மண்டோரின் படைத்தலைவனாக இருந்த தன்னை திடீரென உபதளபதியாக்கிவிட்ட மன்னன் செயலைக் கண்டு மனம் துடித்த ஜகத்சிம்மன் அந்த அவமானத்தில் இருந்து எப்படி மீளலாம் என்று சிந்தித்தான். அது தவிர இந்த திடீர் பதவி இறக்கத்துக்குக் காரணம் எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியிலும் இறங்கினான்.
மன்னனையும் அந்த புதுப்பெண்ணையும் பற்றிதான் துப்பறிய முயன்றது ஒருவேளை காரணமாக இருக்குமோ என்று ஒரு விநாடி நினைத்தாலும் அந்த நினைப்பை உதறிவிட்டான். “நான் எத்தனை ஜாக்கிரதையாக அவர்களைக் கவனித்தேன்! அவர்கள் ஒருநாளும் நான் பார்ப்பதை ஊகித்திருக்கக்கூட முடியாது” என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான். ஒருவேளை இந்த மாற்றத்துக்கு பிருமச்சாரியின் வீரம் காரணமாக இருக்குமோ என்றும் எண்ணினான். “அது இருக்க முடியாது. பிருமச்சாரி பெரிய வீரர். ஆனால் படைகளை நடத்தி பழக்கம் கிடையாது. போரில் வீரம் மட்டும் போதாது. படைகளை அமைப்பதும், அவற்றை நடத்துவதும் முக்கியம். போர் என்பது தனிமனிதன் சண்டையல்ல” என்று அந்த யோசனையையும் உதறினான்.
வேறொரு எண்ணமும் அவன் உள்ளத்தே எழுந்தது. மேவார் தலைநகர் நிகழ்ச்சிகள் காரணமாய் இருக்கலாமா என்றும் எண்ணமிட்டான். “இருக்க முடியாது. அது மகா இரகசியம்” என்று அதையும் தீர்த்துக் கட்டினான்.
இப்படிப் பலவாறு சிந்தித்தும் தனது பதவி இறக்கத்துக்கு உண்மைக் காரணம் புரியாததால் குழம்பிய மனதுடன் வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்துக்கொண்டே பிருமச்சாரியின் பக்கத்தில் நின்றான் ஜகத்சிம்மன்.
அணிவகுப்பின் தோரணை அவன் உள்ளத்துக்கு சிறிது சாந்தியையும் அளித்தது. பிருமச்சாரி புரவி வீரர்களை கண்டபடி இயக்கினார். அவர் இயக்கிய முறை சம்பிரதாயப் போருக்கோ, போரின் இலக்கண முறைக்கோ சிறிதும் சம்பந்தம் இல்லாது இருந்தது. படைப் பிரிவுகளை அனாவசியமாகத் திடீர் எனத் திருப்பினார். பத்தடி ஒரு பிரிவு நகர்ந்ததும் அதன்மீது பின் பிரிவை வேகமாக ஏவினார். முதல் பிரிவு பின்வந்த பிரிவில் இருந்து தப்ப வெகு வேகமாக அகன்றது.
வேறு மார்க்கத்தில், சில வேளைகளில் இரண்டு பிரிவுகளும் மோதும்படியாக குறுக்கே நகர்த்த முயன்றார் பிருமசாரி. அவ்வப்பொழுது சங்கடப்பட்ட பிரிவுகளைக் கண்டு ராட்சச் சிரிப்பாகச் சிரித்தார்.
இதனால் வெகுண்ட ஜகத்சிம்மன், “பிருமச்சாரி, எதற்காக நகைக்கிறீர்?” என்று வினவினான்.
பிருமச்சாரி பதில் சொல்லவில்லை. அதனால், மீண்டும் சுட்டிக்காட்டினான் மாஜி படைத்தலைவன், “உங்களைத்தான் கேட்கிறேன் பிருமச்சாரி” என்று.
பிருமச்சாரி படைப் பிரிவுகளின் அணிவகுப்பை பார்த்துக்கொண்டே “உமது கேள்வி சரியாயில்லை” என்று சீறினார்.
“என்ன தவறோ?” எரிச்சலுடன் கேட்டான் படைத்தலைவன்.
