பெண்ணின் லாவண்யத்தால் ஆண்மகன் அறிவு அழிந்துவிடுகிறது. கவர்ச்சியான கன்னியின் முன்பாக எந்த ஆண்மகனும் சுயபுத்தியை இழந்துவிடுகிறான். இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு அத்தாட்சியாக நின்றான் ராவ்ஜோடா.
“உனது வீரர்களை திருப்பி அனுப்பிவிடு” என்று மலை அரசி இட்ட உத்தரவு, சந்தசிம்மனிடம் இருந்து தப்பி ஓடிவந்த மார்வார் இளவரசனுக்கு அத்தனை திருப்தியாயில்லை என்றாலும், அதற்குக் கீழ்ப்படியவே செய்தான் அவன்.
அவனுடைய வீரர்கள் மலைமீது ஏறி வந்தார்கள். அவன் முன்பாக படைத்தலைவன் வந்து நின்றான். அப்போதும் அவன் சித்தம், சற்று முன்பு பறவைகள் தொத்தி ஏறிய மலை அரசியின். சுந்தர உடலின் பகுதிகளில் ஊன்றிக் கிடந்ததால் ஜோடா வாயைத் திறந்தான் இல்லை.
“எப்படி வந்தாய்? சந்தசிம்மன் இரண்டாயிரம் வீரர்களுடன் பாலைவனத்தில் வந்தானே. அவனைப் பார்த்தாயா?” என்று கேள்விகளை வீசவும் இல்லை. சித்தினியின் அழகில் தோய்ந்த சித்தத்துடன் மவுனமாகவே நின்றான்.
ஜோபாவின் மௌனத்தைக் கண்டதால் வியப்பு அடைந்த படைத்தலைவனான ஜகத்சிம்மன், “மகாராஜா!” என்று மெள்ள அழைத்தான்.
“என்ன?” ஜோடாவின் குரல், உணர்வு இழந்து ஒலித்தது.
“நாங்கள் தப்பி வந்துவிட்டோம்” என்றான் ஜகத்சிம்மன், சிறிது குரலில் உணர்ச்சியைக் கூட்டி.
“செய்ய வேண்டியதைச் செய்தாய்” என்றான் ராவ் ஜோடா, ஏதோ சொப்பனத்தில் பேசுவது போல்.
ஜகத்சிம்மனுக்கு ஜோடாவின் போக்கு விசித்திரமாயிருக்கவே ஒருவிநாடி நிதானித்துவிட்டுக் கேட்டான் : “நாங்கள் தப்பி வந்தது உங்களுக்கு திருப்தியாயில்லையா?”
“இதில் திருப்திக்கு என்ன இருக்கிறது? மார்வார் வீரர்கள் போரிட்டு மடிந்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது புறமுதுகு காட்டி ஓடும் காலம். இதில் திருப்தி என்ன இருக்கிறது?” என்று வினவினான் எரிச்சலுடன்.
ஜகத்சிம்மன் முகத்தில் இகழ்ச்சிச் சாயை படர்ந்தது. “மன்னர் எவ்வழி அவ்வழி குடிகள்” என்றான், சொற்களிலும் இகழ்ச்சி ஊடுருவ.
படைத்தலைவன் தன் கோழைத்தனத்தைச் சுட்டிக் காட்டுவதை உணர்ந்த ஜோடா, வேறு சமயமாயிருந்தால் அவனை உடனடியாக வெட்டிப் போட்டிருப்பான். ஆனால், அன்றைய நிலையில் அவன் அந்த வசைப்பாட்டையும் ஓசைப்படாமல் ஏற்றுக்கொண்டான். “இந்த ஒரு வழியிலாவது என்னைப் பின்பற்றியது பற்றி மகிழ்ச்சி. ஆனால், நீ இங்கு வரப்போவது எனக்குப் புதிதல்ல. நீ பாலைவனத்தில் வீரர்களுடன் அலைந்ததை முன்பே பார்த்தேன்” என்று தெரிவித்தான் சர்வ சாதாரணமாக.
