்தசிம்மன்.
“ஜோடா என்ன வஞ்சகம் செய்தார்?” என்று துணைத்தலைவன் வினவினான்.
சந்தசிம்மன் கோட்டை மீதிருந்த கண்களை தனது துணைத்தலைவன் மீது திருப்பினான். “ஜோடா வஞ்சகம் செய்யவில்லை. வஞ்சிக்க முயன்றது அவன் தந்தை. வஞ்சகத்தைத் தடை செய்யாதது, வஞ்சகத்துக்குத் துணை புரிந்தது இவன் குற்றம்” என்றான் சந்தசிம்மன்.
“அப்படியானால் போரைத் துவக்கலாமா?” என்று வினவினான் துணைத்தலைவன்.
சந்தசிம்மன் சிறிது சிந்தித்தான். “வேண்டாம். மாலை வேளையாகிவிட்டது. இரவில் போரைத் துவக்குவதை க்ஷத்திரிய தர்மம் அனுமதிக்கவில்லை” என்றான்.
துணைத்தலைவன் தலைவணங்கி திரும்பினான். சந்தசிம்மனும் இளைப்பாற கூடாரத்துக்குள் சென்று வாளையும் வேலையும் ஒரு மூலையில் சாத்திவிட்டு வெளியே வந்தான்.
மண்டோரின் கோட்டையில் தீபங்கள் பிரகாசமாக எரிந்தன. பாலைவனத்தின் நிலவு எழுந்து, ஏற்கனவே வெள்ளையாயிருந்த மணலை மிக வெள்யைாக அடித்திருந்தது. மண்டோர் நிர்மாணிக்கப்பட்டு இருந்த மலைப் பிரதேசத்திலும் செடி கொடிகள் ஏதுமில்லாததால் அதன் பாறாங்கற்களின் கடுமையும் சிவப்புங்கூட அழகு பெற்று இருந்தன. இயற்கையின் இத்தனை அழகையும் பாழக்க போரும் இருக்கிறதே என்று சந்தசிம்மன் எண்ணி சோகப் பெருமூச்சு ஒன்றையும் வெளியேவிட்டான். அந்தச் சமயத்தில் படைத் தளத்தின் கோடியில் இருந்து இரு புரவிகள் வெகு வேகமாக ஓடி வந்தன. அதிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் சந்தசிம்மனின் எதிரில் ஜோடியாக நின்று அவனை நோக்கினார்கள்.
“அப்பா! சோகம் என்பதை அறியாத உங்கள் முகத்தில் ஏன் சோகம் தெரிகிறது?” என்று வினவினான் மூத்தவன்.
“ஏனப்பா கேடயத்தையும் வாளையும் வேலையும் துறந்து நிற்கிறீர்கள்? போரைத் துவங்க வேண்டாமா?” என்று வினவினான் இளையவன்.
வீரத்தில் தனக்குச் சிறிதும் சளைக்காதவர்களும் சிங்கக் குட்டிகளைப் போல் எதிரே நின்றவர்களுமான தனது இரு புதல்வர்களையும் நோக்கிய சந்தசிம்மன் முகத்தில் பெருமைக்குறி பெரிதும் விரிந்தது.
“இரவில் போரில்லை மகனே. க்ஷத்திரிய தர்மம் இரவில் போரை அனுமதிக்கவில்லை” என்றான் சந்தசிம்மன் தனது - மூத்த மகனான காந்தாஜியை நோக்கி.
இளைய மகனான மஞ்சாஜி தந்தையை வியப்புடன் நோக்கினான். “மேவார் தலைநகரில் இரவில்தானே மார்வார் படைகளைத் தாக்கினீர்கள்” என்று கேட்டான் அந்த இளஞ்சிங்கம்.
சந்தசிம்மன் நகைத்தான். “அது போர் அல்ல. நமது தலைநகரில் வஞ்சனையால் புகுந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை. இது போர். இதற்கு நெறிகள் உண்டு” என்றான் அந்த மகாவீரன். பிறகு எதையோ நினைத்துக்கொண்டு “காந்தா! மஞ்சா! இந்தத் தலைநகரை நான் கைப்பற்றுகிறேன், நீங்கள் மேவார் சென்று இதை நிர்வகிக்கும் அளவுக்குப் படைகளை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.
இந்த உத்தரவு இரு மைந்தர்களையும் திகைக்க வைத்தது. “அப்பா! போரில் நாங்கள்” என்று கெஞ்சினான் காந்தாஜி.