“என்னை பிருமச்சாரி என்று அழைத்தீர்.”
“நீர் பிருமச்சாரி இல்லையா?”
“தனி வாழ்க்கையில் பிருமச்சாரிதான். இப்பொழுது படைத்தலைவன். நீர் சாதாரண, எனக்கு அடங்கிய உபதளபதி. ஆகையால் அழைக்க வேண்டியபடி அழையும்.” இதை உஷ்ணமாகவே சொன்னார் ஹர்ப்சங்க்லா.
ஜகத்சிம்மனுக்கு இதைக் கேட்டதும் உள்ளூரக் கோபம் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டு “படைத்தலைவரே!” என்று அழைத்தான்.
“என்ன உபதளபதி?” இந்தக் கேள்வியில் உபதளபதி என்ற சொல்லை சிறிது அழுத்தியே சொன்னார் ஹர்பா சங்க்லா.
ஜகத்சிம்மன் அவரை ஏறெடுத்து நோக்கினான். “உமது அணிவகுப்பு முறை சரியாயில்லை” என்று கூவினான் வெறுப்பு நிரம்பிய குரலில்.
“காரணம்?”
“சம்பிரதாயத்துக்குச் சம்பந்தம் இல்லாதிருக்கிறது.”
“அவ்வளவுதானே?”
“ஆம்.”
“சம்பிரதாயங்களை அவசியமானால் உடைக்க வேண்டும்”
“சம்பிரதாயங்களை உடைத்தால் நீர் வெற்றி பெற முடியாது.”
“பார்ப்போம்.”
“பார்ப்பதற்கு ஏதும் இல்லை இதில் முறைப்படி அணிவகுப்பை நடத்தும்.”
அதுவரை ஜகத்சிம்மனைப் பார்க்காமலே பதில் சொல்லிக் கொண்டு இருந்த பிருமச்சாரி சற்றே திரும்பினார் பழைய படைத்தலைவனை நோக்கி. “இந்தப் பிரிவுகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று வினவவும் செய்தார் இகழ்ச்சியுடன்.
ஜகத்சிம்மன் ஒருமுறை தனது கண்களை படைமீது ஓட்டினான்.
“சுமார் ஐந்நூறு பேர்” என்றான்.
“பேஷ்! உமது பார்வை ஆராய்ச்சி பார்வை. சரியாக ஐந்நூறு பேர்தான்” என்று சொன்ன பிருமச்சாரி “மண்டோரில் எதிரிப் படையின் பலம் தெரியுமா?” எனக் கேட்டார்.
“தெரியாது” என்றான் ஜகத்சிம்மன்.
பிருமச்சாரியின் கண்களில் விஷம் துளிர்த்தது. “அதை அறிவது உமது கடமை. அதைப் பார்க்கவில்லை. மன்னர் யாருடன் சரசமாடுகிறார் என்று பார்ப்பதில் காலத்தை விரயமாக்கியிருக்கிறீர்” என்று விஷமத்தைக் குரலிலும் காட்டினார் பிருமச்சாரி. “மன்னர் யாருடன் சரசமாடுகிறார் என்பது அவர் சொந்த விஷயம். போர் அரசாங்கத்தைப் பற்றியது. படைத்தலைவரான நீர் அதில் அக்கறை காட்டியிருக்க வேண்டும். மண்டோரில் மறைந்திருந்த உமக்கு, எதிரியின் படைபலத்தை அறிய முடியவில்லை. இங்கு இருக்கும் நான் சொல்கிறேன், கேளும். எதிரி வசம் நாலாயிரம் புரவி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை நடத்தும் காந்தோஜியும், மஞ்சாஜியும் மகாவீரர்கள். போரில் இணையற்றவர்கள். சம்பிரதாயப் போர் அவர்களிடம் செல்லாது. ஆகையால் சிறிது முறையை மாற்றியிருக்கிறேன். இந்தப் புதுமுறையை நீங்கள் ஏற்றுக்கொள்வது நல்லது. நாளை முதல் இதை உமக்கு சொல்லித் தருகிறேன்” என்று அவர் மேலும் சொன்னார்.
