அதிர்ஷ்டம் என்பது ஒரு மனிதனைப் பிடித்துக்கொண்டால் அவனை அது லேசில் விடுவது இல்லை. கூடியவரையில் விடாமல் தொடர்கிறது. துரதிர்ஷ்டக்காரனுக்கு புத்தி பேதலிக்கிறது. காலம் கைகொடுப்பது இல்லை. எதையும் காலங்கடந்து செய்கிறான். அதிர்ஷ்டம் கெட்டவன். இதற்கு இணையிலா உதாரணமாக விளங்கினான், அரசை இழந்த மார்வார் மன்னன் ராவ்ஜோடா.
ஹர்பாசங்கலாவின் இருப்பிடத்தை அவன் அடைந்த போது, விளக்கு வைத்து அதிக நேரமாகிவிட்டது. சுத்த விரதத்தன்று செய்ய வேண்டிய தர்மங்களை எல்லாம் செய்துவிட்டு, எல்லோருக்கும் உணவையெல்லாம் அளித்துவிட்டு அவன் இருந்த காட்டு மாளிகையின் கூடத்தில் தன்னந்தனியாக உட்கார்ந்து இருந்தான், ராஜபுதன பீஷ்மனான ஹர்பாசங்க்லா. உள்ளே அன்ன விடுதியில் சமாப்தியாகி அறைகளைப் பரிசாரகர்கள் அலம்பிக்கொண்டு இருந்தார்கள். அது தவிர, ஹர்பாசங்க்லாவின் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த பணப்பெட்டி வாயைத் திறந்துகொண்டு தன்னிடம் ஏதும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது.
அந்தச் சமயத்தில் ஜோடா உள்ளே நுழைந்ததும் பெரும் துன்பத்திற்கு உள்ளானான், பிருமச்சாரியும் மகா வீரனுமான சங்க்லா. “காலங்கடந்து வந்திருக்கிறாய், ஜோடா” என்று கூறினான், உள்ளே நுழைந்த ஜோடாவை நோக்கி.
ஜோடாவுக்கு விரதங்களில் அதிகமாகப் பழக்கமில்லையாதலால் “சுத்த விரதம் இன்றைக்குத்தானே? இன்றைக்குத்தானே வரச் சொன்னீர்கள்?” என்றான்.
அதற்குப் பிறகு ஜோடாவுடன் பேசவில்லை அந்த ராட்சதப் பிருமச்சாரி. ஜோடாவின் பின்னால் நின்ற மலை அரசியை அவள் இயற்கைப் பெயரால் அழைத்து, “கிரிஜா! சுத்த விரதத்தைப் பற்றி நீ ஏதும் சொல்லவில்லையா இவருக்கு?” என்று வினவினான்.
இல்லையென்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டிய மலை அரசி சொன்னாள்: “காலத்தில் வந்திருப்போம்! இவருடைய படைத்தலைவனுடன் ஏற்பட்ட சிறிய சச்சரவால் காலதாமதம் ஆகிவிட்டது. இவர் அதிர்ஷ்டம் அப்படியிருக்கிறது” என்றாள்.
“கௌத்ஸன் மாதிரி” என்ற ராஜபுதன பீஷ்மர் பெருமூச்செறிந்தான்.
“யாரது கௌத்ஸன்?” என்று ஜோடா கேட்டான்.
“கிரிஜா! இவருக்கு படிப்பும் குறைவு போலிருக்கிறது. நீயே சொல்” என்றார் பிரமச்சாரி.
