அன்று பகல் முழுவதும் மார்வார் படைத்தலைவனான ஜகத்சிம்மனுக்கும் மண்டோர் கோட்டை காவலனுக்கும் உணவு முதலிய விஷயங்களில் ராஜோபசாரம் நடந்தாலும், அவ்விருவரும் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் எந்த வேடனும் நேரடியாக பதில் சொல்ல மறுத்தான். புதுத் தலைவரை அழைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற பழைய தலைவனும் மாலைவரை திரும்பி வராததால் ஜகத்சிம்மன் பொறுமையின் எல்லையைக் கடந்தான். விளக்கு வைத்ததும் அவன் தான் தங்கியிருந்த குடிசையில் இருந்து வெளியே வந்து, “உங்கள் புதுத் தலைவர் எக்கேடும் கெட்டுப் போகட்டும், எங்கள் வாட்களைக் கொடுங்கள். நாங்கள் வந்த வழியே போகிறோம்” என்று குடிசை வாயிலில் இருந்த இரு வேடர்களை நோக்கிக் கேட்டான்.
ஒரு வேடன் சொன்னான், “உங்கள் வாட்கள் எங்களிடம் இல்லை” என்று.
“பின் யாரிடம் இருக்கிறது?” என்று ஜகத்சிம்மன் வினவினான் உஷ்ணத்துடன்.
“உங்களை இங்கு அழைத்து வந்தவர்களிடம் இருக்கிறது” என்று இரண்டாவது வேடன் பதில் சொன்னான்.
அதுவரை வாளாவிருந்த கோட்டைக் காவலனுக்கு கோபம் அதிகமாகவே “எங்கே எங்களை அழைத்து வந்தவர்கள்?” என்று சீறினான்.
ஜகத்சிம்மன் சினத்தையோ, காவலன் சீற்றத்தையோ அந்த வேடர்கள் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு வேடன் மட்டும் பதில் சொன்னான். “புதுத் தலைவர் குடிசையில் இருக்கிறார்கள்” என்று.
“எங்கே அந்த குடிசை?”
“பழைய தலைவர் வந்ததும் காட்டுவார்.”
“பழைய தலைவர் எப்பொழுது வருவார்?”
“புதுத் தலைவரைப் பார்த்ததும்.”
“காலையிலேயே போனாரே.”
“போனார்.”
“ஏன் இன்னும் திரும்பவில்லை? குடிசை மிக தூரமா?”
ஜகத்சிம்மனின் இந்தக் கேள்விக்கு அதுவரை பதில் சொன்ன வேடன் எந்த பதிலும் சொல்லவில்லை.
“சரி நானே அந்தக் குடிசையைக் கண்டுபிடிக்கிறேன்” என்று வேடன்மீது எரிந்து விழுந்த ஜகத்சிம்மன் காவலனை உடன் வரும்படி சைகை காட்டி எட்ட இருந்த குடிசைகளை நோக்கிச் சென்றான்.
குடிசைகள் வரிசையாகக் கட்டப்படவில்லை. தாறுமாறாக நாற்புறமும் பார்த்துக் கட்டப்பட்டு இருந்ததால் ‘எது தலைவன் குடிசையாயிருக்க முடியும்?’ என்று சிந்தித்த ஜகத்சிம்மனுக்கு ஏதும் விளங்காததால் ஒவ்வொரு குடிசையாக விசாரிக்க எண்ணி காவலனை நோக்கி, “நீ அதோ இருக்கும் இரண்டு குடிசைகளில் விசாரி. நான் இந்தப் புறமிருக்கும் குடிசைகளில் விசாரிக்கிறேன்” என்று கூறிவிட்டு ஒரு குடிசை வாயிலை நோக்கிச் சென்று “யார் உள்ளே?” என்று குரல் கொடுத்தான். ஒரு வயோதிகப் பெண் வெளியே வந்தாள்.
“என்னப்பா வேணும்? நீ யார்?” என்று விசாரித்தாள்.
கிழவி மிக விகாரமாயிருந்ததால் முகத்தைச் சுளித்த ஜகத்சிம்மன் “ஒன்றும் வேண்டாம்” என்று சொல்லி நகரப் பார்த்தான்.
“ஏனப்பா கூப்பிட்டாய், என்னை?” என்று கிழவி கேட்டுக்கொண்டே அவனை நெருங்கினாள்.
“யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காகக் கூப்பிட்டேன்” என்று பதில் சொல்லிக்கொண்டே நகரப் பார்த்தான் படைத்தலைவன்.
அடுத்த விநாடி கிழவியின் கை அவன் கையைப் பிடித்து அசையவிடாமல் நிறுத்தியது.
“ஏனப்பா, இஷ்டப்பட்டால் இங்கு வந்து அழைப்பது. பிறகு சும்மா போய்விடுவது என்பது முறையா? வந்து காரணத்தைச் சொல்” என்று வினவிய கிழவியின் குரல் மிகக் கடுமையாக இருந்தது.
தனது கையைப் பிடித்த கிழவியின் இரும்புக் கையைப் பற்றி பேராச்சரியம் அடைந்தான் படைத்தலைவன். கிழவியின் பிடியில் அவன் கை எலும்புகள் முறிந்துவிடும்போல் இருந்தன. அதனால் வியப்பெய்திய ஜகத்சிம்மன் கிழவியை உற்று நோக்கினான்.
அவன் தன்னை உற்றுப் பார்த்ததைக் கண்ட கிழவி நகைத்தாள். “ஏனப்பா கிழவியை அப்படிப் பார்க்கிறாய்? சிறு பெண்களாக இருந்தால் உன்னிடம் பேராபத்து போலிருக்கிறதே” என்று நகைப்பின் ஊடே பேசிய கிழவி “வா உள்ளே! சோறு போடுகிறேன்” என்று அழைத்தாள். அழைத்தது மட்டும் அல்ல; கையைப் பிடித்து இழுத்து ஒரே வீச்சில் ஜகத்சிம்மனை குடிசைக்குள் தள்ளினாள்...
அந்த வேகத்தால் குடிசைக்குள் விழுந்த ஜகத்சிம்மன் எழுந்திருக்கும் முன்பாக குடிசைக் கதவு தாளிடப்பட்டது.
கதவுமீது சாய்ந்து கிழவி நின்றிருந்தாள். “உன்னை யார் இங்கு வரச் சொன்னது?” என்று சீற்றத்துடன் வினவினாள் கிழவி.
இந்தக் கேள்வியைக் கேட்டபோது கிழவியின் குரல் அடியோடு மாறிவிட்டது. அதுவரை ஆடிய குரல் வலுப்பெற்றது. அவள் தனது தலையில் இருந்த நரைத்த குழலைக் சுழற்றி எறிந்தாள். சுற்றியிருந்த புடைவையையும் அவிழ்க்கலானாள். சிறிது நேரத்திற்குள் எல்லாம் ஜோடா, படைத் தலைவன் முன்பு நின்றான்.
“மகாராஜா, தாங்களா!” என்று அதிர்ச்சியும் வியப்பும் நிரம்பிய குரலில் கேட்டான், ஜகத்சிம்மன்.
“ஆம். ஏன், தெரியவில்லையா உனக்கு?”
“தெரிகிறது மகாராஜா. ஆனால் என்னை ஏன் பார்க்க மறுத்தீர்கள்?”
ராவ்ஜோடா தனது படைத்தலைவனை உற்று நோக்கினான்.
“இந்த வில்லவர் கூட்டம், மண்டோருக்கு வெகு அருகில் இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.
“ஆம், மகாராஜா” என்றான் படைத்தலைவன்.
“உங்களைத் தேடிக்கொண்டு மேவார் வீரர்கள் அலைகிறார்கள்” என்றான் ஜோடா.
“ஆம், மகாராஜா! அதனால்தான் நானும் கோட்டைக் காவலனும் பதுங்கியும் சுற்றியும் நேர் வழியில் போகமால் இங்கு வந்தோம்.”
“நீங்கள் மட்டுமல்ல, இங்கு வந்தது. மண்போரின் மேவார் படைவீரரும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்தால் இந்தக் குடிசைகளின் கூட்டம் ரணகளமாகும். இந்த வில்லவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். அவர்கள் அம்புகள் நீண்ட தூரம் பாயவல்லவை. இஷ்டப்பட்டிருந்தால் உன்னை தூரத்தில் வரும்போதே இவர்கள் கொன்றிருப்பார்கள். ஆனால் யாரோ ஒருவன் அடையாளம் கண்டுகொண்டதால் தப்பினாய்” என்று கூறிய ஜோடா, “இப்பொழுதே புறப்படு பிருமச்சாரியின் இருப்பிடத்திற்கு. நான் நாளை விட்டு மறுநாள் வருவதாகச் சொல்” என்றான்.