பாகுர்ச்சிரா மலை உச்சியில் இருக்கும் மார்வார் இளவலுக்கு நெடுந்தூரத்தில் தான் அலைந்ததை எப்படிப் பார்க்க முடியும் என்று சந்தேகம் வந்ததால், “பார்த்தீர்களா?” என்று ஜகத்சிம்மன் கேட்டான் பெருவியப்புடன்.
“ஆம்” ஜோடாவின் பதில் உடனடியாக வெளிவந்தது.
“எப்படிப் பார்த்தீர்கள்?”
“விளக்கில்.”
“விளக்கிலா?”
“வேறு எதில் பார்க்க முடியும்?”
இதைக் கேட்ட ஜகத்சிம்மன் சந்தேகப் பார்வையாக ராவ் ஜோடாவைப் பார்த்தான். அந்தப் பார்வையை ஜோடாவும் கவனித்தான். “ஜகத்சிம்மா! மகான்களுடைய வழிகளை நாம் அறியமாட்டோம். அதோ அந்தக் குகையை உற்றுப் பார்” என்று கூறித் திரும்பி பின்னால் இருந்த ஜோகியின் குகையைக் காட்டினான்.
அதில் தெரிந்த வெளிச்சத்தைக் கண்ட ஜகத்சிம்மன் “தாங்கள் சொன்ன விளக்கின் ஜோதியா அது?” என்று வினவினான்.
“இல்லை; அங்கு விளக்கு ஏதும் இல்லை” என்றான் ஜோடா.
“பிறகு ஏது வெளிச்சம்?” ஜகத்சிம்மன் பிரமிப்புடன் கேட்டான்.
“வனப்பிரஸ்த ஜோகியின் ஆத்மஜோதி.” இதை பயபக்தியுடன் சொன்னான் ஜோடா.
ராஜபுதனத்தின் மலைக்குகைகளிலும் காடுகளிலும் வாழும் ஜோகிகளைப்பற்றி ஜகத்சிம்மனும் கேட்டு இருந்தாலும், அவர்களிடம் உள்ள மந்திர விளக்குகளைப் பற்றியும் மாயா ஜோதியைப் பற்றியும் கேட்டது இல்லை. “மகாராஜா! தாங்கள் இனி இங்கு இருப்பது சரியல்ல. புரவியில் ஏறுங்கள், போய்விடுவோம்” என்று கூறினான்.
ராவ்ஜோடா தனது படைத்தலைவனை நோக்கி திடமான குரலில் சொன்னான்: “ஜகத்சிம்மா! சாதாரண உலகத்தில் உள்ளோர் அறியாத விசித்திரங்கள் இந்த மலையில் இருக்கின்றன. இங்கு நான் பல விஷயங்களை அறிந்தேன். உன்னுடன் நான் வந்தால், நாம் அனைவரும் கொல்லப்படுவோம். ஆகையால், நீ முதலில் சென்றுவிடு, தலைநகருக்கு. நான் பின்னால் வருகிறேன்” என்றான்.
ஜகத்சிம்மன் சந்தேகம் வரவர வலுத்தது. மகாவீரனான ஜோடா, முழுக் கோழையாக மாறிவிட்டானா? சந்தசிம்மனை நினைத்து அஞ்சுகிறானா என்ற சந்தேகம் வலுக்கவே, “மகாராஜா! உங்கள் தலைக்கு மார்வார் கிரீடம் காத்திருக்கிறது மண்டோரில்” என்று உணர்த்தினான்.
ஜோடா லேசாக நகைத்தான், முதன் முதலாக. “உன்னுடன் வந்தால் என் தலையிருக்காது. ஆகையால் கிரீடத்தை வைக்க அவசியம் இருக்காது” என்றான்.
அத்துடன் நின்று இருக்கலாம் அவன். ஆனால், சட்டென்று திரும்பி “அதோ, இருக்கிறாள். அவளை வேண்டுமானால் கேள்” என்று பக்கத்தில் இருந்த காட்டின் அடர்ந்த பகுதியைக் கையால் சுட்டிக் காட்டினான்.