இதைக் கேட்ட ஜகத்சிம்மன் பிரமை பிடித்து நின்றான். நீண்ட காலம் படைத்தலைவனாக இருந்த அவனுக்கு பிருமச்சாரி பள்ளிக்கூடம் நடத்த முயல்வது பெரிய விநோதமாக இருந்தது.
அத்தனைக்கும் ஜகத்சிம்மன் நிதானத்தை இழக்கவில்லை. ஒப்புக்கொள்வதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் அசைத்துவிட்டு, விடுதிக்குள் சென்றான்.
விடுதியின் வாயில் படியில் இருந்து சகலத்தையும் கவனித்துக்கொண்டு இருந்த ராவ்ஜோடா ஜகத்சிம்மன் அருகே வந்ததும் அவன் முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து “உபதளபதி! உமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது” என்று கூறினான் உற்சாகத்துடன்.
ஜகத்சிம்மன் மன்னனை ஏறெடுத்து நோக்கினான். அவன் பார்வையில் விஷமம் மிதமிஞ்சியிருந்ததது.
“உபதளபதி ஆனது அதிர்ஷ்டமா மன்னவா?” என்று வினவினான் துயரம் நிரம்பிய குரலில்.
“பிருமச்சாரி எல்லோரையும் உபதளபதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார். ஏற்றுக்கொண்டாலும் தமது புதுமுறைகளை கற்றுக்கொள்ள அனுமதிக்கமாட்டார். உம்மை பிருமச்சாரி பெரிதும் மதிக்கிறார்” என்று உற்சாகத்துடன் கூறிய மன்னன், ஜகத்சிம்மனை அழைத்துக்கொண்டு காலை உணவு அருந்தச் சென்றான்.
உணவுச்சாலையில் மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது ஜகத்சிம்மனுக்கு. இருவருக்கும் சிற்றுண்டியை மலை அரசியே பரிமாறினாள்.
அவள் மலை அரசியா அல்லது அவளது இரட்டைப் பிறவியா என்பதை அறிய முடியாததால் சிறிது தயங்கிய ஜகத்சிம்மன் “மண்டோர் மகாராணி! நீங்கள் உணவு படைப்பது சரியா! அதுவும் கேவலம் ஓர் உபதளபதிக்கு உங்கள் கையால் பரிமாறுகிறீர்கள்....” என்றான்.
மலைஅரசி மதுரமாக நகைத்தாள். “நீங்கள் இப்பொழுது உபதளபதி அல்ல” என்றாள்.
ஜகத்சிம்மன் அதிர்ச்சி அடைந்து மலை அரசியையும் மன்னனையும் நோக்கினான்.
“அந்தப் பதவியும் போய் விட்டதா எனக்கு?” என்று கேட்டான் அச்சத்துடன்.
மலை அரசி மீண்டும் சிரித்தாள். “உங்களுக்கு எந்தப் பதவியும் போகவில்லை. இங்கு உணவு அருந்தும்போது உங்களுக்கு மன்னரின் நண்பர் என்ற ஒரே பதவிதான். எனக்கும் மனைவி என்ற ஒரே பதவிதான். ஆகையால் உங்களுக்குப் பரிமாறுவதில் எனக்கு எந்தவிதக் குறைபாடும் கிடையாது” என்று கூறிவிட்டுப் பரிமாறினாள்.
காலை உணவை அருந்திய ஜகத்சிம்மன் அன்று முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். எப்படியும் அந்த இன்னொரு பெண்ணைக் கண்டுபிடித்து இரகசியத்தை உடைத்துவிட்டால் மன்னன் வண்டவாளம் வெளிப்பட்டுவிடும் என்று நினைத்தான். அப்புறம் தத்தளிக்க வேண்டியது மன்னன்தான் என்றும் தீர்மானித்தான்.
