மலை அரசியால் மன்னிக்கப்பட்டு ஜோடாகிருக்குச் செல்லும்படி பணிக்கப்பட்ட ஜகத்சிம்மன் உடனடியாகத் திரும்பவில்லை தனது புரவியை நோக்கி நின்ற இடத்திலேயே அசைவற்று நின்றான் பல விநாடிகள். பிறகு சட்டென்று வேகமாக நடந்து, ஜோடாவின் காலால் உதைக்கப்பட்டு தூரத்தில் கிடந்த தனது வாளை நோக்கிச் சென்று அதைக் கையில் எடுத்துக்கொண்டான். அந்த வாளை இரு முறை திருப்பிப் பார்த்துவிட்டு வேகமாக வந்தான் மலை அரசி நின்றிருந்த குகை வாயிலுக்கு. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை ஜோடாவோ மலை அரசியோ அறியுமுன்பு, மலை அரசியின் முன்பாக மண்டியிட்டுத் தலை வணங்கி தனது வாளை அவள் கமலப் பாதங்களில் வைத்தான். “மகாராணி! இந்த வாள் உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று நான் தங்களைப்பற்றிக் குறை கூறிய பாவத்துக்கு என்றாவது ஒருநாள் இந்த வாள் பரிகாரம் அளிக்கும். எனக்கு மன்னிப்பு அளியுங்கள். என்னை உங்கள் பணியாளாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான் துன்பம் தோய்ந்த குரலில்.
இந்த திடீர் காட்சியைக் கண்ட ஜோடா அசைவற்று திக்பிரமை பிடித்து நின்றான். மலை அரசியோ அவனை ஒரு தாய், மகனைப் பார்ப்பதுபோல் பார்த்தாள். அது மட்டுமின்றி, “ஜகத்சிம்மா! நான் சகோதரர்களுடன் பிறக்கவில்லை. அப்படி யாராவது சகோதரர்கள் இருந்தாலும் எனக்குத் தெரியாது. ஆகவே என் சகோதரனாயிரு. வாளை எடுத்துக்கொள். அது உன் நாட்டின் மீட்சிக்கும் வெற்றிக்கும் பயன்படட்டும்” என்றாள் கம்பீரமும் கருணையும் கலந்த குரலில்.
அதற்குப் பிறகும் ஜகத்சிம்மன் எழுந்தான் இல்லை.
“எழுந்திரு ஜகத்சிம்மா” என்றாள் மலை அரசி.
“என்னை மன்னித்ததாக ஒரு வார்த்தைகூட நீங்கள் சொல்லவில்லை” என்றான் ஜகத்சிம்மன்.
மலை அரசி பரிதாபம் நிரம்பிய கண்களுடன் படைத்தலைவனைப் பார்த்தாள். “மன்னித்துவிட்டேன் ஜகத்சிம்மா எழுந்திரு. ஜோடாகிருக்கு நீ மட்டும் போ” என்றாள்.
“வீரர்கள்?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
“எங்களுடன் அழைத்துப் போகிறோம்” என்றாள் மலை அரசி.
எங்கு ஏதென்று முன்பு கேட்ட கேள்வியைக் கேட்கவில்லை ஜகத்சிம்மன். ஏதும் பேசாமல் எழுந்திருந்து, ஜோடாவுக்கும் மலை அரசிக்கும் தலை வணங்கிவிட்டு புரவியில் ஏறி மலைச்சரிவில் சென்றுவிட்டான்.
அவனுடன் வந்த நூற்று இருபத்து ஐந்து புரவி வீரர்கள் மட்டும் அப்படியே கூட்டமாக நின்றார்கள்.
“இவர்களை எதற்காக நிற்கச் சொன்னாய் மலை அரசி?” என்று கேட்டான் ராவ்ஜோடா.
மலை அரசி சிறிதும் சிந்திக்காமல் பதில் சொன்னாள். “இது உங்கள் அஸ்திவார சைன்னியம். இதைக்கொண்டுதான் நீங்கள் வெற்றியை அடைய வேண்டும். நூற்று இருபத்து ஐந்து உங்கள் அதிர்ஷ்ட எண்” என்று.