அந்த இடத்தில் யாரும் இல்லாது போகவே “சற்று முன்பு இங்கு இருந்தாளே, எங்கே அவள்?” என்று கேட்டான், சிறிது இரைந்து.
ஜகத்சிம்மன் பொறுமையும் மெள்ள அகன்றது. “யாரைக் குறிப்பிடுகிறீர்கள், மகாராஜா?” என்ன வினாவினான், சினம் லேசாகத் துளிர்த்த குரலில்.
“அவள்தான் மலை அரசி” என்றான், ஜோடா.
“பெண்ணா! இந்தக் காட்டிலா!” ஜகத்சிம்மன் வியப்பு அதிகமாயிற்று.
“ஆண்மகனையா மலை அரசி என்று சொல்லுவேன்” என்ற ஜோடாவின் குரலில் மகிழ்ச்சியும் இன்பமும் கலந்து ஒலித்தன.
இந்தக் காட்டில் யாரோ பெண்ணைப் பார்த்திருக்கிறான் மார்வார் மன்னன். பெண் பித்துப் பிடித்து அலைகிறான் என்று நினைத்த ஜகத்சிம்மன், “மகாராஜா! நமது அரண்மனையில் ஆயிரம் அழகிகள் இருக்கிறார்கள். போயும் போயும் காட்டுப் பெண்ணைப் பார்த்து சித்தம் இழக்கிறீர்கள். வாருங்கள், போவோம். மார்வார் சிம்மாசனம், அந்தப்புரம் எல்லாம் தங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்றான். அவன் குரலில் பரிவும் இருந்தது, பரிதாபமும் இருந்தது.
“ஜகத்சிம்மா! அவள் உத்தரவு அப்படியில்லை” என்றான் ராவ்ஜோடா.
“இந்தக் காட்டுப் பெண் உத்தரவு இடுகிறாளா?” என்றான் ஜகத் சீற்றத்துடன்.
“அவளை அற்பமாக எடை போடாதே” என்றான் ஜோடா.
“இல்லை. மார்வார் இளவரசனை, இப்பொழுது மகாராஜா ஆகிவிட்ட மகாவீரனை, திடீரென்று பைத்தியமாக அடித்தவளைக் குறைவாக எடை போட முடியாது. எங்கே அவள்? ஏன் எங்களிடம் இருந்து பதுங்குகிறாள்” என்று கூறினான் படைத்தலைவன்.
“அவளை மரியாதைக் குறைவாகப் பேசாதே. மார்வாரை இப்பொழுது காப்பாற்றக்கூடியவள் மலைஅரசிதான். அவள் சொல்வதைக் கேள். நீ செல், தலைநகரை நோக்கி. இன்னும் நான்கு நாளில் மண்டோருக்கு நான் வருகிறேன்” என்ற ராவ் ஜோடா, படைத்தலைவன் போகலாம் என்பதற்கு அறிகுறியாக மலையடிவாரம் செல்லும் பாதையைக் காட்டினான்.
“நாங்கள் நூற்று இருபத்து ஐந்துபேர் இருக்கிறோம். நாங்கள் போனால் உங்களுக்குத் துணை?” என்று வினவினான் ஜகத்.
“மலை அரசி இருக்கிறாள்.” ஜோடாவின் பதில் திட்டமாயிருந்தது.
“பெண் துணையா?” நம்பிக்கையற்ற குரலில் வினவினான் ஜகத்.
“ஆம்” என்றான், ஜோடா.
“இதைக் கேட்டால் மார்வார் நகைக்கும்” என்று சுட்டிக் காட்டினான், ஜகத்.
அந்த சமயத்தில் மரங்கள் இடையே ஒரு பந்தம் எரிந்தது.
மலை அரிசியின் முகம் அதன் வெளிச்சத்தில் ஜொலித்தது.
