மார்வார் மன்னனையும் மலைக்க வைத்த அந்த விசித்திரக் கதையைச் சொல்லுமுன்பு பிருமச்சாரி அந்தச் சிறு வீட்டின் முற்றத்தை வளைத்திருந்த சுற்றுக் கட்டடத்தின்மீது உட்கார்ந்து கீழ் இருந்த முற்றத்தில் தமது கால்களை நன்றாக நீட்டிக் கொண்டார். இரும்பு உலக்கைகள் மாதிரி திண்மையான சதைப் பிடிப்புடன் இருந்த அந்தக் கால்களை தமது இரு கைகளாலும் தடவியும் கொடுத்துக் கொண்டார். எதிரே வாளும் கையுமாக நின்ற ஜோடாவை ஒருமுறை ஏறெடுத்து நோக்கினார். பிறகு அவர் கண்கள் முற்றத்தில் தாழ்ந்து நிலைத்தன. கண்களில் ஏதோ பெரும் கனவு தெரிந்தது. சொற்களிலும் அந்தக் கனவு பிரதிபலித்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்றுவிட்டார் ஹர்பாசங்க்லா. அந்த நிலையில் புன்முறுவல் ஒன்று உதடுகளில் எழுந்து முகம் பூராவும் பரவலாயிற்று. “இப்பொழுது நினைத்தால் கூட வேடிக்கையாக இருக்கிறது” என்று கதையைத் தொடங்கிய சங்க்லா சொன்னார்:
“இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வனப்பிரஸ்த ஜோகி என்னைப்போல் ஒரு வீரனாயிருந்தார் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். உணவைக் குறைத்து, உடலை வருத்தி அவர் யோகி நிலையை அடையு முன்பு என்னால்கூட அவரை வாட்போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது. இத்தனைக்கும் அந்த நாளில் கூட அவர் சரீரத்தில் அதிகச் சதைப்பிடிப்பு கிடையாது. ஆனால், இளைத்து ஒல்லியாய் நெட்டையான உருவத்தின் சக்தியும் உரமும் இரும்பைவிட வலு உள்ளதாயிருந்தது. அவர் வாளைச் சுழற்றினால் அந்த வாளின் நுனி எந்தச் சமயத்தில் நமது உடலின் எந்த பாகத்தின் மீது தோன்றும் என்று சொல்ல முடியாதபடி பெரும் பிரமிப்பை ஊட்டுவதாயிருக்கும். வாள் சுழற்றும் தந்திரங்களையும் மர்மங்களையும் எனக்கு போதித்தவரும் ஜோகிதான்.
அவர் சாதாரண வீரனாயிருந்த காலத்தில் மேவார் அரசுக்குப் பணிபுரிந்து வந்தார். ஆனால் அவர்கள் படையில் சேரவில்லை. எப்பொழுதும் ஆராவல்லி மலைத்தொடரின் காடுகளிலும் இந்த பாகுர்ச்சிரா மலைத்தொடரின் வனப்பிரதேசங்களிலும் இருந்து வந்தார். அவருக்குச் சொல்லியனுப்பினால் குறிப்பிட்ட பணியைச் செய்துவிட்டு திரும்ப பாகுர்ச்சிராவுக்குப் போய்விடுவார். எத்தனையோ பணிகளை துணையாருமின்றி தனியாகவே செய்து முடித்திருக்கிறார். அவருக்குத் துணையெல்லாம் ஒரு புரவி, ஒரு வாள்-இவைதாம். அவர் நுழைந்த கோட்டைகள் பல. போராடிய இடங்கள் பல. பாவம் செய்யும் யாரும் அவரிடம் தப்பியது கிடையாது. நல்லவர் யாருக்கும் அவர் உதவாமல் இருந்ததும் இல்லை. தர்மத்தையே அடிப்படையாகக் கொண்டு தமது வாளை அதை நிலைநிறுத்தவே உபயோகப்படுத்தி வந்தார்.
அத்தகைய பணிகளில் ஒன்றை அவர் முடித்த பிறகு திடீரென சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார். அதைப்பற்றி பலர் பலபடி பேசிக்கொண்டார்கள். அவர் வேதம் படிக்க இமாலயம் சென்றுவிட்டதாக வதந்தி உலாவியது. யாரோ திராவிட நாட்டில் இருந்து ஒரு சித்தர் வந்ததாகவும், அவர் பின்னால் அவர் போய்விட்டதாகவும் வதந்தி இருந்தது. இப்படி வதந்திகள் பலவிதமாயிருந்தபோது திடீரென அவர் பாகுர்ச்சிராவில் இருக்கிறார் என்று செய்தி கிடைத்தது. உடனடியாக நான் அங்கு விரைந்தேன்.