“எண்ணுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன தொடர்பு?” என்று வினவினான் ஜோடா.
“சித்தூரில் இருந்து உங்களுக்குப் பின்பு தப்பி வந்தவர் நூற்று இருபத்து ஐந்து பேருடன் போகப் போகிறோம். அங்கு புரியும் உங்களுடைய அதிர்ஷ்டம்” என்று சொன்னாள்.
“யாரை சந்திக்கப் போகிறோம்?” என்று கேட்டான் ஜோடா.
“அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்கள் துணைவரை சந்திக்கப் போகிறோம்” என்று மலை அரசி குறிப்பிட்டாள். அத்துடன் வீரர்களை நோக்கி “இரவு இங்கேயே இளைப்பாறுங்கள். காலையில் புறப்படுவோம்” என்று கூறிவிட்டு குகைக்குள் சென்றாள்; ஜோடாவும் குகைக்குள் நுழைந்தான்.
குகைக்குள் மலை அரசி படுக்கவில்லை. பாறை சிருஷ்டித்த சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தாள். நின்ற நிலையில் குகையின் கூரையிலிருந்த துவாரத்தின் மூலம் கண்களை ஆகாயத்தில் செலுத்தி ஆராய்ந்து கொண்டிருந்தாள். பிறகு ஜோடாவை நோக்கி “ஜோடா! இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் நாம் தங்க வேண்டும்” என்று சொன்னாள்.
“ஏன்?”
“இன்றுதான் புஷ்யம்.”
“புஷ்யம் என்றால்?”
“பூச நட்சத்திரம். அதோ பார்” என்று கூரையின் உச்சியைக் காட்டினாள்.
வானத்தைப் பார்த்த ஜோடாவுக்கு கொத்தாக நட்சத்திரங்கள் தெரிந்தன. ஆனால், அதில் எது புஷ்யம், முழுவதுமா, அவற்றில் ஏதாவதொன்றா என்று ஏதும் தெரியாததால் “நட்சத்திரங்கள் கொத்தாகத் தெரிகின்றன. அதனால் என்ன?” என்று கேட்டான்.
“மக நட்சத்திரம் அன்றுதான் சுத்தவிரதம்” என்றாள் மலை அரசி.
அப்பொழுதுதான் ஜோடாவுக்கு தான் வனப்பிரஸ்த ஜோகியின் குகையில் சந்தித்த ராட்சசனைப்பற்றி நினைவுக்கு வந்தது. அவன் பிரம்மச்சாரியான ஹர்பாசங்க்லா என்பதை ஜோகி தெரிவித்ததும், அவனைத் தனக்குத் துணைவனாக நியமித்ததும் மெள்ள மெள்ள சிந்தையில் உலாவலாயிற்று. அவன் தன்னை சுத்த விரதத்தன்று வந்து சந்திக்கும்படி சொல்லிச் சென்றதும் மனதில் உதயமாகவே “மறந்துவிட்டேன் மலை அரசி! இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது” என்றான்.
“ஹர்பாசங்க்லா சுத்த விரதம் கொண்டாடும்போது அங்கு இருந்தால் நமது வேலை முடிந்தது” என்று உற்சாகத்துடன் கூறினாள் மலை அரசி.
“ஹர்பாசங்க்லா பெரிய வீரன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கோபிஷ்டர் என்றும் கேள்வி” என்றான் ஜோடா சிறிது சந்தேகத்துடன்.
மலை அரசி ஜோடாவை நெருங்கி பின்புறமாக அவன் மார்புமீது சாய்ந்துகொண்டாள். “கோபமிருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்” என்று கூறினாள். அதைக் கூறியபடியே மார்பின்மீது மல்லாந்த நிலையில் ஜோடாவை ஏறிட்டு நோக்கினாள்.
ஜோடா இரு கைகளாலும் அவளை அணைத்தான். “மலை அரசி! எனக்கு ஹர்பாசங்க்லாவின் துணை வேண்டாம்” என்று கூறினான்.
“ஏன் ஜோடா?”
“எனக்கு அரசு வேண்டாம்.”
“ஏன் வேண்டாம்?”
“சாம்ராஜ்ஜியத்தை அடைந்துவிட்டவனுக்கு உலகச் சிறு அரசுகள் எதற்கு?”
