மலை அரசியைப் பார்த்து மார்வார் இளவரசனாயிருந்து அரசனாகி, நாட்டையும் பறிகொடுத்த ராவ்ஜோடா, அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்டான் என்றால், அதற்கு மூலகாரணம் அவளுடைய விபரீதமான பதில்தான். “நாம் தனித்திருப்பது உனக்கு நல்லதுதானே. இஷ்டப்பட்டால் என்னை இப்பொழுதே ராணியாக்கிக்கொள்” என்று சொல்லி குகையின் தரையில் படுத்துக்கொள்ளவும் செய்தாள் மலை அரசி.
அப்பொழுது இருள் நன்றாகக் கவிந்துவிட்டதாலும், மதியும் வான வீதியில் பவனிவரத் தொடங்கிவிட்டதாலும் அவன் கிரணங்களில் சில அந்தக் குகைக்குள் நன்றாகப் பாய்ந்திருந்ததாலும் அரைகுறை வெளிச்சம் குகையை ஆட்கொண்டது. அந்த வெளிச்சத்தில் மல்லாந்து கிடந்த மலை அரசியின் மோகனாகரமான உருவம், ஜோடாவின் மதிக்கு மயக்கத்தை ஊட்டியது. அதுவரை காயத்தின் கடுமையால் படுத்துக்கிடந்த ஜோடா, எழுந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவளை நோக்கினான்.
அவள் இதழ்களில் புன்முறுவல் படர்ந்து கிடந்தது. அரைகுறையாக மூடியிருந்த கண்கள் அவனை விஷமமாகப் பார்த்தன. விரிந்த புன்முறுவல் கன்னங்களின் புஷ்டிச் சதைகளில் இரண்டு குழிகைகளையும் சிருஷ்டித்திருந்தன.
அவையும் சேர்ந்து நான்கு கண்கள் தன்னை அழைப்பது போன்ற பிரமை ஏற்பட்டது ஜோடாவுக்கு.
அவள் மல்லாந்து கிடந்த காரணத்தால், அவளின் திண்மையான மார்புகள் இரண்டும் மண்டோர் மலைத் தொடரின் இரு உச்சிகளைப் போலக் காட்சியளித்தன. ஜோடா அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் என்றாலும், என்ன காரணத்தாலோ அவற்றைத் தீண்ட அவனுக்குத் துணிவு வரவில்லை. ஆகவே, மார்புக்கும் இடைக்கும் இடையே வெளேரெனத் தெரிந்த அவள் வயிற்றை லேசாக வலக்கையால் தொட்டான். அதைத் தொடும் பாவனையில் மேலேயும் சிறிது கையைக் கொண்டுபோய் மிதமிஞ்சிய அதைரியத்தால் மீண்டும் கையை வயிற்றுக்குக் கொண்டுவந்து வழவழத்த இடைப் பகுதியில் தவழவிட்டான். அடுத்து சொர்க்கம் காத்து இருப்பது அவனுக்குப் புரிந்தது. இருப்பினும் ஜோடாவின் கண்ணியமான இதயமும் உணர்ச்சிகளும் அவனை அதிக சரசத்துக்குத் தூண்டவில்லை.
அழகை எல்லாம் அள்ளிக் கொட்டிக்கொண்டு காட்டு மலர்போல் செழித்துத் தன் அருகில் கிடந்த அந்தப் பெண்ணின் தனிமையையும் உணர்ச்சிப் பெருக்கையும் பயன்படுத்திக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஆகவே, மெள்ள இரு கைகளாலும் அவள் கால் இரண்டையும் பிடித்தான். கால்களை வருடிக்கொண்டே வந்தவன், தொடைகளிடம் வந்ததும் அவற்றின் பருமனைக் கண்டு வியந்தான். இயற்கை வேண்டுமென்றே பெண்களுக்கு பருமனையும் இளைப்பையும் மாறி மாறி உடலில் அமைத்திருக்கிறது என்று இயற்கைமீது குற்றம் சாட்டினான்.
