வனப்பிரஸ்த ஜோகியின் மலைக்குகை வாயிலில், மரங்கள் அடர்த்தியாயிருந்ததால் இருள் கடுமையாக இருந்த அந்தப் பிராந்தியத்தில், பந்தத்தை கையில் ஏந்தி அதன் சுடர் முகத்தில் வீச சுடர்க்கொடியென்ற காரணப் பெயருக்கு முற்றும் பொருத்தமாய் விளங்கிய அந்த அழகு பிம்பத்தை திரும்பி நோக்கிய ராவ்ஜோடா அசைவற்று நின்றான் பல விநாடிகள். பந்தத்தின் ஜோதியில் பளபளத்த அவள் சந்திரபிம்ப முகத்தில் நக்ஷத்திரங்கள் போல் ஜொலித்த இரு கருவிழிகளையும் கண்ட மார்வார் ராஜபுத்திரன் நக்ஷத்திரங்களிலும் சில கறுப்பு நக்ஷத்திரங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அப்படி இருப்பதால்தான் அமுதத்தைக் சொட்ட வேண்டிய விழிகள் வெறுப்பு எனும் விஷத்தைத் தன்னை நோக்கி கக்குவதாக நினைத்தான். அவள் விசால வதனத்தின் சந்திரனையொத்த பொலிவு சற்றே சினத்தின் விளைவாக சிவந்து அவள் நெற்றியில் தீட்டியிருந்த குங்குமத்தின் சிவப்பை அர்த்தமற்றதாக செய்துவிட்டதையும், அவள் நுதலின் கீழே வளைந்து கிடந்த கருத்த புருவங்களிலும் எழுச்சியோ வேறெவ்வித அசைவுகளோ இல்லாததால் அவை தொடுக்க வேண்டிய மாரன் கணைகளுக்குப் பதில் அக்னிக் கணைகளை தொடுக்கத் தயாராயிருந்ததையும், அவள் முதலில் பேசியபோது சற்றே தெரிந்த முத்துப்பற்கள் உள்ளே நன்றாகக் கடிக்கப்பட்டதால் புடைத்திருந்த செழுமையான காட்டு மலர்போல் வழவழப்பு மண்டிய அழகிய சிவந்த கன்னங்கள் எத்தனையோ அழைப்புகளை விடுத்தாலும், எட்டா மலர்களைப்போல எச்சரிக்கைகளையும் விடுத்திருந்ததையும் கவனித்தான் ராவ்ஜோடா. அந்த சுந்தர முகத்துக்குத் தனி அரக்கு முத்திரை வைத்தது போலும், அரக்கு உருகும் சமயத்தில் லேசாக இளகும் பக்குவத்துடன் நீரோட்டம் கலந்தும், ஏதோ சிறிய தனி மலரொன்றை பங்கஜத்தை இயற்கை வேண்டுமென்றே பொருத்திவிட்டது போலும், தெரிந்த அமுதச்சுனை உதடுகள், அளவுக்கு மீறிய மயக்கத்தை உண்டு பண்ணியதையும், அதேசமயத்தில் அச்சத்தையும் வெளியிடுவதையும் பார்த்த மார்வார் இளவரசன் தனது உள்ளத்தில் சற்று ஏக்கமும் அடைந்தான்.