“நாங்கள் போகமாட்டோம்” என்றான் மஞ்சாஜி.
சந்தசிம்மன் இரு புதல்வர்களையும் அணைத்துக் கொண்டான். “இந்த மண்டோரை ஆளப்போகும் உங்களுக்கு நிதானம் வேண்டும். போர் எப்பொழுதும் ராஜபுதனத்தில் உண்டு. ராஜபுதனம் என்றும் ரணகளம். சாந்தியையும் சிறிது வளர்க்கப் பார்ப்போம். சொல்கிறபடி செய்யுங்கள். உங்களை பத்து நாளுக்குள் இங்கு எதிர்பார்க்கிறேன்” என்றான்.
இரண்டு இளஞ்சிங்கங்களின் முகங்களிலும் ஏமாற்றம் தெரிந்தது. வேறு வழியின்றி தந்தைக்குத் தலைவணங்கி பாசறையில் இருந்து கிளம்பி சித்தூரை நோக்கி விரைந்தார்கள்.
சந்தசிம்மன் சாந்தப் பெருமூச்செறிந்தான். ஆனால் அந்த இரவு அவனுக்கு சாந்தியை அளிக்கவில்லை. நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ஜகத்சிம்மன் கோட்டைக் கதவுகளைத் திறந்துகொண்டு சந்தசிம்மனின் படைகளை நோக்கி வந்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி வெற்றி அத்தனை சுலபமாயில்லை. கதவுகள் திறந்ததும் பிரமிக்கும் துரிதத்தில் தயாராகிவிட்ட மேவார் படை எதிரியைச் சந்தித்தது. சந்தசிம்மன் போரின் முன்னிலையில் புரவியுடன் காட்சியளித்து வாளால் பலரையும் வெட்டிச் சாய்த்தான்.
எதிர்ப்பட்ட ஜகத்சிம்மனை நோக்கி, “ஜோடா எங்கே?” என்று சீறினான்.
இரவில் ஜகத்சிம்மனால் துவக்கப்பட்ட போரை அறியாத ஜோடா, போரின் சத்தம் கேட்டதும் தனது பஞ்சணையில் இருந்து எழுந்து புரவியில் வேகமாக வந்தான். அதற்குள் போர் ராஜ வீதிக்கு வந்துவிடவே எதிரி படைக்குள்ளும் பக்கத்து விடுதிகளின் முனைப்பிலும் பாய்ந்து போரிட்டான் புது மகாராஜா. தூரத்தே இருந்த சந்தசிம்மனைப் பார்க்க வெட்கமாயிருந்ததால் புரவியைக் கோட்டை வாயில் பக்கம் செலுத்தினான் போரிட்டுக்கொண்டே.
மேவார் படை மண்டோரில் எங்கும் காட்சியளித்தது. கோட்டை வாயிலில் அதிக வீரர்கள் இல்லாவிட்டாலும் போர் மும்முரமாக நடந்தது. அந்தப் போரில் நுழைந்து கலந்து போரிட்ட ஜோடா விடியற்காலையில், மண்டோருக்குள் எதிரியின் ஜெயகோஷத்தைக் கேட்டு தலைகவிழ்ந்து புரவியைச் செலுத்தினான் எதிரே இருந்த மலைச் சரிவை நோக்கி. அவன் இடையில் எதோ ஒரு பெரிய ஈட்டி நுழைந்திருந்ததால் இரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. மலைச்சரிவின் முகப்புக்கு வந்ததும் மயக்கத்தால் புரவியில் இருந்து சரிந்தான் ஜோடா. அவன் இரத்தம் மலைச் சரிவின் முகப்பில் இருந்த மணலை நனைத்தது.
விழுந்த அவனை நோக்கி வந்தாள் மலை அரசி மலைப்புதர் ஒன்றில் இருந்து. அவன் இடையில் இருந்து வந்த இரத்தப் பிரவாகத்தையும் அது நனைத்த இடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றாள். “இரத்தச் சண்டை இன்னும் முடியவில்லை. பாவத்தின் கறை அதிகமாகிறது உன் படைத்தலைவனால்” என்று முணுமுணுத்தாள். பிறகு அவன் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து குப்புற விழுந்து கிடந்த ஜோடாவைப் புரட்டித் தன் மடியில் கிடத்திக்கொண்டு அவன் காயத்தைப் பரிசோதிக்கலானாள்.