வீரனாகப் படைகளை இயக்கி, இழந்த அரசை மீட்பதில் சித்தத்தை செலுத்த வேண்டிய மார்வார் மன்னன், கேவலம், பெண் மோகம் கொண்டவனாகக் குடிசையில் மறைந்து கொண்டு காலத்தை ஓட்டுவதை நினைத்த ஜகத்சிம்மன் வேடவர் குடிசைக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும்வரை தனது ஓட்டத்தை நிறுத்தவில்லை. ராவ்ஜோடாவின் இந்த விபரீத வாழ்க்கையை பிரும்மச்சாரி ஹர்பாசங்க்லாவிடம் சொல்துவது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்த ஜகத்சிம்மன், தன்னுடன் வந்த காவலன் நின்றிருந்த இடத்தை அடைந்தவுடன் “மண்டோர் கோட்டைக் காவலரே! தாமதிப்பதற்கு நேரமில்லை; உடனே புறப்படும்” என்று அவனையும் துரிதப்படுத்தி மலைச்சரிவில் அவனுக்கு முன்பாகவே இறங்கலானான்.
படைத்தலைவன் துரிதத்துக்குக் காரணம் தெரியாத காவலனும் படைத்தலைவனைப் பின்பற்றி இறங்கிக்கொண்டே வினவினான், “ஏன் இத்தனை அவசரம்? எதிரி சோதனைப் படையினர் விலகினால் நாம் பயணம் செய்வது சவுகரியமாகயிருக்கும். ஆகவே இன்னும் ஒரு நாள் தாமதித்தால் என்ன?” என்று.
ஜதத்சிம்மன் காவலனைக் திரும்பியும் பார்க்கமால் இறங்கிக்கொண்டே “ஒரு நாளா! ஒரு நிமிடம் கூட இங்கு நாம் தாமதிக்க முடியாது” என்று கூறினான் கடுப்புடன்.
“நம்மைப் பிடிக்க சதா சுற்றிக்கொண்டிருக்கும் மேவார் வீரர்கள் வசம் அகப்பட அத்தனை அவசரமாக்கும் உங்களுக்கு?” என்று விஷமமாகப் பேசினான், மண்டோர் கோட்டைக் காவலன்.
படைத்தலைவன் அந்த ஏளனப் பேச்சில் கலந்து கொள்ளவுமில்லை, உடனடியாகப் பதில் சொல்லவுமில்லை. பதில் சொன்ன போது பேச்சு மிகத் திட்டமாயிருந்தது. “கடமை அழைக்கும்போது நாம் துரிதத்தைக் காட்டுவது விவேகம்” என்று கூறினான் ஜகத்சிம்மன்.
காவலன் மேலும் தன் விஷமத்தைக் காட்டினான். “உங்கள் துரிதம் ஏற்கனவே பலன் அளித்திருக்கிறது. அரசரின் உத்தரவுக்கு விரோதமாக நீங்கள் சந்தசிம்மனை இரவில் தாக்கியிராவிட்டால் மகாராஜா ஊர் சிரிக்க, ஊரை விட்டு ஓட அவசியம் இருந்திருக்காது” என்று பழைய கதையைச் சுட்டிக் காட்டினான் காவலன். பாஜகத்சிம்மன் தனது வேகத்தை சிறிது தளர்த்தித் திரும்பி காவலனை நோக்கி “மகாராஜாவைப் பார்த்து ஊர் சிரிக்க நமது முயற்சி எதுவும் இனிமேல் தேவையில்லை” என்று கூறினான்.
“ஏன்?” காவலன் கேள்வியில் வியப்பு இருந்தது.
“அவரே அதற்கு ஏற்பாடு செய்து கொள்கிறார்” என்றான் ஜகத்சிம்மன்.
“எதற்கு?”
“ஊர் சிரிப்பதற்கு.”
“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு.”
“பிருமச்சாரியிடம் போனதும் புரியும்.”
“அதற்கு முன்பு நீங்கள் சொல்லமாட்டீர்களாக்கும்?”
“மாட்டேன்.”