அவள் வெண்மைக் கழுத்தும் அதற்குக் கீழே புலப்பட்ட மேல் மார்பும், வர வர அது புடைத்து இரண்டாகப் பிரிந்து அவள் வாழ்ந்த மலையைப்போல திண்மையையும் அதன் உச்சியைப் போன்ற உச்சிகளையும் கொண்டு, மலையைப் பாதுகாக்கும் மரங்கள் அவற்றுக்கு தங்கள் பட்டையால் செய்த உடையைக் கொடுத்து காக்க முற்பட்டும் முடியாமல் திணறியதை அரசகுமாரன் கண்டான். அப்படி மறைக்க முடியாததால் மேலேயும் அடியிலும் சற்றே தெரிந்த இரட்டை இந்திரஜாலத்தின் மோகன விளிம்புகள் மரவுரியின் அந்த இடத்துக்குத் தனி மகிமையைக் கொடுத்திருப்பதையும், மார்புக்குக் கீழே உடையால் மறைக்கப்படாமல் தெரிந்த ஆலிலை வயிறும் சரேலென்று குறுகி பிறகு விரிந்து பாயும் புண்ணிய நதிகளைப் போலக் காட்சியளித்த இடையும், காட்சியளிக்காத பின்னழகுகளும், முன்புறத்தில் உறுதியாக நின்ற கால்களும், கண்ணுக்குப் புலனான ஆடுசதைகளின் திடமும் அந்த ராஜகுமாரனின் இதயத்தில் வெறியை ஊட்டினாலும், புலனாகாத இடங்களையும் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் புலப்படுத்திவிட்டதன் விளைவாக அவன் புத்தி பெருமயக்கம் கொண்டது. இத்தனையையும் பறக்க அடித்தது பல அர்த்தங்களை அள்ளிக் கொட்டிய அவள் புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பில் கலந்த இகழ்ச்சியால் லேசாக வலதுபுறம் இழுபட்ட இதழ்களுக்கு மேலிருந்த கன்னத்தில், அவள் அழகிய நாசியின் வலது பக்கத்திலிருந்த நத்தின் வைரங்கள் சுடரொளியால் பலவித வண்ண ஜாலங்களைப் புள்ளி புள்ளியாகக் கன்னத்தில் இழைத்திருந்ததால் இயற்கை அவளுக்குப் புது நகை செய்து போட்டிருந்த பிரமையை அளித்தது. இதனால் கண்களில் வெறி வீச அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் மார்வார் இளவரசன்.
அந்த சமயத்தில் அவள் லேசாக நகைத்தாள். நகைப்பில் இன்பமும் இருந்தது; விஷமும் இருந்தது. அதனால் ராவ் ஜோடாவின் பொறுமையும் எல்லை மீறவே, “ஏன் நகைக்கிறாய்?” என்று வினவினான் சினத்துடன்.
அவள் விநாடி நேரந்தான் நிதானித்தாள். “உன் கண்களில் வெறி இருக்கிறது” என்று சொற்களை அச்சமின்றி உதிர்த்தாள்.
“அறிவு இருக்கிறது எனக்கு” என்று சீறினான் மார்வார் இளவரசன்.
“அதுதான் உபத்திரவம்” என்றாள் அந்தப் பெண். அப்படிச் சொல்லி சற்று நிமிர்ந்து நின்றாள்.
அப்படி நிமிர்ந்ததில் அரச தோரணை தெரிந்தது.
“இந்த மலைக்கு இவள் அரசியாயிருக்கத் தகுந்தவள்” என்று உள்ளூர சொல்லிக்கொண்ட ராவ்ஜோடா “நீ சொல்வது புரியவில்லை” என்றான் வெளிப்படையாக.
“உனக்கு அறிவு இருப்பதாகச் சொன்னாய். உன் கண்களில் நான் வெறியைப் பார்க்கிறேன். அறிவுடன் வெறி கலக்கும்போது நெறி புரண்டுவிடுகிறது. இல்லாவிட்டால் மலையில் தனியாக வாழும் ஒரு பெண்ணை இப்படி அலசிப் பார்த்திருக்கமாட்டாய் நீ” என்ற அந்த அழகி மீண்டும் நகைத்தாள்.
மேலும் நகைத்தான் ராவ்ஜோடா. “நீ யார்?” என்று வினவினான் இறுதியில் அவளை நோக்கி.
“குருஜீ சொல்லுவார். சீக்கிரம் கைகளைக் கழுவிவிட்டு வா” என்றாள் அவள். தூரத்திலிருந்த சுனையைத் தலையின் ஒரு அசைப்பினால் சுட்டிக் காட்டவும் செய்தாள்.