அவன் வயிற்றைத் தொட்டபோதும் மார்புக்கு அருகில் கையை உயர்த்திய போதும், பிறகு இரு கால்களையும் பிடித்த போதும் மரக்கட்டையாகக் கிடந்த மலை அரசி, அவன் கைகள் தனது இரு பருத்த தொடைகளில் அழுந்தியதும் அடியோடு நிலைகுலைந்து போனாள். அவள் உடல் திடீரென உணர்ச்சி அலைகளில் சிக்குண்டு லேசாகத் துடித்தது.
அந்தச் சமயத்தில் அவள் தொடைகளின் இணைப்பில் ஜோடா முகத்தைப் புதைத்துக்கொண்டது, அக்கினி அலைகளை அவள் உடலெங்கும் பரவவிட்டது. சரேலென அவள் ஜோடாவின் முடியை இரு கைகளாலும் கோதினாள். “பாவம்! குழந்தை!” என்றும் முணுமுணுத்தாள். தலையில் புரண்ட அவள் கமலக் கைகள் அடுத்து அவன் கழுத்தையும் தடவின.
ராவ்ஜோடா இந்த உலகை மறந்தான். தனது இடுப்பின் காயத்தை மறந்தான். மலை அரசியின் மகோன்னதமான காயத்தையே நினைத்தான். அதனால் தலையைத் தூக்கி வேகமாக நகர்ந்து அவள் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “மலை அரசி! மலை அரசி!” என்று முனகினான். அவன் முகம் அவள் அழகிய கழுத்தின் பல பகுதிகளில் முத்திரைகளை வேகமாகப் பதித்தது.
“ஜோடா!” என்று மலை அரசியும் அந்தச் சமயத்தில் உணர்ச்சிப் பெருக்கால் முனகினாள்.
ஜோடா கழுத்தில் இருந்த முகத்தை நிமிர்த்தி அவள் கண்களைச் சந்தித்தான். “ஏன் மலை அரசி?” என்று வெகு இரகசியமாகக் காதுக்கு அருகில் கேட்டான். பிறகு கன்னத்தில் தனது முரட்டு இதழ்களைப் பதித்தான்.
மலை அரசி எரிமலையாயிருந்தாள். அவள் சொற்கள் தழுதழுத்து வந்தன. அவன் அழைப்புக்கு “உம்” என்ற ஒலியை மட்டும் வெளியிட்டாள்.
“நீ...” ஜோடா திணறினான் பேச முடியாமல்.
“உம்.”
“சொர்க்கம்.”
பிறகு இருவரும் பேச்சை இழந்தார்கள். மலை அரசி. புரண்டு ஒருக்களித்தாள். அவள் கைகள் இரண்டும் அவன் கழுத்தை வளைத்தன. அவன் கைகள் அவள் உடலைச் சுற்றி வளைத்து இறுக்கின, தூக்கின. மெள்ள அவளை மடியில் கிடத்திக்கொண்டு உற்றுப் பார்த்தான், ஜோடா. “மலை மலரே!” என்று மெதுவாக அழைத்தான் அந்த நிலையில்.
அவள் கண்கள் மூடியிருந்ததால் பார்க்கவில்லை. இதழ்கள் மூடியிருந்ததால் பேசவில்லை. அந்தக் கண்களை அவன் உதடுகள் திறந்தன. இதழ்களைத் திறக்கவில்லை, நன்றாக மூடிவிட்டன. அந்தச் சமயத்தில் அசைந்த அவள் இதழ்கள் சொர்க்கத்தில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டதை நிரூபித்தன.
ஜோடா இத்தனை உணர்ச்சிப் பிரவாகத்திலும் அவளை எடுத்தாள் இஷ்டப்படவில்லை. அவன் அவளது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது முறையல்ல என்று நினைத்ததால், அவள் இதழ்களுக்கு விடுதலையளித்தான்.
“மலை அரசி!” இம்முறை அவன் குரல் தடித்திருந்தது.
“உம்.” அவள் குரல் குழைந்து கிடந்தது.
“இது சரியல்ல” என்றான் ஜோடா, அவள் உடல் முழுவதையும் ஒருமுறை தடவிக் கொடுத்து.