“ஏன்?”
“நானும் மார்வார் ராஜவம்சத்தைச் சேர்ந்தவன். இந்த மகாராஜா இல்லாவிட்டால்...” என்ற ஜகத்சிம்மன் சொற்களை முடிக்கவில்லை.
காவலன் நன்றாகப் புரிந்துகொண்டான், மார்வார் அரியணைமீது ஜகத்சிம்மன் ஒரு கண் வைத்து இருக்கிறான் என்பதையும், இந்த துர் எண்ணம் அவனுக்கு நீண்ட நாளாக இருந்து இருக்க வேண்டும் என்பதையும், சந்தசிம்மனை இரவில் தாக்கியது, ஜோடாவை ஓடவைத்தது, இப்பொழுது மீண்டும் ஜோடாவின் மதிப்பை ஏதோ கட்டுக்கதை சொல்லி கீழே இழுக்கப் பார்ப்பது ஆகிய அனைத்தும் மார்வார் அரியணைக்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் சதி என்பதைப் புரிந்துகொண்ட காவலன் மேலும் அவனைத் தன் வலையில் இழுக்கப் பார்த்து “படைத்தலைவரைப் போன்ற ஒரு மகாவீரர் இருக்கும்வரை மார்வார் மக்களுக்கு என்ன குறை இருக்க முடியும்.” என்று அவனுக்குச் சாதகமாகவும், மேல் பூச்சாகவும் பேசினான் காவலன்.
ஜகத்சிம்மன் காவலனைத் தனது பக்கத்தில் நடந்து வரும்படி சைகை செய்தான். வந்ததும் அவனிடம் கேட்டான், “உன் பேச்சு இதயத்தில் இருந்து வருகிறதா?” என்று.
காவலன் மீண்டும் ஜகத்சிம்மனின் ஆசை நெருப்பைத் தூண்டினான். “என் இதயத்தில் மட்டும் அல்ல, மார்வார் மக்கள் இதயத்திலும் இதுதான் இருக்கிறது” என்று.
“எது?”
“தங்கள் வீரதீர பராக்கிரமம், நன்னடத்தை.”
“கடைசியாகச் சொன்னதைத் திரும்பச் சொல்.”
“நன்னடத்தை.”
“மன்னனுக்கு அது வேண்டும் அல்லவா?”
“அவசியம் வேண்டும்.” இதைச் சற்று அழுத்தியே காவலன் சொன்னான்.
ஜகத்சிம்மன் போலிப் பெருமூச்செறிந்தான். “அதுதான் நமது மன்னனிடம் இல்லை” என்றும் கூறினான், பெரு மூச்சின் ஊடே துன்பச் சாயலைப் படரவிட்டு.
காவலன் சட்டென்று நடையை நிறுத்தினான், “யார் சொன்னது?” என்று போலி சீற்றத்துடன் வினவினான்.
“யாரும் சொல்லத் தேவையில்லை. என் காதார நானே கேட்டேன்” என்றான் ஜகத்சிம்மன் துன்பக்குரலில்.
காவலன் முகத்தில் விவரிக்க இயலாத வியப்பு விரிந்தது. “என்ன கேட்டீர்கள்?” என்று வினவினான், வியப்பு குரலிலும் ஒலிக்க.
“சரச மொழிகள்.”
“என்ன?”
“ஆமாம். நமது மன்னர் யாரோ ஒரு பெண்ணிடம் வேடவர் குடியில் சரசமாடிக்கொண்டிருக்கிறார்.”
“மன்னரைப் பார்த்தீர்களா?”
“பார்த்தேன் பேசினேன். புதுத்தலைவர் என்று வேடவர்கள் சொன்னார்களே அது வேறு யாரும் அல்லர். நமது மன்னர்தான்.”
“போர் மூள இருக்கும் சமயத்தில் இங்கு என்ன செய்கிறார் மன்னர்?”
“அதைத்தான் ஏற்கெனவே சொன்னேனே.”
“நீங்கள் சொல்வதை நான் நம்பவில்லை. நமது மன்னர் குணம் எல்லோருக்கும் தெரியும்.”