ராவ்ஜோடாவை நோக்கித் திரும்பிச் சொன்னாள் மலை அரசி: “கௌத்ஸன், வரதந்து முனிவரின் சீடன். குரு தட்சணைக்கு பதினான்கு கோடி பவுன் வேண்டியிருந்தது. அதற்காக எதையும் மறுக்காத ரகு மகாராஜாவிடம் சென்றான் யாசிக்க. அப்பொழுது மகாராஜா ஒரு யாகம் செய்து எல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு ஓட்டாண்டியாக உட்கார்ந்து இருந்தார். ரிஷி சீடனான கௌத்ஸனுக்குப் பாத பூஜை செய்ய வெள்ளி சொம்புகூட இல்லாததால், மண் பாத்திரத்தால் தண்ணீர் விட்டார். அதில் இருந்தே தனது துரதிருஷ்டத்தை ஊகித்துக்கொண்டான், கௌத்ஸன். ஜோடா! - இந்தக் கதைக்கும் உனக்கும் எத்தனை சம்பந்தமிருக்கிறது பார்.”
இதைச் சொன்ன மலை அரசியின் குரலிலும் துன்பம் தோய்ந்திருந்தது. ஆனால், ஜோடாவின் முகத்தில் துன்பம் இல்லை. திடீரென நம்பிக்கையும் சந்தோஷமும் அவன் முகத்தில் சுடர் விட்டன. மலை அரசியும் சங்க்லாவும் திகைக்கும்படியாகப் பதில் சொன்னான், ஜோடா. “மலை அரசி! பாதிக் கதையைச் சொல்லிவிட்டாய். ரகு மகாராஜா, கௌத்ஸனை இருக்கச் சொல்லி, குபேர பட்டணத்துக்காகத் தனது தேரைத் திருப்பி வில்லையும் அம்பறாத் தூளியையும் அதில் வைத்ததையும், அன்று இரவு குபேரன் அவர் கஜானாவில் பொன்மழை பொழிந்ததையும், கேட்டதற்கு மேல் பல கோடி பொன்னுடன் கௌத்ஸன் திரும்பியதையும் சொல்லவில்லையே! பிருமச்சாரியிடம் நான் சரணடைந்துவிட்டேன். அவர் ரகுவானால் என் காரியம் கண்டிப்பாய் சித்தியாகும்” என்று கூறி சங்க்லாவை வணங்கினான்.
அவன் சொற்களைக் கேட்ட மலை அரசி, ஹர்பாசங்கலா இருவருமே மலைத்தார்கள். கௌத்ஸன் யார் என்று ஜோடா முதலில் கேட்டது அடக்கத்தினாலா, அல்லது தங்களைப் பரிசோதிக்கும் எண்ணத்திலா என்பதைப் பற்றி இருவருக்குமே விளங்காததால், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இதற்குப் பிறகு பிருமச்சாரி நீண்ட நேரம் மவுனமானயிருந்தார். பல நிமிடத்துக்குப் பிறகு மவுனத்தைக் கலைத்து, சமையல் அறைக்கு மலை அரசியை அழைத்துவந்த பிருமச்சாரி, “கிரிஜா! இங்கு உணவு ஏதுமில்லை. எல்லாவற்றையும் கொடுத்தாகிவிட்டது. என்ன செய்யலாம்?” என்று வினவினார்.
மலை அரசி சிறிது சிந்தித்தாள். “பிருமச்சாரி! - என் தந்தை ஜோகி சொன்னது நினைவுக்கு வருகிறது...” என்றாள் மெதுவாக.
“சொல், கிரிஜா.”
“முஜுத்.”
பிரமச்சாரி வியப்பு நிரம்பிய கண்களுடன் மலை அரசியை நோக்கினார். “அதைப் பாகம் செய்ய முடியும் என்று கேட்டு இருக்கிறேன். அதன் பட்டையும் துளிரும் ருசியாக இருக்கும் என்றும் கேள்வி. ஆனால், அதை சமைத்து இங்கு யாருக்கும் பழக்கம் இல்லையே” என்றார்.
