மூன்று குணங்களை மனிதன் தவிர்ப்பது நல்லது. தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் அக்கறை காட்டுவது, ஒன்று. ஒட்டுக் கேட்பது, இரண்டு. காலதாமதம் செய்வது, மூன்று. இந்த மூன்றில் ஏதாவது ஒரு குணமே யாரையும் இக்கட்டில் மாட்டவல்லது. மூன்றும் சேர்ந்தால் முடிவு விபரீதம்.
இந்த மூன்றையும் அந்த இரவில் இணைத்துக்கொண்டான் ஜகத்சிம்மன். மன்னனிடம் விடைபெற்றதும் நேராகப் போக வேண்டியவன் திரும்பி வந்தான். உள்ளே ஒரு பெண் குரல் கேட்பதை ஒட்டுக்கேட்டான். அது யார், என்ன விஷயம் என்பதை அறிவதில் அக்கறை காட்டினான். பயணத்தில் துரிதத்தைக் காட்டாமல் காலதாமதம் செய்தான். இதனால் அவனுக்கு ஏற்பட்டது பெருங்கேடு.
குடிசைக்குள்ளே ஜோடாவின் குரலுடன் பெண் குரலொன்றும் கேட்கவே அது யாராயிருக்கும்? யாராக இருந்தாலும் தன்னிடமிருந்து அவளை மறைக்க மன்னன் முயலுவானேன்? என்று சிந்திக்கலானான் மண்டோர் படைத்தலைவன். அந்தப் பெண் குரல் அவனுக்குத் தெரிந்த குரலாயில்லை. ஆனால் அவள் தெளிவாக அரசாங்க விஷயங்களையே பேசினாள்.
“போருக்கு படைகள் சித்தமாயிருக்கின்றன. நீங்கள் இன்னும் இங்கு காலதாமதம் செய்வது உசிதமல்ல” என்றாள் அந்தப்பெண்.
“நீ யார்? அதை முதலில் சொல்” என்று வினவினான் ஜோடா.
அந்தப் பெண் பதில் சொல்லத் தயங்கினாளில்லை.
“நான் யார் என்பதைப் பற்றி கவலையில்லை. விஷயம் இதுதான், நீங்கள் உடனடியாகப் புறப்பட வேண்டும்” என்று திட்டமாகச் சொன்னாள் அந்தப்பெண். அவள் குரலில் பணிவில்லை, அதிகார தோரணையிருந்தது.
ஜோடா சிறிது சிந்தித்தான். “உன் போக்கு விசித்திரமாக இருக்கிறது. என் குடிசையில் இருளில் மறைந்து நிற்கிறாய். எனக்கும் தெரியாமல் நுழைந்திருக்கிறாய். இத்தனைக்கும் பருவப்பெண். யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?” என்று வினவினான் ஜோடா, சில விநாடிகளுக்குப் பிறகு.
பதிலுக்கு அந்தப் பெண் மிக மதுரமாக நகைத்தாள்.
“ஜோடாவின் கீர்த்தி மகத்தானது. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத உத்தமர் என்பது ராஜபுதனத்தில் பிரசித்தம்” என்றாள் அவள் நகைப்பின் ஊடே. மேலும் சொன்னாள் “அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு புருஷர்களின் சந்தேகபுத்தி காரணமாக நற்பெயர் கெடவும் செய்யலாம். ஆனால் நாட்டுக்குத் தியாகம் செய்ய விரும்புவர்கள் இதை லட்சியம் செய்ய முடியாது” என்று.
அடுத்து அந்தக் குடிசைக்குள் இருந்து பேச்சு எதுவும் கேட்கவில்லை. ஏன் இருவரும் திடீரென மவுனமாகிவிட்டார்கள் என்று புரியவில்லை மண்டோர் சேனாதிபதிக்கு. இருப்பினும் அவன் அதுவரை கேட்ட உரையாடல் ரசமாயிருந்ததால் மேலும் அங்கேயே நின்றான். சில விநாடிகளுக்குப் பிறகு உரையாடல் மீண்டும் துவங்கிற்று.
“நீ சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் எதிரிப் படைகள் வழியில் சதா உலாவும்போது நீ வந்தது சரியல்ல” என்ற ராவ்ஜோடா “சரி பெண்ணே! உன்னை அனுப்பியது யார்?” என்று விசாரித்தான்.