“உலகத்தில் எத்தனையோ பெரிய மனிதர்கள் உள்ளொரு வாழ்க்கையும், புறமொரு வாழ்க்கையும் நடத்தி உலகை ஏமாற்றுகிறார்கள். வா சீக்கிரம். நமது மன்னன் சாயத்தை வெளுக்கிறேன்” என்ற ஜகத்சிம்மன் மீண்டும் நடையில் வேகத்தைக் காட்டினான். காவலனும் மேற்கொண்டு பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தான்.
ஜகத்சிம்மன் எத்தனை வேகத்தைக் காட்டினாலும் காந்தோஜியின் வீரர்கள் பாலைவனப் புறங்களையும் மலையடிவாரங்களையும் சல்லடை போட்டு சலித்துக்கொண்டிருந்த படியால் துரிதமாகப் பயணம் செய்ய முடியவில்லை.
பொழுது விடிந்த சமயத்திலும் பாதி தூரத்தை அவன் கடக்க முடியவில்லை. மலைக் குகைகளில் பதுங்கியும், மரக் கூட்டங்களில் மறைந்தும் பயணம் செய்தான் ஜகத்சிம்மன். சில சமயங்களில் மேவார் வீரர்கள் ஜகத்சிம்மனும் காவலனும் பதுங்கியிருந்த இடத்தைக்கூட அணுகிவிட்டார்கள். அப்படியும் குகை வாயிலில் பாறையொன்றை சாமர்த்தியமாக ஜகத்சிம்மன் நகர்த்தி அடைத்திருந்ததால் வீரர்கள் திரும்பிச் சென்றார்கள். அந்த மலைக்குகையில் அன்று மாலை வரை கழித்த ஜகத்சிம்மன் சற்று இருட்டியதும் வெளியில் வந்து காவலனுடன் பயணம் செய்தான்.
ஒருநாள் முழுவதும் பட்டினியிருந்ததாலும், கரடுமுரடான மலைப்பாதையிலேயே முக்கால்வாசிப் பயணத்தை முடிக்க வேண்டியிருந்ததாலும் ஜகத்சிம்மன் மன்னனைப் பார்த்த மறுநாளைக்கு மறுநாள் காலை மிகுந்த ஆயாசத்துடன் ஹர்பா சங்கலாவின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தான். அங்கு இருந்த நிலை கண்டு பிரமிப்படைந்தான்.
ஹர்பாசங்க்லாவின் விடுதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வாயிலில் நீர் தெளித்து வண்ணக் கோலங்கள் போடப்பட்டு இருந்தன. ராஜபுதன இசை வாத்தியங்கள் விடுதிக்குள் பலமாக முழங்கிக் கொண்டிருந்தன. “பிருமச்சாரி! இங்கு என்ன விசேஷம்? சுத்த விரதம் இனிமேல் அடுத்த வருடம்தானே?” என்று வினவினான் ஜகத்சிம்மன், காவலன் ஏதும் புரியாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றான்.
ஹர்பாசங்கலா ஜகத்சிம்மன் முதுகில் தட்டிக் கொடுத்தார். ஏதோ பேய் அறைவதுபோல் விழுந்த அந்த அடியால் முகம் சுளித்த ஜகத்சிம்மனைப் பார்த்து “படைத்தலைவரே! நமது ஆயுத விடுதியில் உங்கள் இருவருக்கும் புது துணிமணிகள் இருக்கின்றன. அருவியில் நீராடி சீக்கிரம் புத்தாடை அணிந்து வாருங்கள்” என்றார்.
“என்ன விசேஷம், நாங்கள் புத்தாடை புனைய?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“போய் சீக்கிரம் வாரும். நேரம் அதிகம் இல்லை” என்று துரிதப்படுத்தினார் ஹர்பாசங்கலா.