அதற்குமேல் ஏதும் பேசாமல் அருவியை நோக்கி நடந்தான் ஜோடா. அவன் புரவியும் அவனைத் தொடர்ந்து அவன் சுனையில் இறங்கியதும் கரையில் நின்றது, சுனை நீரை உற்று நோக்கிக்கொண்டு. அப்படி அருகில் வந்து நின்ற புரவியைத் திரும்பிப் பார்த்த ராவ்ஜோடா, “என்ன பார்க்கிறாய்? இதில் அவள் அழகு பிம்பம் தெரியாது. தெரிந்தாலும் பார்க்காதே. மேற்கொண்டு பாவத்தைச் சுட்டிக்கொள்ளாதே” என்று கூறிய அந்த மார்வார் வாலிபன், தனது கால் சராயைச் சுருட்டி விட்டுக்கொண்டு சுனையின் முனையில் இறங்கி தன் கை கால்களை நீரில் நன்றாகக் கழுவினான். முகத்திலும் நீரை வாரி அடித்துக்கொண்டு தன் அங்கியால் துடைத்துக்கொண்டான்.
அடுத்து ஒருமுறை குகை வாயிலில் நின்றிருந்த மோகினியை நோக்கினான். பிறகு புரவியின் கடிவாளத்தைப் பிடித்து அதை சுனையில் இறக்கி, நீரை வாரி இறைத்து அதன் நான்கு கால்களையும் முதுகையும் தேய்த்து நன்றாகக் கழுவினான். அவன் செய்கையால் குகை வாயிலில் நின்ற காரிகையின் முகத்தில் சினம் தெரிந்தது. பந்தத்துடன் நடந்து சுனையருகே வந்து, “இது புரவி குளிப்பாட்டும் இடமல்ல” என்றாள் சீற்றத்துடன்.
“அப்படியா!”
“ஆம்.”
“புரவி குளிப்பாட்ட?”
“வேறு இடமிருக்கிறது. இது....” அவள் சொற்களை முடிக்கவில்லை.
“இது?” என்று அவன் வினவினான்.
“நான் நீராடும் இடம்” என்றாள் அவள். அதுவரை உறுதியாயிருந்த அவள் குரலில் சிறிது தயக்கம் காணப்பட்டது.
ராவ்ஜோடா அவளை நோக்கினான் வியப்புடன். பிறகு சொன்னான், “புரவியை முழுதும் குளிப்பாட்டவில்லை. கால்களைத்தான் கழுவினேன்” என்று.
“அதன் கால்களைக் கழுவ இப்பொழுது என்ன அவசரம்?” என்று அவள் வினாவினாள் எரிச்சலுடன்.
“அதுவும் பாவி” என்றான் ராவ் ஜோடா.
“புரவியா?”
“ஆம். பாவியான என்னைத் தூக்கி வந்திருக்கிறது. குற்றவாளிக்கு உதவுகிறவர்களும் குற்றவாளிகள்தான்” என்ற ஜோடா புன்முறுவல் கொண்டான்.
அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த மலைமகள் “சத்தியம் பேசுகிறாய். வா குகைக்கு” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள் குகையை நோக்கி. அப்படி நடந்தபோதும் அவள் பந்தத்தை இடக்கையில் செங்குத்தாகப் பிடித்திருந்ததால் அவள் பின்னழகு நன்றாகத் தெரிந்தது. எடுத்து முடிந்த குழல் மிக அடர்த்தியாயும் பருமனாயும் இருந்தது. மரவுரியால் சரியாக மறைக்கப்படாத முதுகு யவனர்களின் முக்கோணமான நீளக்கவசம் போலும், மறைக்கப்பட்டாலும் தெரிந்த பின்னெழுச்சிகள் அவள் வசித்த திண்மையான மலைப் பகுதிகள் போலும் அவள் சரீரத்தின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் பிரித்த சிற்றிடை இரு பெரிய சுமைகளை இழுத்துப்போட்ட இரும்புக் கவசம் போலும் தெரிந்தது. அவற்றை எப்படி அந்த மலர்ப்பாதங்கள் தாங்கிச் செல்ல முடிந்தது? அதுவும் இயற்கையின் தனி சக்திதான், தனி விந்தைதான் என்று தீர்மானித்தான் மார்வார் இளவரசன்.