மலை அரசி சிறிது சிந்தித்தாள். பிறகு “எத்தனையோ நாள் ஜோகி அதன் பட்டையை மட்டும் சாப்பிட்டு இருக்கிறார். அது தெய்விகமானது என்றும், அதனால்தான் கூர்ஜரத்தில் உள்ள ஆதிநாத் கோயில் கட்டவும் அதை உபயோகித்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். எகிப்தில் சாலமன் என்ற மன்னனின் ஆலயமும் இந்த மரத்தால்தான் கட்டப்பட்டு இருக்கிறதாம். இந்த மரத்தில் நெருப்பும் கொஞ்சத்தில் பிடிக்காதாம். அதற்காகவே அரபுக் கப்பல்கள் இங்கு வந்து இந்த மரங்களை வாங்கிச் சென்று இருக்கிறதாம்” என்று விவரித்தாள் மலை அரசி.
“அப்படியானால் மலை அரசி, பரிசாரகர்களைக் கொண்டு அடுப்பை மூட்டு. அண்டாவில் போதிய நீரை ஊற்றிக் கொதிக்க வை. நான் சீக்கிரம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கொல்லைப்புறமாகவே காட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிருமச்சாரி.
சிவப்பு நிறமுள்ள முஜுத்தின் கொழுந்துவிட்ட இளம் காம்புகளையும் பட்டையையும் வெகுசீக்கிரம் கொண்டு வந்தார் பிருமச்சாரி. மலை அரசி அவற்றை வாங்கி சிறு சிறு துண்டங்களாகப் பணியாளரை நறுக்கச் சொல்லி உருத்தெரியாமல் அடித்தாள். அத்துடன் சங்கலாவின் மாளிகையில் இருந்த மாவு, சர்க்கரை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் இவற்றைக் கலந்து கொதிக்க வைத்துக் கூழாக்கினாள். கூழ் கெட்டிப்படுவதற்கும், விருந்தாளிகள் வருவதற்கும் சமயம் சரியாயிருக்கவே எல்லோருக்கும் இலைகள் போடப்பட்டன.
ஜோடாவும் அவன் வீரர்களும் இறுகி களியாகிவிட்ட அந்தக் கூழின் ருசியைக் கண்டு வியந்து சுவைத்து உண்டார்கள். “பிருமச்சாரி! இத்தனை சுவையான உணவை வரவழைக்க உங்களால்தான் முடியும். நீங்கள் ரகு மகாராஜாவைவிட சிறந்தவர்” என்று சிலாகித்தான், ஜோடா.
“இதற்கு மலை அரசிதான் பொறுப்பாளி. அவள் உதவியால்தான் இந்த உணவு கிடைத்தது. நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அவளுக்கு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் பிருமச்சாரி.
“ஜோடா! நீயும் வீரர்களும் இந்தக் கூடத்திலேயே படுக்கலாம்” என்று கூறிய மலை அரசி சாப்பாட்டு அறையை சுத்தம் செய்யச் சென்றாள்.
ஜோடாவும் அவன் வீரர்களும் அன்று இன்ப நித்திரை கொண்டார்கள். மறுநாள் காலை அவர்கள் முற்றும் எதிர்பாராத மாறுதல் ஒன்று நிகழ்ந்தது. ஜோடா எழுந்ததும் அவனை நோக்கிய ஒரு வீரன் “மகாராஜா!” என்று அதிர்ச்சியுடன் அழைத்தான்.
“என்ன?” ஜோடாவின் குரலில் சீற்றம் இருந்தது.
“தங்கள் மீசை...” இழுத்தான் வீரன்.
“என் மீசைக்கு என்ன?”
“சிவப்பாக மாறிவிட்டது.”
ஜோடா திகைத்து வீரனை நோக்கினான். “அடேடே! உன் மீசையும் சிவப்பாக மாறிவிட்டதே” என்று வியப்புடன் கூவினான். மற்ற வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். எல்லோர் மீசையும் சிவப்பாயிருந்தது.
அந்தச் சமயத்தில் அங்கு வந்த பிருமச்சாரியை எல்லோரும் சூழ்ந்துகொண்டு “எங்கள் மீசை ஏன் சிவப்பாகிவிட்டது?” என்று கேட்டார்கள்.
