டபிள்யூ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனையான கீர்த்தனா பாலகிருஷ்ணனை அவரது அடிப்படை விலை ரூ. 10 லட்சத்துக்கு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. பெண்களுக்கான 2வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி 2-வது அல்லது 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. நடைமுறை சிக்கல் காரணமாக இத்தொடர் இந்த முறையும் ஒரே மாநிலத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அல்லது உத்தரபிரதேசத்தில் நடத்தப்படலாம் என்றும், மேலும் சில இடங்களும் பரிசீலனையில் உள்ளன என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ ) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், டபிள்யூ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்த வீராங்கனைகளின் ஏலத்தில் சர்வதேச போட்டியில் ஆடாத வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது.
இதன்மூலம் இந்தப் பிரிவில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை என்கிற பெருமையை காஷ்வீ கவுதம் பெற்றார். 20 வயதான காஷ்வீ கவுதம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். பஞ்சாப்பை சேர்ந்த அவர் பந்து வீச்சு மட்டுமின்றி பின்வரிசையில் பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இந்நிலையில், டபிள்யூ.பி.எல் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனையான கீர்த்தனா பாலகிருஷ்ணனை அவரது அடிப்படை விலை ரூ. 10 லட்சத்துக்கு நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. இதன்மூலம் கீர்த்தனா, தமிழ்நாட்டிலிருந்து மகளிர் பிரீமியர் லீக்கில் (டபிள்யூ.பி.எல்) விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கிரிக்கெட் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார்.