முன்னால் நடந்த அவள், சில அடி தூரம் நடந்ததும் பின்னால் கலவரம் ஏதும் கேட்காததால் தலையை மட்டும் திருப்பி அவனை நோக்கி “ரசனையின் பொருள், இடம், காலம், இவற்றைப் பிரித்துப் பார்ப்பதற்கு பகுத்தறிவு என்று பெயர். நாகரிகம் என்று சொல்வதுண்டு” என்று கூறினாள். அப்படியும் அவன் நகராதத்தால் “பாவத்தை வளர்த்துக் கொள்ளாதே. ஏற்கனவே செய்துள்ளது இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் போதும்” என்று சீறிவிட்டு வேகமாக நடந்துவிட்டாள். பிறகு அவனுக்காகக் காத்திராமல் குகைக்குள் நுழைந்து சென்றாள்.
அவள் உள்ளே சென்றுவிட்டதால் பந்தம் மறைந்துவிட்டதன் விளைவாக இருளின் முழு கருமை ஜோடாவையும் அவன் புரவியையும் வளைத்துக் கொண்டது. சில விநாடிகள் கழித்து குகைக்குள்ளிருந்து சின்னஞ்சிறு தீப வெளிச்சம் தெரியவே அதை அடையாளம் கொண்டு, புரவியை சுனைக்கரையிலேயே நிறுத்திவிட்டு, குகையை நோக்கி விரைந்தான் அந்த வாலிபன். குகையை அடைந்ததும் உள்ளே எட்டிப்பார்த்தான். வெளிச்சத்தைத் தவிர ஏதும் தெரியாததால் வியப்புடன் உள்ளே நடந்தான். குகையின் உட்புறம் மிகவும் குறுகலாயிருந்ததால் ஆஜானுபாகுவான ராவ் ஜோடா பெரிதும் வளைந்த கூனன் போல நடந்தான். பத்தடி தூரம் இம்சைப்பட்டு நடந்ததும் குகை சற்று இடது புறம் திரும்பியது. அந்த இடது புற மூலையில் மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு எலும்புக்கூடு தெரிந்தது. அதைப் பெரிய தலைச்சடைகள் மூடியிருந்தன. அந்த உருவத்தின் எதிரில் ஒரு அகல் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் எதிரே ஒருபுறமாக குகையின் பாதையொன்றில் சாய்ந்து நின்றிருந்தாள் அந்த அழகி. ராவ் ஜோடாவின் வருகையைக் கண்டதும் அருகில் வரும்படி சைகை செய்தாள். பிறகு குனிந்து அந்த உருவத்தின் காதில் ஏதோ சொன்னாள். அதைக் கேட்டதும் மெல்ல நகைத்த அந்த உருவம், தனது தலையை உயர்த்தி சடைகளை பின்னுக்குத் தள்ளவே ஈட்டி போன்ற இரு கண்கள் ஆராய்ந்தன ராவ்ஜோடாவை. அவன் உட்காரலாமென்பற்கு அடையாளமாக மெல்லிய பளபளத்த கையொன்று அசைந்தது.
ஜோகியின் கண்களின் ஜொலிப்பையும், காயக்கிலே சத்தினால் தூய்மையான ரத்தம் சிவப்பாக ஓடியதால் சுருங்கியிருந்தாலும் பளபளத்த பொன்னிற தேகத்தையும் கண்ட ராவ்ஜோடா குகையின் தரையில், கடுமையான மலைப் பாறையில் நெடுஞ்சாண் கட்டையாக விழுந்து வணங்கினான். ஜோகி ஏதும் பேசவில்லை. அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.
“எழுந்திருக்கலாம். விளக்கின் எதிரே உட்காரலாம்” என்று அந்த பெண்ணே ஆணையிட்டாள்.
பதிலேதும் பேசாமல் எழுந்து விளக்குக்கு எதிரே உட்கார்ந்தான் ராவ்ஜோடா. அப்பொழுதுதான் ஜோகி சிறிது அசைந்து தனது வலது கையை நீட்டி, ஆள்காட்டி விரலால் அகலின் திரியைத் தூண்டினார். பக்கத்தில் கிடந்த பல இலைகளில் பச்சையாய் ஒன்றை எடுத்துக் கிள்ளி அதை எண்ணெயில் போட்டார். பச்சிலையும் விளக்குக்கு ஏதோ சக்தியை அளித்திருக்க வேண்டும். விளக்கு பெரிதாக சுடர்விட்டு எரிந்தது. அந்தச் சுடர் மெள்ள பட்டையாக விரிந்தது. அதில் விரிந்தது பெருங்கதை.