மெள்ள அந்த பந்தத்துடன் நடந்து வந்த மலை அரசி, ஜகத்சிம்மன் முன்பு நின்றாள்.
அவளைக் கண்ட ஜகத்சிம்மன் பிரமித்தான்.
அந்த வசீகரக் கண்கள் அவனைச் சுட்டுவடுவது போல் பார்த்தன. “ஜகத்சிம்மா? இப்பொழுது மேவாரைக் காத்தது யார்?” அசைந்த உதடுகள் வினவின.
“சந்தசிம்மன்.” ஜகத்சிம்மன் குரலில் அச்சம் இருந்தது.
“இல்லை, மேவார் ராணி. ஜோடாவின் சகோதரி சந்தசிம்மனை அவள்தான் வரவழைத்தாள். அவளால் மார்வார் அரசன் மாண்டான்” என்று கூறினாள் மலைஅரசி.
“ஆம்.” ஜகத் பிரமிப்புடன் கூறினான். இந்தக் காட்டுப் பெண்ணுக்கு நாட்டு நடப்பு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில்.
“மகாசக்தியில் இருந்து உலகம் பிறக்கிறது, அசைகிறது. அவள் பெண். ஆகையால் பெண்களை அவமதிக்காதே. சென்றுவிடு, உன் தலைநகருக்கு. இளவரசர் வருவார் பின்னால்” என்றாள் மலைஅரசி. அவள் குரலில் அதிகாரம் இருந்தது.
ஜகத்சிம்மன் பேச நா எழாமல் நின்றான்.
மலை அரசி அவனை பரிதாபத்துடன் பார்த்தாள், “போய்விடு சீக்கிரம் தலைநகரைப் பாதுகாக்க ஏற்பாடு செய். இன்னும் இரண்டு நாளில் சந்தசிம்மன் முற்றுகையிடுவான்” என்றாள்.
“மகாராஜா?” என்று கேட்டான், ஜகத்.
“நான் அழைத்து வருகிறேன்” என்றாள் மலைஅரசி.
ஜகத்சிம்மன் ஏதோ பேச முற்பட்டான். அவள் அனுமதிக்கவில்லை. அவள் கண்களில் அதிகாரம் இருந்திருக்க வேண்டும். அவளுக்குத் தலைவணங்கி, வீரர்களுடன் திரும்பினான் ஜகத்சிம்மன்.
கடைசி வீரன் மறைந்ததும், “ஜோடா! வா. போகலாம்” என்று மலைஅரசி அழைத்தாள்.
“எங்கே?” என்று கேட்டான், ஜோடா.
“குகைக்கு” என்றாள், மலைஅரசி. திரும்பி நடக்கவும் முற்பட்டாள்.
மார்வார் வீரன் அவளைத் தொடர்ந்தான் மௌனமாக.
அந்த மௌனத்தாலும், மனம் இருந்த குழப்பத்தாலும் அவள் சென்ற திக்கை அவன் கவனிக்கவில்லை. சுரணை திரும்பியபோது திகைத்தான். அவள் அவனை அழைத்துச் சென்றது, ஜோகியின் குகையல்ல, வேறொரு குகை. அதன் வாயிலில் நின்று அவள் ஜோடாவை வரும்படி சைகை செய்தாள். ஜோடா தயங்கினான், நடுங்கினான் எல்லையற்ற அச்சத்தால்.
அவள் பந்தத்தை அணைத்தாள். பிறகு, “உம்! ஜோடா வா” என்று அவனை அழைத்தாள். அந்த அழைப்பில் இன்பம் பெரிதும் ஒலித்தது.
ஜோடா உணர்ச்சி மிகுதியாலும், திடீரென மாறிவிட்ட அவள் போக்கினாலும் திகில் பிடித்து, நின்ற இடத்தில் நின்றான்.
அவனது மலைப்பை, திகைப்பை மலை அரசி உணர்ந்திருக்க வேண்டும். அவனை நோக்கி அவளே வந்தாள்.