பந்தத்தையும் அணைத்துவிட்டு இருண்ட குகைக்குள் தன்னை வா வா என்று அழைத்த அந்த பருவப் பாவையின் துணிவை நினைத்து ஜோடா திகிலுக்கு இலக்காகி நின்ற நேரத்தில், மலைஅரசியே குகை வாயிலைவிட்டு அவனை அணுகி, அவன் கையைப் பிடித்தாள். “ஜோடா! வா, அஞ்சுவதற்கு ஏதும் இல்லை” என்று தைரியம் சொன்னாள் மார்வார் இளவரசனுக்கு.
தன் இடக்கை மணிக்கட்டில் அவள் பிடித்த பிடி மிகக் கெட்டியாயிருந்ததைக் கண்ட ஜோடா நல்ல பலசாலியான பெண்ணிடம் தான் சிக்கிக்கொண்டு இருப்பதை உணர்ந்தான். அவள் பிடியை அவனால் உதற முடியும் என்பது நிச்சயம் என்றாலும், என்ன காரணத்தாலோ அவன் எந்த செய்கையிலும் ஈடுபடாமலும், அவள் இழுத்த இழுப்புக்கு உட்படாமலும் சிலையென நின்றான், சில விநாடிகள். பிறகு மெதுவாகச் சொன்னான்: “மலை அரசி! நீ பருவப்பெண்” என்று.
இதைக் கேட்ட மலை அரசி மெதுவாக நகைத்தாள். “இதை அறிந்துகொள்ள சோதிடம் தெரிய வேண்டியதில்லை” என்றும் சொன்னாள்.
“நானும்” என்று மென்று விழுங்கினான் ராவ்ஜோடா.
“வாலிபர்” என்று மலை அரசி வாசகத்தை முடித்தாள்.
“தவிர-” இழுத்தான் ஜோடா.
“சொல்லுங்கள்.”
“வனப்பிரஸ்த ஜோகி”
“அவருக்கு என்ன?”
“பிராமண குலம்?”
“அதானால் என்ன?”
“நீயும் பிராமணப் பெண்ணாயிருக்க வேண்டும்.”
மலை அரசி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சொன்னபோது அவள் குரலில் உறுதியிருந்தது. “அவர் பிரும்ம குலமானால் நானும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை” என்று கூறிய மலை அரசி, “இரவு முழுவதும் குகை வாயிலில் நின்று பேச வேண்டாம். உள்ளே வாருங்கள். நீங்கள் வர மூன்று நிமிடம் அவகாசம் தருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் குகைக்குள் நுழைந்துவிட்டாள் தனியாக.
ராவ்ஜோடா இதுதான் சமயம் என்று புரவியில் ஏறி ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல என்பதையும், தன்னை நின்ற இடத்திலேயே நிறுத்த ஜோகிக்கும் மலை அரசிக்கும் சக்தியுண்டு என்பதையும் உணர்ந்ததால், கனத்த இதயத்துடன் குகையை நோக்கிச் சென்று உள்ளே நுழைந்தான். அங்கு அவன் கண்ட காட்சி, அவனது பிரமிப்பையும் அச்சத்தையும் உச்சநிலைக்குக் கொண்டு சென்றது.
ஆரம்பத்தில் லவலேசமும் வெளிச்சம் இல்லாது கும்மிருட்டாயிருந்த குகை, சிறிது தூரத்துக்கு அப்பால் மங்கலான வெளிச்சத்துடன் காட்சியளித்தது. மெள்ள பக்கச்சுவர்களைத் தடவிய வண்ணம் வெளிச்சம் இருந்த இடத்தை அடைந்ததும், வெளிச்சத்துக்குக் காரணம் குகையின் மேற்பகுதியில் இருந்த இரண்டு சிறிய துளைகளே என்பதை ஜோடா புரிந்து கொண்டான். அந்த இரண்டு துவாரங்கள் மூலம் மூன்றாம் ஜாமச்சந்திரன் வீசிய வெளிச்சம் மிக லேசாக உள்ளே விழுந்தது. அந்த துவாரங்களை அடுத்து முளைத்து உள்ளே தொங்கிய ஒரு பூங்கொடியின் காட்டு மலர் லேசாக ஆடிக்கொண்டு இருந்தது. குகையின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது.