ஆனால் அன்றும் மறுநாளும் அந்த இரட்டைப் பிறவியைக் காணவில்லை. இரவில் காட்டுக்குள் சென்றும் பார்த்தான். அங்கு மன்னனும் வரவில்லை, அவன் ஆசை நாயகியும் வரவில்லை. அடுத்த மூன்று நாளும் இதே கதிதான். போதாக்குறைக்கு பிற்பகலில் பிருமச்சாரி அவனுக்கு பள்ளிக்கூடம் நடத்தினார். அதற்கு மன்னனும் வந்தான். புதுமுறைப் போர் நுட்பங்களை பிருமச்சாரி இருவருக்கும் போதித்தார். முதலில் புது முறையை சுத்த பைத்தியக்காரத்தனம் என்று நினைத்த ஜகத்சிம்மன், அதன் நுட்பங்களைக் கண்டுபிரமித்தான். மன்னனுக்கும் அந்த முறைகள் வியப்பையும் மகிழ்ச்சியையும் புது அறிவையும் ஒருங்கே அளித்தன.
நாட்கள் ஓடின.
ஜகத்சிம்மனுக்கும் மன்னனுக்கும் புதுமுறைப் போரை தொடர்ந்து போதித்தார் பிருமச்சாரி. உபதளபதியையும் மன்னனையும் இரண்டு பிரிவுகளுக்குத் தலைவர்கள் ஆக்கி வேகமாக அவற்றை இயக்கினார். அப்பொழுது இருவருமே புரிந்துகொண்டனர், அந்த வாயுவேகப் போரை எதிரி சமாளிப்பது நடவாது என்ற உண்மையை.
இத்தனையிலும் ஜகத்சிம்மன் மனம் அந்த இன்னொரு பெண் மீதே இருந்தது. ஆனால் அவள் அடியோடு சுவடு தெரியாமல் மறைந்துவிட்டாள். பவுர்ணமியும் நெருங்கிக் கொண்டிருந்தது. பவுர்ணமிக்கு இரண்டு நாள் முன்பு படைகளுடன் பிருமச்சாரி புறப்பட்டார், மண்டோரை நோக்கி.
மன்னனும் உபதளபதியும் அவருக்குப் பின்னால் புரவிகளில் சென்றார்கள். பவுர்ணமியின் காலையில் பிருமச்சாரி மண்டோர் முன்பாக பாசறை அமைத்தார். தமக்கும் மன்னருக்கும் உபதளபதிக்கும் தனித்தனி கூடாரங்களை அமைத்தார். அன்று பகலில் உபதளபதியை அழைத்து “உபதளபதி! நீர் தூது செல்லும், சந்தசிம்மன் புத்திரர்களிடம். மண்டோரை விட்டு அவர்களை விலகச் சொல்லுங்கள். இல்லையேல் இன்றே போர் என்று கூறுங்கள்” என்று உத்தரவிட்டார்.
அதே சமயத்தில் ராவ்ஜோடாவின் போர் முரசுகள் பயங்கரமாக ஒலித்தன.
தூது செல்ல புரவி மீது அமர்ந்து கிளம்பினான் ஜகத்சிம்மன். கிளம்பிய சமயத்தில் தூரத்தே தெரிந்த வேட்டுவர் மலையையும் நோக்கினான் ஒருமுறை. புரவியின் கடிவாளத்தை இழுத்துவிட்டு புரவியை நடத்த முயன்றவன் சட்டென்று நின்றான்.
வேடர் மலை இருந்த திக்கில் இருந்து அந்த இரட்டைப் பிறவி வந்துகொண்டிருந்தாள், புரவி மீது ஏறி. அப்பொழுது அவள் உடையில் பெரும் மாற்றம் இருந்தது. வேட்டுவர் உடையை அவளும் அணிந்திருந்தாள். உடலை அரைகுறையாகச் சுற்றிப் புலித்தோல் ஆடை, தலைக்குழலில் ஒரு பறவை இறகு, கையில் வில்லும் அம்பும். இந்தக் கோலத்தில் புரவியை ராஜ நடைபோட்டு நடக்க வைத்து பிருமச்சாரியின் பாசறையை அணுகினாள். ஜகத்சிம்மனை அசரவைத்தது, இது மட்டும் அல்ல. கூடாரத்தை விட்டு வெளிவந்த பிருமச்சாரி அவளை மிகுந்த குதூகலத்துடன் வரவேற்றார், அவளுக்குத் தலையும் வணங்கினார். புரவியில் இருந்து அவள் இறங்க தனது இரு கைகளில், விரல்களையும் சேர்த்துப் படியாக்கி அவள் காலை நோக்கி நீட்டினார்.