அதற்குமேல் அவரை ஏதாவது கேட்டால் முதுகில் இன்னொரு தட்டுக் கிடைக்கும் என்ற அச்சத்தால் ஜகத்சிம்மன் காவலனுடன் சென்று அருவியில் நீராடி ஆயுத விடுதிக்கு வந்தான். அங்கிருந்த இரு வீரர்கள் அவனுக்கும் காவலனுக்கும் விலை உயர்ந்த உடைகளைக் கொடுத்து “இவற்றை அணிந்து வாருங்கள். இங்கேயே சிற்றுண்டி அருந்தலாம். பிறகு போகலாம் பக்க விடுதிக்கு” என்று உபசாரம் செய்தார்கள்.
ஜகத்சிம்மன் பேசாமல் புத்தாடை புனைந்தான். காவலனும் உடைமாற்றிக் கொண்டான். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. பலவகைப் பலகாரங்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டும்கூட ஜகத்சிம்மனால் சரிவர உண்ண முடியவில்லை.சீக்கிரம் ஆகாரத்தை முடித்துக்கொண்டு பெரிய விடுதிக்குக் கிளம்பினான் காவலனுடன். அங்கு வாயிலில் அவனுக்கு பன்னீர் தெளிக்கப்பட்டது. கையில் புஷ்பமும் சந்தனமும் அளிக்கப்பட்டன. ஜகத்சிம்மனைக் கண்டதும் மங்கள வாத்தியங்கள் சிறிது அதிகமாகவே முழங்கன.
அதற்குமேல் பொறுக்க முடியாத படைத்தலைவன் ஹர்பாசங்க்லாவை நோக்கி, “தங்களுடன் ஒருசில வார்த்தைகள் பேச வேண்டும்” என்றான்.
“பிறகு பேசலாம், முதலில் உள்ளே போவோம்” என்றார் பிருமசாரி.
“விஷயம் மிக முக்கியம். அவசரம்” என்றான் படைத் தலைவன்.
“எதைப் பற்றி?”
“யாரைப் பற்றி என்று கேளுங்கள் பிருமச்சாரி.”
“சரி, யாரைப் பற்றி?”
“மன்னரைப் பற்றி.”
“எந்த மன்னரைப் பற்றி.”
“மண்டோருக்கு இரண்டு மன்னர்கள் உண்டா?”
“உண்டு. மண்டோரை விட்டவர் ஒருவர், பிடித்தவர் ஒருவர்.”
ஜகத்சிம்மன் சீற்றம் மிகுதியால் “விட்டவரைப் பற்றித்தான்” என்று கூறினான் குரலில் உஷ்ணத்தைக் காட்டி.
“யார்? ராவ்ஜோடாவைப் பற்றியா?” என்று கேட்டார் பிருமச்சாரி.
“ஆம்” என்றான் ஜகத்சிம்மன்.
“சரி, உள்ளே வாரும். அங்கேயே ஒருபுறமாய் உட்கார்ந்து பேசுவோம்” என்ற பிருமச்சாரி, அவனை வலுக்கட்டாயமாய் உள்ளே இழுத்துச் சென்றார். காவலனும் பின்தொடர்ந்தான் குழப்பமும் வியப்பும் கலந்த சிந்தையுடன்.
உள்ளே கூடத்துக்கு வந்ததும் ஜகத்சிம்மன் வாயடைத்து நின்றான். காவலன் வியப்பினால் வாயைப் பெரியதாகப் பிளந்தான். கூடத்தில் ராவ்ஜோடாவும் மலை அரசியும் திருமணக்கோலத்தில் காட்சியளித்தார்கள். அவன் வந்த சமயம் ராவ்ஜோடா மலை அரசிக்கு மங்கலக் கங்கணத்தைக் கட்ட முற்பட்டான். வாத்தியங்கள் பெரிதாக முழங்கின. அதைவிடப் பெரிதாக எழுந்தது ஜகத்சிம்மன் குரல்.
“நிறுத்துங்கள். இந்த விவாகம் நடக்கக்கூடாது” என்று கூறினான் படைத்தலைவன்.
சுடும் கண்கள் பல அவனை நோக்கித் திரும்பின. இரு வீரர்கள் அவனை அங்கேயே வெட்டிப்போட வாளையும் உருவினார்கள்.