அந்தச் சூழ்நிலையில் குகையின் தரையில் விரிவாகத் தூவிக்கிடந்த மலர்ப்படுக்கையில் மலை அரசி மல்லாந்து படுத்துக் கிடந்தாள். அவள் படுத்துக்கிடந்த நிலையில் இருந்தும் குகைக் கூரையின் துளைகளில் இருந்து நேராக அம்புகள் போல் மெல்லியதாக விழுந்த இரு சந்திர கிரணங்கள் காட்டிக் கொடுத்த அழகில் இருந்தும், ஏதோ அப்சரஸ்தான் சாபத்தால் அந்தக் குகையில் வந்து கிடக்கிறாள் என்று நினைத்தான் மார்வார் இளவரசன்.
அவள் மல்லாந்து படுத்திருந்ததால் அவள் நிமிர்ந்த மார்பு மீது குறியிட்டு விழுந்த இரண்டு கிரணங்கள் அவள் கவர்ச்சியை உச்சநிலைக்குக் கொண்டுபோயின. அப்படி கவர்ச்சி நிலைகளைக் காட்டியதன் விளைவாக ஓரளவு தெரிந்த முகத்தின் மந்தகாசமும், அதில் பளிச்சிட்ட இரு கூர்வேல்களும், உன்மத்தத்தை ஊட்டும் செம்பருத்தி உதடுகளும் ஜோடாவின் சித்தத்தை ஈர்த்தன. வெறி பிடித்த ஜோடா தன் நிலையையும், அவள் ஜோகியின் மகள் என்ற பயத்தையும் உதறித்தள்ளி, அவளை நோக்கி நடந்தான். அவள் முன்பு சில விநாடி நின்று அவள் பூவுடலை ஆராயவும் செய்தான்.
சந்திர கிரணங்கள் குறிப்பாகப்பட்டதால் விளக்கேற்றிய குன்றுகளைப் போலக் காட்சியளித்த கவர்ச்சிப் பிம்பங்களை மறைத்த மரவுரி தெறித்து விழும் நிலையில் இருப்பதாக ஜோடாவின் கண்களுக்குத் தென்பட்டதால், அவன் தனது பார்வையைச் சிறிது அப்புறப்படுத்தினான். ஏதோ சம தரையைப் போல் படிந்துவிட்ட வயிற்றையும் அதற்குக்கீழே இறுகி திண்மையிலும் சின்னஞ்சிறியதாகத் தெரிந்த இடையையும், கீழே இறங்கிய காலின் பரிமாணங்களையும் கவனித்த ஜோடா, மரவுரியை அவள் தரித்திருந்ததன் காரணமாக பல இடங்களில் இடைவெளிகளில் புலனான அவள் சுந்தர எழிற்பகுதிகளைக் கண்டு. சித்தத்தின் நிதானத்தை அறவே இழந்தான். அதன் விளைவாக அவள் அருகில் உட்காரவும் செய்தான்.
சிறிது நேரம் உட்கார்ந்திருந்த பின் அவள் மலர்க்கையை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்ட மார்வார் ராஜபுத்திரன், “அரசி! இது முறையல்ல” என்றான்.
“எது?” என்று முணுமுணுத்துக் கேட்டாள், அவள்.
“ஒரு அந்தண மகளை...”
“எப்படித் தெரியும் உங்களுக்கு, நான் அவர் மகள்தான் என்று.”
“மகள் அல்லாவிட்டால் வேறு யார்?”
“எனக்குத் தெரியாது.”
“ஜோகிக்கு?”