அந்தப் பெண் லேசாகச் சிரித்தாள். “நீங்கள்தான் ஊகித்துப் பாருங்களேன்” என்ற அவள் பதிலிலும் நகைப்பொலி இருந்தது.
“பிருமச்சாரியா?” என்று வினவினான் ஜோடா.
“பிருமச்சாரியைவிட அக்கறையுள்ளவர்” என்றாள் அவள்.
“வனப்பிரஸ்த ஜோகியா?” என்று மீண்டும் வினவினான், ஜோடா.
“அவரையும் விட உங்களிடம் அக்கறையுள்ளவர்” என்று அந்தப் பெண் வலியுறுத்திச்சொன்னாள்.
“புரியவில்லை எனக்கு” என்று ஜோடா கூறினான் அவன் குரலில் சிந்தனை ஒலித்தது.
“எந்தப் புருஷனிடமும் பூர்ண அக்கறை உள்ளவள் அவனை விரும்பும் பெண்தான். இது புரியவில்லையே மகாராஜா உங்களுக்கு. மண்டோர் வந்ததும் அவளை மறந்துவிட்டீர்களே” என்று குற்றம் சாட்டினாள் அவள்.
“மறக்கவில்லை பெண்ணே. ஆனால் படை திரட்டிய விஷயமாகையால் ஹர்பாசங்கலாவாக இருக்குமோ என்று எண்ணினேன்” என்ற ஜோடா, “பெண்ணே! இந்த இருட்டில் நான் உன்னுடன் நிற்பது தவறு. எதற்கும் அந்த மூலையிலுள்ள அகல்விளக்கை ஏற்று ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசுவோம்” என்றான்.
அதற்கு அவள் பதிலும் சொல்லவில்லை. குடிசை மூலைக்குச் செல்லவும் இல்லை. “மகாராஜா! என் முகத்தை நீங்கள் பார்க்கக்கூடாது” என்றாள்.
“ஏன்? பார்த்தால் என்ன?” சந்தேகத்துடன் கேட்டான் ஜோடா..
“நான் பர்தாவுக்குள் இருப்பவள், ராஜஸ்திரீ. என் முகத்தை நீங்கள் பார்ப்பதற்கில்லை” என்றாள் அவள். “தவிர முகத்தைப் பார்த்தாலும் உங்களுக்கு அடையாளம் புரியாது. முகம் பார்ப்பதற்கு அழகாயிருக்காது” என்றும் சொன்னாள்.
“அது நான் தீர்மானிக்க வேண்டிய விஷயம்” என்றான் ஜோடா.
“எது?” அந்தப் பெண்ணின் கேள்வியில் கேலி இருந்தது.
“உன் முகம் அழகா இல்லையா என்பது.”
“முகத்தில் என்ன இருக்கிறது மகாராஜா?”
“எதில்தான் எது இருக்கிறது?”
“ஏன்? ஒரு பெண்ணின் அவயவ லாவண்யங்கள் - போதாதா?”
“அப்படியா! உன் அழகு அப்படியானால் நான் அதைப் பார்க்கத்தான் வேண்டும்.”
ஜோடாவின் இந்தப் பேச்சை வெளியிலிருந்து கேட்ட ஜகத்சிம்மன் ‘அடபாவி! இவ்வளவுதானா நீ?’ என்று வெறுத்துக்கொண்டான்.
“மகாராஜா!” என்று அச்சத்துடன் பேசினாள் அந்தப் பெண்.
“என்ன பெண்ணே?”
“நீங்கள் பேசுவது அதர்மம்.”
“தர்மாதர்மங்களை நிர்ணயிக்கும் நேரமல்ல இது.”
“வேறு அதை நிர்ணயிக்கும் நேரம்?”
“அனுபவ நேரம்.”
“என்ன மகாராஜா சொல்கிறீர்கள்?” என்று அவள் வினவினாள். அவள் குரலில் அச்சம் பெரிதும் ஒலித்தது.
“பெண்ணே! நீ எந்த ஊர்?”
“மண்டோர்.”
“அப்படியானால் என் பிரஜை.”
“ஆம்!”