“ஜோடா! நீ வந்த அதே குகை வாயிலில் ஜோகி நின்றிருந்தார். அவர் கையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ஒரு கோவணத்தை மட்டும் அணிந்திருந்தார். தலைமுடியும் தாடியும் மீசையும் அசாத்தியமாக வளர்ந்திருந்தன. உடலும் பெரும்பாலும் ரோமத்தால் மூடப்பட்டுக் கிடந்தது. இத்தனைக்கும் அந்தக் கண்களில் அந்தப் பழைய ஒளி தெரிந்தது. அந்தக் கோலத்தையும் பார்த்து அவர் கையில் இருந்த குழந்தையையும் பார்த்து பிரமித்து நின்றேன்.
என்னைப் பார்த்ததும் அவர் இடியிடி என பைத்தியம் போல் நகைத்தார். ஒருவேளை சித்தப்பிரமையோ என்றுகூட நினைத்தேன்.
ஆரம்பித்த வேகத்தில் அவர் சிரிப்பை நிறுத்தினார். வனப்பிரஸ்த ஜோகிக்கும் ஒரு பந்தம் வந்துவிட்டது என்று சொன்னார். கையில் இருந்த குழந்தையையும் காட்டினார்.”
இப்படிக் கதை சொல்லிக்கொண்டு வந்த ஹர்பாசங்கலா சிறிது நேரம் மவுனமானார். சில விநாடிக்குப் பிறகு மீண்டும் பேசினார்.
“அந்தக் கோலத்தில் அந்த மகாவீரனைக் கண்ட நான் கண் கலங்கினேன். வனப்பிரஸ்த ஜோகியா! நீங்களா!” என்று கேட்டேன்.
“ஆம்” என்றார் ஜோகி நகைத்துக்கொண்டு.
“மகாவீரரான நீங்கள் எப்படித் துறவியாக முடியும்?” என்று கேட்டேன்.
“மகாவீரனான கவுசிகன் துறவியாகவில்லையா?” என்று அவர் பதிலுக்குக் கேட்டார்.
எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. நகைத்தேன். “அப்படியானால் இது மேனகையின் குழந்தையா?” என்று கேட்டேன்.
“அந்தத் தவற்றை நான் செய்யவில்லை. விசுவாமித்திரன் விரதத்தை மட்டும், துறவியான பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டேன். இருந்தும் கிரிஜா என்னிடம் வந்து சேர்ந்தாள். இவளிடம் உள்ள பற்றை, பாசத்தை நீக்குகிறேனா என்று பார்க்க விதி செய்யும் சோதனை இது. என் குகையின் முன்பு யாரோ இந்தக் குழந்தையைக் கிடத்திவிட்டுப் போயிருக்கிறார்கள். இன்று காலை வெளியே வந்தபோது இதைப் பார்த்தேன்! என்றார்”
“இதன் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன்.
“இந்த ஓலை குழந்தையின் இடுப்புக் கயிற்றில் கட்டியிருந்தது” என்று அந்த ஓலையை என்னிடம் காட்டினார். அந்த ஓலையில் பெயர் எழுதியிருந்தது. கீழே ஒரு வாளின் குறியும் இருந்தது” என்றார்.
அதற்குப் பிறகு வனப்பிரஸ்த ஜோகி “எதற்கும் ஒரு வாரம் கழித்து இங்கு வா” என்று உத்தரவிட்டு குகைக்குள் சென்றுவிட்டார். ஒருவாரம் கழித்துச் சென்றேன். ஜோகி குகைவாயிலில் இரண்டு யாதவ குலப் பெண்கள் உட்கார்ந்து குழந்தையை சீராட்டிக்கொண்டு இருந்தார்கள். ஜோகி சிறிதுநேரம் கழித்து வெளியே வந்தார். என்னை உள்ளே வரும்படி சைகை செய்தார். அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன். அங்கு வைத்திருந்த அகல் விளக்கு முன்பு இந்தப் பெரிய வாள் இருந்தது.
“இதை யாரோ இரண்டு நாள் முன்பு குகைவாயிலில் குழந்தை இருந்த இடத்தில் வைத்திருந்தார்கள். இதை நீ எடுத்துக்கொள்” என்றார்.
“எதற்கு?” என்றேன்.!
“வீரனான உன்னிடம் இதற்கு உபயோகம் இருக்கும். மலை அரசிக்குத் திருமணம் செய்ய இது உபயோகமாயிருக்கும். இதைக்கொண்டு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குபவனுக்கு இவளைக் கொடு” என்றார். அத்துடன் சொன்னார், “நீ திருமணம் செய்துகொள்ளாதே” என்று,
“ஏன்?” என்று நான் கேட்டேன்.
“உனக்குத்தான் இந்தப் பெண் சந்ததி இருக்கிறதே, போதும்” என்றார்.
“இருபது ஆண்டில் ஜோகி பெரிய மகான் ஆனார். அவர் உடல் இளைத்து உள்ளத்தில் சுடர்விட்டது. இடையே ஐந்து ஆண்டு அவர் மவுனமாகவே இருந்தார். உணவு அடியோடு கிடையாது. அந்தச் சூழ்நிலையில் யாதவகுல மாதர்கள் வளர்த்த மலை அரசி பருவம் எய்தினாள். அதற்குப் பிறகு அவள் ஜோகியின் சீடப் பெண்ணானாள். காட்டுப்பெண் மாதிரி வளர்ந்தாள். மிருகங்களும் பறவைகளும் அவளுக்கு நண்பர்கள்...” என்ற சங்க்லாவின் பேச்சை இடைமறித்த ஜோடா, “ஆம் ஆம். அதை நானே நேரில் பார்த்தேன்” என்றான்.