“அவருக்குத் தெரியாதது எதுவுமில்லை.”
“அவரைக் கேட்பதுதானே!”
“எதைப் பற்றி?”
“உன் பிறப்பைப்பற்றி?”
“கேட்டேன், ஒருமுறை.”
“என்ன சொன்னார்?”
“அதைப்பற்றி காலம் வரும்போது சொல்வதாகச் சொன்னார்.”
இதற்குமேல் அவள் பேசவில்லை. அவள் அழகிய பெருவிழிகள் ஜோடாவின் விழிகளுடன் கலந்து, கவர்ந்து நின்றன. அவை விடுத்த அழைப்பால் எதைச் செய்கிறோம் என்று புரியாமலே முகத்தை அவள் முகத்துக்கு அருகே கொண்டு போனான்.
“அரசி!” என்று அவள் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக அழைத்தான்.
“உம்.” அவள் செண்பக மொட்டு நாசியில் இருந்து வெளிப்பட்டது அந்த ஒலி.
“எனக்குப் பயமாயிருக்கிறது, மலை அரசி” என்றான் ஜோடா, மெதுவாக நடுங்கிய குரலில்.
மலை அரசியின் மதுர இதழ்கள் விரிந்தன. இளநகை கொண்டதால். “பயத்திற்கு என்ன இருக்கிறது, இதில்?” என்று மெதுவாக வினவினாள்.
“அதர்மச் செயலில் இறங்குவது அரச தர்மத்துக்கு அழகல்ல” என்றான் ஜோடாவும் இன்னும் சற்று அதிகமாகக் குனிந்து.
காமபாணங்கள் அவன் மீது கணக்கின்றிப் பாய்ந்தன. செழித்த கன்னங்களில் அவள் முறுவல் காட்டியபோது விழுந்த குழிகள் அவனை மயக்கின. கழுத்தை அவள் சற்றே திருப்பி அவனைப் பார்த்தபோது முகத்துக்கு வெகு அருகில் வந்துவிட்ட கழுத்தும் மார்பும் அவனை நிலைகுலையச் செய்தன.
அப்பொழுது மீண்டும் சொன்னாள் மலை அரசி, “உன்னைப் போல் வந்தான், வேறோர் அரசன், வேறொரு காலத்தில், வேறொரு பெண்ணை நோக்கி. அவன் அஞ்சவில்லை” என்று.
“யார் அந்த அயோக்கியன்?” என்று முணுமுணுத்தான், ராவ்ஜோடா.
“அயோக்கியன் அல்ல, அதர்மவானும் அல்ல. ஆனால், கடமையை உணர்ந்தவன்” என்றாள் மலை அரசி.
“அவன் க்ஷத்திரியனா?”
“சூரியகுல சக்கரவர்த்தி.”
“பெயர்?”
“துஷ்யந்தன். உங்களைப் போலத்தான் ஒரு ரிஷியின் பெண்ணைப் பார்த்தான். ஆனால், அஞ்சவில்லை...” என்ற மலைஅரசி சிறிது ஒருக்களித்தாள்.
ஒருக்களித்ததால் அவள் சுந்தர உடலின் எழிற்பகுதிகள் குனிந்திருந்த அவன் உடல் மீது நன்றாகவே அழுந்தின. மெள்ள சுயநிலை இழந்தான், ஜோடா. அதுவரை பக்கவாட்டில் ஊன்றியிருந்த அவன் வலக்கை அவள் உடலுக்குக் குறுக்கே சென்று அப்புறம் இருந்த தரையில் பதிந்தது.
மலை அரசியும் அந்த நிலையில் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினாள். அவள் கையொன்று எழுந்து அவன் கழுத்தை வளைத்தது.
அடுத்த விநாடி ஜோடாவின் முகம் அவள் கழுத்தில் புதைந்து புரண்டது. சகுந்தலையின் மகோன்னத காவியம் அந்த குகையில் மீண்டும் புத்துயிர் பெற்றது.