தரையில் கிடந்த ஜகத்சிம்மன் எழுந்தான். “நாளை வரையில் இங்கு என்ன வேலை மகாராஜா? அதுவும் எதிரிகளுக்கு அருகில் தாங்கள் இருப்பது நல்லதா?” என்று வினவினான்.
“எனக்கு இங்கு எந்தவித ஆபத்தும் இல்லை. நான் இருப்பது மண்டோர் வீரர்களுக்குத் தெரியாது. உன்னை அவர்கள் தொடர்ந்திருப்பதால் நீ இருப்பது தெரியலாம். ஆகவே உன்னுடன் நான் வந்தால் மூவரும் எதிரிகள் கையில் சிக்குவோம். ஆகையால் நீ போய்வா. உன்னை வேறு வழியில் அழைத்துச் செல்ல இரு வேடர்களை அனுப்புகிறேன்” என்றான்.
“இங்கு உங்களுக்குத் துணை?” என்று வினவினான் ஜகத்சிம்மன்.
ஜோடா நகைத்தான் பதிலுக்கு. “இந்த வில்லவரைவிட வேறு துணை தேவையில்லை. இந்தக் கூட்டத்தில் நானூறு வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் விஷம் தோய்த்த வாள்கள் இருக்கின்றன. இவர்களை வெல்வது அத்தனை சுலபமல்ல” என்றான் ஜோடா நகைப்பின் ஊடே.
“நாகரிகமற்ற கூட்டம்” என்று ஜகத்சிம்மன் அலுத்துக் கொண்டான்.
“இவர்களது நாகரிகம் நகரத்தில் இருப்பவர்களுக்குக் கிடையாது. இவர்கள் பொய் பேசமாட்டார்கள். விருந்தோம்பலில் இவர்களுக்கு இணையில்லை” என்றான் ஜோடா.
“காட்டுவாசிகள்” என்று முணுமுணுத்தான் படைத் தலைவன்.
“ஆனால் வந்தவர்களைக் காட்டிக் கொடுக்காதவர்கள்” என்ற ஜோடா “ஜகத்சிம்மா! எனக்கும் காட்டு வாசிகளுக்கும் நிரம்பப் பொருத்தம் இருக்கிறது. வேறு காட்டுத் துணையும் இருக்கிறது எனக்கு. ஆகையால் அஞ்சாதே, போய்வா” என்ற ஜோடா குடிசைக் கதவைத் திறந்து வெளியே செல்ல ஜாடை காட்டினான்.
ஜகத்சிம்மன் வெளியே சென்றான். ஜோடாவின் போக்கு பரம விசித்திரமாயிருந்தது அவனுக்கு. தன்னை குடிசைக்குள் தள்ளியும் மன்னன் ஏன் விளக்கை ஏற்றாமல் குடிசையில் இருளிலேயே பேசினான் என்பது விளங்கவில்லை படைத்தலைவனுக்கு. சிறிது தூரம் நடந்ததும் திரும்பிப் பார்த்தான் குடிசையை. குடிசைக் கதவு தாளிடப்பட்டு இருந்தது. ஏதோ சிந்தித்துக்கொண்டு மீண்டும் குடிசையை நோக்கிச் சென்றான்.
கதவைத் தட்ட முயன்றவன் சட்டென்று நின்றான். உள்ளே இருவர் இரகசியமாகப் பேசுவது ஜகத்சிம்மன் காதில் விழுந்தது. அவற்றில் ஒன்று, பெண் குரல். தன்னுடன் பேசிய நேரத்தில் ஜோடா விளக்கேற்றாத காரணத்தை புரிந்துகொண்டான் படைத்தலைவன். தானும் மன்னனும் பேசுகையில் மூன்றுவது ஒருவர் அந்தக் குடிசையின் மூலையில் இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகித்துக்கொண்டான் ஜகத்சிம்மன். மன்னன் ஒரு பெண்ணை அத்தனை எச்சரிக்கையுடன் மறைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்தான். ஏதும் விளங்கவில்லை அவனுக்கு.
“யார் இந்த புதுப் பெண்?” மர்மமாயிருந்தது படைத்தலைவனுக்கு.