“மலை அரசியின் பிறப்பு மர்மம் அப்பொழுது ஜோகிக்குத் தெரியுமோ தெரியாதோ, இப்பொழுது தெரியும். எல்லாவற்றையும் அவர் விளக்கில் பார்க்கிறார். ஆனால், அவசியமான சமயத்தில்தான் விஷயத்தைச் சொல்வார். என்ன காரணத்தாலோ உனக்கு உதவச் சொல்லியிருக்கிறார். இந்த வாளுடன் உன் வாழ்க்கை, மலை அரசியின் வாழ்க்கை இரண்டும் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. வாளை இடைக் கச்சையில் அணிந்துகொள். இதை தர்ம காரியங்களுக்கே பயன்படுத்து. நீ மண்டோரைக் கைப்பற்றியதும் மலை அரசியை மணக்கலாம்.”
இப்படிக் கதையை முடித்த ஹர்பாசங்க்லா, “வா! நமது வீட்டுக்குச் செல்வோம்” என்று கூறி ஜோடாவை பழையபடி தமது விடுதிக்கு அழைத்துச் சென்றார். அன்று இரவு உணவை இருவரும் அருந்திய பிறகு ஹர்பாசங்கலா சொன்னார்:
“ஜோடா! இன்று படுத்து உறங்கு. நாளை விடியற்காலையில் புறப்படுகிறோம்” என்று.
“எனது வீரர்களை காலையில் கிளம்ப உத்தரவிடுகிறேன்” என்றான் ஜோடா.
“வேண்டாம். அவர்கள் இங்கேயே தங்கியிருக்கட்டும். நாம் இருவர் மட்டும் நாளைக் காலையில் பயணப்படுகிறோம்” என்ற சங்கலா தமது படுக்கை அறையை நோக்கி நடந்தார்.
“பிருமச்சாரி!” என்று குரல் கொடுத்தான் ஜோடா.
அறைக்குள் காலை வைத்துவிட்ட பிருமச்சாரி திரும்பி “என்ன ஜோடா?” என்று வினவினான்.
“மலை அரசியை அழைத்துப் போவோமா?” என்று கேட்டான், ஜோடா.
“வேண்டாம்.”
“ஏன் பிருமச்சாரி?”
“இங்கு அவளுக்கு வேலை இருக்கிறது.”
“என்ன வேலை?”
“என் விடுதியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆயுதம் பழக வரும் நண்பர்களுக்கு உதவ வேண்டும். தவிர உன் வீரர்களையும் கவனிக்க வேண்டும். எனக்குப் பிரதிநிதியாக இந்த மாளிகை அலுவல்களை மலை அரசி கவனிப்பாள்” என்று கூறிய ஹர்பாசங்கலா சற்று நிதானித்தார். “தவிர நாம் ஆயிரத்து ஐந்நூறு புரவிகளை ஓட்டிக்கொண்டு வரும்போது மலை அரசி உடன் வருவதை புரவிகளின் சொந்தக்காரர் விரும்பமாட்டார்” என்று கூறிவிட்டு, “மலை அரசியையே கேள், பாபுஜி எப்பேர்ப்பட்டவர் என்று” எனவும் சொன்னார். அடுத்த விநாடி அறைக்குள் சென்று கதவைச் சாத்திவிட்டார்.
ஜோடா மலை அரசியைத் திரும்பி நோக்கினான்.
அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. நம்பிக்கை கண்களில் சுடர்விட்டது. “ஜோடா! இப்படி வா” என்று அவனை சாளரத்தண்டை அழைத்துச் சென்றாள். சட்டென்று ஜோடாவின் தலையை இழுத்து அவன் இதழ்களுடன் தனது இதழ்களைப் பொருத்தினாள்.
இதழ்கள் மீண்டபோது சொன்னாள், “ஜோடா! உன்னை அதிர்ஷ்டம் தேடி வந்துவிட்டது. இந்த ராஜபுதனத்தில் யாராலும் வெற்றி கொள்ள முடியாத இருவர் உன் பக்கத்தில் இருக்கிறார்கள். இந்த ராஜபுதனத்தை ஆட்டிவைக்க ஹர்பா சங்க்லாவே போதும். பாபுஜியும் சேர்ந்துவிட்டால் மண்டோர் உன் கையில் விழுந்தது போலத்தான்” என்றாள்.
மேலும் ஏதோ பேச முயன்றாள். ஆனால், இதழ்கள் அவள் வசத்தில் இல்லை. ஜோடாவின் முரட்டு உதடுகள் அவள் உதடுகளில் அழுந்தப் பதிந்தன. கைகள் அவள் பூவுடலைச் சுற்றி இறுக்கின.