பிருமச்சாரி புரிந்துகொண்டார், முஜுதின் சாயம் அவர்கள் மீசைகளை சிவப்பாக அடித்துவிட்டது என்று. அதை எப்படிச் சொல்வது என்று அவர் திண்டாடிக்கொண்டு இருந்த சமயத்தில், மலை அரசி அங்கு தோன்றி, உள்ள நிலையை ஊகித்துக்கொண்டு ஒரு விநாடி திகைத்தாள். பிறகு சொன்னாள், உரத்த அதிகாரக் குரலில், “ஜோடா உனக்கும் உன் வீரர்களுக்கும் நல்ல காலம் பிறந்துவிட்டது. அதனால்தான் அருணோதயச் சிவப்பு உங்கள் மீசைக்கு வந்திருக்கிறது. அதிர்ஷ்டத்தின் அடையாளம் இது. நம்பிக்கையின் உதயம். ஆகையால் மகிழ்ச்சியடையுங்கள். இன்றைய நீராட்டத்துக்குப் பின் இது மறைந்துவிடும்” என்றாள். மேலும் பிருமச்சாரியை நோக்கித் திரும்பி, “பிருமச்சாரி! உமது சுத்த விரதம் சரியாக நிறைவேறியிருக்கிறது. இனி நீங்கள் ஜோடாவுக்கு உதவியை மறுக்க முடியாது” என்றும் திட்டமான குரலில் தெரிவித்தாள்.
கதையை மலை அரசி அடியோடு மாற்றிவிட்டதையும், அதனால் தனது மானமும் தப்பியதையும் கண்ட பிருமச்சாரி மகிழ்ச்சிப் பெருமூச்செறிந்தார். “இனி என் வாள் ஜோடாவின் பக்கத்தில் இருக்கும்” என்றார். “சீக்கிரம் நீராடி காலைக்கடனை முடித்து வாருங்கள். மண்டோரைப்பற்றி விவாதிப்போம்” என்று உறுதியுடன் பேசினார்.
ஜோடாவும் வீரர்களும் நீராடச் சென்றார்கள். அவர்கள் சென்றதும் பிருமச்சாரி மலை அரசியை நோக்கினார், நன்றி நிரம்பிய கண்களுடன். “மலை அரசி! என் மானத்தைக் காப்பாற்றினாய், விரதத்தைக் காப்பாற்றினாய், ஜோடாவையும் காப்பாற்றிவிட்டாய். கிருஷ்ணபகவானால் செய்ய முடியாததை நீ செய்துவிட்டாய்” என்று கூறினார் நன்றியுணர்ச்சி குரலிலும் ஒலிக்க.
“கிருஷ்ணபகவான் செய்யமுடியாததை நான் என்ன சாதித்துவிட்டேன்?” என்று கேட்டாள் மலை அரசி.
“பீஷ்மரையும், விதுரரையும், கர்ணனையும் பாண்டவர் பக்கம் சேர்க்க முயன்றார், முடியலில்லை. நீ என்னை இவர்கள் பக்கம் திருப்பிவிட்டாய். நீ பெரிய ராஜதந்திரி” என்று பாராட்டினார்.
“பூமியின் பாரத்தைக் குறைக்க வந்த கிருஷ்ணன் பல தந்திரங்களைக் கையாண்டான். நான் அப்படி ஏதும் செய்யவில்லையே” என்ற மலை அரசி, “பிருமச்சாரி! எப்படியும் உங்கள் உதவி ஜோடாவுக்கு அவசியம்” என்றாள்.
“ஜோடாவிடம் உனக்கு என்ன இத்தனை அக்கறை?” என்று கேட்டார் பிருமச்சாரி.
மலை அரசி பதில் சொல்லவில்லை. அவள் முகம் அந்திவானமாயிற்று. அன்று அந்தி வேளையில் ஜோடாவுக்கு உதவி பிரமாணமும் செய்தார் பிருமச்சாரி.