“எந்த சாம்ராஜ்ஜியத்தை?” என்று கேட்டாள் மலை அரசி மெல்லிய குரலில்.
“இந்த சாம்ராஜ்ஜியத்தை” என்ற ராவ்ஜோடா தனது கைகளால் அவளை இறுக்கினான். அத்துடன் அவள் காதுக்கு அருகில் குனிந்து “மலை அரசி! நீ எனக்கு சாம்ராஜ்ஜியம். நீ இருக்கும் இடம் அரண்மனை. உன் சமீபம் சொர்க்கம்” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் இதழ்களைப் புதைத்தான்.
இத்தனையிலும் மலை அரசி, சிறிதும் நெகிழ்ச்சி அடையவில்லை. “ஜோடா! கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகாது. நமது அனுபவத்துக்குக் காலம் இருக்கிறது. அதற்கு முன்பு அரசனான உனக்கு மக்கள் பால், உன் வம்சத்தின்பால் கடமையிருக்கிறது” என்றாள். “நாளை கழித்து மறுநாள் ஹர்பா சங்கலாவின் காட்டுக்குப் புறப்படுகிறோம். சுத்த விரதத்தன்று அவரை யாசிப்போம்.”
இதைக் கேட்ட ஜோடா சிறிதே வெகுண்டான். “யாசிப்பதா?” என்றும் வினவினான்.
“ஆம்.” மலை அரசி உணர்ச்சி ஏதுமின்றி சொன்னாள்.
“மார்வார் வம்சத்தவன் எவனும் யாசித்ததில்லை” என்றான் ஜோடா.
“கடவுளே யாசித்திருக்கிறார் வாமன மூர்த்தியாக. மனிதர்கள் அவரைவிட உயர்ந்தவர்கள் இல்லை” என்ற மலை அரசி, “ஜோடா! நீ யாசிக்கப் போகும் மனிதன் சாதாரணமானவன் அல்ல. மகாவீரன். அவன் சுத்த விரதத்தன்று வருஷம் முழுவதும் சம்பாதித்த பொருள்கள் அனைத்தையும் தானம் செய்துவிடுகிறான். யார் எதைக் கேட்டாலும் மறுப்பதில்லை. ஆகையால்தான் உன்னை அன்று வரச் சொன்னார். அவர் அனுஷ்டானத்தை அன்று பார். மன்னனான உனக்கே பிரமிப்பாயிருக்கும்” என்று கூறினாள்.
ஜோடாவின் முகத்தில் அப்பொழுதும் திருப்தியில்லை. “நான் யாசித்துத்தான் அவர் உதவ வேண்டுமா?” என்று கேட்டான் மிகுந்த அதிருப்தியுடன்.
“இல்லை. ஆனால் நீ பாவம் செய்தவன் என்று அவர் கருதுகிறார். ஆனால் சுத்த விரதத்தன்று அவர் யார், எவர் என்பதைக் கவனிப்பதில்லை. அன்று யார் கேட்டாலும் கொடுப்பார். ஆகையால்தான் மறுக்காதிருக்கும் பொருட்டு அந்த விரத தினத்தில் வரச் சொல்லியிருக்கிறார். நீயே பார்க்கப் போகிறாய் ஜோடா, அவர் விரத மகிமையை” என்ற மலை அரசி மார்வார் மன்னன் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் மிக ரம்மியமாகக் கழிந்தது மலை அரசிக்கும் மார்வார் மன்னனுக்கும். காட்டில் உலாவியும் பேசியும் காலங்கழித்தார்கள். மூன்றாவது நாள் இருவரும் மற்ற வீரர்களையும் அழைத்துக்கொண்டு ஹர்பாசங்கலாவின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள்.
அங்கு ஜோடா கண்ட காட்சி அவனைத் திகிலுறச் செய்தது. ஹர்பாசங்கலா தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தார். மலை அரசியையும் ஜோடாவையும் பார்த்தவுடன் முகத்தில் துன்பத்தைப் படரவிட்டுக் கொண்டார். “காலம் கடந்து வந்திருக்கிறாய்” என்று ஜோடாவை நோக்கிக் கூறினார்.