அந்தத் தடவலில் வித்தியாசம் இருந்ததை உணர்ந்தாள் மலை அரசி. ஒரு குழந்தையைத் தடவும் ஆதரவு அதில் இருந்தது. வெறிபிடித்த ஆண்மகனின் தடவல் அல்ல அது என்பதை அறிந்த மலை அரசி லேசாகப் புன்முறுவல் கோட்டினாள்.
மலை அரசி அவன் மடியில் கிடந்தபடி சொன்னாள். “நேற்று மகாராணியாக்கத் துடித்தாயே, ஜோடா?” என்று விடுதலை அடைந்துவிட்ட அவன் கையில் ஒன்றை எடுத்து தனது உடலுக்குக் குறுக்கே போட்டுக்கொள்ளவும் செய்தாள்.
“ஒன்று புரியவில்லை எனக்கு” என்று தொடங்கினான் ஜோடா.
“என்ன அது?”
“என்னை எப்பொழுதும் ஜோடா என்று அழைக்கிறாய்.”
“ஆம்.”
“மரியாதையே காட்டவில்லை.”
உடனடியாக இதற்கு பதில் சொல்லவில்லை மலை அரசி. சிறிது மவுனத்திற்குப் பிறகு அவன் கண்களைச் சந்திக்காமலே சொன்னாள். “ஜோடா! உன்னைப் பார்த்த முதல் நாளே உன்னிடம் என் மனத்தைப் பறிகொடுத்தேன்” என்று.
“அதனால் மரியாதை இல்லாமல் பேச வேண்டுமா?” என்று வினவினான் ஜோடா.
“சதிபதிகள் தனித்து இருக்கும்போது காதல் மிகைப்படுகிறது. மரியாதை அகன்றுவிடுகிறது. இது புரியவில்லையா, உனக்கு?” என்று சொன்னாள் மலை அரசி.
ஜோடா சிந்தனை வசப்பட்டான். “இருக்கலாம். மற்றவர் முன்பும் அப்படித்தானே அழைத்திருக்கிறாய்?” என்று கேட்டான் முடிவில்.
“ஜோடா...” சிறிது தாமதித்தாள் மலை அரசி.
“சொல், மலை அரசி” என்றான் ஜோடா.
“மற்றவர் இருக்கும்போதும், உன்னோடு தனிமையில் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர் இருக்கும் நினைப்பு ஏற்படுவது இல்லை எனக்கு. சூழ்நிலைகூட மறந்துவிடுகிறது. இது என்னிடம் உள்ள குறை. ஆனால் ஜோடா! நான் திருந்திடுவேன். நான் காட்டில் இருந்தவள் அல்லவா? - நாட்டுப் பழக்கம் துரிதத்தில் வருமா?” என்றாள்.
இதற்குப் பிறகு இருவரும் பேசவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஜோடா சொன்னான், “மலை அரசி! நான் நிரந்தரமாக நாடு இழந்து இருக்கப்போவது இல்லை...” என்று.
“ஆம், அது தெரியும் எனக்கு” என்றாள் மலை அரசி.
“என்ன தெரியும்?”
“நீ மண்டோரை வெற்றி கொள்ள நாளாகும். அதற்குள் புதுநகரை சிருஷ்டிப்பாய். அங்கு நான் உன் ராணியாக அரசு புரிவேன்.”
“ஏதேதோ சொல்கிறாயே, மலை அரசி.”
“நடக்கப் போவதை சொல்கிறேன். அந்த நகரும் சீக்கிரம் சிருஷ்டிக்கப்படும். அது மாரூஸ்தலியின் சிகரமாயிருக்கும். அந்த நகரில் இருந்து உன் எதிரிகளின் இருப்பிடங்கள் எல்லாம் தெரியும். அந்த நகரின் அரண்மனையில் உன் ராணியாக நான் வீற்றிருப்பேன்” என்று பேசிய மலை அரசியின் கண்களில் கனவு தெரிந்தது.
ராவ்ஜோடாவும் அவள் கனவில் ஈடுபட்டான். அவளை மெள்ளத் தரையில் கிடத்தி வெளியே சென்றான்.
மலையில் ஏறி வந்துகொண்டிருந்தான், ஜகத்சிம்மன். அவன் தனியாக வரவில்லை. நூற்று இருபத்தைந்து வீரர்களும் உடன் வந்தார்கள்.