“ஒவ்வொரு பிரஜையும் மன்னனைச் சேர்ந்தவள். உன் அங்கலாவண்யத்தை நான் பார்த்தே தீர வேண்டும்” என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கினான் ஜோடா.
“மகாராஜா! அருகே வராதீர்கள்?”
“வந்தால் என்ன செய்வாய்?”
“வந்து பாருங்கள் தெரியும்.”
“அப்படியா!”
“அது மட்டுமல்ல மகாராஜா, உங்கள் படைத்தலைவர் போகாதிருந்தால் உங்களுக்கு ஆபத்து. எந்த ராஜபுத்திரனும் ஒரு பெண்ணுக்காக உயிர் விடவும் தயங்கமாட்டான்” என்று எச்சரித்தாள் அவள்.
இதைக் கேட்ட ஜோடா நகைத்தான் பெரிதாக. “அடி பைத்தியக்காரி! எனது படைத்தலைவன் இந்தக் குடிசையை விட்டு நேராகக் கிளம்பிச் சென்று இருக்காவிட்டால் அவன் மீது விஷக்கணைகளைப் பாய்ச்சிட வில்லவர் தயாராயிருப்பார்கள். இந்தக் குடிசைக் கதவை அவன் தொட வேண்டியதுதான். அடுத்த விநாடி பிணமாகிவிடுவான்” என்ற ஜோடா அந்தப் பெண்ணை நெருங்கினான்.
ஜகத்சிம்மன் ஏதும் செய்ய இயலாமல் நின்றான். குடிசைக் கதவைத் தொட்டால் தன் உயிர் அரைக் காசு பெறாது என்பது அவனுக்குத் திடமாகத் தெரிந்திருந்தது. ஆனால் உள்ளே ஜோடா தொடங்க இருந்த துன்மார்க்கச் செய்கையை அவனால் சகிக்க இயலாமலும் இருந்தது. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். அந்தப் பெண்ணைக் காக்க வேண்டியது தனது கடமை என நினைத்தான். ஒரு பெண்ணுக்காக உயிர்விடத் தயங்கமாட்டான் என்று உள்ளே அந்தப் பெண் கூறியதை நினைத்ததும் அவன் ஆத்திரம் அதிகமாயிற்று. அப்படியும் போதிய துணிவு இல்லாததால் சிறிது நிதானித்தான்.
அப்பொழுது மீண்டும் கேட்டது அந்தக்குரல், “மகாராஜா! வேண்டாம். என்னைத் தொடாதீர்கள்” என்று. ஆனால் அதில் வேட்கை மறைமுகமாக இருந்ததே தவிர அச்சம் இல்லை என்பதை உணர்ச்சிகளை இழந்து நின்ற ஜகத்சிம்மன் அறியவில்லை.
அந்தப்பெண் அடுத்துச் சொன்ன வார்த்தை விபரீதமாயிருந்தன. “மகாராஜா! என்னைத் தூக்காதீர்கள்” என்று கெஞ்சினாள் அவள்.
“பெண்ணே! அருகில் அமுதத்தை வைத்து அருந்தாமல் இரு என்று கட்டளை இட்டால் எவன் சும்மா இருக்க முடியும்? உன் அங்க லாவண்யங்களை சிறிது பார்க்கிறேன்” என்ற ஜோடா அடுத்து என்ன செய்தானோ ஏது செய்தானோ தெரியாது. அந்தப் பெண்ணின் பெருமூச்சும் வேறு சில இன்ப ஒலிகளுமே குடிசையில் இருந்து வெளிவந்தன. அடுத்து அவள் முணுமுணுத்தாள், “மகாராஜா! இது கட்டாந்தாரை” என்று.
ஜோடா நகைத்தான் மெல்ல. “அடி பைத்தியமே, கட்டாந்தாரை கட்டிலைவிட சிறந்து விளங்கும் சமயம் உண்டு. இன்பம் உணர்ச்சிகளைப் பொறுத்தது, இடத்தைப் பொறுத்ததல்ல” என்றான் ஜோடா மெதுவாக நகைப்பின் ஊடே.
அடுத்து தரையில் யாரோ தட்டென்று விழும் சத்தம் கேட்டது.
அதற்குமேல் ஜகத்சிம்மன் அங்கு நிற்கவில்லை. திரும்பி வெகு வேகமாக ஓடினான்.